சொல்லச் சொல்ல இனிக்குதடா.

வணக்கம் அன்பர்களே. இன்று ஐம்பத்தொன்றாவது பாடலைப் பார்ப்போம்.

மதி கெட்டு அறவாடி மயங்கி அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்
நதி புத்திர ஞான சுகாதிப-அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே


அநுபூதி என்றால் என்னவென்று சொல்லியாகி விட்டது. அநுபூதியின் அருமை பெருமைகளைச் சொல்லியாகி விட்டது. அநுபூதியின் தன்மைகளையும் திண்மைகளையும் முடிந்த வரை சொல்லியாகி விட்டது. அநுபூதியை அடையும் வழிமுறைகளையும் சொல்லியாகி விட்டது. கந்தரநுபூதி பற்றிய நூலை முடிக்க வேண்டும். முடிக்கும் பொழுது முருகனைப் பாடித்தான் முடிக்க வேண்டும்.

ஆனால் அதற்கும் முன்னால் ஒரு வேலை இருக்கிறது. கடவுள் வாழ்த்தோடு சேர்த்து ஐம்பது பாடல்களைப் பாடி விட்டார் அருணகிரி. இந்தக் கந்தரநுபூதியைப் படித்தால் என்ன பயன் கிடைக்க வேண்டுமென்று சொல்ல வேண்டுமல்லவா. ஒரு பொருளை விற்கும் பொழுது என்ன பயன்கள் என்று சொல்லித்தானே விற்பார்கள். அதுதானே விற்பனைத் முறை.

ஆனால் அருணகிரி முருகனருளை விற்கவில்லை. மக்கள் கற்க விரும்புகிறார். ஆகையால் நமக்காக வேண்டிக் கொண்டு ஒரு பாடல் பாடுகிறார். அதுதான் இந்தப் பாடல். இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்தது. தலைவர்கள் விடுதலை கேட்டார்கள். அவர்கள் கேட்டது அவர்களுக்கு மட்டுமா? ஒட்டுமொத்த இந்தியாவிற்கும்தானே! அந்த பொதுவுள்ளம் வாய்ந்தவர் அருணகிரி. நமக்காகத் தன் மீதும் குற்றத்தை ஏற்றிக் கொண்டு பாடுகிறார்.

மதி கெட்டால் அறவாடும். அறவு என்றால் ஆற்றல். ஆற்றல் வாடுதலே அறவாடல். அரவு என்றால் பாம்பு. அரவு ஆடும். அரவாடினாலும் அறவாடினாலும் முடிவு துன்பந்தான். எந்தத் துன்பம் வந்தாலும் நமது ஆற்றலை இழக்கக் கூடாது. ஆற்றல் போனால் தூற்றல் வரும். ஆம். ஆற்றல் இழந்தவனை உலகம் தூற்றும்.

ஆற்றலோடு இருந்தவரையில் இராவணனை எல்லா உலகமும் தொழுதது. பதவியில் இருப்பவர் காலில் விழும் வழக்கம் அன்றைக்கே இருந்திருக்கிறது. அவன் ஆற்றல் இழந்து போர்க்களத்தில் வெறுங்கையோடு நின்ற பொழுது "இன்று போய் நாளை வா" என்று ராமன் சொன்னது கருணையென்றாலும் ஒரு வகையில் தூற்றலே. அதனால்தான் அப்படிச் சொன்னதற்கு ராமனுக்குப் பெருமை சூழ்ந்தாலும் இராவணனுக்கு அவமானம் சூழ்ந்தது. தலையைக் குனிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு அகல வேண்டியதாயிற்று. அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.

அதனால்தான் அருணகிரி வேண்டுகிறார். மதிகெட்டு ஆற்றல் இழந்து மயங்கி அறக்கதி கெட்டு ஒழிவதோ! முருகா நீதான் காப்பாற்ற வேண்டும்.

அறம் என்பது மிகப் பெரிய சொல். "அறம் செய விரும்பு" என்கிறாள் ஔவை. "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அ?தும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று" என்கிறார் வள்ளுவர். அடுத்தர் சொல்லிக் காட்டும் நிலைக்கு ஆளாகக் கூடாது. நல்லது செய்கிறோம். அது அடுத்தவர் குற்றம் சாட்டும் நிலையில் இருக்கக் கூடாது. அறம் கெட்டால் எல்லாம் கெட்டு விடும். அதனால் தவறு செய்யக் கூடாது.

