இன்னும் பெயர் வைக்கவில்லை....-புதிய தொடர்கதை

leomohan

New member
1
brain2.jpg


சென்னையின் மிகவும் பிரபலமான அதே நேரத்தில் ஒரு மணிக்கு பல ஆயிரம் கறக்கும் மனோதத்துவ மருத்துவரின் முன் அமர்ந்திருந்தேன்.
ஒரு சிறிய இருட்டறை. தூரத்தில் சிறிய விளக்கு. நன்றாக சாய்ந்து அமர ஒரு தோல் இருக்கை அருகில் சிறிய குவளையில் குடிநீர். எதிரே ஒரு சிறிய முக்காலியில் மருத்துவர்.

பல நிமிடம் அமைதியாக இருந்தோம். அந்த அமைதி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. யுகமாகியிருக்கும் போல் தோன்றியது. காத்திருந்தேன். காத்திருக்க செய்திருந்தார் அவர்.

வயது அறுபது இருக்கும். என்னைப்போல பல பேரை பாத்திருப்பாரா அல்லது உலகிலேயே நான் ஒருவன் தான் இதுபோலா. பல பேர் இவரிடம் ஆலோசிக்க சொல்லியிருந்ததால் கடைசி முயற்சியாக இவரிடம் வந்திருக்கிறேன்.

சொல்லுங்க என்றார் நேரிடையாக.

மணிக்கு காசு வாங்குவதால் நேரம் ஆக ஆக நான் கொடுக்க வேண்டிய பணமும் அதிகமாகிவிடும் என்ற பயத்தில் இருந்தேன். படபடவென்று பேசினேன். என்னுடைய பிரச்சனைகளை சில நிமிடத்தில் சொல்லி முடித்தேன்.

அவர் ஒப்பவில்லை. மீண்டும் அமைதியாக இருந்தார். என்னையும் பேசவிடாமல் கையமர்த்தினார்.

சொல்லுங்க என்றார் மீண்டும்.

கடுகு வெடித்துவிடும் போல என்ன சார் எல்லாத்தையும் சொல்லிட்டேனே என்றேன் அலுப்புடன்.

மீண்டும் அமைதியானார். இவர் என்ன தான் செய்யப் போகிறார் என்று யோசித்தேன்.

மென்மையாக சிரித்தார். இந்த நேரத்தில் என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு என்பது போல் அவர் மீது என் பார்வையை வீசினேன்.

உங்க கிட்டே யார் சொன்னது என்று கேட்டார் மொட்டையாக.
யாரா. எதைப்பத்தி என்றேன் குழப்பத்துடன்.
நான் ஒரு மணிக்கு பத்தாயிரம் வாங்குறேன்னு.
என் மனதை படித்தது போல் இருந்தது.

எதுக்கு கேக்கறீங்க என்றேன்.

இல்லை இப்படி ரயில் பிடிக்க ஓடற மாதிரி படபடன்னு பேசிட்டீங்களே.
ஆமாம் சார். இங்க என்னை போகச் சொன்ன நண்பர் சொன்னார் என்றேன் சற்று வெட்கத்துடன்.

கவலை படாதீங்க. இங்க மணிக்கு எல்லாம் காசு வாங்கறதில்லை. ஒரு மருத்துவர் பிரபலமாயிட்டா அவரை பத்தி இப்படி வதந்திகள் வரது சகஜம் தான். நீங்க இந்த கன்சல்டேஷனுக்கு 150 ரூபாய் கொடுத்தால் போதும். குணமான பிறகு என்னுடைய ஃபீஸை நான் கேட்டு வாங்கிக்கறேன். போதுமா என்றார்.

நன்றியுடன் அவரை பார்த்தேன். சார், இந்த கன்சல்டேஷன் எத்தனை நிமிஷத்திற்கு என்று இன்னும் சந்தேகம் தீராமல் கேட்டேன்.
ஹா ஹா என்று பெரியதாக சிரித்தார். ஒரு நாள் போதுமா. இரண்டு நாள். நீங்க எத்தனை மணி நேரம் வேணா எடுத்துக்கலாம் என்றார்.
நான் நம்பவில்லை.

இங்க பாருங்க கதிர் – அது தான் என் பெயர். கதிரவன். காசை பத்தி இப்ப கவலை வேண்டாம். உங்க பிரச்சனையை சொல்லுங்க. எத்தனை மணி நேரமானாலும் நான் கேக்கறேன். என் வீடு மேலே தான் இருக்கு.
அது சரி சார். அந்த கவலையில்லை எனக்கு. ஆனா நான் பிரச்சனையை இப்பத்தானே சொன்னேன் என்றேன் மீண்டும் அலுப்பு தட்டும் குரலில்.
கதிர், நீங்க படபடன்னு பேசினதை நான் கேட்கலை. பொறுமையா சொல்லுங்க. பதட்டம் வேண்டாம். பயம் வேண்டாம்.
எனக்கென்ன பயம். என்னை பார்த்து மத்தவங்க தான் பயப்படனும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

அமைதியானேன். எங்கிருந்து ஆரம்பிப்பது.
சார், என்னுடைய பத்தாம் வகுப்பிலிருந்து எனக்கு கதைகள் படிக்கறதுன்னா ரொம்ப இஷ்டம்.

சரி.

ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சு புஸ்தகம் படிச்சிடுவேன்.

சரி.

படிக்கறது நல்லதுன்னு எங்கப்பா எல்லா புஸ்தகத்திற்கும் எப்ப கேட்டாலும் பணம் கொடுப்பாரு.

சரி.

அப்ப எங்க வீட்ல டிவி இல்லை. காலேஜ் படிக்கும் போது தான் டிவி வந்தது. அப்பலேர்ந்து படிக்கறது குறையாட்டாலும் நெறைய டிவியும் பார்க்க ஆரம்பிச்சேன்.

சரி.

எம்எஸ்சி மைக்ரோ பயாலாஜி படிச்சேன். ஃபர்ஸட் கிளாஸ்.
அப்படியா. ரொம்ப நல்ல விஷயம் பலே.
அதுக்கப்புறம் வேலைக்கு போனேன். ஆராய்ச்சி விஞ்ஞானியா வேலை கிடைச்சுது. ஜூனியர் போஸ்ட் தான். ஒரு வருஷம் வேலை செஞ்சேன். அப்புறம் உடம்பு சரியில்லாமே போச்சு. ஒரு மாசம் லீவுல இருந்தேன். அதுவே மூணு மாசம் ஆயிடுச்சு. அந்த நேரத்திலே பொழுது போகாம இன்னும் புக்ஸ் படிச்சேன். அதுகப்புறம் என்னாச்சுன்னு தெரியலை. வேலைக்கும் போகலை. இப்ப மூணு வருஷமா சமுதாயத்திலேர்ந்து எல்லாருமே என்னை தூக்கி வெளியே போட்ட மாதிரி இருக்கு.

சரி. நான் புரிஞ்சிகிட்ட வரைக்கும் சொல்றேன். சரியான்னு சொல்லுங்க என்று ஆரம்பித்தார் மருத்துவர். கண்ணாடியை கழற்றி கீழே வைத்தார். தன் புருவங்களை நன்றாக அழுத்திக் கொண்டார் ஒரு முறை.
உங்களுக்கு நிறைய படிக்கிற பழக்கம் சின்ன வயசிலேர்ந்து. நாவல், கதைகள், கவிதைகள், சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், ஆட்டோபையோகிராபிஸ் அப்படி எல்லாத்தையும் படிப்பீங்க. எம்எஸ்சி முடிச்சீங்க. வேலைக்கு சேர்ந்தீங்க. கொஞ்ச நாளைக்கு பிறகு உடம்பு சரியில்லைன்னு விடுமுறை எடுத்தீங்க. அப்பவும் நிறைய படிச்சீங்க. அப்புறம் திடீர்னு ஒரு நாள் உங்களுக்கு நீங்க படிக்கும் புத்தகங்களின் கதாநாயகனோ கதாநாயகியோ என்னென் உணர்ச்சிகள் எல்லாம் அனுபவிக்கிறாங்களோ அதையே நீங்களும் அனுபவிக்கற மாதிரி உணர ஆரம்பிச்சீங்க. அவங்களுக்கு வலிச்சா உங்களுக்கு வலிக்கற மாதிரி இருக்கு. அவங்க சந்தோஷமா இருந்தா நீங்க சந்தோஷமா இருக்கீங்க. அவங்க பிரஸ்டேட்டா இருந்தா நீங்களும் அதை அனுபவிக்கறீங்க. சரியா.

