மதிய உலா
சுரீரென்று கோபம் தலைக்கேறியது. ஞாயிற்றுக்கிழமை காலை உணவருந்தி உடல்நிலை சற்று சரியில்லாதது போல தோன்றியதால் விஜய் டி.வியில் ஆங்கிலப்படம் பார்த்துக் கொண்டே தூங்கிப்போனேன். திடீரென்று ஏதோ சுமை உடல் மீது இறங்குவதாய் தோன்றிற்று. தலை பாரமாய் இருந்த போது கண்ணை பாதி விழித்துப் பார்க்கையில் அறை நண்பன் ஒரு மார்க்கமாய் என்மீது சாய்ந்து உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். உடலுக்குள் ஏதேதோ மாற்றங்கள். எங்கே வலிக்கிறது என்றே தெரியவில்லை. அவன் உட்கார்ந்த போது முதுகில் ஏதோ கடமுடவென்று சத்தம். அடிவயிற்றில் கடுமையான வலி. என்னாயிற்று எனக்கு? மறுபடியும் ஏதேனும் பிரச்சனையா? உடல்நிலை தான் சரியில்லை என்று தெரியுமே, அப்புறம் ஏன் இப்படி மடார்னு உட்கார்ந்தான். கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாதா?
மறுபடி தூங்க முயன்றேன். முடியவில்லை. எழுந்து போய் மடமடவென்று தண்ணீர் குடித்தேன். சற்று வயிற்றுவலி குறைந்தாற்போல் தோன்றிற்று. சிறுநீரகம் வேலை செய்யவே கழிவறைக்கு சென்று வந்தேன். 'உடலில் ஏதேதோ உணர்வுகள். வலிக்கிறதா? இல்லை ஏதோ குடைவது போலுள்ளதே.. என்ன தான் ஆயிற்று எனக்கு?' இன்னும் நண்பன் மேல் கோவம் தீரவில்லை. அறைக்குள் சென்று படுக்க முயன்றேன். ம்ஹும். வலியுடன் சேர்ந்து கோவமும் தலைக்கேறியிருந்ததால் தூக்கம் வரவில்லை.
வேகவேகமாக எழுந்து முகம் கழுவி பேண்ட் போட்டு கிளம்பிவிட்டேன். எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தும் யாரிடமும் பேசவில்லை. மொபைல் போன் கூட எடுத்துக் கொள்ளவில்லை. பர்ஸை மட்டும் எடுத்து செருப்பை மாட்டி கிளம்பிவிட்டேன். எங்கே போவது? தெரியவில்லை. எங்கியாவது போகணும்.' வீட்டுக்கு வெளியில் வந்தால் வெயில் சுரீரென்று உறைந்தது. இதில் போய் தான் ஆக வேண்டுமா? எவ்வளவு தூரம் நடப்பது?
எங்கேயாவது போகணும், நடந்து போகணும், இங்கிருந்து போகணும். மனம் பலவாறு அசைபோட கோவம் கொப்பளிக்க நடக்க ஆரம்பித்தேன். மெதுவாக, மிக மெதுவாக. அப்படி ஒன்றும் எங்கேயும் போய் வெட்டி முறிக்கிற காரியம் ஏதுமில்லையே. தளர்ந்த நடையுடன் மாருதிநகர் மெயின் ரோட்டில் நடைபயணம். மணி இரண்டரை ஆயிருந்தது. வழியில் ஜூஸ் கடை. குடிப்போமா? மதியம் தான் இன்னும் சாப்பிடலையே! சரி. ஜூஸ் குடிக்கவாவது பணம் இருக்கிறதா? துலாவிப்பார்த்ததில் சட்டைப்பையில் நாற்பது ரூபாய் இருந்தது. பர்ஸில் சுத்தமாய் பணமில்லை. கடையில் நுழைகையில் குடித்து தான் ஆகணுமா?. மனம் மாறி நடக்க ஆரம்பித்தேன். பணம் இல்லை. போய் ஏ.டி.எம் மில் பணம் எடுத்து வந்தால் என்ன? நல்ல யோசனை. அதே வழியில் நடக்க ஆரம்பித்தேன். முதலில் ஏ.டி.எம் போய் பணமெடுத்து வந்து அத்வைத் பெட்ரோல் பங்க் எதிரில் இருக்கும் பூங்காவில் போய் உட்கார்ந்திருக்கலாம்.
