நண்பர்கள், தோழிகள், சகோதரர்கள், சகோதரிகள் ஆகிய உங்கள் எல்லாருக்கும் எனது நன்றி கலந்த வணக்கம்.....
எனது எண்ணங்களை எங்கே பறக்க விடுவது என்று நீண்ட நாட்களாக குழம்பிப் போயிருந்தேன்... நல்லவேளை. தமிழ்மன்றம் கிடைத்தது.. பறந்து கொண்டிருக்கிறேன்..
இனி,
எனது டைரியிலிருந்து சில குறிப்புகள்.... டைரியில் எழுதிய யாவும் பகிர்தல் நல்லதல்ல..... ஆயினும் யாருக்கும் துன்பமில்லாத சில செய்திகளையும் அனுபவங்களையும் பகிர்தல் தவறல்ல என என் மனம் சொல்கிறது
எனது டைரியைப் பற்றி: நான் டைரி எழுத ஆரம்பிக்கும்போது எனக்கு வயது 11 இருக்கும் (ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்ததாக ஞாபகம்) ஆனால் அவைகள் சில தாள்களில் எழுதிய காரணத்தினால் அழிந்து போயின.. அது போல சிலவற்றை அப்பா படித்து கிழித்துப் போட்டார்....(அதற்கு பல குடும்ப காரணங்கள்)
யாரும் படிக்காமல் இருக்கும் வண்ணம் டைரி எழுதத் துவங்கியது நான் 10ம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன்.... எப்படி? ஒருவரையோ அல்லது ஒரு பொருளையோ குறிக்கும்போது, பட்டப்பெயர் போட்டு கதை எழுதுவது போல எழுதுவேன்... யாருக்கும் புரியாது. எனக்கு மட்டுமே புரியும் வகையில் இருக்கும்... தற்போது கவிதை கலந்து எழுதுவதால் யாருக்கும் புரியாது...
முதலில் டைரியெல்லாம் வாங்கவில்லை... நோட்டு புத்தகத்தில் தான் எழுதினேன்.. தற்சமயம் 2007ல் தான் டைரி தனியாக வாங்கி எழுத ஆரம்பித்துள்ளேன்.
என் குடும்பம் ஒரு சிறு அறிமுகம்: அப்பா, அம்மா, தம்பி, தங்கை,, நான்.. ஆக ஐந்துபேர்........
அப்பா ஒரு ஓவியர்; அம்மா, தேவியர்; நானோ காவியன்.... எப்படி குடும்பம்????
அப்பாவின் குடும்பமும் அம்மாவின் குடும்பமும் மிகமிக பெரியது.... ஒரு என் கல்யாணத்திற்கு இவர்கள் குடும்ப நபர்களை அழைத்தாலே போதுமானது.... அந்த அளவுக்கு.............. இதிலே கொடுமை என்ன வென்று கேளுங்கள்....
இத்தனை பேரப்பிள்ளைகளிலும் ஆணாகப் பட்டவன் நான் ஒருவனே.... எனக்கு நிறைய தங்கைகள் உண்டு (முறைப் பெண்களும்தான்,,) ஆண்களில் என் வயதுக்கு ஈடானவர்கள் ஒருவர்கூட இல்லை...(அப்பா வகையில் ஒருவர் உண்டு ஆனால் அவ்வளவாக தொடர்பு இல்லை...).. எல்லாம் பெண்கள்... அதனால்தான் என்னவோ எனது உறவினர்கள் மத்தியில் நான் ஒரு ஸ்டார்.... அவ்வளவு எளீதில் என்னை விடமாட்டார்கள்.... ( நிறையபேரை எனது அம்மாவாகவே நினைத்துவருகிறேன்... சித்தி, அக்கா, பெரியம்மா, இன்னும் பலர்/// )
நான் சிறு வயதில்: சிறு வயதில் நான் ரெம்ப ரெம்ப அழகான குழந்தையாம்... ஜப்பான் குழந்தை மாதிரி இருப்பேனாம்.... நிறைய் துறுதுறு..... அடங்க மாட்டேன்... என்னை வைத்து ஒரு போட்டோ கூட எடுக்க முடியாதாம்.. அந்த அளவுக்கு குறும்பு... நான் வளர்ந்தது ஈரோட்டில், ... இரண்டாம் வகுப்பு வரை அங்கேதான் படித்தேன்.. அப்பறமாக குடும்பத்தோடு திருப்பூர் வந்துவிட்டோம்.
சிறு வயதில் என்னை அடக்கவே என் கையில் புத்தகத்தைத் திணித்தார் எனது தந்தை.... என் கையில் முதன் முதலாக கிடைத்த புத்தகம் கந்த சஷ்டி கவசம்... அப்பறம் என்ன வென்று தெரியவில்லை... சில நாட்களில் இராமாயணமும் மகாபாரதமும் படித்தேன்... எனக்கு அந்த நாட்களில் புத்தகம் படிப்பது மிகவும் பிடித்துப் போனது... நண்பர்களே நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ, நான் ஐந்தாம் வகுப்பு முடிக்கும்போது ராமாயணமும் பாரதமும் முடித்துவிட்டேன்... எனது ஆர்வத்தில் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார் தந்தை.
அப்போது கிடைத்த புத்தகம் தான் பாரதியார் கவிதைகள்.......