ஆமாம் சார்.

ம்ம் என்று யோசித்தார். பிறகு தன்னுடைய மேசையின் மேல் இருந்த ஒரு பெட்டியை எடுத்தார். ஒரு சிறிய மாத்திரையை என்னிடம் கொடுத்தார். தண்ணீர் குவளையை நீட்டினார்.

இந்த மாத்திரை போட்டுக்கோங்க. உங்களை நாளைக்கு இதே நேரத்தில் சந்திக்கிறேன் என்று சொல்லி எழுந்தார்.

நன்றி சார் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன்.


தொடரும்.....
 
Last edited:
உங்கள் கதைப்பயணம் தொடர்கதையானதின் மகிழ்ச்சி மோகன்.

வாசித்து முடித்த நொடியில் கற்பனைக் கம்பளம் பறந்தது.

கதை எங்கெல்லாம் செல்லும்? எதை எல்லாம் சொல்லும்? தலைப்பில் புதைந்திருக்கும் இரகசியம் என்ன? மனோவியல் கதை சொல்லியாகப் பரிணமித்த மோகனின் மனதில் என்னதான் உள்ளது?

ஆவலைத் தூண்டி விட்டீர்கள் மோகன்.
 
தலைப்பின் மர்மம் என்னவோ என ஆராய்ந்து தோற்குது என் மனது...

அமரனைப் போன்றே நானும் கற்பனைக் கம்பளத்தில்.., பிடிமானம் ஏதும் இல்லாமல்...
 
2
Psychology%20Image.jpg


வீட்டுக்குள் நுழைந்ததும் கவனித்தேன். கயல் அமர்ந்திருந்தாள். கயல்விழி. என்னுடைய காதலி. முன்னாள் காதலி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். எனக்கு இப்படியானதும் கழன்றுக் கொண்டது முதலில் இவள் தான்.

எங்கே தனியா போயிட்டு வரீங்க.

எங்கே போனால் உனக்கென்ன.

என் கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் உங்க கூட வந்திருப்பேனே.

உங்க வீட்ல தான் பைத்தியத்தோட என்ன சகவாசம் சொல்லிட்டாங்களே.
கதிர், நீங்க பைத்தியம் இல்லை. எனக்குத் தெரியும்.

இப்பத்தான் தெரியுமா.

எப்பவுமே தெரியும். ஆனா நீங்க நடந்துகிட்ட வித்ததாலே நான் எத்தனை பிரச்சனைகளை சந்திச்சேன் தெரியுமா.

அம்மா எனக்கு இவகிட்ட பேச இஷ்டம் இல்லை. அவளை போகச் சொல்லுங்க என்று காட்டமாக கூறிவிட்டு என் அறைக்குள் நுழைந்தேன்.

அறைக்குள் ஒரு காலத்தில் பல ஆயிரம் புத்தகங்கள் இருக்கும். இப்போதைக்கு சுண்டல் மடித்து வரும் தினசரி செய்தித்தாள் கூட வராமல் என் அப்பாவும் அம்மாவும் பார்த்துக் கொள்கிறார்கள்.
வெறுமையாக இருந்தது. மருத்துவர் கொடுத்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. மூளைக்கும் உடலக்கும் இருந்த இணைப்பு துண்டித்துவிட்டது போல உணர்ந்தேன்.

என்னுடைய படுக்கையின் ஓரத்தில் சென்று அமர்ந்தேன். தலைகாணியை வயிற்றின் மேல் வைத்து இறுக்கிக் கொண்டேன்.

அம்மா நீங்களே சொல்லுங்கள்....கயல் அம்மாவிடம் முன்னறையில் பேசிக் கொண்டிருந்தாள்.

போன தடவை போலீஸ் வரைக்கும் பிரச்சனை போற வரையிலும் நான் இவருக்கு வந்த எல்லா பிரச்சனையிலும் தோள் கொடுக்கலையா. போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் விவகாரம் போனதால என் வீட்டுல எத்தனை சண்டையின்னு உங்களுக்கே தெரியும். எங்க அண்ணாவும் அப்பாவும் இந்த பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லி வைச்சிருக்காங்க. அதையும் மீறி நான் இவரை பார்க்க வரேன்னா அதுக்கு என்ன அர்த்தம். அவருக்கு ஏன் புரியலை என்றாள் அழுகையை அடக்கிக் கொண்டு.

என் தாய் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

என் தந்தை வீட்டில் இல்லை. ஏதாவது ஜோசியக்காரனுக்கு 100 ரூபாய் தண்டம் அழுது என் பையனோட எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்க போயிருப்பார். இல்லை ஏதாவது மலையாள மாந்தரீகர் என் உடம்பில் மோகினி பிசாசு ஒன்று இருப்பதாக சொல்லி அவரிடமிருந்து பணத்தை விரட்டிக் கொண்டிருப்பார்.

முகத்தை துடைத்துக் கொண்டு கயல் என் அறைக்கு வந்தாள். நான் அமைதியாக இருந்தேன். யோசிக்கும் திறன் மாத்திரையால் தளர்ந்து போயிருந்த்து.

எங்க போயிருந்தீங்க கதிர்.

டாக்டர் ரதீசன். சைக்கியாட்ரிஸ்ட்.

என்ன சொன்னாரு.

ஒன்னும் சொல்லலை.

அப்புறம்...

நாளைக்கு வர சொல்லியிருக்காரு.

போலீஸ் பிரச்சனையை பத்தி சொன்னீங்களா.

இல்லை. என்னுடைய பிராப்ளம் மட்டும் தான் பேசினோம்.

சமீபத்தில ஏதாவது புக் படிச்சீங்களா.

இல்லை.

கட்டாயமா.

கட்டாயமா தான். இல்லாட்டா நானா எப்படி தனியா அவரை பாக்க போயிருக்க முடியும்.

என்னை கூப்பிட கூடாதா.

கயல், எனக்கு உடம்பு சரியாற வரைக்கும் நீ இங்க வந்து போறது சரியில்லை. உனக்கும் பிரச்சனை. எனக்கும் பிரச்சனை. எனக்கு சரியாகுதோ இல்லையோ உங்க வீட்ல ஒரு தடவை என்னை பைத்தியமா பாத்துட்டாங்க. அதை அவங்க மாத்திக் முடியாது. நானும் அவங்க சொன்ன வார்த்தைகளை மறக்கமாட்டேன். இந்த சம்பந்தம் நடக்காது. நீ நேரத்தை வேஸ்ட் பண்ணாதே. வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.

அதை நான் பாத்துக்கறேன். நீங்க என்னை பத்தியோ என் கல்யாணத்தை பத்தியோ என் வீட்ல இருக்கறவங்களை பத்தியோ கவலைப்படாதீங்க. இப்ப ஒரு வாரமா புக் படிக்காம இருக்கீங்களா.

ஆமா.

புக் படிக்கறது விட்டுட்டா இத்தனை பிரச்சனை போயிடும் இல்லையா.
கயல், புக் படிச்சாலும் பிரச்சனை வராம இருக்கனும். அப்பத்தான் குணமானதா அர்த்தும். டிவி பார்த்து பிரச்சனை வந்தா?

சரி. நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் நாளைக்கு உங்களோட வரேன்.

வேண்டாம், வர வேண்டாம்.

நான் வரேன் என்று அழுத்தமாக சொல்லிவிட்டு என் தலையை கோதிவிட்டு என் தாயிடம் விடைபெற்று வெளியேறினாள்.

தொடரும்...
 
Last edited:
3
கஜேந்திரனை தீர்த்துக் கட்டினால் தான் ராதிகாவின் பிரச்சனை தீரும். ராதிகாவை கோர்ட்டுக்கு இழுப்பதில் எனக்கு விருப்பமில்லை. என்ன செய்யலாம்.