இதை இளங்கோவடிகள் கண்ணகி வாயால் சொல்கின்றார். தவறு செய்து விட்டோமெனத் தெரிந்ததும் பாண்டியன் உயிர் விட்டான். உடனே மாண்டாள் கோப்பெருந்தேவி. அப்பொழுது கண்ணகி சொல்கிறாள். "அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றாம்!" மற்றொரு இடத்தில் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்" என்கிறார் இளங்கோவடிகள். அறத்திலிருந்து தவறினால் அறமே கொன்று விடும்.

பாண்டியன் நெடுஞ்செழியன் ஒரு குற்றமும் மனதாற்கூடச் செய்யாதவன். ஒரு சின்ன தவறு செய்தான். விளைவு? மதுரையே அழிந்தது. அதை இன்றைக்கும் நாம் சொல்லுகிறோம். ஒரு சின்ன தவறு எத்தனை நூற்றாண்டுகளாக நிற்கிறது பாருங்கள். அவன் எத்தனையெத்தனையோ நல்லவைகளைச் செய்திருக்கிறான். அவற்றை யாரும் இரண்டாயிரம் ஆண்டுகளாக நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவன் குற்றம் நின்றது.

இந்த நிலைக்கெல்லாம் ஆளாக்காமல் காக்க வேண்டியது முருகனே! கங்கையின் மைந்தனே! ஞானத்தினால் உண்டாகும் சுகத்தின் அதிபனே! திதியின் வழியினரான அரக்கர்களின் செருக்கை அழிந்த சேவகனே!

பக்தியுடன்,
கோ.இராகவன்
 
இன்று செவ்வாய் என்பதையே மறந்து விட்டேன், அருமையான பாடலும் நல்ல விளக்கமும். நன்றி அண்ணா.

அறத்தின் சிறப்பை நல்ல எடுத்துக்காட்டோடு சொல்லியிருக்கீங்க.

ஒருவன் நல்ல பெயரை எடுக்க பல ஆண்டுகள் ஆகும், ஆனால் கெட்டவன் என்பதை எடுக்க ஒரு விநாடி போதும் என்பது பாண்டியனின் வாழ்க்கையிலிருந்து தெரிகிறது.

கெட்டவன் என்ற பெயர், ஆண்டவன் அருள் இருந்தால் மறையும் என்பதற்கு அருணகிரி நாதரே சாட்சி.
 
எங்கள் ஊரில் பழமொழி சொல்வார்கள். குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும். ஆனால் துளி விஷத்திற்குப் பத்து குடம் பால் கூடப் போதாது.
அருமையான பாடல்கள் அழகான விளக்கங்கள்.
 
ஆகா பரஞ்சோதியின் கருத்தும் அருமை. பிரதீப்பின் விளக்கச்சுருக்கமும் அருமை.

ம்ம்ம்ம்....இன்னும் ஒரு வாரம்தான். ஐம்பத்திரண்டு வாரங்களாக வந்துகொண்டிருந்த இந்தத் தொடர் முடிவுக்கு வரப் போகிறது.
 
அடுத்த தொடர் எப்போதைய்யா?
அதைச் சொன்னால்தான் தொடரை முடிக்க விடுவோம்
 
pradeepkt said:
அடுத்த தொடர் எப்போதைய்யா?
அதைச் சொன்னால்தான் தொடரை முடிக்க விடுவோம்
அடுத்த தொடரா? அது என்னது? எனக்கே தெரியாமல்....

ம்ம்ம்ம்ம்....இன்னும் முடிவு செய்யவில்லை பிரதீப். முதலில் முருகன் முடிவு செய்யட்டும்.
 
ராகன்ன் அய்யா கலக்கிபுட்டேங்க......

வந்த உடனே மயக்கிபுட்டீங்களே...........

ஈசனை பத்தி பாட்டு ஏதும் இருக்கா?
 
babu said:
ராகன்ன் அய்யா கலக்கிபுட்டேங்க......

வந்த உடனே மயக்கிபுட்டீங்களே...........

ஈசனை பத்தி பாட்டு ஏதும் இருக்கா?
வணக்கம் பாபு. உங்கள் பாராட்டு மகிழ்ச்சியூட்டுகிறது. ஈசன் மேல் இல்லாத பாட்டா? எத்தனையெத்தனை இருக்கிறது. அவைகளையும் நேரம் கிடைக்கையில் சொல்கின்றேன்.

