நண்பர்களே, தோழிகளே
சுவையான சம்பவங்கள் தலைப்பை இப்போதுதான் தொடுகிறேன். என் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சி ஒன்றை உங்களுக்கு பகிர்ந்திட விரும்புகிறேன்
என்னைப்பற்றி அவ்வளவாக அறிமுகம் தேவையில்லை. சுமார் 3 வருடங்களுக்கு முன்பு நானும் என் தந்தையும் தொழில் தொடங்கினோம். அப்போது வீட்டிலேயே தொழில் ஆரம்பித்துவிட்டேன். தொலைபேசி இணைப்பு என் வீட்டில் தொழில் தொடங்குவதற்கு முன்பிருந்தே இருக்கிறது. அதன் வழியாக இணையம் கனெக்சன் வாங்கினேன்..
இணைய கனெக்சனை அப்பொதெல்லாம் அரட்டை அடிப்பதற்கும், மெயில் பார்ப்பதற்கும் மட்டுமேதான் உபயோகித்தேன். வேறெதுவும் தெரியாது, இப்படியிருக்கையில் அரட்டை அடிக்கும் போது பொதுவாக நாங்கெல்லாம் பெண்களையே தேடுவோம். நானும் அப்படித்தான். ஒருநாள் அரட்டையில் ஒரு பெண்ணை பிடித்தேன். எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும். இந்த ID யில் இருப்பது பெண்ணா இல்லை ஆணா என்று..
ஆனால் அது நிச்சயம் பெண்தான் ( உறுதிபடுத்தியது எப்படி? எனக்கே தெரியவில்லை. நேரில் பார்த்தபோது.. ) அவள் பெயர் நடாஸா என்றும் ரஷ்யாவை சேர்ந்தவள் என்றும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள்..
தினமும் இரவு நேரம் அவள் அரட்டைக்கு வருவாள். என்னோடு அதிகம் பேசுவாள்.. என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி கேட்பாள். இத்தனைக்கும் என்னைவிட அவளுக்கு ஆங்கில அறிவு அதிகம். . ( ஓரளவு நல்லாவே பேசுவேன்பா) இருந்தாலும் அவள் சகித்துக்கொண்டாள்.. தமிழ்நாட்டு உணவு வகைகளை செய்வது எப்படி என்று நிறைய சொல்லிக் கொடுத்தேன். கவிதைகளின் அர்த்தங்களை ஓரளவு ஆங்கிலப்படுத்தி சொன்னேன். அவளும் கவிதை எழுதுவாள்.
( என்னுடைய மெயிலில் அவள் கவிதை இருக்கும் என்று நினைக்கிறேன் ).
ஒருநாள் முகவரி பரிமாறிக்கொண்டோம். முகமும் பார்த்துக்கொண்டோம். என் தொலைப்பேசி எண் கேட்டாள். கொடுத்தேன், அவளும் அப்படியேதான் கொடுத்தாள். ( ரெண்டுபேருமே பேசிக்கலைங்கரது அப்பறம்). எங்கள் நட்பு நீடித்தது..
கிட்டத்தட்ட 3 மாதங்களில் 100 மெயில்கள் அனுப்பினாள். ஒவ்வொன்றையும் படிக்கவே அரைமணிநேரம் ஆகிவிடும்.. பதில் மெயில் எழுதவே எனக்கு ஒருமணிநேரம் ஆகிவிடும்.
இவ்வாறு இருக்கையில் ஒருநாள் எனக்கு அந்த மெயில் கிடைத்தது.. அவள் என்னை மணம் செய்யப் போவதாக சொன்னாள். வீட்டாரின் அநுமதியோடு.. எனக்கு ஷாக் ஆகிவிட்டது.. இருப்பினும் விளையாடுகிறாள் என்று எண்ணி, பதில் எழுதினேன், நல்லவேளை காதல் கீதல் என்று எழுதாமல் எப்பொழுதும் போல எழுதினேன்.. அடுத்த மெயிலிலேயே ஏன் காதலுக்கு பதிலில்லை என்று எழுதியிருந்தாள்.. அதற்கு அது முடியாது; எனக்கும் உனக்கும் வயது பற்றாது; நீ வேற நாடு நானும் வேற நாடு ; மொழி மதம் என எல்லா வேறுபாடுகளையும் பட்டியலிட்டேன்.
அடுத்த மெயில் எனக்கு ஒற்றை வரிகளில் வந்தது.
