இரக்கத்தின் விலை நூறு ரூபாய்
அய்யா, அம்மா இரக்கம் உள்ள பெரியவங்களே ... இந்த ஈனப்பிறவிக்கு நேர்ந்த கொடுமைய கேட்டு உங்க நெஞ்சில ஏதோ ஒரு மூலையில் இரக்கம் கசிஞ்சா இந்த கொழந்த பொழைக்க நாலு காசு கொடுத்து உதவுங்க சாமி .... இரக்கம் இல்லாம இந்த சாமி என்ன நடுத்தெருவில விட்டு போயிட்டானே ... இந்த பச்சை கொளந்தையை வச்சிக்கிட்டு பாலுக்கு வழி இல்லாம திரியுரேனே .... உங்க குழந்த குட்டி எல்லாம் நல்லா இருக்கும் தரும பிரபுவே காசு கொடுத்து உதவுங்க சாமி .... நொடிக்கொருதரம் மாராப்பில் முகம் புதைத்து இருந்த குழந்தையை ஒரு கையால் அள்ளிக்கொண்டபடி நெஞ்சோடு வைத்து ஆட்டிய படியே பிச்சை கேட்டு வந்தாள்.
அந்த பெண்ணின் குரல் ... காலையில் பணிக்கு கிளம்பி பேருந்தில் இருந்த அனைவரின் உள்ளதையும் உருக்கியது.
முன் வரிசையில் இருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியைகள் தங்கள் தாராள மனசை காட்டினார்கள்.
எந்த படுபாவி இப்படி ஏமாத்திட்டு போனானோ ... பாவம் இந்த புள்ள இப்படி பாடாபடுது ...
முன் சீட்டில் இருந்த வயசான ஆசிரியை பின்னால் இருந்த இளவட்டத்திடம் பேச்சு கொடுக்க ....
ஆமாம் ... ஊரெல்லாம் சாராயக்கடை சும்மா நாம ரோட்டில போனாலே நம்ம மேல விழுந்திட்டு போறானுங்க ... இந்த மாதிரி கொமரி புள்ளைங்க கிடச்சா விட்டா வப்பானுங்க .... இவனுங்க எல்லாத்தையும் நிக்க வச்சி .....
அவள் பேசி முடிக்க கொஞ்சம் உரசினால் போல இருந்த வாலிபன் விலகிகொண்டான். இதை பார்த்த அடுத்த இருக்கையில் இருந்த இரண்டு பெண்கள் வாய் விட்டு சிரிக்க அவன் பேருந்தை விட்டு இறங்கி வேடிக்கை பார்ப்பது போல வேறு பேருந்தில் ஏறிக்கொண்டான்.
இன்னும் சிலர் தங்கள் பையில் கிடைத்த சில்லறையில் ஒரு ரூபாயாக பார்த்து பொறுக்கி போட்டார்கள்.
பாவம் ஐம்பது காசு சில்லறை கிடைக்கவில்லை அவர்களுக்கு.
புத்தகத்துக்குள் தலையை புதைத்து வைத்து இருந்த ஒரு டிப்டாப் மனிதர் நிமிந்து பார்த்தார்.
கை கால் நல்லாத்தானே இருக்கு ... எதுக்கு பிச்சை எடுத்து பொழைக்கணும் .... இந்த நாடு உருப்படாமல் போறதுக்கு இவங்க எல்லாம் காரணம் இல்ல .... காசு போடுறீங்களே உங்கள சொல்லணும் .... பூமிக்கு பாரமா எதுக்குத்தான் பொறந்தாங்க்களோ ....
இதை கேட்டவுடன் ஞானோதயம் கிடைத்த இரண்டு பேர் அப்படியே சில்லறையை பைக்குள்ளேயே போட்டு விட்டு ... போ .. போ என்று ஜன்னலுக்கு வெளியே ரோட்டில் போய் கொண்டு இருந்த நாயை பார்த்தனர்.
சாமி கொடுத்ததை பூசாரி புடுங்கி தின்னமாதிரி என் பொளப்புல மண் அள்ளி போட எரும மாடுங்க வந்து எறிகுதுங்க .... டிப்டாப் காதில விழும்படியே அவள் பேசி விட்டு போனாள். இதை காதில் வாங்கியும் வாங்காதவராய் டிப்டாப் மீண்டும் புத்தகத்துக்குள் ஆழமாய் தலையை புதைத்து கொண்டார்.
