நன்றி புதினம்.காம்
முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது சிறிலங்கா இராணுவம் இன்று நடத்திய கொடூர விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 129 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் உள்ள செஞ்சோலை சிறார் இல்ல வளாகம் மீது சிறிலங்கா விமானப் படையின் 4 கிபீர் விமானங்கள் 16 குண்டுகளை இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் வீசின.
இருநாள் பயிற்சிக்காக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை சிறுமிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பாடசாலையில் தங்கியிருந்தனர்.
இதில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டனர். அப்பகுதியில் நோயாளர் காவு வாகனங்கள் சென்று-வந்து கொண்டிருக்கின்றன.
படுகொலை செய்யப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 75 ஆக உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
செஞ்சோலை சிறார் இல்லத்தில் மொத்தம் 400 பாடசாலை சிறுமிகள் இருந்தனர்.
33 சிறுமிகளின் சடலங்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதர சிறுமிகளின் சடலங்கள் கடுமையாக சிதைவடைந்துள்ளன.
காயமடைந்த 52 சிறுமிகள் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 13 சிறுமிகள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கும் 64 பேர் கிளிநொச்சி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், ஊடகவியலாளர்களை அழைத்து காலையில் தகவல் தெரிவித்தது. இச்சம்பவம் ஒரு கொடூரமான மிலேச்சத்தனமான தாக்குதல் என்று விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப்புக்கும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கும் சம்பவ இடத்தைப் பார்வையிடுமாறு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
செஞ்சோலை சிறார் இல்லம் அமைந்துள்ள வல்லிபுனம் கிராம சேவகர் சிவராஜா இது குறித்து கூறியதாவது:
8 ஆண்டுகளுக்கு முன்னர் செஞ்சோலை சிறார் இல்லம் அமைக்கப்பட்டது. சர்வதேச நிறுவனங்களினால் நன்கு அறியப்பட்ட நிறுவனம். யுனிசெஃப் உள்ளிட்ட பல்வேறு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளின் சார்பாக கருத்தரங்குகள் அங்கே நடைபெற்றுள்ளன.
போரில் உறவுகளை இழந்த பெண்களுக்கான இல்லமாக அது செயற்பட்டு வந்தது. செஞ்சோலை இல்லத்தையொட்டி பல மனிதாபிமான பணிகளுக்கான இல்லங்கள் செயற்பட்டு வருகின்றன.
"இனிய வாழ்வு இல்லம்", "காந்தி இல்லம்", "வசந்தம்" ஆகிய இல்லங்கள் அனைத்தும் செஞ்சோலை சிறார் இல்லத்தைச் சுற்றி 1 கிலோ மீற்றர் தொலைவுக்குள் அமைந்துள்ளன. இனிய வாழ்வு இல்லத்தில் உள்ள உடல் வலு குறைந்த சிறார்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்றார் சிவராஜா
சிறிலங்கா விமானப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை சிறுமிகளின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவிகள் ஏழு பேரின் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு பாடசாலை முதல்வர் அருட்தந்தை றொபின்சன் அடிகளார் தலைமை தாங்கினார்.
இதேபோல் விசுவமடு, தர்மபுரம் மகாவித்தியாலயங்களிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
விசுவமடுப் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு பாடசாலை முதல்வர் ஐ.கே. தவரட்ணமும்,
தர்மபுரம் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு முதல்வர் சி.பூலோகராசாவும் தலைமை தாங்கினர்.
ஒட்டுசுட்டான் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு முதல்வர் செல்வரட்ணம் தலைமை தாங்கினார்.
ஏனைய பாடசாலைகளிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
Bookmarks