திருவாசகம் சிம்பொனி - இசைஞானி இளையராஜா (Extra copy)

தகட்டில் முதல் பாடலாக இருப்பது "பூவார் சென்னி" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடல் ஏன் முதலிடத்தில் இருக்கிறது என்பது பாடலின் தொடக்கத்திலேயே புரிந்து விடுகிறது. பெரிய அலை போல இசை வந்து நம்மை பரவசக் கடலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. தப்பிக்க முடியவில்லை. பழைய நூற்றாண்டுத் தமிழ் மேற்கத்திய இசையில் அரியணை போட்டு அமர்ந்து கொள்கிறது.

இந்தப் பாடல் இளையராஜாவின் குரலுக்கு அழகாக பொருந்தி வருகிறது. மிகவும் சிறப்பு. இறைவனின் சிறப்புகளைச் சொல்லும் பாடல்கள். உணர்ச்சியின் உச்சியில் நின்று கொண்டு பாடியிருக்கிறார். அதனால்தான் பாடல் பெரியதாக இருந்தாலும் முடியும் வரை நாம் மெய் மறந்து போகிறோம்.

பீத்தோவானின் கொஞ்சம் சிம்பொனி கேட்டிருக்கிறேன். ரொட்ஜர்ஸ் அண்டு ஹாமர்ஸின் பாடல்கள் கொஞ்சமும் கேட்டதுண்டு. இவர்கள் மேற்கத்திய இசையில் ஊறித் திளைத்தவர்கள். அதே நேரத்தில் அவர்களும் மேற்கத்தியர்கள். அந்த அளவிற்கு பிசகாமல் செய்திருக்கிறார் இளையராஜா. இது The King and I படத்தில் சீன இசையைக் கையாண்ட முறைமையைப் போல சிறப்பாக இருக்கிறது. கேட்டவர்கள் எல்லாம் இந்தப் பாடலுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள்.

இரண்டாவது வருகின்ற பாடல் "பொல்லா வினையேன்" எனத் தொடங்கும் பதிகம். ஆனால் ஆங்காங்கே தேவைக்கேற்றவாரு கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக வேறு பதிகங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் அருமையாக இருக்கிறது. இந்தப் பாடல்தான் ஆறு பாடல்களிலும் நீளமானது. காரணமில்லாமலில்லை. தமிழ் வரிகளோடு ஆங்கில வரிகளும் கலந்து உணர்ச்சிக் கலவையாக வரவேண்டுமே! அதற்குத் தோள் கொடுத்திருக்கிறார்கள்....இல்லையில்லை உயிர் கொடுத்திருக்கிறார்கள் உடன் பாடிய ராய் ஹார்கோடும் குழுவினரும்.

திரையிசையில் இளையராஜாவின் முத்திரைக் கைத்திறன்கள் உண்டு. அவற்றை இலக்கண வரம்பிற்குட்பட்ட இந்த இசைக்கோர்வையில் காட்டியிருக்கிறார். மெல்லிய ஓடையாகத் தொடங்கும் பாடல் தடாலென அருவியாகப் பெருகி வழிந்து உணர்ச்சிப் பிரவாகமாய் மடை திறக்கிறது. விமானத்தில் பறந்து கொண்டு கடலைப் பார்க்கும் பரவசம். இந்த வெளியீட்டில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான்.

இது நல்லது அது நல்லது என்றெல்லாம் பிரித்துச் சொல்ல முடியாத அருமையான பாடல். ஒவ்வொரு வரியையும் பாடுகையில், அந்த வரியும் புரிகையில் (இதற்கு செய்யுட்களோடு கொஞ்சம் பழக்கமிருக்க வேண்டும்.) பரவசமே! அதனால்தான் கேட்கும் பொழுது பெரிய பாடலாக இருந்தாலும் அலுப்புத் தெரியவில்லை. ஒரே பாடலாக இல்லாமல் நாலைந்து பாடல்களாக கேட்பது போல உள்ளது இன்னமும் சிறப்பு. நமசிவாய வாழ்க பதிகத்தை கே.வீ.மகாதேவன் இசையில் பி.சுசீலா பாடக் கேட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு வேறு சிலர் இசையில் வேறு சிலர் பாடவும் கேட்டதுண்டு. ஆனாலும் மகாதேவன் போட்ட மெட்டுதான் எனக்கு வரும். அவ்வளவு உணர்ச்சியும் பண்பாடும் கலந்த இசை. இனிமேல் இளையராஜாவின் மெட்டும் நினைவிற்கு வரும். இரண்டுக்கும் அடிப்படை இசைக் கோர்ப்பில் வேறுபாடு இருந்தாலும் அவை சொல்ல வந்ததைச் சொல்லி விட்டன. மிகச் சிறப்பு.