இருக்கைகள் நிறைந்திருக்க நின்றவர்களில் சிலர் அவளை பார்த்து விலகி கொண்டார்கள், சிலர் அவளை வெறித்து பார்த்தனர். சிலர் அவள் தாண்டி செல்லும்போது உரசி பார்த்தனர். ஆனால் அவளோ காசை பெறுவதில் மட்டுமே குறியாய் இருந்தாள்.... அந்த குழந்தையின் கை மட்டும் அவள் மாராப்புக்கு வெளியே காற்றில் கை வீசி கொண்டு இருந்தது.
கடைசி வரிசையில் இரண்டு பிணை கைதிகளுடன் அமர்ந்து இருந்த காவலர்களும் தங்கள் பாட்டை புலம்பி கொண்டு இருந்தனர்.
எந்த ஆட்சி மாறினா என்னையா ? நம்ப பொழப்பு நாய் பொழப்புதான் ... ஒரு நல்ல நாள் .. பொல்லா நாள் கிடையாது ... லீவு கெடையாது ... சந்தோசம் கிடையாது ..... சல்யூட் அடிச்சே காலம் போகுது ... இந்த பன்னாடைங்க எல்லாம் பொறக்கலைன்னு யார் அழுதா ... அரிப்பெடுத்து விதைச்சு வுட்டுடுறாங்க ... சனியனுங்க வளர்ந்து வந்து நம்ப தாலிய அறுக்குதுங்க ... நாடியை சொரிந்து கொண்டு இருந்த கைதி தலையில் ஓங்கி ஒன்று போட்டார்.
யோவ் ... 205 அங்க பாரு ... ஒருவர் சொல்ல ...
மற்றவர் எத சொல்லுற ....என்று கேட்க
301 அந்த பிச்சைகாரியை காண்பித்தார் .
நன்றாக இருந்தால் அவளுக்கு ஒரு இருபது வயதுக்குள்தான் இருக்கும். மாநிறம் ... கொஞ்சம் லட்சணமான முகவெட்டு. கொஞ்சம் வர்ணம் மங்கி போனதாக இருந்த பாலிஸ்டர் சேலை ... ஏதோ வடக்கத்தி பெண்ணின் ஜாக்கேட்டாக இருக்கவேண்டும் ... கண்ணாடி ஜிமிக்கிகள் வைத்து கழுத்தும், முதுகும் மிக இறக்கமாக இருந்தது. கை நிறைய கண்ணாடி வளையல்கள்.......
யோவ் 301 காலம் போன காலத்துல இதெல்லாம் எதுக்குயா உனக்கு ....
யோவ் 205 அவ இடுப்ப பாருய்யா ....
இடுப்பை பார்த்தால் பிள்ளை பெற்றவளாகவே தெரியவில்லை. அவ்வளவு இளமை . 205 குழப்பத்துடன் 301 ன் முகத்தை பார்த்தார்.
யோவ் அந்த கொளந்தை கையை பாருயா ....
காற்றில் அந்த கை … ஈ மொய்க்க இங்கும் அங்குமாக வீசிக்கொண்டு இருந்தது.
ஏ புள்ள இங்க வா ... 301 ஓங்கி அதட்டு போட ... அவள் மிரண்டு பார்த்தாள்.
ஏனுங்க சாமி ... நான் யாரையும் தொந்தரவு பண்ணலைங்க ... அப்படியே எறங்கி போயடுறேங்க ... அவள் பின்னால் நடந்தாள்.
ஏ ...மருவாதியா இங்க வாறியா ... இல்ல பெல்ட்டால விலாசவா ....
அதற்குள் அவள் படிகளில் இறங்கி ஓடத் துவங்கினாள்.
யோவ் 205 இந்த களவாணி பயலுகளை பார்த்துக்கோ ... நான் அந்த சிறுக்கி மவளை புடுச்சிட்டு வாறன் .
பின் வாசல் வழியாக 301 விரட்டி கொண்டு ஓடினார் .