கஜேந்திரன் எங்கே போகிறார் எங்கே வருகிறார் என்று எல்லா விஷயத்தையும் சேகரித்துவிட்டேன். நாளைக்கு அவர் மெரினாவில் ஜாக்கிங் செய்ய வரும் போது அவரை தீர்த்துக் கட்ட வேண்டியது தான்.
அதற்கு முதலில் எனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும். சைலன்ஸரோடு கிடைச்சா நல்லா இருக்கும். ராயபுரத்துல போனா கிடைக்கும். இன்னிக்கி ராத்திரி போய் அதை வாங்கிக்கனும். ஒரு லட்சம் ஆகலாம்.

எனக்கு உடலில் முறுக்கேறியது. உடனே வீட்டிலிருந்து வெளியேறி ஒரு ஆட்டோவை பிடித்தேன். ராயபுரம் சென்றடைந்தேன். அங்கிருந்து சிறிய சந்துக்களில் நுழைந்து தேடினேன். எங்கே கிடைக்கும் துப்பாக்கி.

கறுப்பாக குண்டாக லுங்கியை தூக்கி கட்டிக் கொண்டு ஒரு மீன்பாடி வண்டியில் ஒருவன் சென்றுக் கொண்டிருந்தான். சட்டென்று அவனை நிறுத்தினேன்.

எனக்கு சரக்கு வேணும் என்றேன் படபடப்புடன்.

என்ன சரக்கா. என்ன சரக்கு?

துப்பாக்கி.

யோவ். என்னய்யா வெளையாடறியா. நான் மீன் விக்கற ஆளுப்பா.

உனக்கு யாரையாவது தெரியுமா. எனக்கு துப்பாக்கி வேணும். அர்ஜன்ட்.

வேற ஆளைபாருய்யா என்று அவன் அகன்றான்.

நான் பரபரப்புடன் தேடினேன். யார் கொடுப்பார் எனக்கு துப்பாக்கி. கஜேந்திரனை தீர்த்துக் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் ராதிகா கோர்ட் ஏற வேண்டியிருக்கும்.

என்னை தாண்டி அந்த ஆள் போனதையும் அவன் அங்கிருந்த ஒரு காவல் அதிகாரியிடம் பேசியதை நான் கவனிக்க வில்லை.

இன்னும் சந்துக்களில் நுழைந்து பலரிடம் கேட்டேன். யாரும் சரியாக பதில் சொல்லவில்லை.

மெல்லிய உருவத்துடன் கறுப்பு நிற சட்டையும் காக்கி நிற கால் சட்டையும் அணிந்த ஒருவன் என்னருகில் வந்தான்.

என்ன வேணும்.

சரக்கு.

சரக்குன்னா கஞ்சாவா

இல்லை இல்லை. துப்பாக்கி வேணும். சைலன்ஸரோட கிடைச்சா நல்லாயிருக்கும்.

எத்தனை ரூபாய் வைச்சிருக்கே.

எத்தனை ரூபாய் ஆகும்.

அது ஆகும் 60-70 ஆயிரம். உன் கிட்ட லைசன்ஸ் இருக்கா.

லைசன்ஸா. இல்லை.

லைசன்ஸ் இல்லைன்னா. திருட்டு துப்பாக்கி வேணுமா.

ஆமா. இங்கே கிடைக்கும்னு சொன்னாங்க.

யார் சொன்னாங்க.

எனக்கு தெரியும்.

சரி. எதுக்கு வேணும் துப்பாக்கி உனக்கு.

அது உனக்கு தேவையில்லாத விஷயம்.

சரி என்னோட வா என்று என்னை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் நடந்தான். சட்டென்று ஒரு ஆட்டோவில் என்னையும் ஏற்றிக் கொண்டு அவனும் ஏறி அமர்ந்தான்.

எங்கே போறோம்.

துப்பாக்கி வேணுமில்லையா.

ஆமா.

அப்ப பேசாம வா.

சிறிது நேரத்தில் ராயபுரம் காவல் நிலையத்தில் ஆட்டோ வந்து நின்றது. என்ன நடக்கிறது என்று புரிந்துக் கொண்டு இறங்கி ஓடும் முன் இன்னும் இருவர் வந்து என்னை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
சிறைக்குள் தள்ளிவிட்டு மேலதிகாரியை அழைத்து வந்தனர்.

டேய். யாருடா நீ. உன் பேர் என்ன.

கதிர். கதிரவன்.

யாரை போட்டுத்தள்ள போற.

யாரையும் இல்லை.

அப்புறம் எதுக்கு உனக்கு துப்பாக்கி என்று சொல்லி காலால் என்னை
எட்டி உதைத்தார்.

யாரை போட்டுத்தள்ளப்போற.

கஜேந்திரன்.

யார் கஜேந்திரன்.

அவரு ராதிகா வேலை செய்யற கம்பெனியில் மானேஜர்.

யாரு ராதிகா.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் குழம்பினேன்.

உன் வீட்டு நம்பர் என்ன.

சொன்னேன்.

சிறிது நேரத்தில் என் அம்மா அப்பா கயல் அவருடைய அண்ணன் அனைவரும் வந்திருந்தனர்.

அவர்கள் வருவதற்கு முன் இன்னும் பல அடிகள் வாங்கினேன்.
காவல் அதிகாரியிடம் பேசி என்னுடைய மருத்துவ சான்றிதழ்களை காட்டி வெளியே அழைத்து வந்தனர்.

கயலுடைய அண்ணன் என்னைப்பார்த்து கத்தி தீர்த்தான். என் தந்தை தாயை திட்டினான். என்னை வீட்டில் பூட்டி வைக்கச் சொன்னான்.

கயல் இன்னொரு தடவை இந்த பைத்தியத்தோட சகவாசம் வைச்சிகிட்டே அவ்வளவுதான் உன் கதை என்று கையை உயர்த்தி அதட்டினான். அவளை இழுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறிச் சென்றான்.

அருகில் இருந்த மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்று காயத்திருக்கு மருந்திட்டு என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் என் பெற்றோர்.

தொடரும்....
 
கதை அருமையாக ஆரம்பித்து தொடர்கிறது. மேலும் படிக்க ஆவலாயுள்ளேன். தொடருங்கள் மோகன்.
 
வித்தியாசமான முறையில் மனோதத்துவ ரீதியாகப் போகும் கதையை எழுதும் பாங்கு நன்றாக இருக்கிறது மோகன். கதிரின் இந்த குறைபாட்டால் யாருக்கு என்ன நேரப்போகிறதோ என திகிலாய் இருக்கிறது. கயலின் கேரக்டர் மிக அருமையாய் வடிவமைக்கப்ப்ட்டிருக்கிறது.

தொடருங்கள்...தொடர்கிறோம்.
 
4


nanotechnology-kd-001.jpg


கயல்விழியை ஏன் தான் மருத்துவருக்கு அறிமுகப்படுத்தினேன் என்று நினைக்கும்படி ஆகிவிட்டது. என்னை பார்த்து புன்னகைத்த அவர், நீங்க கொஞ்ச வெளியே வெயிட் பண்ணுங்க என்று என்னை அனுப்பிவிட்டு அவளிடம் பேசத்துவங்கினார்.

Albert Camusன் தமிழ் மொழி பெயர்ப்பு நாவலான அந்நியனில் வருவது போல என்னை கண்ணாடி அறையில் அடைத்துவிட்டிருந்தார். அவர்கள் செய்கைகள் எனக்கு புரியாவிட்டாலும் என்ன பேசுகிறாள் கயல் என்பது எனக்கு புரியாமல் இல்லை.

தேர்வுக்கு சென்ற மாணவன் தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுவது போல காவல் துறைக்கு நான் சென்ற கதையை தான் அவள் சொல்லிக் கொண்டிருக்கிறாள் போலும்.

எனக்கு எரிச்சலாக இருந்தது. என்னுடைய பிரச்சனையைப் பற்றி என்னை வைத்து பேசுவதை விட்டு அவளிடம் தனியாக என்ன பேச்சு.