இங்கு கந்தரநுபூதியை மட்டும் எடுத்துக் கொண்டு அந்தச் செய்யுட்களுக்குப் பொருள் சொல்லிக் கொண்டு வந்தேன். இன்றுதான் இறுதிப் பாடல். இறுதிப் பாடல் சொல்லும் வேளையும் அதைச் சுவைக்க உங்களைக் கொண்டு வந்த கந்தன் கருணையை என்னவென்று சொல்வது!
 
வணக்கம் அன்பர்களே. இன்று ஐம்பத்திரண்டாவது பாடலைப் பார்ப்போம்.

கடவுள் வாழ்த்தோடு சேர்த்து இதுவரை ஐம்பத்தோரு பாடல்களைப் பார்த்தாகி விட்டது. இன்னும் ஒன்று மிச்சமிருக்கிறது. இதுவரை பார்த்த அத்தனை பாடல்களையும் ஒன்றாகச் செய்து ஒரு பாட்டு செய்திருக்கிறார் அருணகிரி. ஏனென்றால் இந்தப் பாடல் கடைமணியல்லவா.

வீட்டில் மூத்த குழந்தைகளுக்குப் பொறுப்புணர்ச்சி நிறைய இருக்கும். பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் கடைசிக் குழந்தைகள் அறிவுணர்ச்சி நிறம்பியதாக இருக்கும். அதனால்தான் கடைக்குட்டி செல்லக்குட்டி என்று கொஞ்சுகின்றார்கள். மூத்தபிள்ளை மீது தாய்க்குப் பாசம் நிறைய இருக்கும். ஏன் தெரியுமா? தன் வயிறு விளங்க வைத்த குழந்தையல்லவா. ஆனால் கடைசிக் குழந்தை மீது தந்தைக்குப் பாசம் இருக்கும். தான் இன்னமும் ஆண்மையோடு இருப்பதை உணர்த்திய குழந்தையல்லவா!

அருணகிரி தாயும் தந்தையுமாக இருந்து கந்தரநுபூதியை நமக்கு வழங்கியிருக்கிறார். அதனால்தான் முதல் பாடலும் கடைசிப் பாடலும் அற்புதமாக அமைந்திருக்கின்றன. தாயின் பண்பு அன்பு. அதனால்தான் அன்போடு "நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக" என்று முதற் பாடலைத் துவக்குகிறார். ஐம்பத்தோரு பாடல்கள் பாடியும் இன்னுமொரு பாடல் படைக்க முடிந்ததே என்ற அன்பில் கடைசிப் பாடலை தமிழ் சொற்களாலும் கருத்துகளாலும் செதுக்கியிருக்கிறார் அருணகிரிநாதர். அந்தப் பாடலைக் கடைசியாகவே பார்ப்போம். அதற்கு முன் இதுவரை பார்த்தவைகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

ஒரு நூல் இயற்றப் படுமானால் அது எந்தச் சூழ்நிலையில் இயற்றப் பட்டது என்பதையும் அறிந்து அந்த நூலைப் படிக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் புரட்சிகரமாகக் கருதப் பட்டவை இன்றைக்கு வழக்கமான ஒன்றாக இருக்கலாம். அந்தப் புரட்சிக் கருத்தை வைத்து எழுதப் பட்ட பழைய கதையை அப்படியே படித்தால் சுவை தெரியாது. அலுப்பூட்டும். கதையின் காலகட்டத்தின் பின்புலத்தைத் தெரிந்து படித்தால் சுவை கூடும். சிறந்த எடுத்துக்காட்டு இந்திய விடுதலைப் போராட்டக் கதைகள் மற்றும் வரலாற்று உண்மைகள்.

கந்தரநுபூதி எழுதப் பட்ட காலகட்டத்தின் பின்புலத்தைப் பார்க்கலாம். பழந்தமிழகத்தில் மதங்களிடையே ஒற்றுமை என்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. இளங்கோவடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சைவ வழி மரபில் வந்த அவர் சமணராக மாறினார். அவர் எழுதிய காப்பியம் சிலப்பதிகாரம். மற்ற நான்கு பெருங்காப்பியங்களும் மத அடிப்படையில் எழுந்த பொழுது, இளங்கோ தனது காப்பியத்தில் மதச்சார்பின்மையை முழுமையாகப் பின்பற்றியிருக்கின்றார்.