இன்னும் நான்கு பாடல்கள் இருக்கின்றன. முடிவுரை வேறு. அடுத்த பதிப்பில் மற்ற நான்கு பாடல்களையும் அலசலாம்.
 
உண்மையில் ஓவ்வொரு இந்துக்களின்
இல்லத்திலும் இருக்க பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இது.
நண்பர்களே மிக்க நன்றி இப்பாடல்களை பதிவிரக்கம் செய்ய உங்கள்
தள சுட்டிகள் பேருதவியாக இருந்தன.

நண்பர் பிரதீப் கூறியது போல சராவுண்ட் சிஸ்தம் ஹை பையில் , மங்களான ஒளியில் ஒரு ராக்கிங் சேரில் உட்கார்ந்து மெய்மறந்து கேட்டு இன்புருங்கள்


மனோ.ஜி
 
மனோஜி, என்னைக் கேட்டால், இந்துக்கள் என்று சொல்வதைக் காட்டிலும் தமிழர்கள் அனைவரும் போற்றி வைத்திருக்க வேண்டிய கலைப் படைப்பு இது என்று சொல்வேன்.
 
ப்ரதீப்ஜி & ராகவன்ஜி நன்றிகள். படித்து மகிழ்ந்தேன். இனி கேட்டு மகிழ வேண்டும்.

இளையராஜாவை மதிக்க வேண்டுமானால், இந்த தகடுகளை விலை கொடுத்து வாங்க வேண்டும் அல்லது வாங்கிப் பரிசளிக்க வேண்டும். சுஜாதாகூட இதை வலியுறுத்தி இருக்கிறாரே!

===கரிகாலன்
 
gragavan said:
மனோஜி, என்னைக் கேட்டால், இந்துக்கள் என்று சொல்வதைக் காட்டிலும் தமிழர்கள் அனைவரும் போற்றி வைத்திருக்க வேண்டிய கலைப் படைப்பு இது என்று சொல்வேன்.

சரியாகச் சொன்னீர்கள் ராகவன். இந்த முயற்சி மதங்கள் கடந்தது. இதை தயாரித்தவர் ஜெகத் கஸ்பார் எனும் கிருத்துவர் அவர் சொன்னதும் இது மதத்திற்காக படைக்கப்பட்டதல்ல - தமிழுக்காக தயாரிக்கப்பட்ட படைப்பு.

ஊருக்கு சென்ற பின் முழுமையாக கேட்டுவிட்டு எனது உணர்வுகளை பதிக்கிறேன்
 
மூன்றாவது பாடல். அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவும் சசிரேகாவும் பாடிய விழியில் விழுந்து என்று தொடங்கும் பாடல் எல்லாரும் கேட்டிருப்பீர்கள். அப்படி ஒரு பாடல்தான் மூன்றாம் பாடல். அதாவது அந்தப் பாடலில் ஆண்குரலும் பெண்குரலும் இணைந்து இழைந்து தேனாக ஒழுகும். சசிரேகாவும் இளையாராஜாவும் அருமையாகச் செய்திருப்பார்கள்.
ஆனால் "பூவேறு கோனும்" எனத் தொடங்கும் இந்தப் பாடலில் சசிரேகாவிற்கு மாற்றாக பவதாரிணி. உச்சரிப்பு தெளிவாக இருந்தாலும் ஒரு பிண்ணனிப் பாடகியாக பவதாரிணி செல்ல வேண்டிய தொலைவு இன்னமும் நிறைய என்பது எனது கருத்து. இளையராஜாவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். சித்ராவையாவது பாட வைத்திருக்கிலாம். ஆனாலும் தமிழர் என்பதால் என்னுடைய வாக்கு சசிரேகாவிற்கு. இளையராஜாவும் ஒரு தந்தைதானே. இருந்தாலும் ரசிக்கத்தக்க ஒரு பாடல்.