-----​

கதிரவனுக்கு வந்திருக்கும் பிரச்சனையை சீரியல் பார்த்து கதை சொல்லும் ஒரு சராசரியான பெண்ணைப் போல கண்களை அகலப்படுத்திக் கொண்டு நடுவில் விசும்பல்களுடன் கதை சொல்லிக் கொண்டிருந்தாள் கயல்.

சார் நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க. ஏதோ ஒரு புக் படிச்சவரு அதில் கதாநாயகி கல்யாணத்துக்கு போகறதுக்காக தயார் ஆகிகிட்டு இருந்ததை விபரமா எழுதி தொலைச்சிருக்காரு. அதை படிச்சிட்டு இவரு புடவை கட்டிக்கிட்டு மேக்கப்பெல்லாம் போட்டுக்க ஆரம்பிச்சிருக்காரு. இவங்க வீட்ல இளவயசு பொண்ணுங்க யாரும் இல்லை. அதனால வீட்ல எந்த மேக்கப் பொருளும் இல்லை. கடைக்கு போய் இதையெல்லாம் வாங்கிட்டு வந்திருக்காரு.

இப்படித்தான் இன்னொரு புக்கை படிச்சிட்டு அதுல யாரோ கிரின்னு ஒரு பாத்திரம். மூணு தடவை ஐஏஎஸ்ஸில் பெயில் ஆனதால ரயில் தண்டவாளத்தில போய் படுத்துகிட்டானாம். அதனால இவரும் போய் அப்படி செஞ்சிருக்காரு. நல்ல வேளையா யாரு காப்பாத்தி கொண்டு வந்தாங்க.

ம் என்று சொல்லியபடி அவளை மேலும் பேச வைத்து கேட்டுக் கொண்டிருந்தார்.

சரிம்மா. இதுவரைக்கும் யாராவது உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டிருக்காங்களா. யாராவது இவரு மேல் உங்க வீட்ல புகார் செஞ்சிருக்காங்களா.

சார் இதுவரைக்கும் இவரு பண்ண கூத்தால இவருக்குத் தான் பிரச்சனையே. ஆனால் இது ஜாஸ்தியாட்டா யாருக்கு பிரச்சனை வரும்மோன்னு ரொம்ப பயமா இருக்கு.

சரி. இதுவரைக்கும் என்ன மருத்தும் செஞ்சிருக்கீங்க.

நிறைய டாக்டர் கிட்டே காட்டியாச்சு. அவரை புக் படிக்க விடாம பார்த்துக்கிட்டாச்சு. ஒரு பேப்பர் கூட கண்ணுக்கு படறதில்லை. ஆனா சின்ன விஷயம் படிச்சாலும் அவருக்கு ரொம்ப பாதிக்குது. யாராவது செத்திட்டாங்கன்னு படிச்சா இவரு அழுவ ஆரம்பிச்சிடராரு. எங்கேயாவது மலேரியா வந்தா இவருக்கு உடம்பு சூடாகிடுது.

சரி. ஒரு புத்தகம் படிக்கும்போதே அவருக்கு இந்த மாதிரி பாதிப்பு ஏற்படுதா அல்லது படிச்சு முடிச்சப்பிறகு இந்த மாதிரி ஆகாது.

அது சரியா தெரியலை சார். சில நேரத்தில பாதி புஸ்தகம் படிக்கும்போது இப்படி ஆகுது.

குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எழுதின புத்தகம் படிக்கும்போது ஆகுதா இல்லை....

யாரு எழுதினாலும் இப்படித்தான்.

இங்கிலீஷ் புக்கா தமிழா.

அவரு இரண்டு புக்கையும் படிப்பாரு.

இந்த பாதிப்பு எத்தனை மணி நேரம் நீடிக்குது.

சில சமயம் 20-30 நிமிஷத்திலே சரியாயிடுத்து. சில நேரம் இரண்டு மூணு நாள். சில சமயம் வாரம் கூட. அன்னிக்கு போலீஸ்ல அடி வாங்கின உடனேயே சரியாயிடுத்து. இல்லை எல்லாரும் சேர்ந்து திட்டினா சரியாயிடுத்து.

இவரு அந்த மாதிரி நேரத்தில உங்களை அடையாளம் தெரிஞ்சிக்கிறாரா.

அவருக்கு எங்களை பார்த்தா யாருன்னு தெரியுது. ஆனாலும் ஒரு மூணாவது மனுஷனை பார்க்கறமாதிரி தான் பார்க்கறாரு.

அப்ப நீங்க ஏதாவது பேச்சுக் கொடுத்தா பதில் கொடுக்கறாரா.

இல்லை சார். எந்த காரெக்டரா இருக்காரோ அந்த காரெக்டர் மாதிரி தான் பதிலும் வரும்.

ம்ம்.

இது எத்தனை நாளா இருக்கு.

மூணு வருஷமா சார்.

ஏதனால அவருக்கு வேலை போச்சு.

நானோ டெக்னாலாஜில கண்டுபிடிக்கற நானோ பாட்ஸ்னால உலகம் அழியபோகுதுன்னு அப்படிங்கற மாதிரி ஏதோ புக் படிச்சிருக்காரு அதுக்கு மறுநாள் ஆபீஸூக்கு போய் லாப்பெல்லாம் உடைக்க ஆரம்பிச்சிட்டாரு. புத்தி ஸ்வாதீனம் இல்லையின்னு வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்க.

சரிம்மா. நீங்க கொஞ்சம் வெளியே இருங்க. கொஞ்ச நேரம் அவர் கிட்ட பேசிட்டு அப்புறம் உங்களை கூப்பிடறேன்.

----

அவர் எழுந்து வந்த கதவை திறந்தார். என்னை உள்ளே அழைத்தார். கயல் வெளியே வந்தாள். அவளை முறைத்துப் பார்த்தேன். அவள் முகம் தெளிவாக இருந்தது போல் இருந்தது. அவள் என்ன பேசியிருப்பாளோ என்று என் முகம் தான் குழம்பி போயிருந்தது.

தொடரும்...
 
ஆரம்பிச்சிட்டீங்களா.....
மற்றுமொரு மனவியல் சம்பந்தப்பட்ட கதை சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாமல். அத்துடன் அழகாக பொருந்தும் படங்களுடன்....

தொடருங்க லியோ.. பின் தொடர்கிறோம்.
 
ஒவ்வொரு பாகத்திலும் வாசகனை கவனம் சிதறவிடாது உளவியல் வசியம் செய்யும் வல்லுனரின் கதை என்பது படித்த மாத்திரத்தில் புரிந்து விடுகிறது. விறுவிறுப்பான திரைக்கதை. விறுப்பு விறுப்பு சற்றும் குறையாத எழுத்தியக்கம். கதையின் போக்கில் என்று கதையை அலச இன்னும் அவகாசம் உள்ளது போலும். குறுக்குச் சிறுத்து பாகங்களை தருவதுக்கு நன்றியும் பாராட்டும் லியோ.
 
5

மோகன் கணினியில் ஏதோ தட்டிக் கொண்டிருந்தான். ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் முழு நேர வேலை. பகுதி நேரத்தில் இணையத்தில் கதை கவிதை கட்டுரைகள் எழுதுவது. சில நேரத்தில் கருத்துக் களங்களில் சூடான திரிகளில் கருத்துக்கள் எழுதுவதும் கூட. அவன் மனைவி பின்னால் இருந்து குரல் கொடுத்தாள்.

இந்தாங்க காபி. என்ன மறுபடியும் மன்றமா? வேற வேலையில்லை உங்களுக்கு. நாள் முழுக்க ஆபீஸில் இருக்கீங்க. வீ்ட்டுக்கு வந்ததும் மன்றம் மன்றம்னு உக்காந்துக்கிட்டா கடை கன்னிக்கு யாரு போறது.

மன்றம் இல்லை. நாவல் எழுதிகிட்டு இருக்கேன்.

என்ன நாவல்.

கணினிக் காதல்.

அதான் எல்லா தமிழ் மன்றத்திலும் முன்னாடியே எழுதிட்டீங்களே.

