மின்சார இரயிலில்
உட்கார்ந்துக் கொண்டிருந்தது தேவதை!
இறகுகளோடு அல்ல
இரு பை நிறைய உடைகளோடு!
பரிச்சயமான முகமென
மூளை எண்ணியது!
பேசச் சொல்லி
மனசு உறுத்தியது!
திட்டிவிட்டால்
பயம் உறுத்தியது!
பரவாயில்லை,
தேவதைதானே!
பயத்தின் உறுத்தலை விட
மனதின் உறுத்தல் அதிக நாள்
நீடிக்கும் என்பதால்
தேவதையிடம் பேசிவிட்டேன்...
நீங்க அந்த ஸ்கூல்லதான
படிச்சீங்க!!
அதிர்ஷ்டம்! ஆமாம் என்றாள்;
நானும் அந்த ஸ்கூல்ல......
துரதிர்ஷ்டம்! அது பெண்கள் பள்ளி!
எப்படியோ சமாளித்துவிட்டேன்..
ஏதேதோ பேசினோம்!
அவ்வப்போது சிரித்தோம்!
பிரியும்போது
கேட்டதனால், கூறினாள்!
அவளது அலுவலக எண்னை!
மறு நாள்!
மிகவும் பயத்துடன்
தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை
அழுத்தினேன்;
என் மூச்சுக்காற்றின் வேகம்
எனக்கே வியப்பானது!
எதிர்முனையில் ஆண்குரல்!
நான்தான் எடுப்பேன் என்று
அவள் கூறியிருந்ததால்
ஆண்குரலிடம் பேச
ஆர்வமில்லாமல்
தொடர்பை துண்டித்தேன்...
அடுத்து வந்த
இரண்டு தினங்களும்
விடுமுறை!
அந்த இரண்டு தினங்கள்
என் வாழ்வின் வறண்ட தினங்கள்;
பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
தொலைத்தவனின் அழுகை;
இவர்களின் உணர்வுதான்
எனக்கும் ஏற்பட்டது..
விடுமுறைகளின் மீதே
கசப்பு உண்டானது!
வாரத்தின் முதல் நாள்!
தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை
இம்முறை கூடுதல்
பயத்துடன் அழுத்தினேன்;
கூடவே பதற்றத்துடன்...
மீட்டினால்தானே வரும்
வீனையின் ஒலி;
தொலைபேசியில் எண்களை
அழுத்தினாலே வருகிறது!
ஆம்! தேவதையின் குரல்!!
பேசினோம்!
சிரித்தோம்!
பழகினோம்!
உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்
எங்கள் உரையாடல்களின்
நீளங்கள் குறைந்திருந்திருக்கும்!
இன்றும்
பல தொலைபேசி காதல்கள்
துளிர்த்துக்கொண்டிருக்காது!!!
நாட்கள் கடந்தன!
வெளியில்
சந்திக்க மட்டும்
மறுத்தாள்!
மீண்டும் மீண்டும்
முயற்சித்தேன்!
மீண்டும் மீண்டும்
மறுத்தாள்!
மறுக்க ஒரு காலம்
உண்டென்றால் -இணங்க
ஒரு காலம் உண்டல்லவா!
இந்த இயற்கை விதிதான்
இன்றும் எனக்குள்
நம்பிக்கை விதைகளை
தூவிக்கொண்டிருக்கிறது!
தேவதை இணங்கினாள்
வெளியில் வர
சம்மதித்தாள்!
கூட்டம் அதிகமாக
சேரும் இடத்தை
தேர்வு செய்தோம்!
என் சந்தோஷத்தின் பொழுதுகள்!
அவளை சந்தித்த பொழுது!
அந்த இடங்கள் எல்லாம்
அன்று புனிதப்பட்டன;
தேவதையின் பாதங்கள்
அங்கே பயணப்பட்டதால்!!
அன்றே என் காதலை
அவளிடம் சொல்ல
முயற்சித்தேன்,
என் பேச்சும், செயலும்
என் காதலை
அவளுக்கு வெளிப்படுத்தின!
சமயமும் காலமும்
வாய்க்காதலால் என் காதலை
வெளிப்படுத்தவில்லை..
அவள் உறவுகளின் நிகழ்வுகளை
என்னிடம் கூறினாள்!
என் உறவுகளின் நிகழ்வுகளை
அவளிடம் கூறினேன்!
எல்லா நிஜங்களையும்
பரிமாறிக்கொண்டோம்!
காதலைத் தவிர!
என் நிலை தெரிந்தும்
தன் நிலை காட்டாமல்,
தன்னிலை மறைத்தாள்!
ஒரு மெல்லிய
மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!
நான் ஏற்கெனவே
நிச்சயமானவள் என்றாள்!
துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!
அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!
உன் உறவுகளைப் பற்றி
பலமுறை கதைத்தாய்?! இதை
மட்டும் ஏனடி மறைத்தாய்?!
வலித்த இதயம்
எழுப்பிய கேள்வியை
உதடுகள் வெளியிடவில்லை!
நீயும் நிராகரிப்பில் சுகம் கானும்
சாதா ரகப் பெண்தானா?!
இதயத்தை அமைதிபடுத்தினேன்.....
உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!
Bookmarks