"உம்பர்கட்கரசே" எனத் தொடங்கும் பாடல் நான்காவதாக வருகிறது. எனது கருத்தில் இதுதான் அனைத்துப் பாடல்களிலும் இறுதியாக வருவது. இளையராஜாவே பாடியிருக்கின்றார். இந்தப் பாடல் ஜேசுதாசின் குரலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அவரை இளையராஜா பயன்படுத்தியிருக்கலாம். அப்படி அவர் பாடியிருந்தால் இந்தப் பாடல் மிகவும் சிறப்பாக இருந்திருக்குமென்பது எனது கருத்து.

நல்ல வேளையாக அடுத்து வரும் பாடலை இளையராஜா குழுவினருக்குக் கொடுத்து விட்டார். நல்ல வேளையாக என்று சொல்வதற்கு எனக்கே வருத்தமாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இந்தப் பாடல் சற்று சுறுசுறுப்பாக இருக்கிறது. பொற்சுண்ணம் இடிக்கும் பொழுது பாடும் "முத்து நாற்றமாம்" எனத் தொடங்கும் பாடல். மொத்தம் மூன்று பாடகர்களும் மூன்று பாடகிகளும். உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி, ஆஷா, காயத்ரி ஆகியோர் பாடியிருக்கின்றார்கள்.
உன்னி கிருஷ்ணன் பாடியிருக்கின்றார் என்பது பெயர்ப் பட்டியலைப் பார்த்தால்தான் தெரிகிறது. மது பாலகிருஷ்ணன் குரலெடுத்துப் பாடியிருக்க வேண்டும். நம்மை ஆச்சரியப் படுத்துகிறவர் விஜய் ஜேசுதாஸ். நல்ல குரல்வளம். முன்னுக்கு வருவதற்கு வாய்ப்புகள் நிறைய. வருவார். பெண்களில் மஞ்சரி சிறப்பாகவும் மற்றவர்கள் நன்றாகவும் செய்திருக்கிறார்கள். உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு ஆஷாவின் குரலையும் காயத்ரியின் குரலையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

சுண்ணமிடிக்கையில் பாடும் பாடலாதலால் உலக்கையிடிக்கும் ஒலியைத் தாளமாக வைத்துப் போட்டிருக்கிறார். இது அவர் முதல் திரைப்படத்திலேயே செய்து விட்டது. அன்னக்கிளி படத்தில் வரும் "முத்துச் சம்பா" பாடலைத்தான் சொல்கிறேன். அதிலும் உலக்கைச் சத்தமே தாளமாக வரும். உற்சாகமான பாடல்.

கடைசிப் பாடலைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். காரணம் அதில் இல்லாத ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்து பலர் இளையராஜாவை வீண் வம்புக்கு இழுக்கின்றார்கள். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
 
gragavan said:
மூன்றாவது பாடல். அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவும் சசிரேகாவும் பாடிய விழியில் விழுந்து என்று தொடங்கும் பாடல் எல்லாரும் கேட்டிருப்பீர்கள். அப்படி ஒரு பாடல்தான் மூன்றாம் பாடல். அதாவது அந்தப் பாடலில் ஆண்குரலும் பெண்குரலும் இணைந்து இழைந்து தேனாக ஒழுகும். சசிரேகாவும் இளையாராஜாவும் அருமையாகச் செய்திருப்பார்கள்.
ஆனால் "பூவேறு கோனும்" எனத் தொடங்கும் இந்தப் பாடலில் சசிரேகாவிற்கு மாற்றாக பவதாரிணி. உச்சரிப்பு தெளிவாக இருந்தாலும் ஒரு பிண்ணனிப் பாடகியாக பவதாரிணி செல்ல வேண்டிய தொலைவு இன்னமும் நிறைய என்பது எனது கருத்து. இளையராஜாவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். சித்ராவையாவது பாட வைத்திருக்கிலாம். ஆனாலும் தமிழர் என்பதால் என்னுடைய வாக்கு சசிரேகாவிற்கு. இளையராஜாவும் ஒரு தந்தைதானே. இருந்தாலும் ரசிக்கத்தக்க ஒரு பாடல்.