அது முன்னாலே எழுதினது தான். இப்ப பிடிஎஃப்பா மாத்தி இஸ்னிப்ஸல போட்டுக் கிட்டு இருக்கேன்.

சட்டென்று கணினியின் பின்னால் வந்து கணினியின் திரையை பார்த்தாள் அவன் மனைவி.

அது என்ன மோகன் கிருட்டிணமூர்த்தி. மோகன் கிருஷ்ணமூர்த்தி தானே.

ஆமாம் மா. ஆனா இது சுத்த தமிழ். சொல்லும் போது கிருஷ்ணமூர்த்தி. எழுதும்போது கிருட்டிணமூர்த்தி. ஷ வந்து வடமொழிக்காக நாம அடாப்ட் பண்ணிகிட்டது. இப்ப மோஹன் தான் உச்சரிக்கறோம். ஆனா மோகன்னு எழுதறோம்.

அப்ப உங்க நாவல்ல ஷ வர இடத்திலே ட்டி தான் போடுவீங்களா.

நாவல்ல கதை எழுதும் போது இரண்டு பகுதி இருக்கு. ஒன்னு எழுத்தாளர் எழுதறது. அதுல எத்தனை முடியுமோ அத்தனை சுத்த தமிழ் பயன்படுத்த முயற்சி செய்யறோம். இன்னொரு பகுதி. பேச்சுத் தமிழ். அதுல நாம சுத்த தமிழ் எழுதறோம்னா படிக்கறவங்களால ரிலேட் பண்ண முடியாது. அதனால புஸ்தகம், பொஸ்தகம், கஷ்டம், இஷ்டம் அப்புறம் ஆங்கில வார்த்தைகள் இதையெல்லாம் பயன்படுத்தறோம். அதுக்க காரணம் மக்கள் சாதாரணமா எதை பேசறாங்களோ அதையே படிச்சா படிக்கறவங்களுக்கு அவங்க காதலு வசனம் வந்து விழற மாதிரி இருக்கும். இயற்கையா இருக்கும்.

ஓ அதுல இத்தனை விஷயம் இருக்கா. என்னமோ போங்க. எனக்கு கதை படிக்கறதே பிடிக்காது.

நல்லதா போச்சு நான் எத்தனை அதிர்ஷ்டம் செஞ்சவன் பாத்தியா என்ற தன் மனைவியை நக்கலடித்துக் கொண்டிருக்கும்போது அவன் கைபேசி ஒலித்தது. ஒரு புதிய எண். யாராவது மன்றத்து நண்பர்களாக இருக்குமோ என்று யோசித்தப்படி எடுத்து ஹலோ நான் மோகன். நீங்க என்றான்.

வணக்கம். மோஹன். நான் டாக்டர் ரதீஸன் பேசறேன். ஸைக்கியாட்ரிஸ்ட். என்னுடைய நண்பர் உங்களை பத்தி சொன்னாரு. இப்பத்தான் உங்களோட என் கைபிடித்தவன் நாவலை படிச்சி முடிச்சேன். நல்லா இருந்தது. இரண்டு பேரோட உணர்வுகள் ஈகோ பாதுகாப்பின்மை பத்தி நல்லா எழுதியிருக்கீங்க. எனக்கு உங்களால ஒரு உதவி ஆகனும்.

சொல்லுங்க டாக்டர் என்னால முடிஞ்சா செய்யறேன் என்றான் மோகன்.

நாளைக்கு மத்யானம் என்னை வந்து பாக்க முடியுமா.

கஷ்டம் டாக்டர். எங்க ஆபீஸ்ல டைம் அண்ட் அட்டென்டன்ஸ் ரொம்ப ஸ்டிரிக்ட். நாளைக்கு சாயந்திரம்?

சரி. வாங்க. இதான் என்னுடைய அட்ரெஸ். நன்றி.

நன்றி டாக்டர் என்று போனை துண்டிக்கும் போது அவனுடைய எழுத்தாளன் மூளை வேகமாக யோசிக்க ஆரம்பித்தது. தலை கால் இல்லாமல் ஒருவர் திடீரென்று உதவி என்கிறார். என்னவாக இருக்கும்.

யாருங்க போன்ல.

யாரோ டாக்டர் ரதீஸனாம். பேர் கேள்விபட்ட மாதிரி இருக்கு. ஏதோ உதவி வேணும்னு சொல்றார்.

அப்படியா. என்ன உதவி.

நாளைக்கு போய்தான் பாக்கனும் என்று யோசனையுடன் இஸ்னிப்ஸ் தளத்தில் அப்லோட் எனும் கோப்பு தரவேற்ற பொத்தானை அமுக்கிவிட்டு கணினியை மூடினான்.

தொடரும்.....
 
6

author_caricature.gif


மோகன் அலுவலகத்திலிருந்து ரதீஸனை பார்க்க விரைந்தான்.

இவனுக்காகவே அவர் காத்திருந்தது போல இவன் நுழைந்ததுமே அவர் கதை திறந்துக் கொண்டு வரவேற்றார். உள்ள அழைத்துச் சென்ற அவனை

அமரச் செய்தார்.

என்ன சாப்பிடறீங்க.

காபி வித் மில்க் அண்ட் ஷூகர்.

ஓ காபி பிரியரா நீங்க என்று தொலைபேசியை எடுத்த ஒரு எண்ணை தட்டி கமலா கெஸ்ட். ஒரு காபி என்று சொல்லி வைத்தார்.

மோகன் அவர் அறையை சுற்றிப்பார்த்தான். பிரபல மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை அறை என்று சொல்ல அனைத்த விஷயங்களும் இருந்தது.

அவருடைய மேசையில் இவன் எழுதிய என் கைபிடித்தவன் புத்தகம் கணினி பிரிண்ட் அவுட்டாக காட்சியளித்தது.

அவன் கண் போன திசையை பார்த்த அவர். ஹா ஹா, எனக்கு கம்ப்யூட்டரில் படிக்கும் பழக்கம் இல்லை. அதனால என் நண்பர் பிரிண்ட் பண்ணிக்

கொடுத்துட்டார். ரொம்ப நல்லா இருந்தது. இப்ப உங்களோட இன்னொரு நாவலையும் படிச்சிட்டு இருக்கேன்.

நன்றி டாக்டர். உங்களை மாதிரி வாசகர் கிடைக்கிறது எனக்கு பெருமையா இருக்கு. நான் ஏதோ விளையாட்டா இணையத்துல எழுதறேன்.

ஓ. இல்லை இல்லை. நல்ல முயற்சி தான். நீங்க இதை பப்ளிஷ் பண்ண முயற்சி பண்ணலையா.

இல்லை டாக்டர். இணையத்துல எழுதறது ஒரு சுகமான அனுபவம். உடனடியா படிச்சு மக்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லிடறாங்க. சில பேர்

இமெயில் எழுதறாங்க. இப்ப இணையத்துல வெளியிடறது ரொம்பவும் சுலபம். தமிழ் ஃபாண்ட்ஸ் நிறை வந்திருக்கு. தமிழ் தளங்களும் அதிகரிச்சிகிட்டு

இருக்கு. இணையத்துல ஒரு ஆயிரம் பேர் படிக்கறது புத்தகமா வந்த பத்தாயிரம் பேர் படிக்கறதுக்கு சமம். ஏன்னா முன்னாடி மாதிரி போஸ்ட் கார்ட்

வாங்கி எழுத்தாளருக்கு பாராட்டு எழுதவோ கிரிடிஸைஸ் பண்ணவோ மக்கள் கிட்ட நேரம் இல்லை. எல்லாம் டிவி வந்ததாலே. இட் ஹாஸ் ஈட்டன்

அப் தேயர் டைம் என்றான்.

ஆமா. நீங்க சொல்றது சரிதான்.

சொல்லுங்க டாக்டர் என்னால உங்களுக்கு என்ன உதவி ஆகனும்.

