ஆதலினால் ரத்த தானம் செய்வீர்!!!!!
இந்த அனுபவத்தில் உள்ள நான், நானில்லை; என்னடா ஆரம்பத்திலேயே குழப்புகிறானே என்று எண்ணாதீர்கள். இதில் உள்ள நான்.. பெயர் வந்தியத் தேவன். நாங்கள் இருவரும் பள்ளி நாட்களில் இருந்து கல்லூரி வரை இணை பிரியாத் தோழர்கள். இனி அவன் வாயிலாகவே அவன் அனுபவத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்!!
இனி வந்தியத்தேவன் ..
இது நடந்தது நான் இளவறிவியல், படித்தபோது. என் கல்லூரியின் விளையாட்டுக் கழகத்தில் எனக்கு முக்கிய பொறுப்பு இருந்தது. மேலும் மற்ற வெளி கல்லூரி மன்றங்களுக்கும் ஒரு இணைப்பு பாலமாகவும் விளங்கினேன். படிப்பு படிப்பு. என ஒரு புறம்; இது போன்ற சமூக பொறுப்புகள், மறு புறம்; என இளநிலைக் கல்வியின் மூன்று வருடங்களும், வேகமாய்ப் பறந்தன.
இளநிலை இரண்டாமாண்டில், தற்போதுள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு முக்கிய மகளிர் கல்லூரியின், கல்லூரித் தலைவி எனக்கு அறிமுகமானாள். அவள் இளவறிவியல் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கல்லூரி உயர் மட்டப் பெண்கள் படிக்கும் கல்லூரி. கோதை என்று பெயர். சற்றே சப்பை மூக்குடன் இருந்தாலும், பெரிய கரு வண்டுக் கண்களைக் கொண்டு; பார்த்தவுடனே மூர்ச்சையடைக்க வைக்கும் அழகுப் பெண். அந்தக் கல்லூரியின் கருப்பு முத்தாக விளங்கியவள்.
கல்லூரிகளுக்கிடையே ஆன விழாக்களுக்கு பருத்திப்புடவையில்தான் வருவாள்; கஞ்சி போட்டு மொட மொடவென்று; சிந்தடிக்; பாலியஸ்டர் என்றெல்லாம் அவள் உடுத்தி நான் பார்த்ததில்லை. அவள் வந்தால்தான் கல்லூரிகளுக்கான விழாக்களே களை கட்டும். மற்ற கல்லூரி மாணவர்களுடன் பேசுவதை விட, என்னிடம் மிகவும் இழைந்து பேசுவாள். ஏதேனும் காரணத்தினால் அவள் வர முடியாமற் போனால் கோத எங்கப்பா; இந்த தடவ வரலியா என்று என்னிடம்தான் கேட்பார்கள். அந்த அளவுக்கு என்னுடன் நெருக்கம்.
சுவை படப் பேசுவாள். எதிர்பாராத மேற்கோள்கள்; நகைச்சுவை; சமுதாய அக்கறை; கல்லூரி மாணவர்களின் மேம்போக்கு மனப்பான்மை; சாதீய ஆதிக்கம்; என அவள் மேடைப் பேச்சில் பல முகங்கள் காணலாம். எனக்கு அவள் பால் மிகுந்த ஈர்ப்பு இருந்தது. அவள் ஏதேனும் விழாவிற்கு வராமல் போனால், எனக்கு அந்த விழா சுவைக்காது. ஆனாலும் என்னவோ அந்த ஈர்ப்பு.. எவ்வாறு என் உணர்ச்சிகளை அவளுக்குப் புரிய வைப்பது எனத் தெரியவில்லை. நல்ல நட்பைக் கொச்சைப் படுத்திவிட்டதாக அவள் நினைத்துவிட்டால். ஆனால் அவளுக்கும் என்னிடம் அது போன்ற ஈர்ப்பு இருந்தது போல்தான் தோன்றியது. என்னைப் போலவே அவளும் தயங்கி இருக்கலாம். ஒரு ஊமை நாடகம் எங்களை அறியாமல் அரங்கேறி நடந்து கொண்டிருந்தது.
அவளும் நானும் சினிமாக்களுக்குக் கூட போயிருக்கிறோம். இருவரும் திரையரங்கில் தனித்திருக்கையில் கூட சினிமாவின் விமரிசனங்கள்தான் காரசாரமாக நடக்குமே தவிர, மனம் விட்டுப் பேசி, நட்பானது காதல் என்னும் இனிய லோகத்திற்கு மாறியதில்லை. காதல் மட்டுமே குறிக்கோளாக இருந்திருந்தால்.. என் கல்வி எனக்கு ஒரு வடிகாலாக அமைந்தது. காலப்போக்கில் இந்த ஈர்ப்பு, என்அடிமனத்தில் புதைந்து, நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருந்திருக்கிறது. என் மனம் என்னவென்று எனக்கே தெரியவில்லை. நான் எப்படி அவளிடம்..