மிகச் சரியாகச் சொன்னீர்கள் ராகவன். நானும் என் பதிவில் இதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். பவதாரிணி சில உற்சாகமான பாடல்களைப் பாடும்போது நன்றாகவே பாடுகிறார். உ.ம். காதலுக்கு மரியாதை படத்தில் வரும் "இது சங்கீதத் திருநாளோ" பாடல். ஆனால் உணர்வுகள் என்று வரும்போது "பயதாரிணி" ஆகி விடுகிறார். இந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமான தமிழர் என்று நான் கருதுவது உலோகக் குரல்களில் அனுராதா ஸ்ரீராம், மற்றவர்களில் ஹரிணி. முறையான சங்கீதப் பயிற்சி பெற்ற இவர்களில் யாருக்கு இந்தப் பாடல் போயிருந்தாலும் கலக்கி இருப்பார்கள். பவதாரிணியும் தேசிய விருது வாங்கிய பாடகியானாலும் நீங்கள் சொன்னது போல் இளையராஜாவும் ஒரு தந்தைதானே... :)
gragavan said:
"உம்பர்கட்கரசே" எனத் தொடங்கும் பாடல் நான்காவதாக வருகிறது. எனது கருத்தில் இதுதான் அனைத்துப் பாடல்களிலும் இறுதியாக வருவது. இளையராஜாவே பாடியிருக்கின்றார். இந்தப் பாடல் ஜேசுதாசின் குரலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அவரை இளையராஜா பயன்படுத்தியிருக்கலாம். அப்படி அவர் பாடியிருந்தால் இந்தப் பாடல் மிகவும் சிறப்பாக இருந்திருக்குமென்பது எனது கருத்து.
ஒரு இசையமைப்பாளர் தனது பாடலை யார் பாடுவது என்று முடிவெடுக்கும் முன் நிறைய யோசிக்கிறார். குறிப்பாகத் தனது கனவுப் படைப்புகளைப் படைக்கும்போது சில நேரங்களில் தான் கொண்டு வரத் துடிக்கும் உணர்வுகளை மற்றவர்களிடம் கொடுப்பதற்குப் பதில் தானே பாடலாம் என்று நினைக்கிறார். நேற்று மீண்டும் இந்தப் பாடலைத் தனிமையில் கேட்டுப் பார்த்தேன். இந்தப் பாடல் மிக மெதுவாகச் செல்வதால் மற்ற பாடல்களைப் போல் ஈர்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நடுவில் வரும் வரிகளைக் கேளுங்கள், நான் உன்னைக் கட்டினேன், என்னை விட்டு நீ எங்கும் செல்ல இயலாது என்று பெருமிதமும் ஏக்கமும் பொங்கும் வரிகளில் குரலை விட உணர்வுகள்தான் முன்னிற்கின்றன. ஒரு வேளை ஜேசுதாஸ் இளையராஜா நினைத்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நிச்சயமில்லை.
gragavan said:
நல்ல வேளையாக அடுத்து வரும் பாடலை இளையராஜா குழுவினருக்குக் கொடுத்து விட்டார். நல்ல வேளையாக என்று சொல்வதற்கு எனக்கே வருத்தமாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இந்தப் பாடல் சற்று சுறுசுறுப்பாக இருக்கிறது. பொற்சுண்ணம் இடிக்கும் பொழுது பாடும் "முத்து நாற்றமாம்" எனத் தொடங்கும் பாடல். மொத்தம் மூன்று பாடகர்களும் மூன்று பாடகிகளும். உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி, ஆஷா, காயத்ரி ஆகியோர் பாடியிருக்கின்றார்கள்.
ஏன் உங்களுக்கு இப்படித் தோன்றியது என்று புரியவில்லை. இந்தப் பாடலே குழுவினருக்காக உருவாக்கப் பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கும்பாபிஷேகத்துக்கு முன் ஒரு முறை இந்தப் பதிகங்களை மக்கள் குழுவாகக் குரலெடுத்து வேறொரு மெட்டில் பாடியதைக் கேட்டிருக்கிறேன். மேலும் குழுவினராகப் பாடுவதாலும் உற்சாகம் மட்டுமே உணர்வாக இருப்பதாலும் இதில் இளையராஜா தானே பாடுமளவு சரக்கு இல்லை. சுறுசுறுப்பு என்பது இளையராஜா பாடாததால் இல்லை. பாட்டின் இயல்பானதால் இருக்கிறது. இந்தப் பாடல்களின் வெற்றி குரலினிமையில் இல்லல, உச்சரிப்பிலும் உணர்ச்சி வெளிப்பாட்டிலும் இருக்கிறது. பின்னணி இசையே இல்லாமல் உலக்கைச் சத்தம் மட்டுமே கொண்டு இப்பாடல் துள்ளுவதை நான் கேட்டிருக்கிறேன்.
gragavan said:
உன்னி கிருஷ்ணன் பாடியிருக்கின்றார் என்பது பெயர்ப் பட்டியலைப் பார்த்தால்தான் தெரிகிறது. மது பாலகிருஷ்ணன் குரலெடுத்துப் பாடியிருக்க வேண்டும். நம்மை ஆச்சரியப் படுத்துகிறவர் விஜய் ஜேசுதாஸ். நல்ல குரல்வளம். முன்னுக்கு வருவதற்கு வாய்ப்புகள் நிறைய. வருவார். பெண்களில் மஞ்சரி சிறப்பாகவும் மற்றவர்கள் நன்றாகவும் செய்திருக்கிறார்கள். உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு ஆஷாவின் குரலையும் காயத்ரியின் குரலையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
சுண்ணமிடிக்கையில் பாடும் பாடலாதலால் உலக்கையிடிக்கும் ஒலியைத் தாளமாக வைத்துப் போட்டிருக்கிறார். இது அவர் முதல் திரைப்படத்திலேயே செய்து விட்டது. அன்னக்கிளி படத்தில் வரும் "முத்துச் சம்பா" பாடலைத்தான் சொல்கிறேன். அதிலும் உலக்கைச் சத்தமே தாளமாக வரும். உற்சாகமான பாடல்.
முன்னர் சொன்னது போல் இந்தப் பாடல் குழுவினருக்காகவே படைக்கப் பட்டது. இதில் மஞ்சரியின் குரல் நிறைய இடங்களிலும் மற்றோரின் குரல்கள் ஓரிரண்டு இடங்களிலும் அடையாளம் காணக் கிடைக்கிறது. அனைவருமே அருமையாகப் பாடி இருக்கிறார்கள்.
gragavan said:
கடைசிப் பாடலைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். காரணம் அதில் இல்லாத ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்து பலர் இளையராஜாவை வீண் வம்புக்கு இழுக்கின்றார்கள். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இது என்னய்யா புதுக்கூத்து? பொன்னியின் செல்வனில் வரும் திருமலையைப் போல் வீர வைணவர்கள் யாராவது குரல் கொடுக்கிறார்களா என்ன?
 
