தற்செயலாகவோ, திட்டமிடப்பட்டோ
நிகழும் நிகழ்வுகளுக்கெல்லாம்
மூலகாரணமொன்று இருந்தேயாகவேண்டுமென்கிற
உன் தீவிர நம்பிக்கையை மறுதலிக்க
என்னிடம் காரணம் எதுவுமில்லை.
நீ பற்றிய மூலகாரணத்தின்
மூலாதாரம் பற்றி மட்டுமே
பிசிர் தட்டிய பேதலிப்புகள் என்னிடம்!
காரணங்களைக் கண்டறிவதைக் கைவிட்டு
நீயாகவே அர்த்தமற்ற யூகங்களை விதைக்கிறாய்!
முன்னதினும் பின்னது வெகு எளிதாய்
கைவருகிறது உனக்கு!
விதைத்த யூகங்களுக்கு
உன் விவேகமற்ற விவரணைகளை
ஊட்டி ஊட்டி விருட்சமாக்குகிறாய்!
ஆணித்தரமான நம்பிக்கையோடு
ஆலமரமென கிளைத்து வளர்ந்து
தன்னை நிலைநிறுத்த முயலும் வேளையில்....
பரிதவிப்புடன் எடுத்தியம்பப்படும்
பலதரப்பட்ட நிதர்சனங்களை
பரிசீலிக்கவும் நீ தயாராயில்லை.
தாறுமாறாய்ப் பயணிக்கும்
உன் மனதின் தறிகெட்டப் போக்கைத்
திசை திருப்பும் முயற்சிகள் யாவும்
முறிந்த பாய்மரமென
பயனற்று வீழ்கின்றன.
குறைகூறும் உன் விநோதப்போக்கை.....
குரோதமிகுந்த குதர்க்கத்தை....
வீணில் சுமத்தப்படும் பழிகளை....
வெறுப்பு மேலிட வேடிக்கை பார்த்தபடி
விரக்தியுடன் வீற்றிருக்கும் என்னையும்
உனக்காதரவாய் ஈர்க்க முனைகிறாய்!
நீ பிடித்த முயல்களுக்கு
மூன்றுகாலென்பதை நிரூபிப்பதற்காகவே
ஒற்றைக்காலொடித்து
முடமாக்கிக் கூண்டிலடைக்கிறாய்!
உன் அறிவீனத்தை காணச்சகியாது
உன் காரண கற்பிதங்களை
கடுகளவும் ஆட்சேபணையின்றி ஏற்கிறேன்,
கையறு நிலை காரணமாய்!
இதைக் கண்டுணரும் சாமர்த்தியமற்று
இதுவும் உன் சாமர்த்தியத்தின் வெற்றியென்றே
கூக்குரலிட்டுக் குதூகலிக்கிறாய்!
Bookmarks