வஞ்சிக் காண்டம் துவங்குவதே முழுக்க முழுக்க முருகன் புகழைப் பாடித்தான். இளங்கோ கவுந்தியடிகள் வழியாக ஆங்காங்கே சமணம் வேறு சொல்லியிருக்கிறார் என்றாலும் சமணன் பரப்பவில்லை. ஆனால் அவரைத் தொடர்ந்து மணிமேகலையை எழுதிய சாத்தனார் முழுக்க முழுக்க புத்தம் பேசியிருக்கிறார். அதற்குப் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மதச்சார்பின்மை பேசியது அருணகிரிதான்.

அருணகிரியாரின் காலம் சமயப் பூசல்கள் தமிழகத்தில் மலிந்திருந்த காலம். குறிப்பாகச் சைவ-வைணவச் சண்டைகள் பெருகியிருந்த காலம். திருக்கோயில்களில் வடமொழி மலிந்திருந்த காலம். தமிழ் என்பது பக்தி வழக்கிற்கு வராது என்று ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த காலம். அப்படிப் பட்ட நேரத்தில் அருணகிரி வரிசை வரிசையாகப் பாடுகிறார். கோயில் கோயிலாகப் பாடுகிறார். மூன்று குறிக்கோள்கள் அவருக்கு. தமிழ்க் கடவுளைப் பாட வேண்டும். தமிழை கோயிலுக்குள் மீண்டும் குடியேற்ற வேண்டும். சமயப் பூசல்களைக் குறைக்க வேண்டும்.

மூன்று குறிக்கோள்களையும் முறையாக நிறைவேற்றினார் அவர். தமிழ்க் கடவுளைப் புகழ்ந்து எத்தனையெத்தனை பாடல்கள். திருப்புகழ், கந்தரந்தாதி, கந்தலரங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவேளக்காரன் வகுப்பு என்று நிறையப் பாடியிருக்கிறார்.

அடுத்தது தமிழில் பக்திச் சுவை காட்டுவது. முதலில் பாதி வடமொழியும் பாதி தமிழும் கலந்து திருப்புகழைப் பாடினார். பிறகு சிறிதுசிறிதாக வடமொழியை விடுத்து தீந்தமிழில் பாடினார். "சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகரார்வம் ஈ" என்று பாடியிருக்கிறார் கந்தரலங்காரத்தில். கந்தரந்தாதியை எடுத்துக் கொள்ளுங்கள். இது அந்தாதிகளில் மிகவும் சிறப்புடையது. யமக அந்தாதி என்ற வகையைச் சார்ந்தது. அந்தாதி என்றால் முதற் செய்யுளின் முடிவும் அடுத்த செய்யுளின் தொடக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும். இதுவும் இருந்து, ஒரு செய்யுளின் எல்லா அடிகளும் ஒரே தொடக்கத்தில் இருக்க வேண்டும். மிகவும் கடினமானது. அப்படி நூறு பாட்டுகள் பாடியிருக்கிறார்.

சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றாகப் பாவித்து முருகனைப் பாடியிருக்கின்றார். சிவன் மகனே என்று பாடியதோடு நில்லாமல் திருமால் மருகன் என்றும் திரும்பத் திரும்பப் பாடி இரண்டு சமயத்திற்கும் இடைவெளி குறைத்திருக்கிறார். திருச்செந்தூரில் முருகன் கோயிலுக்குள்ளே ஒரு பெருமாள் சந்நதி உண்டு. அது ஆதியில் இல்லாதது. பிற்காலத்தில் உண்டானது.

முருகனைப் பற்றிப் பாடினாலும் அனைத்துத் தெய்வங்களும் ஒன்றுதான் என்ற கருத்தை வலியுறுத்த மெய்ப்பொருளை முன்னிறுத்தியே பாடினார். கந்தரநுபூதியே முழுக்க முழுக்க மெய்ப்பொருள் தத்துவத்தைதான் விளக்குகிறது. எந்த உருவத்தில் வழிபட்டாலும் உருவமில்லாத ஒரு சக்திதான் நம்மைக் காக்கிறது என்பதையும் விளக்காமாகச் சொல்லியிருக்கிறார்.
"உருவன்று அருவன்று உளதன்று இலதன்று" - கந்தரநுபூதி
"குறியைக் குறியாது குறித்து அறியும்" - கந்தரநுபூதி
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்" - கந்தரநுபூதி
"அசரீரியன்று சரீரியன்றே" - கந்தரலங்காரம்
"மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்" - திருப்புகழ்

இறைவன் திருவருளைப் பெற்று மெய்ப்பொருளை உணர்வது பேரின்பம். அதை அனுபவித்தவர் அருணகிரி. ஆனால் அவரால் அதை விளக்கிச் சொல்ல முடியவில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால் முடியவில்லை. அதையும் ஒத்துக்கொண்டு விடுகின்றார்.
"முருகன் சரணம் சூடும்படித் தந்தது சொல்லுமதோ?"
"இன்னும் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?"
"எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?"

