நான் நடுநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சம்பவம் இது.ஆறாம் நிலையிலிருந்து ஏழாம் நிலைக்கு தேர்ச்சி அடைந்து முதல் நாள் பள்ளி செல்லவில்லை. ஆண்டு விடுமுறை முடிந்த சோகத்தை அனுசரிக்க (துக்கம் அனுஷ்டிக்க..?) முதல் நாளே மட்டம் போட்டு விட்டேன். அப்பா வியாபாரத்துக்கு போய்விட்டார். தாய் சிறு வயதிலேயே தவறி விட்டார். என்னைப்போல ஓரிரு பள்ளி செல்லாப் பிள்ளைகளுடன் கிட்டிப் புள் விளையாடிக்கொண்டிருந்தபோது காலைப் பள்ளி முடிந்து தெருப் பையனெல்லாம் வந்துகொண்டிருந்தனர்.
பொதுவாக முதல்நாள் பள்ளி என்றால் அரை நாள் தான் இருக்கும். வந்தவர்கள் எல்லோரும் என்னை பரிதாபமாகப் பார்த்தார்கள். ஒருவேளை என்னை ஆறாம் நிலையிலேயே அமர வைத்துவிட்டார்களோ என்ற பதைப்புடன் அவர்களை இது குறித்து விசாரித்தேன்..
"பெயிலாப் போயிருந்தா கூட நல்லாருக்குமேடா ராஜா.. ஒன்னை மட்டும் செவன்த் 'ஏ' கிளாஸ்லே போட்டுட்டாங்கடா.." என்று வருத்தமா அல்லது மகிழ்ச்சியா என்று கண்டுபிடிக்க முடியாத தொனியில் கூட்டு பாடினார்கள். எனக்கு 'இப்பவே ஊரை விட்டு ஓடிரலாமா' என்று தோன்றியது.காரணம் ஏழாம் நிலை 'அ' பிரிவின் வகுப்பு ஆசிரியர் டேனியல் வாத்தியார்..
குள்ளமான உருவம்.. வழுக்கைத்தலை.. பக்கவாட்டுப் பைகளில் அழுக்கேறிய கதர் ஜிப்பா...தோளில் காதி கிராஃப்ட் பை தொங்கும்..
வெறித்த பார்வை.. இதுதான் டேனியல் வாத்தியார்.. ஆசிரியர்களிலேயே கூட யாருக்கும் அவரைப் பிடிக்காது. ஆனால் அளவற்ற ஞானம்.. இலக்கணத்தமிழில் எல்லையற்ற புலமை. அவர் மாணவர்களுக்கு போடும் கொட்டுகள் (குட்டுகள்) ஊர் பிரசித்தம். மெல்ல குட்டினால் அது கால் குட்டு.. வலிக்கிறமாதிரி குட்டினால் அரை குட்டு.. வீங்குகிற மாதிரி குட்டினால் அது முக்கால் குட்டு..! முழு குட்டு இதுவரை யாரும் வாங்கியதில்லை..! அது எப்படி இருக்கும் என யாரும் ஆராய முற்பட்டதும் இல்லை...!!
மற்ற வகுப்பில் எல்லாம் மாணவர்கள் கூட்டம் அலைமோதும்.. ஆனால் டேனியல் வகுப்பு மட்டும் வெறிச்சோடிக் கிடக்கும்.அவர் வகுப்புக்கு பிரித்து அனுப்பப்படும் மாணவர்கள் கவுன்சிலர் முதல் குடியரசுத் தலைவர் வரை சிபாரிசுக்கு அழைத்துவந்து முதலில் வகுப்பு பிரிவை மாற்றிவிட்டுதான் உள்ளேயே நுழைவார்கள். இந்த ரகசியம் தெரியாதவர்களும், அல்லது கவுன்சிலர் அளவுக்கு கூட யாரையும் பிடிக்க முடியாதவர்களும், மிக நன்றாகப் படிக்க கூடியவர்களும், மாணவிகளும் மட்டுமே அந்த வகுப்பில் இருப்பார்கள்.பலர் தொடர் விடுமுறையில் இருப்பார்கள்.சிலர் தன் தந்தையாரின் மேலதிகாரியைப் பிடித்து வேறு ஊருக்கு மாற்றல் வாங்கும் முயற்சியில் கூட இருப்பார்கள்..!!