நான் முன்பு அவளிடம் அரட்டை அடிக்கும்போது பாரதியாரைப் பற்றி பெருமையாகச் சொல்லுவேன். ஓரிடத்தில்
"கவிதை எழுதுவதால் மட்டும் அவன் கவிஞன் ஆவதில்லை; அவன் எழுதிய கவிதைபோல் நடப்பவனே கவிஞன் " என பாரதியார் சொன்னதை அவளிட சொல்லியிருக்கிறேன். நானும் அதன்படிதான் நடக்கிறேனென்றும் சொன்னேன் என் கவிதைகளை ஒன்று ," இனம், மதம், மொழி, விழி ஆகியவற்றை கடந்து வருவதே காதல்" என்று சொல்லியிருந்தேன்..
அதை அவள் மேற்கோள் காட்டினாள்..
நான் உடனே அரட்டை அடிப்பதையும் மெயில் அனுப்புவதையும் நிறுத்திவிட்டேன்..
சுமார் 1 மாத காலத்தில் 20 மெயில்கள் அவளிடமிருந்து வந்தன.. எதற்கும் பதில் அனுப்பவில்லை.
ஒருநாள் வெள்ளிக் கிழமை எனக்கு சென்னையிலிருந்து போன்... நல்லவேளையாக நான் ரிசீவரை எடுத்தேன்,, மறுமுனையில் நடாஸா...
எப்படியிருக்கும் யோசித்துப் பாருங்கள்.. பதற்றம் உண்டாகிவிட்டது.. என் அம்மாவுக்கு மட்டும் இது தெரிந்தால் அவ்வளவுதான். பின்னி எடுத்துவிடுவார்கள்..
அவள் ஏதோ ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் உடனடியாக் சென்னை வரவேண்டும் என்றும் சொன்னாள்... நானோ இருக்கிற வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வரமுடியாதென்றும், உடனே கோவைக்கு வரவேண்டும் என்றும் சொன்னேன்.
மறுநாளே அதாவது சனிக்கிழமை வந்துவிட்டாள்.. எந்நேரமும் போனுக்கு அடியிலேயே உட்கார்ந்திருந்தேன்.. ( அப்போது கைப்பேசியில்லை) போன் வந்ததும் கோவை கிளம்பினேன்.. எனக்கு உடலெல்லாம் பதற்றம். கோவையில் ஏதோ ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தாள். கைகால்கள் உதறலோடு முதல் முறையாக அவளை நேரில் பார்த்தேன்.. அதிலும் அவள் எனக்காகவே வந்திருந்தாள்..
அவளிடம் என்னுடைய மறுப்பை சொன்னேன். அவள் அதற்கு உடன்படவேயில்லை. எப்படியாவது மணம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடே இருந்தாள். இத்தனை தூரம் தள்ளி வந்திருக்கும் என்னை தள்ளி வைக்காதே என மன்றாடினாள், எனக்கு அழுகையே வந்துவிட்டது. அவள் அறையில் உட்கார்ந்து சிறிது நேரம் அழுதேன்..
அப்பொழுதும் அவள் மனம் மாறவேயில்லை. இதற்கெல்லாம் இடையில் மொழிப் பிரச்சனை வேறு... அவளின் ஆங்கிலமே ஒருமாதிரியாக இருந்தது, பல விஷயங்கள் அவள் சொன்னது புரியவேயில்லை..
ஒருவாறு அவளை அனுப்பி விடுவதற்க்காகவே காதலை ஒப்புக்கொள்வதாக சொன்னேன். அவள் இன்னும் இரண்டு வாரங்கள் தங்கியிருந்துதான் போக முடியும் அதனால் வீட்டில் தங்கவேண்டினாள்... அய்யோ!! என் அம்மா அவ்வளவுதான் ருத்திரதாண்டவம் ஆடிவிடுவார் என்று சொல்ல, அவள் சுற்றுலா பயணிகள் விசாவில் வந்ததால் இந்தியாவை சுற்றிப் பார்த்துவிட்டு பின் செல்வேன் என்றாள். அதுவரையிலும் நிம்மதி..
அடுத்து பிறந்தது துன்பம்
என்னையும் அவளோடு அழைத்தாள்.. நான் மறுக்கவே மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டாள்... பின் ஒரு வழியாக சமாதானம் பேசி அனுப்பிவைத்தேன்.. இந்த சம்பாஷணைகள் முடியவே இரவு ஆகிவிட்டது..
அவள் ஊருக்குச் சென்று எனக்கு மெயில் அனுப்பினாள் (சுமார் ஒருமாதமிருக்கும்).. ஏனோ தெரியவில்லை. காதல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.. எனக்கும் நிம்மதி.
அதில் விட்டதுதான்,, இப்பொழுதெல்லாம் அரட்டையே அடிப்பதில்லை
(பிகு: நண்பர்கள் யாராவது கேட்டீர்களேயானால் அவளின் திருமுகத்தைக் காட்ட விரும்புகிறேன் கூடவே அவள் கடிதமும்.. )
Bookmarks