பேரின்பத்தை சொல்ல முடியாவிட்டாலும் ஒன்றைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார் அருணகிரி. ஆண்டவனாகப் பார்த்து அருளினால்தான் நாம் உய்ய முடியுமென்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
"யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்"
"நேசா முருகா நினது அன்பருளால்......பேசா அநுபூதி பிறந்ததுவே"
"செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்ததுதான்'
"முருகன்....நம் குருவென்று அருள் கொண்டு அறிவார்"

தெய்வத்தைச் சரணடைவதை விட பெறும் பேறில்லை என்பதைத் தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்விக்கவே தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கின்றார். இவற்றையெல்லாம் மனமாறப் படித்தாலே வினைகள் நீங்கும். துணைகள் தாங்கும்.

புலனடக்கம் வேண்டுமென்பதை வள்ளுவர் முதற்கொண்டு பெரியவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள். அருணகிரியும் அதையே கூறுகிறார். ஐவாய் வழி செல்லும் அவா வினையாகும் என்பதை எடுத்துக் கூறி, ஐம்புலன்களால் நாம் செய்யும் எந்தச் செயலும் யாருக்கும் எந்தத் துன்பத்தையும் தராத வகை வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றார்.

பற்றற்ற நிலையைப் பாடிப் புகழ்ந்தவர் இல்லறத்தையும் நல்லறமென்று கூறத் தவறவில்லை. இல்லறமோ பற்றற்ற நிலையோ எந்த வழியில் சென்றாலும் முறையாக வாழ வேண்டும் என்பதைச் சொல்லவும் தவறவில்லை. பரத்தையர் ஒழுக்கத்தைக் விடக் கூறிய அருணகிரி பரத்தையரைக் குறை கூறவில்லை. அவர்கள் மீதாக மயக்கம் போக வேண்டும் என்றுதான் பாடுகிறார். காரணம் பரத்தையர் ஒழுக்கத்திற்குக் காரணம் ஆசையே. அந்த ஆசை போனால் அநுபூதி கிடைக்கும். "ஆசா நிகளம் துகளாயின் பின் பேசா அநுபூதி பிறந்ததுவே".

தெய்வம் பலப் பலச் சொல்லி பகைத் தீயை வளர்க்கும் மூடர்களுக்கு நடுவில் அனைத்துத் தெய்வங்களையும் அள்ளிப் போட்டுக் கவி சமைத்து அந்த அருஞ்சுவைப் பொருளை நமக்குக் கொடுத்த அருணகிரியின் அன்பையும் தன்மையையும் எப்படிப் பாராட்டுவது.

முருகா என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறினாலும், ஒரு பெயரும் ஒரு உருவமும் இல்லாத இறைப் பண்பை விளங்கச் சொன்ன அருணகிரி கந்தரநுபூதியையும் அந்தக் கருத்தை முன்னிறுத்தியே முடிக்கின்றார்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

பக்தியுடன்,
கோ.இராகவன்

கந்தரநுபூதிக்குப் பொருள் விளக்கம் முற்றிற்று.
 
அண்ணா, மிகவும் அருமையான விளக்கம்.

மதச்சார்பின்மையை பேசினால் மட்டும் போதாது, கடையும் பிடிக்கவேண்டும்.

அருணகிரிநாதரைப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள உங்கள் வழியாக முருகன் உதவியுள்ளார்.

இத்தொகுப்பு முழுவதையும் பிடிஎப் கோப்பாக மாற்றுங்கள். பின்னர் அனைவருக்கும் கொடுங்கள். கண்டிப்பாக பிரிண்ட் செய்து வைக்க வேண்டிய ஒரு பதிவு.