எங்க தொழில்ல பொதுவாக எங்களோட நோயாளிகளை பத்தி வெளியே பேசறது இல்லை. ஏன்னா அது ஒருத்தரோட இமேஜ் பாதிக்கும். ஆனா சில

நேரத்தில நோயாளியோட பிரச்சனைகளை பத்தி வேற தொழில்ல இருக்கற சில நிபுணர்களோட நாங்க பேசறது வழக்கம். எங்களோட தொழிலே

மக்களை எத்தனை நல்லா புரிஞ்சிகிட்டு இருக்கோங்கறதுல தான் இருக்க. மருத்துவம் ஒரு பகுதி தான்.

சொல்லுங்க டாக்டர் என்று ஆர்வமாக கேட்டான் மோகன்.

மோஹன், இப்ப என்னோட நோயாளியை பத்தி உங்களுக்கு எல்லா உண்மைகளையும் சொல்றேன். நீங்க அதை ரகசியமா வைச்சிருக்கனும். அவர்

பெயர் கதிரவன் என்று துவங்கி அவன் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளையும் சொல்லி முடித்தார்.

சார் இது ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஹா ஹா. அடுத்த கதையில பயன்படுத்திக்கலாம்னு என் மூளை சொல்லுது.

பாத்தீங்களா இது தான் உங்களை மாதிரி எழுத்தாளர்களோட பிரச்சனையே. எல்லா விஷயங்களுக்கு உங்களுக்கு கதைக்கு ஒரு கரு தான். இல்லையா.

ஓ. சார் நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க. சும்மா தமாஷூக்கு சொன்னேன் என்றான் சற்றே மன்னிப்பு கேட்டுக்கும் தோரணையில்.

ஹா ஹா. இல்லையில்லை. நானும் சும்மா தான் சொன்னேன்.

சார் இது மாதிரி நிச்சயமா நடக்குமா.

மோஹன், சில நேரத்துல நாங்களே எங்களோட நோயாளிகளை சந்தேகப்படறது உண்டு. காரணம், பல பேருக்கு டாக்டர் கிட்ட போறதும் ஒரு வியாதி

தான். சில பேருக்கு ரொம்ப சுத்தமா இருக்க நினைப்பாங்க. யாருக்கும் கை கொடுக்க மாட்டாங்க. கை கொடுத்தா கையை டெட்டால் போட்டு

கழுவிப்பாங்க. சில பேர் பல தடவை குளிப்பாங்க. பல தடவை பல்லு தேச்சிப்பாங்க. சில பேர வீட்டை பத்து தடவை சுத்தம் பண்ணுவாங்க. சில

பேருக்கு முனுக்குன்னா டாக்டர் கிட்டே போயிடுவாங்க. சில பேரு இல்லாத ஒன்னை கற்பனை பண்ணிக்கிட்டு அந்த வியாதி தனக்கும் வந்துட்டதா

நினைச்சிகிட்டு டாக்டர் கிட்டே போவாங்க. அதனால இது உண்மையா பொய்யான்னு சீக்கிரம் தெரியவந்துடும். ஆனா இந்த கேஸ்ல கயல்விழியோட

கருத்துக்களும் ரொம்ப அவசியம். அவங்க சொன்னதை வைச்சி இதை நிஜம்னு எடுத்துகிட்டு தான் குணம் செய்ய முயற்சி பண்ணணும்.

சரி டாக்டர் இந்த வியாதி விபரீதமாயிட்டா என்னவெல்லாம் நடக்கலாம்.

என்ன வேணுமானாலும் நடக்கலாம் மோஹன். இப்போதைக்கு இது வந்து வந்து போகுது. ஆனா சில நேரத்துல கதையின் பாத்திரங்களை மாத்திரம்

உணராமல் அந்த பாத்திரமாகவே மாறிட்டா பிரச்சனை அதிகமாயிடும். ஹிட்லரோட ஆட்டோபயோகிராபி மெய்ன் கெம்ப், கேள்விப்பட்டிருக்கீங்களா.

ஆமா டாக்டர். படிச்சிருக்கேன்.

அதை படிச்சிட்டு தான் தான் ஹிட்லர்னு நினைச்சிகிட்டு மீண்டும் கதிரவனாகவே மாறாம போயிட்டா அவரை நிரந்தரமா மன நோய்

மருத்துவமனையில் சேக்கறதை தவிர்த்து வேற வழியில்லை.

ஐய்யோ இன்னொரு ஹிட்லர் வேண்டாம் டாக்டர் நமக்கு.

ஓ. கவலை படாதீங்க. உங்க உதவி கிடைச்சா சீக்கிரம் அவரை குணப்படுத்திடலாம்.

சொல்லுங்க டாக்டர். என்ன வேணும்னாலும் செய்யத்தயாரா இருக்கேன். ஆனா நான் இருக்கறது ஐடி சிஸ்டம் இன்டக்ரேஷன் வேலை. சில நாள்

வேலையில்லாமல் இருக்கும். சில நாட்கள் வீட்டுக்கே போக முடியாது. அதை பொருத்து தான் என்னுடைய உதவியும்.

அது புரியுது.

சொல்லுங்க டாக்டர்.

நான் இப்ப இந்த பிரச்சனையை இரண்டு விதத்துல அணுகப்போறேன். ஒன்னு ஏற்கனவே முடிவு செஞ்சிட்டேன். அந்த முயற்சியை நாளைக்கு செய்யப்

போறேன். இன்னொன்னு உங்களோட முயற்சி செய்யனும். நீங்க என்னை பத்தி கதை எழுதனும்.

பயோகிராபி மாதிரியா.

ம்ம். இல்லை. என்ன மாதிரி ஒரு மனோதத்துவ நிபுணரோட வாழ்கை தொழில் பத்தி எழுதனும். நான் சந்திச்ச வித்தியாசமான கேஸூகளும் அதுக்கு

நான் தந்த தீர்வுகளும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்றேன். அதை கதையா எழுதனும். ஒவ்வொரு அத்யாயமா எனக்கு தரனும்.

முடியுமா.

ஓ தாராளமா சார்.

சரி நாம அடுத்த வாரம் சந்திப்போம். நான் சொல்ல சொல்ல நீங்க எனக்கு எழுதிக் கொடுங்க. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.

வணக்கம் டாக்டர் என்று சொல்லி யோசனையுடன் எழுந்தான் மோகன்.

தொடரும்....
 
அடடே... நம்ம மோகனும் கதைக்குள்ள வந்துட்டாரே...
சுவாரசியமும் எதிர்பார்ப்பும் அதிகரிதுக் கொண்டே...
 
கதையில் உபயோகப்படுத்தும் வழக்கு தமிழ் மற்றும் சுத்த தமிழைப் பற்றி சொன்னது மிக மிக சரி.

கதை அழகாகப் போகிறது. கதிரவனைக் குணப்படுத்த மருத்துவர் தேர்ந்தெடுத்திருக்கும் முறை வித்தியாசமாக இருக்கிறது. எப்படி குணப்படுத்தப் போகிறார் என்று அறிய ஆவல் கூடுகிறது.

தொடருங்கள் மோகன்.
 
கடந்து செல்லும் போது மழைத்தூவலைப் போட்டு தன் தடங்களைப் பதிக்கும் மேகம் போல போற போக்கில் கருத்துகளை தூவி தடம் பதித்துச் செல்கிறது கதை. கதையில் வளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது. தெரிந்த பாதையும் தெரியாத பாதையுமாக சுவாரசியம் கூட்டும் கதையுடன் பயணிக்க ஆவலுடன் காத்திருக்கேன் இளைப்பாறியபடி.
 
7
மருத்துவர் ரதீஸனின் சோதனைக்கு நான் பலியான கதை சொல்லியே ஆக வேண்டும். பல பிரச்சனைகளை சந்தித்தபின்னும் நான் குணா கமல் குண்டக்க மண்டக்க பார்த்தீபன் அந்நியன் விக்ரம் என்று என் காதுபட பட்டப் பெயர்களை சூட்டி மகிழ்ந்தவர்கள் ஒரு புறம் இருக்க நானாக போய் ஏதாவது படிக்கப் போய் மாட்டிக் கொண்டு நண்பர்களிடமும் உறவினர்களிடமும் திட்டும் வாங்கிக் கொண்டிருக்க, எதுவுமே வேண்டாமடா என்று எதையும் படிக்காமல் சில நாட்கள் நிம்மதியாக இருக்கும் நேரத்தில் ஒரு புத்தகத்தை கொடுத்து அதை நான் படிக்க வேண்டும் என்றும் அவர் என்னையும் என்னில் ஏற்படும் மாற்றத்தையும் கூர்ந்து கவனிக்க அவருடைய விருந்தனர் அறையிலேயே என்னை தங்கவும் சொல்லியிருந்தார்.