அவள் கூட்டத்தில் சிமெண்ட்டு தடுப்புகளை தாண்டி பிள்ளையுடன் ஓடிக்கொண்டு இருதாள்.
301 துரத்துவதை பார்த்து கூட்டத்தில் பலர் வேடிக்கை பார்த்தனர் ... சிலர் மிரண்டு போய் விலகி கொண்டார்கள்.
ஏலே ... தீவட்டிகளா அவள புடிங்களே ... 301 நடைபாதை வியாபாரிகளை பார்த்து கூவ ...
அவள் குழந்தையை கூட்டத்தின் மீது வீசி விட்டு ... மிதிவண்டி நிறுத்தும் இடத்தினுள் புகுந்து ஓடினாள்.
இரண்டு பக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மிதிவண்டிகள் சரிய அவளின் வேகம் தடைபட்டது.
பின்னால் ஓடி வந்தவனின் கையில் அவள் முந்தானை சிக்கியதும் .... புடவை சரிய .... அப்படியே குத்துக்காலிட்டு அமர்ந்தாள் .
வந்த வேகத்தில் 301 பூட்சுக்கால்களுடன் அவள் முகத்தில் மிதிக்க அவளின் வாயில் இருந்து ரத்தம் கொட்டத்துவங்கியது .
"அய்யா சாமி ... என்ன மன்னிச்சுடுங்க .... மன்னிச்சுடுங்க ..." அவரின் காலை பற்றிக்கொண்டு கதறினாள்.
கொத்தாக அவளின் முடியை பற்றிய 301 ...
“ ஏலே எருமைங்களா இப்ப என்னத்துக்கு கூட்டம் போடுறீங்க ... சுத்தி என்ன நடக்குதுன்னு பாக்காதீங்க ... வேடிக்கபாக்குறதுக்கு மட்டும் வந்துருங்க ...."
கூட்டத்தை விளக்கியபடி " எங்கடா அந்த கொளந்தை " என்று அதட்ட ...
அந்தா அந்த சுவத்துக்கு பக்கத்தில கிடக்கு சார் ... என்று சில பேர் கூற .... அவளை அப்படியே கொத்தாக அள்ளி போனார் 301 .
யாருதுடி இந்த கொளந்தை ... திருட்டு சிறுக்கி ... இப்படி ஒரு பொழப்பு பொழைக்குறதுக்கு நாண்டு கிட்டு சாவலாமே ... யாருதுடி கொளந்தை ... மீண்டும் பூட்ஸ்கால்கள் அவளை துவைக்க தொடங்கின.
அய்யா சாமி ... இது அநாதை சாமி .... அநாதை .... அரசாங்க ஆஸ்பத்திரியில எவளோ ஒருத்தி பெத்து போட்டு போய்டா ... அத நான் பிணக்கிடங்குல இருந்து காவக்காரனுக்கு நூறு ரூபாய் கொடுத்து
வாங்கிட்டு வந்தேன் சாமி .... சும்மா பிச்சை கேட்டா கொடுக்காத சனம் கைப்புள்ளயோட கேட்டா இரக்கப்பட்டு கை நிறைய கொடுக்குது சாமி ... காசு ஆசையில இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டேன் மன்னிச்சுடுங்க சாமி ....
301 தன் அலைபேசியில் இருந்து கட்டுப்பாட்டு அறையை அழைத்து கொண்டு இருந்தார்.
டேய் ... தம்பி இனிமே இங்க நின்னா சாட்சிக்கு நம்மளையும் கூப்புடுவானுங்க ... வா நடைய கட்டுவோம் என்று கூட்டத்தில் ஒருவர் கூற ... ஒருவர் பின் ஒருவராக கூட்டம் கலைந்தது.
அங்கே குழந்தை நீலம் பூத்து சுவர் ஓரத்தில் கிடந்தது. அதன் வறண்டு போய் கூம்பிய உதடுகள் , வற்றிப்போய் இருந்த கன்னத் திட்டுகள் .... சற்றே அரை கண் திறந்திருந்த விழிகள் கேட்டது கூட்டத்தை பார்த்து
" இன்னமும் இந்த உலகில் மனிதம் இருக்கிறதா" .
Bookmarks