என் பழைய சுவடுகளைத் தேடும் வேளையில் கையில் சிக்கிப் படபடத்தது ஒரு காகிதப்பூ..!
என் கனவும் நானும் உரையாற்றிக் கொண்டதன் உணர்வுக்குவியலை வார்த்தை கொண்டு வடித்து கவிதை(??) அல்லது உணர்வுப் பகிர்வு போல் நான் சில வருடம் முன் எழுதியதை திறந்து காட்டியது காகிதப்பூ..!
இது கவிதையா இல்லையா என்று முடிவெடுப்பது உங்கள கையில்..!
அதனை மன்றத்தோடு பகிர விரும்பி இங்கு பதிக்கிறேன்.
பழைய புலம்பல் - கனவு
நட்சத்திரமும் கண்சிமிட்டி
ஓய்ந்து நல்தூக்கம்
ஒல்கும் நல்லிரவு நேரம்..!
அன்றே வெளிவந்த
அழகுக் குருவிக்குஞ்சினைத்
தாய்க்குருவி
தழுவிக் கொடுக்கும்
கதகதப்பில் உறங்கும்
குருவியைப் போல..!
எத்தனையோ மலர்
தேடி சேகரித்த தேனைச்
சேமித்த சந்தோஷத்தில்
கண்மூடும்
தேனீ போல..!
நிறைய எதிர்பார்ப்புகளுடன்
ஆசைகளுடன்
நம்பிக்கைகளுடன்..
நிதர்சனங்களை
அசை போட்டபடியே
ஒவ்வொரு இரவும்
கண்மூடுகிறேன்..
புதிய உலகத்தில்..
பழகிய மனிதர்கள்..!
நிஜத்தில் நடவாதது
நிழலில்..!
சில சமயம்
சந்தோசமாய்..
ஏனோ
பல சமயம்..
பயமாய்..
துயரமாய்..
வலி உணர்ந்து
சட்டென எழுந்து
சுதாரித்துக் கொள்ளும்
தருணங்கள்..
கண்ணில்
மழை வந்து
பார்த்ததுண்டா...??
இதோ பலத்த
சுனாமி இதயத்தில்...
புயலோ கண்ணில்...
நெஞ்சம் சுடும்
நினைவுகள்..
அள்ளிக் கொட்ட
ஆளில்லை..!
தொட்டால் சுடுமென்ற
பயமோ..??
நினைவுகள்
கனவுகளாய்
துரத்தும்
ஆக்டோபஸ்களா??
ஒவ்வொருமுறையும்
ஒதுங்க முயன்றால்
ஒடித்து இழுக்கிறதே
எலும்பு வரை
அழுத்தி...!
நிறைய கனவு
காணுங்கள்..!
சொன்னது
அக்னிச் சிறகுகள்..!
கண்மூடி
கனவு மட்டுமே
கண்டு களிப்பது தான்
விதியா இல்லை
அது தான் மதியா??
கனவுகள்
துரத்தும்...!
துரத்தும் வரை
முயற்சி தொடரும்..!
முன்னேற்றத்திற்காய்...!!
Bookmarks