வணக்கம் அன்பர்களே. இன்று ஐம்பத்திரண்டாவது பாடலைப் பார்ப்போம்.
கடவுள் வாழ்த்தோடு சேர்த்து இதுவரை ஐம்பத்தோரு பாடல்களைப் பார்த்தாகி விட்டது. இன்னும் ஒன்று மிச்சமிருக்கிறது. இதுவரை பார்த்த அத்தனை பாடல்களையும் ஒன்றாகச் செய்து ஒரு பாட்டு செய்திருக்கிறார் அருணகிரி. ஏனென்றால் இந்தப் பாடல் கடைமணியல்லவா.
வீட்டில் மூத்த குழந்தைகளுக்குப் பொறுப்புணர்ச்சி நிறைய இருக்கும். பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் கடைசிக் குழந்தைகள் அறிவுணர்ச்சி நிறம்பியதாக இருக்கும். அதனால்தான் கடைக்குட்டி செல்லக்குட்டி என்று கொஞ்சுகின்றார்கள். மூத்தபிள்ளை மீது தாய்க்குப் பாசம் நிறைய இருக்கும். ஏன் தெரியுமா? தன் வயிறு விளங்க வைத்த குழந்தையல்லவா. ஆனால் கடைசிக் குழந்தை மீது தந்தைக்குப் பாசம் இருக்கும். தான் இன்னமும் ஆண்மையோடு இருப்பதை உணர்த்திய குழந்தையல்லவா!
அருணகிரி தாயும் தந்தையுமாக இருந்து கந்தரநுபூதியை நமக்கு வழங்கியிருக்கிறார். அதனால்தான் முதல் பாடலும் கடைசிப் பாடலும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. தாயின் பண்பு அன்பு. அதனால்தான் அன்போடு "நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக" என்று முதற் பாடலைத் துவக்குகிறார். ஐம்பத்தோரு பாடல்கள் பாடியும் இன்னுமொரு பாடல் படைக்க முடிந்ததே என்ற அன்பில் கடைசிப் பாடலை தமிழ் சொற்களாலும் கருத்துகளாலும் செதுக்கியிருக்கிறார் அருணகிரிநாதர். அந்தப் பாடலைக் கடைசியாகவே பார்ப்போம். அதற்கு முன் இதுவரை பார்த்தவைகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.
ஒரு நூல் இயற்றப் படுமானால் அது எந்தச் சூழ்நிலையில் இயற்றப் பட்டது என்பதையும் அறிந்து அந்த நூலைப் படிக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் புரட்சிகரமாகக் கருதப் பட்டவை இன்றைக்கு வழக்கமான ஒன்றாக இருக்கலாம். அந்தப் புரட்சிக் கருத்தை வைத்து எழுதப் பட்ட பழைய கதையை அப்படியே படித்தால் சுவை தெரியாது. அலுப்பூட்டும். கதையின் காலகட்டத்தின் பின்புலத்தைத் தெரிந்து படித்தால் சுவை கூடும். சிறந்த எடுத்துக்காட்டு இந்திய விடுதலைப் போராட்டக் கதைகள் மற்றும் வரலாற்று உண்மைகள்.
கந்தரநுபூதி எழுதப் பட்ட காலகட்டத்தின் பின்புலத்தைப் பார்க்கலாம். பழந்தமிழகத்தில் மதங்களிடையே ஒற்றுமை என்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. இளங்கோவடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சைவ வழி மரபில் வந்த அவர் சமணராக மாறினார். அவர் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம். மற்ற நான்கு பெருங்காப்பியங்களும் மத அடிப்படையில் எழுந்த பொழுது, இளங்கோ தனது காப்பியத்தில் மதச்சார்பின்மையை முழுமையாகப் பின்பற்றியிருக்கின்றார்.