pradeepkt said:
ஒரு இசையமைப்பாளர் தனது பாடலை யார் பாடுவது என்று முடிவெடுக்கும் முன் நிறைய யோசிக்கிறார். குறிப்பாகத் தனது கனவுப் படைப்புகளைப் படைக்கும்போது சில நேரங்களில் தான் கொண்டு வரத் துடிக்கும் உணர்வுகளை மற்றவர்களிடம் கொடுப்பதற்குப் பதில் தானே பாடலாம் என்று நினைக்கிறார். நேற்று மீண்டும் இந்தப் பாடலைத் தனிமையில் கேட்டுப் பார்த்தேன். இந்தப் பாடல் மிக மெதுவாகச் செல்வதால் மற்ற பாடல்களைப் போல் ஈர்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் நடுவில் வரும் வரிகளைக் கேளுங்கள், நான் உன்னைக் கட்டினேன், என்னை விட்டு நீ எங்கும் செல்ல இயலாது என்று பெருமிதமும் ஏக்கமும் பொங்கும் வரிகளில் குரலை விட உணர்வுகள்தான் முன்னிற்கின்றன. ஒரு வேளை ஜேசுதாஸ் இளையராஜா நினைத்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நிச்சயமில்லை.
கண்டிப்பாக. ஒரு இசையமைப்பாளருக்கு பாடகரைத் தேர்வு செய்யும் உரிமை முழுமையாக உள்ளது. அதில் தவறேதுமில்லை. ஒரு இசை ரசிகனாகக் கேட்கையில் இளையராஜாவின் குரலும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதே எனது கருத்து. அவ்வளவே. ஜேசுதாஸ் சிறப்பாகவும் செய்யலாம். செய்யாமலும் போகலாம்.
 