நோயிலிருந்து முற்றிலும் விட பட வேண்டும் என்ற எண்ணம் ஒரு புறமும் மறுபுறம் என்னை பார்த்த தினமும் வருந்தும் பெற்றோர்களுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறமும் என்னை உந்தித் தள்ளியது. அவர்களுக்கு வந்திருப்பதும் ஒரு நோய் தான். மகனாக நான் பிறந்த நோய். இந்த இரண்டு நோய்களும் குணமாகி மறுபடியும் என்னை தாழந்து பார்த்தவர்களை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும் என்ற வெறி உருவாகியிருந்த்து. அதனால் ரதீஸன் சொல்லும் எந்த சோதனைக்கும் நான் தயாராக இருந்தேன்.

அவர் கொடுத்த புத்தகத்தை படித்ததால் வந்த வினை இதோ.
---
தோலில் ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு ஒருவன் என்னை நோக்கி நடந்து வந்தான். வணக்கம் வக்கீல் சார்.

வணக்கம்.

உங்க பேரு.

நான் வக்கீல் சீனிவாசன். என்ன பிரச்சனை சொல்லுங்க என்று கையில் இருந்த கருப்பு அங்கியை சரி செய்துக் கொண்டே கேட்டேன்.

சார் தெருவிலே விளையாடிக்கிட்டு இருந்த ஒரு கொழந்தையை என் தம்பி பைக் ஏத்தி கொன்னுட்டான்.

அடப் பாவமே.

அதுக்கு அந்த தெருவில இருந்த எல்லாரும் சேர்ந்து என் தம்பியை அடிச்சு துவைச்சிட்டாங்க. அவன் இப்ப ஆஸ்பத்திரியில் இருக்கான்.

ஐய்யோ. அடி பலமா.

இல்லை சார். கண்ணு முழுச்சிகிட்டான். ஆனா இப்ப அந்த கொழந்தையோட அப்பா என் பையன் மேல கேஸ் போட்டுருக்காரு. நீங்க தான் ஏதாவது செஞ்சி அவனை காப்பாத்தனும்.

ஓ. அப்படியா. விபரங்களை கொடுங்க. கேஸை எடுத்துக்கலாம்.
இப்படி நான் பேசிக் கொண்டிருக்கும் போது இரண்டு காவல் அதிகாரி என்னை நோக்கி வந்தார்கள்.

யெஸ் இன்ஸ்பெக்டர். என்ன வேணும்.

கொஞ்சம் தனியா வரீங்களா என்று என் தோளை அமுக்கி ஒரு ஓரத்திற்கு அழைத்து சென்றார் அந்த இருவரில் ஒருவர்.

சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.

நீங்க எந்த வருஷம் சட்டம் முடிச்சீங்க.

வருஷம்....

நீங்க பார் அஸோசியேஷன்ல மெம்பரா

ம்ம்.

எத்தனை வருஷமா லா ப்ராக்டீஸ் பண்றீங்க.

நீங்க எதுக்கு கேட்கறீங்க இதெல்லாம்.

சார் நீங்க லாயரே இல்லைன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு.

என்ன விளையாடறீங்களா. நான் லாயர் சீனிவாசன். மெட்ராஸ்ல பெரிய வக்கீல். யாரை வேணாலும் கேட்டுப்பாருங்க.

உங்க சர்டிபிகேட்ஸ் காட்டறீங்களா. வாங்க உங்க வீட்டுக்கு போகலாம் என்று என்னை இழுக்காத குறையாக இழுந்து சென்று ஹயூண்டையில் ஏற்றினார். சில நிமிடங்களில் என் வீடு என்று சொல்லி எங்கோ அழைத்துச் சென்றனர்.

வீட்டில் ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் ஒரு இள வயது பெண்ணும் தென்பட்டனர். அந்த அம்மா என்னை ஓடி வந்து கதிரு இப்ப என்னடா செஞ்சித் தொலைச்சே ஏன்டா போலீஸ் வந்திருக்கு என்ற அழுதுக் கொண்டே வந்து என்னை கட்டிக் கொண்டார்.

யாரு கதிரு என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அந்த காவல்
அதிகாரி, அம்மா இவங்க உங்க பையனா.

ஆமாம் சார்.

என்ன படிச்சிருக்காரு.

எம் எஸ் சி மைக்ரோ பயாலஜி என்று அந்த இளம் பெண் பதிலளித்தாள்.

நீங்க யாரு.

சார் என் பேரு கயல்விழி. இவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.

அம்மா, இவரு மைக்ரோ பயாலஜி படிச்சிருக்காருன்னு சொல்றீங்க. இவங்க கதிருன்னு சொல்லி கூப்பிட்டாங்க. இவரோ வக்கீல் சீனிவாசன்னு சொல்லிகிட்டு கோர்ட்ல கேஸெல்லாம் எடுத்துகிட்டு இருக்காரு. என்னம்மா பிரச்சனையெல்லாம்.

சார் என்று அந்த பெண் கயல்விழி ஏதோ சொல்ல முயலும் போது வெள்ளை நிற மாருதி சட்டென்று வந்து நிற்க அதிலிருந்து அறுபது வயது கொண்ட ஒருவர் வந்திருங்கினார்.

காவல் அதிகாரியை பார்த்து கையசைத்தார். என்னை வைத்து அந்த குடும்பத்தை அலசிக் கொண்டிருந்து இரண்டு காவல் அதிகாரிகளும் சட்டென்று அங்கிருந்து விலகினர்.

அந்த அறுபது வயது பெரியவர் கையிலிருந்த பெட்டியை எடுத்து ஒரு ஊசியை எடுத்து என் கைகளில் செலுத்தினார். மெதுவாக கண்கள் இறுக்க நான் மயங்கி விழுந்தேன்.

தொடரும்...
 
8

மோகன் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான். இது அவனுக்கு புதிய வேலை. ஒருவர் கதை சொல்லி அதை எழுதுவது. கதை எழுதுவது என்பது ஒரு கைதேர்ந்த மருத்துவர் செய்யும் அறுவை சிகிச்சை போன்றது. மருத்துவருக்கு அனைத்து அத்தியாயங்களும் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும். சிகிச்சை ஆரம்பித்த பிறகு நடுவில் இதயத்தை அறுப்பதை நிறுத்திவிட்டு யோசிக்க முடியாது. அல்லது கடைசியில் எப்படி முடிக்கப் போகிறோம் என்று நடுவில் திணற முடியாது.

கதையாசிரியருக்கும் அதே நிலைமை தான். ஒரு வரி கதை கொண்டு எழுது ஆரம்பிப்பது என்பது வியாபார ரீதியாக எழுத தான் முடியும். மாதம் ஒரு முறை பாக்கெட் நாவல் எழுதுவது இந்த ரகம். Quantity இருக்கும் Quality இருக்காது. அது போலவே எழுதுவதை தொழிலாக கொண்டு எழுதுபவர்களும். இந்த பிரசுரத்திற்கு எழுதி தரவேண்டும் அந்த பிரசுரத்திற்கு எழுதி தர வேண்டும். எதை எழுதினாலும் படிப்பார்கள். எதை எழுதினாலும் வெளியிட்டு விடுவார்கள். ஒரு தடவை பெயர் கிடைத்த பிறகு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அல்லது நாமே வெளியிடும் போது தரம் நாம் சொல்லும் தரம் தான். இப்படி பல விதங்கள்.

தொலைகாட்சி தொடர்கள் எப்போதும் இந்த ரகத்தை சேர்ந்தவை. கதை எப்படி வேண்டுமானாலும் மாறிக் கொண்டே போகும். மக்கள் மத்தியில் பெயர் கிடைத்துவிட்டதென்றால் இன்னும் கொஞ்சம் இழுக்கலாமே என்று இயக்குனர் சொல்ல கதையாசிரியர் பேனாவில் மை நிரப்ப ஆரம்பித்துவிடுவார். பிறகு தயாரிப்பாளர் விளம்பரதாரருடன் TRP rating வைத்து வியாபாரம் செய்ய துவங்குவார்.