கங்கோத்ரி சர்க்கிள் தாண்டி திரும்பினேன். அட, மனுசன் திரும்புவதற்குள் ஏன் தான் வண்டியை இடிக்கற மாதிரி ஓட்டுறாங்களோ? உரசி சென்ற வேனை திட்டியது மனது. அட இது என்ன, இப்போ தான் குளித்து முடித்து வருகிற பெண். மொபைலில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டே என்னைக்கடந்தாள். ஆஹா. என்ன பர்ப்ஃயூம் யூஸ் பண்ணுகிறாள். ரொம்ப நல்லாருக்கே. முனைதாண்டி இடது திரும்பி நடை தொடர்ந்தது. இது என்ன வீட்டின் முன் நின்று கும்மாளம் அடிக்கின்றனர். ஏதோ விசேஷமாயிருக்கும். பூங்கா பக்கம் கால்கள் திரும்பியது. உள்ளே போய் உட்காராமல் இவன் ஏன் வெளியே உட்கார்ந்திருக்கிறான். இவனுக்கு என்ன சோகமோ?. பூங்கா வாசலில் நாலு பெரியவர்கள் உட்கார்ந்திருந்தனர். வாசல் பூட்டியிருந்தது. கன்னடம் படிக்கத் தெரியாது. ஆனாலும் அங்கிருந்த தட்டியில் எழுதியிருந்ததை பார்க்கையில் நாலு மணிக்கு தான் திறக்கப்படும் என்று புரிந்தது. சரி. போய் பணமாவது எடுத்து வரலாம்.
எப்பவுமே பரபரப்பாக இருக்கும் பி.டி.எம் சிக்னலை கடந்தாயிற்று. ஆமாம் ஞாயிற்றுக்கிழமை அதுவும், மக்கள் கூட்டம் கூட்டமாய் எங்கே தான் போகிறார்கள். ஆங்காங்கே தென்பட்ட ஜீன்ஸ் போட்ட மகளிர் கூட்டத்தை பார்த்து மனம் அசைபோட்டது. உடுப்பி கார்டன் தாண்டி.. அட வழக்கம் போல் கொய்யா வியாபாரி இருக்கிறானே. வயிறும் சற்று பசியால் துடிக்க ஆரம்பித்திருந்தது. அவனிடம் சென்று ஒரு கொய்யா வாங்கி நடக்க ஆரம்பிதாகிவிட்டது. அடுத்து எங்கு செல்வது? நேராக ஏ.டி.எம் போகலாமா? இல்லை. வேறு எங்கேனும் வெட்டிய கொய்யா துண்டினை சுவைத்தபடி மறுபடி சிந்தனை. எங்கியாவது போகலாம். வலப்புறம் திரும்பாமல் நேராக கால் நடந்தது.