pradeepkt said:
ஏன் உங்களுக்கு இப்படித் தோன்றியது என்று புரியவில்லை. இந்தப் பாடலே குழுவினருக்காக உருவாக்கப் பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கும்பாபிஷேகத்துக்கு முன் ஒரு முறை இந்தப் பதிகங்களை மக்கள் குழுவாகக் குரலெடுத்து வேறொரு மெட்டில் பாடியதைக் கேட்டிருக்கிறேன். மேலும் குழுவினராகப் பாடுவதாலும் உற்சாகம் மட்டுமே உணர்வாக இருப்பதாலும் இதில் இளையராஜா தானே பாடுமளவு சரக்கு இல்லை. சுறுசுறுப்பு என்பது இளையராஜா பாடாததால் இல்லை. பாட்டின் இயல்பானதால் இருக்கிறது. இந்தப் பாடல்களின் வெற்றி குரலினிமையில் இல்லல, உச்சரிப்பிலும் உணர்ச்சி வெளிப்பாட்டிலும் இருக்கிறது. பின்னணி இசையே இல்லாமல் உலக்கைச் சத்தம் மட்டுமே கொண்டு இப்பாடல் துள்ளுவதை நான் கேட்டிருக்கிறேன்.

முன்னர் சொன்னது போல் இந்தப் பாடல் குழுவினருக்காகவே படைக்கப் பட்டது. இதில் மஞ்சரியின் குரல் நிறைய இடங்களிலும் மற்றோரின் குரல்கள் ஓரிரண்டு இடங்களிலும் அடையாளம் காணக் கிடைக்கிறது. அனைவருமே அருமையாகப் பாடி இருக்கிறார்கள்.
உண்மைதான். குழுவினருக்கான பாடல்தான் இது. அதில் ஐயமில்லை. இளையராஜா பாடாததால் இது துள்ளலான பாடலென்று நான் சொல்லவில்லை. இயல்பாகவே துள்ளலான பாடல். தொடர்ந்து இளையராஜாவின் குரலிலேயே கேட்டுக் கொண்டு வந்து சட்டென்று குரல்கள் மாறும் பொழுது அது இன்னமும் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல வந்தேன்.
 
pradeepkt said:
இது என்னய்யா புதுக்கூத்து? பொன்னியின் செல்வனில் வரும் திருமலையைப் போல் வீர வைணவர்கள் யாராவது குரல் கொடுக்கிறார்களா என்ன?
இல்லையில்லை. சிலர் திருவாசகத்தின் உட்பொருளை அறியாமல் பேசுகிறார்கள். எனக்குத் தெரிந்து இதைச் சில சைவ, வைணவ மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களும் சொல்கிறார்கள். பிரச்சனையையும் அதன் விளக்கத்தையும் நான் இடுகிறேன். உங்களுக்குப் புரியும்.
 
Back
Top