தொடர்ந்து ஒரு செவ்வாயும் தவறாமல் கொடுத்த உங்கள் செயல்திறன் கண்டு வியந்தேன், நானும் கடைபிடிக்க முயல்கிறேன். இந்த விசயத்தில் ஒரு வழிகாட்டியாகவும் திழந்த உங்களுக்கு நன்றிகள் பல.
 
பரஞ்சோதி said:
அண்ணா, மிகவும் அருமையான விளக்கம்.

மதச்சார்பின்மையை பேசினால் மட்டும் போதாது, கடையும் பிடிக்கவேண்டும்.

அருணகிரிநாதரைப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள உங்கள் வழியாக முருகன் உதவியுள்ளார்.

இத்தொகுப்பு முழுவதையும் பிடிஎப் கோப்பாக மாற்றுங்கள். பின்னர் அனைவருக்கும் கொடுங்கள். கண்டிப்பாக பிரிண்ட் செய்து வைக்க வேண்டிய ஒரு பதிவு.

தொடர்ந்து ஒரு செவ்வாயும் தவறாமல் கொடுத்த உங்கள் செயல்திறன் கண்டு வியந்தேன், நானும் கடைபிடிக்க முயல்கிறேன். இந்த விசயத்தில் ஒரு வழிகாட்டியாகவும் திழந்த உங்களுக்கு நன்றிகள் பல.

மதச்சார்பின்மை பற்றி மக்கள் பேச மட்டும்தானே செய்கிறார்கள். கடைப்பிடிப்பதில்தான் எத்தனை தடங்கல்கள்? அதற்கு நம் மக்களின் அடிப்படை எண்ணங்களில் மாறுதல் வேண்டும் என்று நினைக்கிறேன். அருமையான பதிவுகள் ராகவன்.

உங்கள் யோசனையும் அருமையான யோசனை அண்ணா,
இதைப் பிடிஎப் கோப்பாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஐயா உங்களுக்கு இதை மாற்றுவதில் எந்த உதவி வேண்டுமானாலும் செய்கிறேன். அடுத்த தொடர் எங்கே?

அப்புறம் அண்ணா, நாம் எந்தக் கடையையும் பிடிக்க வேண்டாம். கடைக்காரர் கோபித்துக் கொள்வார். :D நாம் அந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கத்தான் வேண்டும் ஹி ஹி :)
 
உண்மையான கருத்துகள். பிரதீப்பிற்கும் பரஞ்சோதிக்கும் நன்றிகள்.

நடுநிலமை என்பது மிகக் கடினமான ஒரு நிலமை. இதை உபதேசித்த அருணகிரி கடைப்பிடிக்கவும் செய்தார். முருகன் திருவருளால் அனைவரும் இன்புற்று வாழ வேண்டி ஆறுமுகன் திருவடிகளை வணங்குகிறேன்.

இதுகாறும் கந்தரநுபூதிச் செய்யுட்களை பொருள் வழங்கும் முயற்சியில் எனக்குத் துணை நின்று கருத்துகளைக் கொடுத்து இந்தத் தெய்வத் தமிழ்ப் பணியில் உதவிய அனைவருக்கும் எனது நன்றி.

சேவலங் கொடியன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே ( முருகப் பெருமானின் கருணைக் காவலில் உலகம் பத்திரமானது ) - குறுந்தொகையில் பெருந்தேவனார்.

அன்புடன்,
கோ.இராகவன்
 
ராகவன்ஜி எழுதியுள்ளதைப் படிக்கமுடியவில்லை. ஆனால் பரஞ்சோதிஜி எழுதியுள்ள அடுத்த பதிவைப் படிக்கமுடிகிறது. இது எதனால்? எனது கணினியில் கோளாறிருந்தால் இரு பதிவுகளுமே ஒரே மாதிரியாகத்தானே தெரியவேண்டும்?

===கரிகாலன்
 
கரிகாலன்ஜீ நீங்கள் என்கோடிங்கை வெஸ்டெர்ன் என்று மாற்றினால் நான் எழுதியதைப் படிக்க முடியும்.
 