எதிரில் ஒரு ஜோடி. இதென்ன இவர்கள் நண்பர்களா.. காதலர்களா.. இல்லை தம்பதியா?. பையன் நல்ல உயரம். கருப்பாய் இருந்தான். பெண் மாநிறமாயிருந்தாலும் ஏக லட்சணமாய் இருந்தாள். அவனுடன் பேசுகையில் கண்ணில் வெட்கம். காதலுக்கும் கலருக்கும் சம்பந்தமே இல்லை தான். பேசிக்கொண்டே அவர்கள் என்னைக் கடக்கையில் தமிழர் என்று புரிந்தது. இந்நேரம் எங்கே போகிறார்கள். சாப்பிட இருக்கலாம். மற்றுமொரு கொய்யா துண்டை வாய்க்கு கை கொண்டு போனது. இதென்ன கொய்யா பழமாவும் இல்லாமல் காயாகவும் இல்லாமல். சுற்றி நடக்கும் மக்கள் வேகமாக மிக வேகமாய் இயங்குவதாய் தோன்றிற்று. எனக்கென்ன வேலை. பொறுமையாய் கொய்யாவின் ஒவ்வொரு விதையாய் நாவில் துழாவி பற்களுக்கிடையில் கொடுத்து கடிப்பதில் சுகமாய் இருந்தது. கால்கள் நடந்தாலும் கண்கள் பாதையைப் பார்த்தாலும் மனம் கொய்யாவின் விதைகளில் இருந்தது. அட.. கொய்யாவின் விதை இப்படியா சுவைக்கும். இதுவரை தனியே பிரித்து கடித்ததில்லையே. பொறுமையாக அந்தத் துண்டு கொய்யாவை முடித்திருக்கையில் நின்றிருந்த ஒரு பேருந்து அருகே வந்திருந்தேன்.
பக்கத்தில் ஒரு மைதானம். கூட்டமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். பேருந்தினுள் பார்த்தேன். அது தான் கிளம்பும் இடம் போலும். கிளம்பும் நேரமாகாததால் யாருமில்லை. நடத்துனர் மட்டும் தனியே உட்கார்ந்திருந்தார். பலத்த சிந்தனை போலும். சரி. திரும்பலாம் என்று எண்ணிய மனம் கால்களுக்கு கட்டளையிட்டது. சோர்வைடைய ஆரம்பித்திருந்த கால் திரும்ப எத்தனிக்க கண்கள் வழி நோக்கி அருகில் வாகனம் வந்து கொண்டிருப்பதை தெரிவிக்க கால்களை துரிதப்படுத்த மூளை கட்டளையிட சாலையை கடந்தாயிற்று. வந்த வழி வேண்டாம். வேறு வழி போகலாம். அடுத்த தெருவின் வழியாக பயணம். இதற்குள் கொய்யா முழுவதுமாய் முடிந்திருந்தது. இடப்பக்கத்தில் குப்பைக்கூளம் குவிந்திருந்தது. துர்நாற்றம். பக்கதிலேயே பத்தடி தூரத்தில் குடிசைகள். இதிலேயும் மக்கள் வாழ்கிறார்களே. எனக்கு நிற்கவே முடியவில்லை. வயிற்றை பிரட்டுகிறது. ஆமாம். வயிறு வலித்ததே. என்னாயிற்று?. வயிற்று வலி சுத்தமாய் நின்றிருந்தது. ஆமாம். முதுகும் இடுப்பும் வலிப்பது போலிருந்ததே. கெண்டைக்காலில் நரம்பி இழுத்தது. காலில் குடைச்சலாய் இருந்தது. ஓ..சரி. நமக்கு பிரச்சனை இருக்கிறது. மேலும் போவோம்.
சின்ன தெரு அது. தெருவையே அடைத்து கார்கள் நின்றிருந்தது. என்னமாய் வீடு கட்டுகிறார்கள். அழகழகாய், விதவிதமான வண்ணங்களில், வடிவமைப்பில். நாமும் கார் வாங்கணும். இப்போதைக்கு முடியுமா? இல்லை. வாங்கினால் சோற்றுக்கு லாட்டரி தான்.
கால்கள் உடலைத் தாங்கி மெயின் ரோட்டை அடைந்திருந்தது. எதிரில் தனியார் வங்கி. அதனருகில் இளநீர் கடை. அங்கே பார். ஒரு பெண் இளநீர் கொண்டு ரோட்டைக் கடக்கிறாள். கல்யாணமாயிற்று போலும். எவ்வளவு அழகாய் உயரமாய் லட்சணமாய் இருக்கிறாள். அவள் கட்டிருக்கும் புடவை பாந்தமாய் இருக்கிறதே. மனமும் உடலும் அவளைக் கடந்தது. எல்லாக் கடைகளிலும் இப்படி தானா? ஒரே கூட்டமாய் இருக்கிறது. அதிலும் எக்கச்சக்கமாய் பெண்கள். ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரிகிறது. பெண்கள் இருவராய் எங்கேயும் போவதில்லை. ஒன்று ஆண் துணையுடன் போகின்றனர். இல்லை மூன்று பெண்களாய் போகின்றனர்.
