ஒரு நாள் ஆசிரியர் என்னை அழைத்து நம் பத்திரிக்கையில் கேள்வி பதில் பகுதி தொடங்கினால் என்ன என்று கேட்டார். நானும் என்னுடைய வழக்கமான குறும்புடன் ஐயா அதற்கு யாராவது கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் நாம் பதில் எழுத முடியும் என்றேன்.
ஏம்ப்பா நீ தான் கற்பனை பேட்டியெல்லாம் எடுக்கிறாயே. கற்பனை கேள்வி பதில் தொடங்கேன் என்றார்.
அவர் சொன்னது நியாயமாக படவே இந்த கேள்வி பதில்.
கே: த்ரிஷாவின் இடையளவு என்ன? மன்னார்குடி கலியபெருமாள்.
ப: மன்னிக்கவும் நீங்கள் தவறான முகவரிக்கு இந்த கேள்வியை அனுப்பிவிட்டீர்கள். சற்று பொரும் குமுதத்தின் முகவரியை தருகிறேன்.
கே: சன் டிவி ஃபளாஷ்நியூஸில் சென்னையில் பயங்கரம் என்று படித்து பதறிவிட்டேன். என்னாச்சு?
திருகழுகுன்றம் செந்தில்.
ப: அதுவா ஒரு சைக்கிளும் ஒரு ரிக்ஷாவும் மோதி கொண்டுவிட்டது. இப்படியெல்லாம் செய்தால் தானே நீங்கள் 2 ரூபாய் கொடுத்து தமிழ் முரசு வாங்கி படிப்பீர்கள்.
கே: ஐயா ஒரு ஜோக்?
சென்னை சொக்கலிங்கம்.
ப: ஏம்ப்பா மெனக்கெட்டு தபால் நிலையம் போய் தபால் அட்டை வாங்கி இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் காசை வீணடிக்கிறீர். போய் வேலையை பாருமய்யா.
கே: சமீபத்தில் நடந்த எம் எல் ஏ கொலையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சேத்தியாதோப்பு சேகர்.
ப: கொலை என்பது நிஜம். அதைப்பற்றி நினைத்து நான் எழுதினால் அது கற்பனை. என்ன நினைக்கிறார்கள் என்பதை படிக்க வேண்டுமானால் ஜூனியர் விகடன், நக்கீரன் வாங்கி படியுங்களேன்.
கே: தனுஷின் வீட்டில் ஏதாவது நல்ல செய்தியா?
திருப்பூர் தினகரன்.
ப: யோவ். இந்த மாதிரி விசயத்துக்குதான் விகடன்-ற ஒரு மாபெரும் பழைய பத்திரிக்கை இருக்கே என்னை ஏய்யா தொந்தரவு பண்றே!
Bookmarks