என் வாழ்க்கைப் பாதையில் - நான்
நானாக நடக்கின்றேன்
பாதை முழுக்க
நெருஞ்சி முட்கள்
என் பாதங்களைப்
பதம் பார்க்கின்றன
சில நெருஞ்சிகள்
என் நெஞ்சத்தையே
காயப்படுத்துகின்றன-ஆனாலும்
இலக்கை நோக்கி
நடக்கின்றேன்.
என் வாழ்க்கைப் பாதையில்
நான்
உண்ணவேண்டும் என்பதுக்காக
இன்னொரு மனிதன்
பசியால் வாடவேண்டாம்
நான்
உறங்கவேண்டும் என்பதனால்
இன்னொரு மாந்தன்
விழித்திருக்க வேண்டாம்
எனது
செல்வச் செழிப்புக்காக
இன்னொருவன் வறுமையில்
வாட வேண்டாம்
நான்
சிரிப்பதுக்காக
இன்னொருவன் அழுகை
கேட்கவேண்டாம்
நான்
வாழ்வதுக்காக
இன்னொரு உயிர்
போக வேண்டாம்
வாழ்க்கைப் பயணத்தில்
இலக்கை அடையமுன்னர்
காயம்பட்டு வீழ்ந்தவனை
கடைசிவரை பாசத்தோடு
அணைத்துச்செல்வோம்.
Bookmarks