கடைகள் தாண்டி பழைய வீடு ஒன்று வந்தது. புதுப்பித்துக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை கூடவா வேலை செய்யணும். இவங்க இவ்ளோ கஷ்டப்படுறாங்க. நாம சொகுசா பிடிச்சா தான் வேலை செய்வோம். வருமானம் சரியில்ல. அது இதுன்னு சொல்லியே காலத்த ஓட்டுறோமே?
வந்தாயிற்று ஏடிஎம். முன்னே இரண்டு பெண்கள். உள்ளே ஒருவன் பணம் எடுத்துக் கொண்டிருந்தான். பெண்கள் இருவரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர். ஆண் வெளியே வர ஒரு பெண் உள்ளே சென்றாள். சற்று பருமனானாலும் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். பார்வையை திருப்பி ரோட்டில் வாகனங்களை பார்த்திருந்தேன். நேரமாயிற்று இந்த பெண் வந்த மாதிரி தெரியவில்லையே. உள் நோக்கினேன். ஏடிஎம் ஸ்லிப் எடுத்து கிழித்து கீழே போட்டாள். பார்வை கீழே சென்றது. இதென்ன இந்த பெண் கால்கள் இவ்வளவு கலராய். அங்கே பார் அவள் தோலினூடே செல்லும் பச்சை நரப்பு கூட தெரிகிறதே. அடேய்..இப்படி பார்ப்பது தப்புடா. சட்டென்று பார்வையை வேறுபக்கம் திருப்பினேன்.
அவள் வந்து நான் சென்று பணம் எடுத்தாயிற்று. அடுத்து என்ன பண்ணலாம். வீட்டை விட்டு வந்து முக்கால் மணிநேரத்திற்கும் மேலிருக்கும். வீட்டிற்கு போகலாமா? இல்லை பார்க்கில் போய் உட்காரலாமா?
தேடிகிட்டு இருக்க போறாங்க. ஒன்னும் சொல்லாம வந்துட்டோம். வீட்டுக்குப் போகலாம். வழியில் அந்த இளநீர் கடையில் நின்று தண்ணியாய் வாங்கி இளநீரை குடித்தேன். அவ்வளவு சுவைக்கவில்லை. வீட்டுக்குப் போகலாம். சீக்கிரம் போகணும். தேடப் போறாங்க. சாப்பாடு வேற ஆர்டர் பண்ணியிருந்தாங்க.
கால்கள் துரிதகதியில் நடக்க சிக்னல் தாண்டி நடந்தேன். மனம் கால்கள் மேலே இருந்தது. பத்தே நிமிடங்கள். இதோ வீடு அருகில். மனம் அமைதியாய் சலனமில்லாமல். சீக்கிரம் போகணும். காத்துட்டு இருக்கப்போறாங்க. ஆமாம். நடக்க ஆரம்பித்து ஒரு மணிநேரத்துக்கு மேலிருக்கும். ஆனாலும் முதுகிலோ இடுப்பிலோ வலியில்லையே. ஆனா அந்த டாக்டர் ரொம்ப நேரம் நடக்கக்கூடாது. நடந்தா பிரச்சனை அப்படி இப்படின்னு சொன்னார். நாமளும் இவ்ளோ நாளா நடக்காம இருந்துட்டோம். கால்ல கூட வலியில்லையே. இந்த டாக்டருங்களே இப்படித் தான். சரியாவே ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாங்க.
அபார்ட்மெண்ட் படிகளில் ஏறும் போது டாக்டர் மேல் கோவம் கோவமாய் வந்தது.
Bookmarks