அன்பார்ந்த மன்றத்து சொந்தங்களுக்கு வணக்கம்...!!!
இந்தக் கதை என் சிந்தனைக்கும் என் எழுத்துக்கும் பிறந்த முதல் குழந்தை..
இந்தக்குழந்தையை சீராட்டி பாராட்டி குறைகள் இருந்தால் குட்டி என் சிந்தையை ஊக்குவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
எனக்கென்று ஒரு மனம்
என் பெயர் ஜூலி. எனக்கு வயது இரண்டு வருடமும் இரண்டு மாதங்களும் ஆகிறது.
என் பக்கத்து வீட்டு அக்கா பெயர் கேத்ரீனா. நானும் கேத்ரீனாவும் நல்ல தோழிகள். அவள் U.K.G படிக்கிறாள். பள்ளி முடிந்ததும் என்னுடன் விளையாட வருவாள். ஆனால் அந்த தோழமையே என் மனதில் பல வேண்டாத ஏக்கங்களையும் கேள்விகளையும் உண்டு பண்ணியது. அந்த கேள்விகளுக்கு நீங்கள்தான் பதில் கூற வேண்டும்.
என்னடா இது ! மூன்று வயதுகூட முடியாதவளா இப்படி எல்லாம் சிந்திப்பாள்? என்று நீங்கள் சிந்திக்கக் கூடாது. என் அனுபமே இப்படி என்னை சிந்திக்க வைத்தது.
அவளுக்கு மட்டும் அன்பு காட்ட அவள் வீட்டில் போட்டி போட்டனர். ஆனால் எனக்கு? கேத்ரீனா நல்ல சிகப்பு நிறம். புசு புசு கன்னங்கள். சின்ன அழகான உதடுகள். கோழி முட்டை கண்கள். அதை உருட்டி உருட்டி உதடுகள் குவித்து பேசும் அழகு உள்ளதே...! அதைப்பார்த்து கொண்டே இருக்கலாம் போல் தோன்றும். ஆனால் நான் நல்ல கருப்பு. சின்ன முட்டைக்கண்கள். அதனால் தான் யாருக்கும் என்னை பிடிக்கவில்லையோ?
அவள் அம்மா அவளுக்கு குளிக்க தினமும் போராடுவாள். குளிக்க மாட்டேன் என அழுது அடம் பிடிப்பாள். சாப்பாடு பிசைந்து ஊட்டும்போதும், தூங்க வைக்கும்போதும் மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்வாள். அப்போதும் அவள் அம்மா செல்லம் கொஞ்சுவாள்.
இதை எல்லாம் பார்க்கும் பொது எனக்கு ஏக்கமாக இருக்கும். என் வீட்டு அம்மா வேண்டா வெறுப்பாக வாரம் ஒரு முறை மட்டும் குளிக்க வைப்பாள்.
வெறும் சோற்றை பாலுடன் கலந்து பிசைந்து தட்டில் கொட்டி விட்டு போவாள். அவ்வளவு தான்.
என்னால் கையில் எப்படி எடுத்து சாப்பிட முடியும்? கீழே சிந்தினால் சின்ன குச்சியால் அடிப்பார்கள்.
வலி உயிரே போகும் தெரியுமா? என்னால் வாய் விட்டு யாரிடமும் சொல்ல முடியாது என்ற தைரியத்தினால் தான் இவர்கள் இப்படி செய்கிறார்களா?.
அவளுக்குத்தான் எத்தனை பொம்மைகள். எனக்கு ஒன்றுகூட இல்லை தெரியுமா?
கேத்ரீனாவை அவளின் அம்மா தன் மடியில் படுக்க வைத்து தாலாட்டு பாடியபடி தட்டிக் கொடுப்பாள். அவளும் அப்படியே சுகமாக உறங்குவாள். ஆனால் நானோ வீட்டின் மூலையில், எனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பாவமாய்.??..
சத்தமாக அழ வேண்டும் என தோன்றும். ஆனால் சத்தம் போட்டால், அனைவரும் "சனியனே ஏன் சத்தம் போட்டு தூக்கத்தைக் கெடுக்கிறாய்?" என திட்டுவார்கள். அதற்கு பயந்துகொண்டு அமைதியாய் இருப்பேன்.
என்னை விட வயதில் மூத்த கேத்ரீனவுக்கு கிடைத்த அன்பும் பாசமும் ஆசையான முத்தங்களும் ஏன் எனக்கு கிடைக்கவில்லை?
ஒருவேளை நானும் என் அம்மாவுடன் இருந்திருந்தால் எனக்கும் இதெல்லாம் கிடைத்திருக்குமோ? அவளாவது வாயை திறந்து கேட்க முடியும். ஆனால் நான் அவளைப்போல் கேட்க முடியாதே...
என் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். என் கதையைக் கேட்டால் உங்களுக்கே என்மீது பரிதாபம் பிறக்கவில்லையா?
நான் இந்த உலகில் நாயாகப் பிறந்தது என் தவறா?
நீங்களே சொல்லுங்கள்.....??!!!
Bookmarks