அன்று மாலை 6 மணி இருக்கும் என் செல்லிடத் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்திட்டதற்கு அடையாளமாய்ச் சிணுங்கியது. ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தேன். என் நண்பன் எழுதி இருந்தான்.
"டேய்.. நாளைக்கு உனக்கும் இன்டர்வியூடா. ரெடியா? உலக வர்த்தக மையம் 23 ம் மாடியில் இன்டர்வியூ நடைபெறும்".
செய்தியைப் பார்த்ததும் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போனது. கடவுளே என்ன சோதனையடா இது??? நான் நேர்முகத் தேர்விற்கு கொஞ்சம் கூடத் தயாரில்லையே?
எமது பல்கலைக்கழகத்தில் 3 மாதம் ஏதாவது ஒரு இடத்தில் மென்பொருள் எழுதுனராகப் பணி புரியவேண்டியது கட்டாயம். அதாவது இரண்டாம் ஆண்டு முடிவில் 3 மாதம் இந்தப் பயிற்சி நடைபெறும். இதற்காக எமது பல்கலைக்கழகம் தம்முடன் ஒப்பந்தம் செய்துள்ள கொம்பனிகளில் ஒன்றை எமக்குப் பரிந்துரைப்பதுடன். எமது சுயவிபரக்கோவையை அந்த நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கும்.
ஆனால் எனக்கு இன்னமும் இந்தக் கொம்பனி என்றுசொல்லவில்லை. அப்பிடி இருக்க என் நண்பன் அனுப்பிய செய்தி ஏன் என்று புரியவில்லையே, தலையைப் பிய்த்துக்கொண்டு அடுத்தநாள் பல்கலைக்கழகத்திற்கு ஓடினேன்.
பல்கலைக்கழகத்தில் Industrial Training க்குப் பொறுப்பான விரிவுரையாளரிடம் சென்றேன்.
"மிஸ்.. அ... எனக்கு இண்டைக்கு இன்டர்வியூவா?"
"ஓம்... உமக்குத் தெரியாதா? நான் அண்டைக்கே சொன்னனான்தானே?" மிஸ் எரிந்து விழுந்தார்.
"இல்லை.. மிஸ் நீங்க எனக்குச் சொல்லேல" நான் மறுத்தேன்.
"தம்பி... நான் சொன்னனான் சரியா?... சரி இப்ப என்ன வெளிக்கிட்டுக்கொண்டுடு இனடர்வியூவிற்குப் போம். 1 மணிக்குத் தானே இனடர்வியூ இப்ப வெளிக்கிட்டீர் என்டா நேரம் சரியா இருக்கும்" அவர் அலட்சியமாகச் சொல்லிவிட்டு போய்விட்டார்.
விரிவுரையாளரின் அறையை விட்டு வெளியே வந்த எனக்கு தலைகால் புரியாமல் கோவம் கொவமாக வந்தது. ஏதாவது சாமான் கையில கிடைச்சால் அந்த மிஸ்சை ஒரு அடி அடிச்சு விடலாமோ என்று தோன்றியது.
சரி.. இனி நடப்பதைப் பார்ப்போம் என்று தீர்மானித்தவாறே வீடு திரும்பினேன். அவசரம் அவசரமாக என் உடுப்புகளை இஸ்திரி போட்டுக்கொண்டேன். வழைமைபோல என்னுடைய விருப்பமான நிறமான நீல நிறத்தில் காற்சட்டை, சேட், டை என்பவற்றை அணிந்து கொண்டு பஸ் நிலையத்திற்குச் சென்றேன்.
மீண்டும் என் செல்லிடத் தொல்லைபேசி சிணுக்கத் தொடங்கியது. எவண்டா இவன் இந்த நேரத்தில கழுத்தறுக்கிறான்.. சினந்தவாறே சி.எல்.ஐ பார்த்தேன். முன்பு குறுஞ்செய்தி அனுப்பி என்னை உசார்ப்படுத்திய அதே நண்பன்.
"டேய் நண்பா.. மிஸ் கவுத்துட்டாள்டா.. என்னையும் இன்டர்வியூக்குப் போகச் சொல்லிட்டாள்டா" சோகமாக நண்பனிடம் கூறினேன்.
"யோசிக்காத மச்சான். எல்லாம சேப்பா முடியும், நாங்க மொத்தம் 6 பேர் அந்த கம்பனிக்குப் போகப்போறம். நாங்க எல்லாரும் கொழும்பு கோட்டை இரயில் நிலையம் முன்னால சந்திக்கிறதா இருக்கிறம். நீயும் அங்க வாறிய இல்ல நேர WTC க்குப் போறியா?"
"நான் உங்களோட வாறன் மச்சான். இன்னும் 10 நிமிசத்தில நான் இரயில் நிலையத்திற்கு வாறன்" நான் சொன்னேன்.