கவிதை எழுதியது : நிச்சயமாக சொன்னால் எனது கவிதைக்கு விதை விதைத்தது பாரதிதான்... நல்ல ஞாபகம் இருக்கிறது... பாரதியின் புத்தகத்தை அவ்வளவாக நான் முதலில் விரும்பிப் படிக்கவில்லை.. கவிதைகள் எனக்குப் புரியாது.. ஒரு சமயம் தந்தை என்னிடம் ஒரு கவிதை படித்து விளக்கம் கேட்டார்..
வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
கொள்ளை யின்பம் குலாவு கவிதை
கூறு பாவலர்தம் உள்ளத்திருப்பாள்
எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.... அப்போது தந்தை சொன்னார்,,, " ஈஸியாய்னி உண்டிந்த கவித நிங்கு தெலிக்க போத எட்ட தமிழ் ராத்துவு?"
(மிக எளிமையான இந்த செய்யுளே உனக்கு விளங்காத போது நீ எப்படி தமிழ் படிப்பாய்?)
நான் முதலில் இந்த கவிதையை திரும்பத் திரும்ப படித்தேன்...
வெள்ளைத் தாமரை - வெள்ளைத் தாமரை புரியுதே
பூவிலிருப்பாள் - பூவில் உட்கார்ந்து இருப்பாள் (சரஸ்வதி தானே!!)
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள் - அதெப்படி ஒலியில் இருக்க முடியும்????
கொள்ளை யின்பம் - புரியவில்லை; கொள்ளை என்றால் கொள்ளை அடிப்பதா?
குலாவு கவிதை - சுத்தமாக புரியவில்லை... குலாவு என்றால் தமிழா?
கூறு பாவலர்தம் - அய்யோ!!! பாவலர்னா இன்னா?
கொஞ்சம் புரிந்தது போல இருந்த்து... என் அப்பாவே சொல்லிக் கொடுத்தார்... இது இது இன்ன வார்த்தைகள் என்று..... அப்பறமாக எனக்கு ஒரு வெறியா போட்டுது. எல்லா கவிதைகளையும் படித்து புரிந்து கொண்டேன். தமிழ் வாத்தியார்களிடம் வார்த்தை அர்த்தம் தெரிந்து கொண்டேன்... இது எவ்வளவு பயனாய் போட்டுது? நான் செய்யுள் பகுதியில் கேள்வி பதிலெல்லாம் படிக்கமாட்டேன்.. செய்யுளை மட்டும் படித்துவிட்டு நானாகவே உரை எழுதுவேன்.... (பின்னாடி எனக்கு பாராட்டெல்லாம் கிடைத்தது..)
இது இருக்க,,, நானும் பாரதியார் மாதிரி கவிதை எழுத ஆரம்பித்தேன்... அவரது சுய சரிதையில் அவர் சின்ன வயதில் சந்தங்களை அடுக்கிக் கொண்டே இருப்பதாக எழுதியிருந்ததை கவனித்தேன்.... அதே மாதிரி நானும்
உழி
கழி
பழி
விழி
கிழி
என்று அடுக்கிக் கொண்டே போனேன்... நிறைய வார்த்தைகள் எனக்கு புதிதாகத் தோன்ற, தமிழ் வாத்தியார்களிடம் சந்தேகம் தீர்த்துக் கொண்டேன்... பாரதியின் பல கவிதைகளுக்க்கு எளிதில் அர்த்தம் புரியும் அளவிற்கு அவரால் ஞானம் பெற்றேன்....
நிச்சயமாக எனது முதல் கவிதை இதுதான்:
எந்தையும் தாயையும் என்னைக் காவல்கொள்
தந்தையும் தங்கையும் தம்பி யோடுமே
சிந்தை தவறாது காத்த கடவுளுக்கும்
முந்தை யோருக்கும் போற்றி!!!
இதற்கு வெண்பா என்று பெயரிட்டு டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.... ஆனால் வெண்பா அல்ல.... இன்னும் சில வரிகள் எழுதினேன்... இரண்டாவது கவிதை....
என்னை உலகிற்களித்த தாய்க்கு நன்றி!
தென்னை போல் வளர்த்த தந்தைக்கு நன்றி!
முன்னை விடவும் பொலிவு தந்த கடவுளுக்கு நன்றி!
பின்னையாவும் நடக்கு மிந்த காலத்திற்கும் நன்றி!
வாழ்விக்க வந்த காந்திக்கும் நன்றி!
தாழ்வு கொண்டென்னை உயர்த்திய பெரியாருக்கும் நன்றி!
வீழ்ந்த பகைவனை அரவணைக்கு அன்புக்கு நன்றி!
சூழ்ந்த சுற்றத்திற்கும் நன்றி!
பேச வைக்கும் தமிழுக்கு நன்றி
பாசங் கொண்ட உயிர்களுக்கும் நன்றி!
தேசமது என்னை வளர்த்ததற்கும் நன்றி
மோசம் போகாது காத்த அனைவருக்கும் நன்றி!!
இது எழுதியதும் எனக்குள்ளே ஒரு பாரதி தோன்றிவிட்டதாகவும் நான் பெரிய கவிஞனாகிவிட்டதாகவும் நினைப்பு....
மீதி உங்கள் வரவேற்புக்கு தக்க.....
Bookmarks