மோகன் எழுதும் இந்த கதைக்கு பிரசுரகர்த்தா தேவையில்லை. அச்சு வேலை இல்லை. ஏனென்றால் இதற்கு ஒரே ஒரு வாசகன் தான். கதிர் எனும் கதிரவன். அவனும் படித்து கருத்திடப் போவதில்லை. படிப்பவனுக்கு இதை எழுதியது மோகன் எனும் எழுத்தாளன் என்று தெரியப்போகிறதா என்பதும் தெளிவில்லை.

இது ஒரு மருந்து. முதல் முறையாக மருந்து தயாரிப்பில் ஒரு பகுதி நேர எழுத்தாளன். இணையத்தால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வளரும் ஒரு எழுத்தாளன். இவனுக்கு இவனுடைய கதைகள் அச்சில் ஏறி பார்த்து பழக்கம் இல்லை. அதனால் image எனும் தொல்லையும் இல்லை. விரும்பியதை எழுதுவான். படித்தால் படிப்பார்கள். படித்தவர்கள் கருத்திட்டால் இடுவார்கள். இல்லையென்றால் இல்லை.

ஆனால் இங்கு இவனுக்கு ஒரு பிரச்சனை. கதை அத்தியாயம் ஒவ்வொன்றாக எழுத வேண்டும். முடிவு என்ன என்று இவனுக்கே தெரியாது. இது ஒரு வரி கதையின் கருவை விட மோசம். இதற்கு முன் இவன் மனதில் தோன்றிய பல கருக்கள் கதையாகாமலேயே மறைந்துவிட்டிருந்தது. காரணம் இதை எங்கோ படித்தது போல் இருக்கிறது, இது ஒரு ஆங்கிலப் படத்தில் வந்த கதை மாதிரி இருக்கிறதே இதுபோலவே முன்னொரு முறை ஒருவர் எழுதியிருக்கிறாரே என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்று ஒரு பயம் தான். இதனாலேயே பல ஆண்டுகளாக கதைகள் படிப்பதை நிறுத்திவிட்டிருந்தான். சில பிரபல எழுத்தாளர்களின் கதைகளை பற்றி பிறர் பேசுவதையும் கேட்பதை தவிர்ப்பான். பாதிப்பு எந்த வகையில் படிப்பவர்கள் மீது ஏற்படுகிறதோ அதே பாதிப்பு எழுதவர்கள் மீதும். எழுதுபவர்களே வாசகர்களாக மாறும் போது இந்த தாக்கம் அதிகம். காரணம் இப்படி எழுதுவாரோ அப்படி எழுதுவாரோ என்று கதையின் போக்கை அறியும் ஆவல் எழுத்தாளர்களுக்கு அதிகம்.

முடிவு தெரியாமல் கதை எழுத மோகன் தயாராக இல்லை. முழுவதும் கேட்ட பிறகு எழுதுகிறேன் என்று சொன்னால் டாக்டர் ரதீஸன் அதற்கு தயாராக இல்லை.

நடு நடுவில் டாக்டர் இப்படி எழுதினால் என்ன என்று ஆர்வக் கோளாறில் கேட்கப்போக மோஹன், நான் சொன்னதை மட்டும் எழுதுங்க. இது நீங்க எழுதற கதையில்லை. நான் சொல்லி நீங்க எழுதற கதை. நான் டாக்டர் வேலையை செய்யறேன் நீங்க எழுத்தாளர் வேலையை செய்யுங்க என்றார்.

டக்கென்று மோகனின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து, தப்பா நினைச்சிக்காதீங்க மோஹன், கதை எழுதறது ஒரு அறுவை சிகிச்சை செய்யற மாதிரி என்று துவங்கி மேல் சொன்ன லெக்சரை மீண்டும் சொன்னார். எனக்கு மட்டும் தான் கதையோட முடிவு தெரியனும். அப்பத்தான் நான் செய்யற ட்ரீட்மெண்ட் சரியா வரும். தயவு செஞ்சி இதை சென்சேஷனலைஸ் பண்ணிடாதீங்க. காரியம் கெட்டுப்போயிடும் என்று பொறுமையாக சொன்னார்.

புரியுது டாக்டர். நீங்க மேலே சொல்லுங்க என்றான் மோகன் முற்றிலும் தெளிந்தவனாக.

தன்னுடைய வாழ்கையில் அவருடைய ஆரம்ப காலம் முதல், படித்தது, பட்டம் பெற்றது, முதல் நோயாளியை அவர் பரிசோதனை செய்தது என்று மெல்ல ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டும் லாவகத்துடன் தன்னுடைய அனுபவங்களை சொல்லி வந்தார்.

ஓ ஒருவேளை கதை எழுதுவது ஒரு கட்டிட கலைஞனின் வேலை போன்றதோ. நல்ல பலமான அடித்தளம் அமைத்து மெதுவாக தளங்களை அமைத்து பிறகு கடைசியில் வெள்ளையடித்து அலங்காரம் செய்து இதோ தயார் என்று சொல்லும் வேலை போலத்தானோ என்று அவன் மனதில் தனியாக ஒரு பாதையில் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. அதிலிருந்து சட்டென்று மீண்டு மீண்டும் அவருடன் இணைந்தான் மோகன்.

அவருடைய செல்பேசி ஒலித்தது. என்ன என்றார் சற்றே பதட்டத்துடன். என்ன தான் எதற்கும் பதற்றம் கூடாது என்று அறிவுரை செய்யும் மனோதத்துவ நிபுணராக இருந்தாலும் மனித நேயம் உள்ளிருந்து தலைகாட்டியது.

மோஹன், கதிரை காணோம். என்னோட கொஞ்சம் வர முடியுமா என்றார்.

ஞாயித்து கிழமையும் வெளியே போயிட்டா நான் என்ன செய்யறது என்று தன் மனைவியின் குரலை நாடா இல்லாமலே ஒலி பெருக்கி மூலம் கேட்டது போல் இருந்தாலும் அதை ஒடுக்கிவிட்டு சரி டாக்டர் என்று சொல்லி தன் நீல நிற மாருதி 800ஐ நோக்கி ஓடினான். அவர் காரை சுற்றி வந்து ஏறி அமர்ந்தார்.

தொடரும்...
 
மிக அருமை மோகன். கதிரின் நிலையில் இருந்து படிப்பதால் படிப்பவர்களும் சற்றே கதிரை போல் சிந்திக்க தொடருகிறது. இது உங்கள் கதைக்கு கிடைத்த வெற்றி எனவும் கருதலாம். பாராட்டுக்கள். தொடருங்கள்!
 
புரியுது டாக்டர். நீங்க மேலே சொல்லுங்க என்றான் மோகன் முற்றிலும் தெளிந்தவனாக.
ஆமாம். எனக்கும் கதை இப்போதுதான் தெளிவாகப்புரிந்தது. இடையிடையே வரும் மனைவி கேரக்டர் தான் கதையை ஜாலியாக்குகிறார். அறுவைச் சிகிச்சை= கதை = கட்டிடம் உங்கள் ஒப்பீடு சரி தான் எனினும் கதைக்கு சீக்கிரம் வாருங்கள். கதை சுவாரசியமாகச் செல்கிறது மோகன். அடுத்த பாகம் எங்கே? (இந்தக்கேள்வியை உங்களிடம் கேட்கவேண்டுமா? இல்லை மருத்துவரிடமா??)
 
மிக அருமை மோகன். கதிரின் நிலையில் இருந்து படிப்பதால் படிப்பவர்களும் சற்றே கதிரை போல் சிந்திக்க தொடருகிறது. இது உங்கள் கதைக்கு கிடைத்த வெற்றி எனவும் கருதலாம். பாராட்டுக்கள். தொடருங்கள்!

நன்றி ராஜேஷ் அவர்களே.
 
Back
Top