வஞ்சிக் காண்டம் துவங்குவதே முழுக்க முழுக்க முருகன் புகழைப் பாடித்தான். இளங்கோ கவுந்தியடிகள் வழியாக ஆங்காங்கே சமணம் வேறு சொல்லியிருக்கிறார் என்றாலும் சமணன் பரப்பவில்லை. ஆனால் அவரைத் தொடர்ந்து மணிமேகலையை எழுதிய சாத்தனார் முழுக்க முழுக்க புத்தம் பேசியிருக்கிறார். அதற்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மதச்சார்பின்மை பேசியது அருணகிரிதான்.
அருணகிரியாரின் காலம் சமயப் பூசல்கள் தமிழகத்தில் மலிந்திருந்த காலம். குறிப்பாகச் சைவ-வைணவச் சண்டைகள் பெருகியிருந்த காலம். திருக்கோயில்களில் வடமொழி மலிந்திருந்த காலம். தமிழ் என்பது பக்தி வழக்கிற்கு வராது என்று ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த காலம். அப்படிப் பட்ட நேரத்தில் அருணகிரி வரிசை வரிசையாகப் பாடுகிறார். கோயில் கோயிலாகப் பாடுகிறார். மூன்று குறிக்கோள்கள் அவருக்கு. தமிழ்க் கடவுளைப் பாட வேண்டும். தமிழை கோயிலுக்குள் மீண்டும் குடியேற்ற வேண்டும். சமயப் பூசல்களைக் குறைக்க வேண்டும்.
மூன்று குறிக்கோள்களையும் முறையாக நிறைவேற்றினார் அவர். தமிழ்க் கடவுளைப் புகழ்ந்து எத்தனையெத்தனை பாடல்கள். திருப்புகழ், கந்தரந்தாதி, கந்தலரங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவேளக்காரன் வகுப்பு என்று நிறையப் பாடியிருக்கிறார்.
அடுத்தது தமிழில் பக்திச் சுவை காட்டுவது. முதலில் பாதி வடமொழியும் பாதி தமிழும் கலந்து திருப்புகழைப் பாடினார். பிறகு சிறிதுசிறிதாக வடமொழியை விடுத்து தீந்தமிழில் பாடினார். "சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகரார்வம் ஈ" என்று பாடியிருக்கிறார் கந்தரலங்காரத்தில். கந்தரந்தாதியை எடுத்துக் கொள்ளுங்கள். இது அந்தாதிகளில் மிகவும் சிறப்புடையது. யமக அந்தாதி என்ற வகையைச் சார்ந்தது. அந்தாதி என்றால் முதற் செய்யுளின் முடிவும் அடுத்த செய்யுளின் தொடக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும். இதுவும் இருந்து, ஒரு செய்யுளின் எல்லா அடிகளும் ஒரே தொடக்கத்தில் இருக்க வேண்டும். மிகவும் கடினமானது. அப்படி நூறு பாட்டுகள் பாடியிருக்கிறார்.
சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றாகப் பாவித்து முருகனைப் பாடியிருக்கின்றார். சிவன் மகனே என்று பாடியதோடு நில்லாமல் திருமால் மருகன் என்றும் திரும்பத் திரும்பப் பாடி இரண்டு சமயத்திற்கும் இடைவெளி குறைத்திருக்கிறார். திருச்செந்தூரில் முருகன் கோயிலுக்குள்ளே ஒரு பெருமாள் சந்நதி உண்டு. அது ஆதியில் இல்லாதது. பிற்காலத்தில் உண்டானது.
முருகனைப் பற்றிப் பாடினாலும் அனைத்துத் தெய்வங்களும் ஒன்றுதான் என்ற கருத்தை வலியுறுத்த மெய்ப்பொருளை முன்னிறுத்தியே பாடினார். கந்தரநுபூதியே முழுக்க முழுக்க மெய்ப்பொருள் தத்துவத்தைதான் விளக்குகிறது. எந்த உருவத்தில் வழிபட்டாலும் உருவமில்லாத ஒரு சக்திதான் நம்மைக் காக்கிறது என்பதையும் விளக்காமாகச் சொல்லியிருக்கிறார்.
