சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னி படைத்தளத்திற்கு திரும்பிவிட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
வான் படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளின் தரிப்பிடங்களே வான் புலிகளின் தாக்குதல் இலக்குகளாக இருந்ததாகவும், இதில் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் படையினரின் கேந்திர நிலையங்களின் மீது இவ்வகையான தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.
சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வான் படைத்தளம் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வானூர்தி சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை.
வானூர்தி நிலையத்துக்கான அனைத்துப் பாதைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டு அப்பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது வான்படை தேடி வருவதாகவும் சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் ஆரம்பித்தவுடன் தமது வானூர்தி எதிர்ப்புச் சாதனங்கள் இயங்கியதாகவும் வான்படையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
சிறிலங்காவை நோக்கி வரும் வானூர்திகள் அனைத்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை வானூர்தி நிலையத்துக்கு திருப்பி விடப்படுவதாகவும், இன்று காலை 8.30 மணிவரை வானூர்தி சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் தொடங்கிய பின்னர் வானூர்தி நிலையத்தில் உள்ள பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும், இத்தாக்குதலில் இரு உலங்கு வானூர்திகளும் வானூர்திகள் தரித்து வைக்கப்படும் இடம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக அனைத்துலக ஊடக நிறுவனம் தெரிவிக்கின்றது.
வானூர்திகளின் தாக்குதல்கள் தொடரும் என விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்ததனைத் தொடர்ந்து கொழும்பின் சகல பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின்விளக்குகளை எரிய விடவேண்டாம் என்று பொதுமக்களுக்கு சிறிலங்கா வான்படையினர் அறிவுறுத்தியிருக்கின்றனர்.
படங்கள்: விடுதலைப் புலிகள்
Bookmarks