கடைசியாக 168 பஸ் எடுத்துச் சென்று மல்வத்த வீதியில் இறங்கி இரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அதற்கிடையில் அவன் எப்பிடியும் சுமார் 6-7 மிஸ் கோல் போட்டுவிட்டான்.
கடைசியாக நான் இரயில் நிலையத்தை அடைந்த போது மொத்தம் ஐந்து பேர் நின்றிருந்தார்கள். எல்லாரும் நல்லாத் தயாராக இருக்கின்றார்கள் என்பது அவர்களைப் பார்த்ததுமே புரிந்தது.
நாங்கள் ஆறு பேர் இன்டர்வியூவிற்குப் போறதாக இருந்தம் அதில் நான் மட்டுமே தமிழ் மற்றவர்கள் அனைவரும் சிங்கள நண்பர்கள். உலக வர்த்தக மையம் அதிக பாதுகாப்பான பிரதேசம். அங்கே இப்படியாக சிங்கள நண்பர்களுடன் செல்வதென்றால் பிரைச்சனை இல்லை.
அன்றுதான் முதல் தடவையாக உலக வர்த்தக மையத்தினுள் சென்றேன். சும்மா சொல்லக் கூடாது மிகவும் அழகாகத்தான்இருந்தது. வெளிநாடு ஒன்றில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. நண்பர்களுடன் ஒருமாதிரி லிப்ட் இருக்கும் இடத்தை அறிந்து அதில் ஏறி 23 ம் மாடியை அடைந்து விட்டோம்.
லிப்ட் திறந்ததும் பெரிதாகத் தெரிந்தது Hydramani என்ற கம்பனியின் பெயரும் முன்னுக்கு இருந்த அழகான வரேப்பாளர் பெண்மணியும்தான்.
இப்போ இவனுகளுக்குள் ஒரே அடிபிடி யார் போய் ரிசப்சனிஸ்டிடம் கதைப்பது என்று. கடைசியாக எனக்கு அந்தப் பாக்கியத்தைத் தந்தார்கள்.
"We are from University of kelaniya.. We'd like to meet Mr. Mangala regarding our Industrial Training.." நான் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவர் சொன்னார் நாங்கள் வருவோம் என்பது முன்பே தெரியும் என்றும் அந்த விருந்தினர் இருக்கையில் இருங்கள் என்றும் கூறினார்.
நெஞ்சு பட பட என்று அடிக்கத்தொடங்கியது. நேர்முகத் தேர்வில் என்ன கேள்வி கேட்பானுகளோ தெரியாதெ??? நண்பர்கள் வலு கூலாக இருந்தார்கள். நான் என்பாட்டுக்கு எனக்குள் புலம்பிக்கொண்டு இருந்தேன்.
இதே வேளையில் நான் என் சுயவிபரக்கோவை, மற்றும் சர்ட்டிபிகேட்டுகளை ஒரு பையினுள் இட்டு கொண்டு வந்திருந்தேன். அந்தப் பையிற்கு ஒரு இரகசியத் திறவுச் சொல்லும் இருந்தது. நாம் கடைசியாகப் பூட்டும் போது என்ன இலக்கம் இருக்குதோ அதுதான் அடுத்ததரம் திறக்கும் போது திறவுச் சொல்லாகப் பயன்படும்.
எனக்குப் பக்கத்தில் எங்களுடன் நேர்முகத் தேர்விற்கு வந்த எங்களுடைய பல்கலைக்கழக சக மாணவி இருந்தாள். அவளுடன் கதைத்தவாறே எனது பையின் லொக்கைத் திறந்து மூடி திறந்து மூடிக்கொண்டு இருந்தேன். திடீர் என்று லொக் திறக்க மறுத்தது.
இன்னும் 15 நிமிடத்தில் நேர்முகத் தேர்வு ஆரம்பிக்கப் போகின்றது. இந்த நேரத்தில் இந்தப் பை இப்படி சிக்கிக்கொண்டது. பையைத் திறக்காவிட்டால் என் CV, Certificates எதையும் எடுக்க முடியாது.
நெஞ்சு முன்பு எப்போதும் இல்லாத வாறு பட ... பட என்று அடித்துக்கொண்டது. கடுமையான ஏ.சிக்குள்ளும் வியர்க்கத் தொடங்கியது.
நான் பதட்டப் படுவதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சிங்களப் பெட்டை." மயூரேசன்.. ஒவ்வொரு நம்பரா ரை பண்ணுங்க.. இன்னும் நேரம் இருக்குதுதானே?" என்று சொன்னாள்.
நானும் ஒவ்வொறு எனக்குத் தெரிந்த இலக்கங்களை ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலையில்லை பை திறக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது.
(தொடரும்.. அடுத்த பாகத்துடன் முடியும்.)
Bookmarks