இதில் அவருக்கு உயரமான மாணவர்களையும் தலை கொள்ளாமல் முடியிருப்பவர்களையும் அறவே பிடிக்காது. எனக்கோ இலக்கணம் என்றால் வேப்பங்காய். இந்த அம்சங்களையெல்லாம் மனதிற்கொண்டு அப்பா வந்ததும் "பிட்டை" மெல்ல போட்டேன்.. அப்படியாப்பா..? எனக் கேட்டவர் லேசாக யோசிக்கத் தொடங்கினார்..( என் அப்பா உழைத்து முறுக்கேறிய உடலமைப்புடனும் முரட்டு மீசையில் அச்சுறுத்தும் தோற்றத்துடனும் இருப்பார்.. ஆனால் சிறு வயதிலேயே நான் தாயைப் பறிகொடுத்தவன் என்பதால் என்மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார்.. தற்போது அமரராகிவிட்ட அந்த வாழ்க்கைப் போராளியைப் பற்றி தமிழ் மன்றத்தில் பதிவிட மெத்த ஆசை).
நான் காரியம் பாதி கனிந்து விட்டதாக முடிவு செய்தேன். வகுப்பு மாற்றப்படவில்லை என்றால் கூட பரவாயில்லை.. என் அப்பாவை டேனியல் கண்ணில் காட்டிவிட்டால் கூட போதும்..அப்புறம் என் மேல் ( தலையில்) கைவைக்க தயங்குவார் என்பது என் திட்டம். ஆனால் அப்பா மெல்ல , "தம்பி.. உனக்கு அம்மா இல்ல.. நானும் பாதி நாள் வெளியிலேயே சுத்திக்கிட்டிருக்கேன்.. உன்னப் பத்தி காதிலே விழற சங்கதி எல்லாம் அவ்வளவு நல்லா இல்லே. அதனாலே... அவர் கிளாஸ்லேயே படி" என்று இடியை இறக்கிவிட்டு தூங்கிவிட்டார்.. அவருக்கென்ன தூங்கிவிட்டார்..அகப்பட்டவன் நானல்லவா.. எப்படி தூக்கம் வரும்..? அதுவும் மறுநாள் அப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என்று "தலையில்" எழுதியிருக்கும்போது...!!!
மறுநாள் காலையில் பழைய சாதம் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றேன்.. 'அதிர்ஷ்டம் ஆர்டினரி தபாலில் வரும்..தரித்திரம் தந்தியிலே வரும்' என்ற வாய்மொழிக்கேற்ப முதல் தமிழ் வகுப்பே இலக்கணம்...முதல் நாள் தூக்கமின்மை, பழைய சாதம், சாளரத்தினூடே வந்த வேப்பமரக் காற்று..இலக்கணப் பாடம் எல்லாம் சேர்ந்து நிம்மதியான தூக்கத்தை தரவே, கடைசி டெஸ்கில் சாய்ந்து அயர்ந்து விட்டேன்..!
இன்னும் சற்று நேரம் போயிருந்தால் இடைவேளை மணி ஒலித்திருக்கும்.. ஆனால் விதியின் விளையாட்டு,,,திடீரென்று பக்கத்து மாணவன் உசுப்பவே, அரைக்கண்ணைத் திறந்து பார்க்க ஜிப்பா போட்ட பத்ரகாளியாக டேனியல்..
"சொல்லு.. புளி மாங்காய் என்றால் என்ன..?
சாதாரணமாகவே தூக்கத்தில் விழித்து சகஜ வாழ்க்கையில் ஈடுபட எனக்கு 5 மணித்துளிகள் தேவைப்படும்.. அன்று சிறப்புத் தூக்கம் வேறு..! இருந்தாலும் சிரமப்பட்டு சொன்னேன்..
"அது ஒருவகை ஊறுகாய் அய்யா.. !"
இந்த பதிலை டெஸ்கில் சாய்ந்திருந்த நிலையிலேயே சொன்னேன் என்னுடைய குற்ற விகிதம் ஏறிக்கொண்டிருப்பதை உணராமல்..!
அன்று தன்னுடைய வாழ்க்கையின் முதலாவது முழுக்குட்டை பதிவு செய்யும் உத்தேசத்துடன் கையை பின் தூக்கி முழுவேகத்தில் டெஸ்கில் படிந்து இருந்த என் தலையை நோக்கி இறக்கினார்.. நான் போர்க்கால நடவடிக்கையாக தலையை "பொசுக்" கென்று இழுத்துக்கொள்ள... அன்றிலிருந்து அவர் பெயர் " டெஸ்க் குட்டி டேனியல் வாத்தியார்."
Bookmarks