அன்பின் உச்சமே பக்தி என்பார்கள். நாம் நம் அன்னை மீது வைத்திருக்கும் அன்பும் அத்தகையதே!
அத்தகைய பக்தி நிலையில் காணா முடியாத இறைவனைக் காணவைக்கிறீர்கள். பரம்ஸ் அண்ணா சொன்னது போல இத்தொகுப்பினை பி.டி.எ·ப் ஆக மாற்றிக்கொடுங்கள். எத்தனை சலனங்கள் இருந்தாலும்
இப்பாடல்களைப்படிக்கும் போது அவையெல்லாம் மறைந்து மனம் அமைதியடையவது கண்கூடு.
அதற்காகத் தங்களுக்குக் கோடி நன்றிகள்! இத்தகைய அருமையானப் பணி செய்த தங்களுக்கு இறைவன் எக்குறையுமின்றி காத்து அருள் புரியட்டும்! நன்றி
 
நன்றி கவிதா.

உறுதியாக இந்தப் பதிப்பை பிடிஎஃப் வடிவில் மாற்றித் தருகிறேன். ஒவ்வொரு பாடலுடைய விளக்கத்திற்கும் பொருந்துகின்றார் போல தலைப்பிட்டு மாற்றித் தருகிறேன். அது எனக்கு உவப்பே. அடுத்த வாரம் தருகிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்
 
நடுவில் விட்டுப்போய்விட்டதை மீண்டும் படிக்கவேண்டும்.

இந்த அரிய தொடரைத் தந்த இராகவனின் பணியைப் பாராட்ட வார்த்தைகளில்லை.

நண்பர்கள் சொன்னதுபோல் பிடிஎஃப் மட்டுமல்ல..
ஒரு நூலாக தொகுக்க வல்ல படைப்பு இது.


இது மனித முயற்சியின் விளைவு மட்டுமல்ல..
இறையருளின் துணையுடன் நிகழ்ந்த நினைவு..


தளராது முடித்த இராகவனுக்கும்
தொடர்ந்து ஊக்கிய உறவுகளுக்கும்
என் வந்தனங்கள்.. நன்றிகள்..
 
முந்தா நாள், சூரசம்காரம் அன்றைக்கு, இங்கே ஒரு நண்பர் வீட்டில் கந்தசஷ்டி கவசம் பாடினோம், முருகப்பாடல்கள் பாடி இறைவனை துதித்தோம், இறுதியாக கந்தரநுபூதி பாடினோம்.

அப்போ முழுவதும் இராகவன் அண்ணா தான் நினைவில் இருந்தார்.
 
நன்றி இளசு. இதைப் புத்தகமாகச் செய்ய இன்னும் சிறிது மெருகேற்ற வேண்டும். திரும்பத் திரும்பச் சொல்கிறேன். நான் சொல்வதெல்லாம் என்னுள் இருந்து கந்தன் சொல்வது. ஆகையால் அவனருள் இருந்தால் புத்தகம் நிச்சயம் வரும்.
 
பரஞ்சோதி said:
முந்தா நாள், சூரசம்காரம் அன்றைக்கு, இங்கே ஒரு நண்பர் வீட்டில் கந்தசஷ்டி கவசம் பாடினோம், முருகப்பாடல்கள் பாடி இறைவனை துதித்தோம், இறுதியாக கந்தரநுபூதி பாடினோம்.

அப்போ முழுவதும் இராகவன் அண்ணா தான் நினைவில் இருந்தார்.
கந்தரநுபூதி பாடும் பொழுது எனது நினைவா! எனக்கு ஒரு காட்சி நினைவிற்கு வருகிறது.

கந்தபுராணத்தில் முதல்நாள் போர் வருகிறது. அன்றைக்கே சூரனுக்குத் தெரிந்து விடுகிறது வரப்போகின்ற முடிவு. அன்று இரவு பதுமகோமளை சூரனுக்கு அறிவுரை சொல்கிறாள். அப்பொழுது சூரன் சொல்கிறான். "கந்தனை உணர்ந்தேன். கந்தனுடைய காவியத்தைப் பாடும் எந்தத் தமிழ்ப் புலவனும் கந்தனோடு சேர்த்து என்னையும் பாடித்தான் ஆக வேண்டும். அந்தப் பெருமை எனக்கு வேண்டுமானால் அடுத்த நாளும் போருக்குப் போய்த்தான் ஆக வேண்டும். ஒருவேளை கந்தனைப் பணிந்தால் அந்தப் பேறு எனக்குக் கிட்டாது." என்றானாம்.

முருகனை நினைப்பவர்கள் வாரியாரையும், கீரனையும், அருணகிரியையும் நக்கீரரையும் ஒருமுறையேனும் நினைக்காமல் இருக்க முடியாது. அந்த வரிசையில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தால் நான் பிறந்த பயன் தீரும்.
 
Back
Top