ஒரு பெண்ணைக் கடத்திய குற்றத்திற்காக ஜொள்ளு வாத்தியார், நீதி மன்றத்தில், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் ஜொள்ளு வாத்தியாரை குறுக்கு விசாரணை செய்தார்.
"உமது பெயர்?"
"ஜொள்ளு வாத்தியார்"
" எனது கட்சிக்காரர் கந்தனுடைய மனைவியை நீர் கடத்திக்கொண்டுபோய் வைத்திருப்பதாக புகார் வந்துள்ளது. இது உண்மையா?"
"அப்பட்டமான பொய். கந்தனுடைய மனைவியை நான் பார்த்தது கூடக் கிடையாது."
"அப்படியானால் கந்தனுடைய மனைவிக்கு ஒரு கால் ஊனம் என்பது உமக்கு எப்படித் தெரியும்?"
"" ஐயா காலையில் நான் வாக்கிங் போவது வழக்கம்; சம்பவ தினத்தன்று நான் வாக்கிங் போய்க்கொண்டு இருந்தபொழுது, எதிர்த்திசையில் இருந்து கந்தன் வந்து கொண்டிருந்தான். அவன் எதையோ பறிகொடுத்துவிட்டு தேடுவது போல இருந்தது. நான் அவனிடம், "ஐயா! என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டேன்.
அதற்கு அவன்," என் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டாள்; அவளைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்" என்று பதில் சொன்னான்.
உடனே நான் கந்தனிடம்," ஐயா! உமது மனைவிக்கு ஒரு கால் ஊனமா?" என்று கேட்டேன்.
"ஆம் ஐயா! எப்படி சரியாகச் சொன்னீர்கள்?" என்று கந்தன் கேட்டான்.
"இரவில் லேசாக மழை பெய்து இருக்கிறது; காலை நேரமாதலால் வேறு காலடித் தடங்கள் உண்டாகவில்லை;இரண்டே இரண்டு காலடித் தடங்கள் மட்டும் இருக்கின்றன; அவற்றில் ஒன்று மண்ணில் சரியாகப் பதியவில்லை; எனவேதான் உன் மனைவிக்கு ஒரு கால் ஊனம் என்ற முடிவுக்கு வந்தேன்" என்று கந்தனிடம் சொன்னேன்.
உடனே வழக்கறிஞர் ஜொள்ளு வாத்தியாரைப் பார்த்து,"அது சரி; கந்தனின் மனைவி நொறுக்குத் தீனி தின்னும் பழக்கம் உள்ளவர் என்பது உமக்கு எப்படித் தெரியும்?"
" ஐயா! வழி நெடுகிலும் கடலைக்காய் பொட்டு இறைந்து கிடந்தது; அதை வைத்து கந்தனின் மனைவிக்கு நொறுக்குத் தீனி தின்னும் பழக்கம் உண்டு என்பதைக் கண்டறிந்தேன்"
" கனம் நீதிபதி அவர்களே! கந்தனின் மனைவி கடைசியாக ஜொள்ளு வாத்தியார் வீட்டுக்குத்தான் சென்றிருக்கிறார் என்பதை போலீசார் எடுத்த இந்தப் புகைப்படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்; கந்தன் மனைவியின் காலடித் தடங்கள் ஜொள்ளு வாத்தியார் வீட்டை நோக்கிச் சென்றிருப்பதைப் படம் தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே கந்தனின் மனைவி ஜொள்ளுவாத்தியார் வீட்டில்தான் இருக்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை; கனம் நீதிபதி அவர்கள் இந்தப் புகைப்படத்தைப் பார்வையிட வேண்டுகிறேன்" என்று சொல்லி அரசு வழக்கறிஞர் ஒரு புகைப்படத்தை நீதிபதியிடம் கொடுத்தார்.
சிறிதுநேரம் புகைப்படத்தைப் பார்த்த நீதிபதி, ஜொள்ளுவாத்தியாரைப் பார்த்து,"ஐயா! இதற்குத் தாங்கள் கூறும் விளக்கம் என்ன?"
உடனே ஜொள்ளுவாத்தியார் நீதிபதியைப் பார்த்து,"ஐயா! கந்தன் மனைவி என் வீட்டிற்கு வந்தது உண்மைதான். கடலைக்காய் சாப்பிட்ட காரணத்தால் அவருக்குத் தாகம் எடுத்திருந்தது. எனவே என் வீட்டிற்கு வந்து குடிப்பதற்கு நீர் கேட்டார். நானும் கொடுத்தேன். நீர் அருந்திவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார். அவர் வெளியே சென்றதற்கான காலடித் தடங்கள் புகைப்படத்தில் இருப்பதைக் கனம் நீதிபதி அவர்களைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"
உடனே நீதிபதி, அரசு வழக்கறிஞரைப் பார்த்து," மிஸ்டர் பப்ளிக் பிராஸிகியுட்டர்!ஜொள்ளுவாத்தியார் சொன்னதுபோல இந்தப் புகைப்படத்தில் கந்தனின் மனைவி வெளியே சென்றதற்கான காலடித் தடங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன.ஆகவே ஜொள்ளுவாத்தியார் வீட்டில்தான் கந்தனின் மனைவி இருக்கிறார் என்று தாங்கள் கூறுவதை ஏற்கமுடியாது."
" கனம் நீதிபதி அவர்களே! வெளியேறும் காலடித் தடங்கள் மிகவும் தெளிவாக இருப்பதால்தான் ஜொள்ளுவாத்தியார் மீது சந்தேகம் ஏற்படுகிறது. கந்தனின் மனைவிக்கு ஒரு கால், அதாவது வலதுகால் ஊனம். ஜொள்ளுவாத்தியாரின் வீட்டுக்கு உள்ளே செல்லும் காலடிகளில் வலதுகால் செருப்பு சரியாகப் பதியவில்லை. ஆனால் வெளியே செல்லும் காலடிகளில் வலதுகால் செருப்பு சரியாகப் பதிந்துள்ளது. எனவே கந்தனின் மனைவியை வீட்டின் உள்ளே உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு, அவருடைய காலணியைக் கொண்டு ஜொள்ளுவாத்தியார் ஏற்படுத்திய செயற்கை காலடித்தடங்கள் அவை என்பதை இந்த நீதி மன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகள் சிலர் அவசரத்தில் செய்யும் தவறுகளே அவர்களைக் காட்டிக்கொடுத்து விடுகின்றன. இதற்கு ஜொள்ளுவாத்தியாரும் விதிவிலக்கல்ல. ஆகவே ஜொள்ளுவாத்தியாருக்குக் கடுமையான தண்டனை வழங்கும்படி கனம் நீதிபதி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்."
தப்பிக்க வழியேதும் இல்லை என்பதை அறிந்த ஜொள்ளுவாத்தியார் தன் குற்றத்தை ஒத்துக்கொண்டு தண்டனையை ஏற்கத் தயாரானார்.
Bookmarks