"உருவன்று அருவன்று உளதன்று இலதன்று" - கந்தரநுபூதி
"குறியைக் குறியாது குறித்து அறியும்" - கந்தரநுபூதி
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்" - கந்தரநுபூதி
"அசரீரியன்று சரீரியன்றே" - கந்தரலங்காரம்
"மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்" - திருப்புகழ்
இறைவன் திருவருளைப் பெற்று மெய்ப்பொருளை உணர்வது பேரின்பம். அதை அனுபவித்தவர் அருணகிரி. ஆனால் அவரால் அதை விளக்கிச் சொல்ல முடியவில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால் முடியவில்லை. அதையும் ஒத்துக்கொண்டு விடுகின்றார்.
"முருகன் சரணம் சூடும்படித் தந்தது சொல்லுமதோ?"
"இன்னும் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?"
"எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?"
பேரின்பத்தை சொல்ல முடியாவிட்டாலும் ஒன்றைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார் அருணகிரி. ஆண்டவனாகப் பார்த்து அருளினால்தான் நாம் உய்ய முடியுமென்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
"யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்"
"நேசா முருகா நினது அன்பருளால்......பேசா அநுபூதி பிறந்ததுவே"
"செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்ததுதான்'
"முருகன்....நம் குருவென்று அருள் கொண்டு அறிவார்"
தெய்வத்தைச் சரணடைவதை விட பெறும் பேறில்லை என்பதைத் தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்விக்கவே தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கின்றார். இவற்றையெல்லாம் மனமாறப் படித்தாலே வினைகள் நீங்கும். துணைகள் தாங்கும்.
புலனடக்கம் வேண்டுமென்பதை வள்ளுவர் முதற்கொண்டு பெரியவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள். அருணகிரியும் அதையே கூறுகிறார். ஐவாய் வழி செல்லும் அவா வினையாகும் என்பதை எடுத்துக் கூறி, ஐம்புலன்களால் நாம் செய்யும் எந்தச் செயலும் யாருக்கும் எந்தத் துன்பத்தையும் தராத வகை வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றார்.
பற்றற்ற நிலையைப் பாடிப் புகழ்ந்தவர் இல்லறத்தையும் நல்லறமென்று கூறத் தவறவில்லை. இல்லறமோ பற்றற்ற நிலையோ எந்த வழியில் சென்றாலும் முறையாக வாழ வேண்டும் என்பதைச் சொல்லவும் தவறவில்லை. பரத்தையர் ஒழுக்கத்தைக் விடக் கூறிய அருணகிரி பரத்தையரைக் குறை கூறவில்லை. அவர்கள் மீதாக மயக்கம் போக வேண்டும் என்றுதான் பாடுகிறார். காரணம் பரத்தையர் ஒழுக்கத்திற்குக் காரணம் ஆசையே. அந்த ஆசை போனால் அநுபூதி கிடைக்கும். "ஆசா நிகளம் துகளாயின் பின் பேசா அநுபூதி பிறந்ததுவே".
தெய்வம் பலப் பலச் சொல்லி பகைத் தீயை வளர்க்கும் மூடர்களுக்கு நடுவில் அனைத்துத் தெய்வங்களையும் அள்ளிப் போட்டுக் கவி சமைத்து அந்த அருஞ்சுவைப் பொருளை நமக்குக் கொடுத்த அருணகிரியின் அன்பையும் தன்மையையும் எப்படிப் பாராட்டுவது.
முருகா என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறினாலும், ஒரு பெயரும் ஒரு உருவமும் இல்லாத இறைப் பண்பை விளங்கச் சொன்ன அருணகிரி கந்தரநுபூதியையும் அந்தக் கருத்தை முன்னிறுத்தியே முடிக்கின்றார்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
பக்தியுடன்,
கோ.இராகவன்
கந்தரநுபூதிக்குப் பொருள் விளக்கம் முற்றிற்று.