மகாத்மா காந்தியடிகள் (1869-1948)
காந்தி 1893-ம் வருடம், தென்னாப்பிரிக்கா ரயில் பயணத்தின் போது
முதல் வகுப்பு டிக்கட் எடுத்திருந்தும், வலுக்கட்டாயமாக ஒரு வெள்ளையனால் இனவெறி காரணமாக வெளியே தள்ளப்பட்டார். வழக்கறிஞர் தொழிலுக்குப் படித்த தனக்கே இந்த அவமானம் என்றால், அங்கே வாழும் இந்தியர்கள் எத்தனை தூரம்
அடிமை வாழ்க்கையில் கொடுமைப் படுத்தப்படுவார்கள் என்று சிந்தித்து, அன்றைய இரவே யுத்தம் ஏந்தாத போராளியாக மாறினார். கத்தியின்றி ரத்தமின்றி இவர் நடத்திய அறப்போராட்டம் உலக வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்.
பகத்சிங் (1907-1931)
1919-ம் வருடம் நடந்த ஜாலியன் வாலா பாக்கில் நடந்த கொடூர
படுகொலை பகத்சிங்கின் பிஞ்சு மனதில் பெரும் எரிமலையை உருவாக்கியது.அந்தச் சிறு வயதிலேயே அப்பாவி மக்களின் ரத்தத்தைக் குடித்த வெள்ளையர்களை விரட்ட வேண்டும் என சபதம் எடுத்துக் கொண்டு, பஞ்சாப் படுகொலை நடந்த இடத்தின் ரத்த மண்ணை நெற்றித் திலகமாக வைத்துக் கொண்டார். டெல்லி நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி கைதாகி, 1931-ம் வருடம் மரணக்கயிற்றை முத்தமிட்டு தூக்கிலிடப்பட்டபோது இந்திய நாடே அழுதது.
அன்னை தெரசா (1910-1997)
தீவிரமான கிருஸ்துவ மதத்தை கடைப்பிடிக்கும் குடும்பத்தின் மூன்றாவது மகளாகப்பிறந்த தெரசா, கடவுளுக்கு தொண்டு செய்வதற்க்காக இறை பணியில் சேர்ந்தார். அதற்காகவே இந்தியா வந்தார். ஒரு பள்ளியில் ஆசிரியையாகவும், கன்னியாஸ்திரியாகவும் இருந்தார். 1946-ம் வருடம் உடல் நிலை சரியில்லாமல் போகவே, குணமடைவதற்காக ரயிலில் டார்ஜிலிங் சென்றார். அப்போது ஏழையிலும் ஏழைகளுக்கு சேவை செய்வதுதான் எனக்கு நீ செய்யும் சேவை என்று இறைவன் சொன்னதாக உணர்ந்தார். உடனே ஆசிரியர் பணியை துறந்து சமூக சேவையில் ஈடுபட்டு உலகின் தலைசிறந்த தாய் என புகழ் பெற்றார்.
ஈ.வெ.ராமசாமி (1879-1978)
வசதியான குடும்பத்தில் பிறந்து படிப்பதில் விருப்பமின்றி வியாபாரத்தில் ஈடுபட்டார். 1909-ம் வருடம் இவரது தங்கையின் மகள் ஒன்பது வயதிலேயே திருமணம் செய்யப்பட்டு விதவையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு பணியாமல் தங்கை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். இதுபோலவே மூடப்
பழக்கவழக்கம், சாதி, மதம், மொழி என்னும் கட்டுப்பாட்டுக்குள் தழிழகம் தலைகுனிந்து நிற்பதை காணப் பொறுக்காமல் ஒரு பகுத்தறிவு பகலவனாக மாறினார். இறுதி மூச்சு வரை போராடி தமிழ் தந்தையானார்.
சுவாமி விவேகானந்தர் (1863-1902)
பிரபலமான வழக்கறிஞரின் மகனாகப் பிறந்த நரேந்திரனுக்கு எப்போதுமே கேள்விகள் கேட்பதில் ஆர்வம் அதிகம். கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியோடு எத்தனையோ ஞானியரையும், கல்வியாலரையும் கண்டு பேசி எதுவும் கண்டு கொள்ள முடியாமல் இருந்தவர், 1881-ம் வருடம் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார். அவரை ஒரு பைத்தியகார சந்நியாசியாக நினைத்து, கடவுள் எங்கே இருக்கிறார் என கேட்டார். கடவுளை காட்டுகிறேன் என்று நரேந்திரனை அவர் தொட்ட நிமிடத்திலேயே உடலில் பெரும் மாற்றத்தை உணர்ந்தார். அன்று முதல் வாழ்வு மாறியது. பகுத்தறிவு வாதியாகிய நரேந்திரன் ஆன்மிகவாதியாக மாறினார். பின்னர் விவேகானந்தர் ஆனார். கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளில் இன்றும் உலக அளவில் முக்கிய இடத்தை பிடித்து இருப்பது இவர் உருவாக்கிய ராமகிருஷ்ணமிஷன் அமைப்புகள்தான்.
Bookmarks