வெயிலும் வெக்கையும் கொளுத்தும் ஒரு நல்ல ஞாயிற்றுக் கிழமையிலே சென்னையிலே பல திட்டங்கள் போட்டு ஒன்றும் நடக்காமல் என்னென்னவோ நடக்கக் கண்ட உத்தம பொழுதினிலே வலைப்பதிவர் சந்திப்பு நடக்க வேண்டும் என்று விதித்திருந்த தலையெழுத்திலே மாட்டிக் கொண்டு முழிக்கக் கண்டார் ஜி.ரா என்று அன்போடு(!) நண்பர்களால் அழைக்கப்படும் கோ.இராகவன். அதாவது ஆகஸ்டு 20ம் தேதி.
காலையிலிருந்து பல வேலைகளில் மாட்டிக் கொண்டு ஜிரா பிழிந்து எடுக்கப் பட்ட கரும்பு போல இருந்த ஜி.ரா பைக்கை எடுத்துக் கொண்டு நுங்கம்பாக்கம் விரைய வேண்டியதாயிற்று. கூடவே படபடவென றெக்கையை அடித்துக் கொண்டு தோகையைத் தொங்கப் போட்டுக் கொண்டு மயிலாரும் பறந்தார்.
ஒன்வே டூவேக்களிலெல்லாம் நுழைந்து திருப்பங்களில் நெளிந்து பன்றிமலைச் சித்தர் ஆசிரமம் வழியாகச் சென்று சடக்கென்று நுழைந்த இடம் Alliance Francaise. தமிழை விட ஃபிரெஞ்ச்சை ஒழுங்காகத் தமிழர்கள் பலர் உச்சரிக்கும் கலைவளர்க்கும் புண்ணிய பூமி அது. தீடீரென்று பாரீசுக்குள் நுழைந்தது போல இருந்தது என்று பொய் சொல்ல மனமில்லாததால் நேரடியாக சொல்ல வந்ததிற்கு வருகிறேன்.
போண்டாவும் பாசந்தியும் இல்லாமல் வலைப்பதிவர்கள் சந்திக்க முடியுமா என்று பட்டி மன்றம் வைக்க வேண்டியிதில்லை என்று நிருபிக்கவோ என்னவோ எஸ்.பாலபாரதியும், அருளும், ப்ரியனும், ஜி.ராவும் AF வாசலில் கூடினார்கள். கூடவே சாட்சியாக மயிலார்.
யார் யார் யார் என்று தெரியாமல் அரிமுகமாக இருக்காமல் படக்கென்று அறிமுகம் செய்து கொண்டார்கள். ஆடு கிடைக்குப் போகும். இல்லையென்றால் பிரியாணியாக கடைக்குப் போகும். இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்? இதில் மாபெரும் சதி இருக்கும் என்று எல்லாரும் நினைப்பதற்கு வாய்ப்பிருப்பதால் அப்படியே அனைவரும் நினைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
பின் நவீனத்துவத்திலிருந்து எக்ஸிஸ்டென்ஷியலிசம் வழியாக மரபுக்கவிதைக் காவியங்களுக்குள் நுழையும் வழிமுறைகளைப் பற்றியெல்லாம் பேசத் தெரியாயதாலோ என்னவோ நேராக அனைவரும் டீ குடிக்கப் போனார்கள். டீ என்பது தமிழா என்று கேட்கும் அறிவு அதி ஜி.ராவுக்கு அந்நேரம் இல்லாததால் அனைவரும் நிம்மதியாக டீ குடித்தார்கள்.
இவர்கள் டீ குடித்த வேளையில் மயிலார் ஜி.ராவின் காதில் போய் "நேரமாச்சு. வர்ரியா...நான் போகட்டுமா? நீ வேணா இவங்க கிட்ட வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இரு" என்று மெதுவாகக் கேட்டது எல்லார் காதிலும் விழுந்து தொலைத்தது. பாபா(அதாங்க பாலபாரதி)வும் அப்படியே சமாளித்துக் கொண்டு "ஓ! போலாமே...நேரமாச்சு" என்று சமாளித்தார். அந்த அவசரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒழுங்காக வரவில்லை. ஆனாலும் கொடுக்கிறேன். யாரையாவது கண்டு பிடிக்க முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே எல்லார் கையிலும் நுழைவுச் சீட்டை வைத்துக் கொண்டு நுழைய இடம் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வேளையில் சிகப்பு நிற போஸ்டரைப் பார்த்துக் கொண்டே இரண்டு மாடிகளைத் தாண்டி அரங்கத்துக்குள் நுழைந்தோம். நூறு பேருக்கு மேல் யாரும் நுழைந்தால் எல்லாரும் வெளியே வந்து விட வேண்டிய அளவுக்கு ஒரு அரங்கம். ஆனால் வசதியாக இருந்தது. மேலே ஏறியிருப்பது மேடை என்பதைப் பொய்யாக்கி மேடையை கீழே வைத்திருந்தார்கள். பார்வையாளர்கள் மாடிப் படியில் உட்கார்ந்து கொண்டு கீழே பார்ப்பது போல ஒரு அமைப்பு.
ஆளாளுக்கு இருந்த இடத்தில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் அடித்துப் பிடித்து அமர்ந்தோம். குற்றம் காணின் அதை உரக்கச் சொல்வோம் என்பது போல "எனக்கு மறைக்குது...ஒனக்கு இடிக்குது" என்று குரலெழுப்பிக் கொண்டனர் சிலர். ஆனாலும் நாகரீகத்தில் உச்சியில் இருக்கும் நாம் மறைக்கிறது என்று சொல்லிக் கொள்ளக் கூச்சப்பட்டுக் கொண்டு அமைதியாக இருந்தனர் பலர். மயிலார் தோகையை நன்றாக விரித்துக் கொண்டு வசதியாக உட்கார்ந்திருந்தார். அவரிடம் மட்டும் யாரும் மறைக்கிறது தோகையை மடக்குங்கள் என்று சொல்லவேயில்லை.
சரி. என்னதான் நடக்கப் போகிறது. நாடகம்தான். வேறென்ன. உலகமே ஒரு நாடகமேடையாம். அப்படியானால் இது நாடகத்தில் நாடகமா? கதைக்குள் கதை மாதிரி.
தொடரும்...
Bookmarks