இறுதியாண்டில் அவள் பல்கலைக் கழக தங்க மெடல் பெற்றதாக கேள்விப் பட்டேன். நானும் ஒரு வருடம் கழித்து இளவறிவியல் முடித்து, முதுவறிவியலில், மற்றொரு கல்லூரியில் சேர்ந்து கால்பந்து, கல்வி, என மும்முரமாகி விட்டேன். அவளுடைய நினைவுகள் மட்டும் எப்போதாவது வந்து போகும். அப்பொழுதெல்லால் நெஞ்சு கனக்கும்.
முதுவறியலின் இறுதியாண்டில், ரத்த தான முகாம் ஒன்று எங்கள் கல்லூரியில், நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது. எனக்கு ஊசி குத்திக் கொள்வது என்றாலே பயம். இருப்பினும் நானும் ஒரு பொறுப்பாளராகத் திகழ்ந்ததனாலும், மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதாலும், என் வாழ்விலேயே முதல் முறையாக, ரத்த தானத்திற்கு, நானும் என் இசைவினைக் கொடுத்திருந்தேன்.
முகாம் நாளும் வந்தது. சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து, மாணவ மாணவியர்; வருங்கால வைத்தியர்கள், ரத்த சேமிப்பிற்காக எங்கள் கல்லூரிக்கு வந்தனர். கல்லூரியின் கலை அரங்கில், குட்டி குட்டியாக நான்கு தடுப்புகள் போடப் பட்டிருந்தன.
இந்த முகாமிற்கு, கல்லூரியைத் தவிர, வெளியாட்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. அன்றைய தினம் சுமார் முன்னூறு பேர்களுக்குக் குறையாமல், ரத்த தானம் செய்ய வந்திருந்தனர். ஒரு அமைப்பாளர் என்ற முறையில் எனக்கு மிகுந்த வேலை. நான்கு, தடுப்புகள் போதாத நிலையில், மேலும் ஐந்து, சிறிய அறைகளிலும் ஏற்பாடுகள் செய்ய வேண்டியதாயிற்று.
சென்னை மருத்துவக் கல்லூரிக்கு, தொலைபேசியில் விவரம் தெரிவிக்கப் பட்டு, மேலும் சில மாணவிகள் வந்து சேர்ந்தனர்.
அவ்வாறு வந்தவர்களில், கோதையும் ஒருத்தி. இளவறிவியல் படித்த பின்பு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இப்போது மருத்துவக் கல்லூரி மாணவி. அவளுக்கு என்னைப் பார்த்ததும் மட்டற்ற மகிழ்ச்சி. என்னைக் குசலம் விசாரித்தாள்.
அவளுக்கு, ஒரு சிறிய அறையை ஒதுக்கி கொடுத்து, அவள் ரத்த தானம் எடுக்கையில், அவளுடனே இருந்து, சிறிய ஒத்தாசைகள் எல்லாம் பண்ணிக் கொடுத்தேன்.
கிட்டத்தட்ட, மதிய உணவு நேரத்திற்குள், ரத்த தானத்திற்கு வந்தவர்கள், தானம் முடித்துப் போய் விட்டார்கள். எனக்கும் ஒன்றும் வேலையில்லை. சரி இப்போது நாம் ரத்த தானம் கொடுப்போம் என்று கோதை இருந்த அறைக்குச் சென்றேன். நானும் ரத்தம் கொடுக்கப் போவதையறிந்தபோது, அவளது முகத்தில் ஒரு குறும்பு மின்னல்; ஒரு பெருமூச்சு விட்டாள்.
என்னைக் கட்டிலில் படுக்கச் சொன்னாள்; அறைக் கதவை மூடிவிட்டு வந்தாள்; கையில் ரத்தம் பெறுவதற்குறிய ஊசியினை எடுத்தாள்; கையை நீட்டச் சொன்னாள்.
அவள் கையில் ஊசியை எடுத்தவுடன், ஊசி குத்துகையில், அதனைப் பார்க்க வேண்டாம் என நினைத்து, என் முகத்தைத் திருப்பிக் கொண்டு கையை நீட்டினேன்.
அறை வாசலுக்கு, முதுகைக் காட்டி, என் அருகாமையில் உள்ள முக்காலியில் அவள் அமர்ந்தாள். அமர்ந்ததும், என்னுடைய நீட்டிய முழங்கையில், ஒரு திரவத்தைத் தேய்த்து விட்டாள்.
சற்றே பயத்துடன் ஊசி குத்தினால் வலிக்கப் போகிறதே என்றெண்ணி, கண்ணை இறுக மூடிக் கொண்டேன். கை விரல்களை நன்றாக விரித்து மூடுங்க என்றாள். அப்படியே செய்தேன். அவள் குனிந்து, என் முழங்கையில் ரத்தக் குழாயைத் தேடினாள். தோல் மறத்துப் போவதற்கான திரவம் தடவப் பட்டதால், என் ரத்தக்குழாயில் ஊசியினை நுழைக்கையில் எனக்கு வலி ஒன்றும் தெரியவில்லை.
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஊசி ஏற்றி முடித்து, ரத்தம் எடுக்க ஆரம்பித்தவள் என்னைப் பார்த்து ஒரு புன் முறுவல் செய்து, என் முகத்தை, மறு பக்கம் திருப்பி விட்டாள்.
அப்படியே கைவிரலை அழுத்தமாக மூடி மூடித் திறங்க என்றாள்.
இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்வதற்கான வாய்ப்பு; கடவுளாக ஏற்படுத்திக் கொடுத்தது. மூன்று வருடப் பிரிவு; ஒரு வேளை இது நிரந்தரப் பிரிவாகி விடக் கூடாதே என்ற பயம்; இதனை விட்டால் எப்போது இது போல் வாய்க்கும் என்று தெரியாத நிலையில், அரை இருட்டில், ஒரு திரையரங்கத்தினுள் பேச இயலாத தைரியம் எனக்கு வந்து, கண்ணில் நீர் கலங்க என் காதலை அவளிடம் சொன்னேன்.
(வந்தியத்தேவனால் இனி இந்த அனுபவத்தை விவரிக்க முடியாது!!!! இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டதாக மட்டும் என்னிடம் சொன்னான்.)
இதற்கிடையில், ரத்த தானத்திற்குறிய அந்த 200ML பை நிரம்ப ஆரம்பித்தது. ஓரக் கண்ணால் அதனைப் பார்த்து விட்ட, கோதை சட்டென எழுந்து, ஊசியினை எடுத்து, ரத்த தானத்தை நிறுத்தினாள். ஊசி குத்திய இடத்தில் ஒரு திரவம் தடவிய பஞ்சு வைத்து அழுத்தி, கையை மடக்கி வைத்துக் கொள்ளச் சொன்னாள்.
ரத்த தானம் குறித்து, மிகவும் மிரண்டு போயிருந்த எனக்கு, ஊசி குத்திய போதும் வலிக்கவில்லை; தானத்தினால் உடல் சோர்வும் ஏற்படவில்லை.
தானம் கொடுத்தாலும் கூட அன்றே அன்றாட வேலைகளில் ஈடுபடலாம்; ஒரு களைப்பும் இருக்காது என்றும் உணர்ந்தேன்.
வந்தியத்தேவனுக்கு இளஞ்சூரியன் பால்ய சினேகிதன் என்று கோதைக்கும், தெரியும். எனவே அன்று ரத்த தான முகாமெல்லம் முடிந்து, நாங்கள் விடுதி உணவகத்தில், சாப்பிடுகையில், அண்ணா நான் வந்தியைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கோதை இளஞ்சூரியனிடம் சொன்னாள். இளஞ்சூரியன் இருவருக்கும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தான்.
இது நடந்து கிட்டத் தட்ட 14 வருடங்கள் ஆகி விட்டன. அதற்குப் பிறகு, கணக்கு வழக்கு இல்லாமல் பல முறை நானும், இளஞ்சூரியனும் ரத்த தானம் செய்திருக்கிறோம்.
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலில் அந்த ஏழை, கல்வியின் உதவியினால், உயர்ந்த நிலை அடைவதைப் பார்க்க சில வருடங்கள் ஆகலாம்;
கண் தானத்திலும் உங்கள் கண் பார்வையைத் தருமே தருமே உங்களால் அதன் மகிழ்ச்சியை உணர முடியாது;
பசிப் பிணி மருத்துவனாக உதவினாலும் ஒரு வேளை சொர்க்கத்திற்கு போகலாம், வாழ் நாள் முடிந்தவுடன்;
ஆனால் ரத்த தானம் ஒன்றில்தான்..
நம் ரத்தம் பெற்றவர்கள் நம் கண்ணெதிரே உயிர் பிழைத்து நடமாடும் மகிழ்ச்சியை நம்மால் அனுபவிக்க முடியும்.
இப்போது கூட, 14 வருடங்கள் கழித்தும் கூட, ரத்த தானம் என்ற வார்த்தையைக் கேட்டாலே கோதைக்கும், வந்தியத் தேவனுக்கும் வெட்கத்தினால் முகம் சிவந்து விடுகிறது. அவர்கள் இல்லறம் இனிதே நடந்து கொண்டிருக்கிறது.
யார் கண்டார்கள்!!!! இது போன்ற ரத்த தான முகாமில், இளைய தலைமுறை கூடும் இடத்தில்தான் உங்களின் வருங்காலத் துணை ஒளிந்து கொண்டிருக்கலாம்; நல்ல நட்பு கிடைக்கலாம்; வேலை தேடுவோருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிட்டி வேலை கிடைக்கலாம்; இது போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு அமையாமல் போய்விடினும்
உங்கள் ரத்தம் ஒரு மனித உயிரைக் காப்பாற்றிய மகிழ்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்.
தமிழ் மன்ற நண்ப, நண்பிகளே,
ஆதலினால், ரத்த தானம் செய்வீர்!!!!!
Bookmarks