சும்மாவுக்கும் நமக்கும்
இடையிலான உறவு
'சும்மா' இல்லை..
இந்த சும்மாவிற்குள்
அடைக்கலம் புகுந்துதான்
தெரிந்தறிந்து செய்யும்
எத்தனையோ தவறுகள்
தப்பித்துக் கொண்டிருக்கின்றன..
வரையறைகளைக் கடக்கிற
வார்த்தைகளை உச்சரித்தப்
பிறகு உதடுகள்
பூசிக்கொள்கிறச் சாயம்
'சும்மா' சொன்னேன்..
தனிமைகளைத் தகர்க்க
தரிக்கப்படுகிற
அலைப் பேசி
அழைப்புகளின் வெற்றலைகளில்
நிரப்பப்படுவது
'சும்மா'தான் கூப்பிட்டேன்..
எதிர்ப்பார்ப்புகளை
எழுப்பிவிட்டு ஏமாற்றி
எள்ளி நகைக்கும் கேலிகளின்
கீறல்களில் களிம்பு தடவும்
'சும்மா' விளையாடினேன்..
தற்செயலாய் நேரும்
சந்திப்புகளில் உசாவப்படும்
கேள்விகளின் விடைகளாய்
கிறுக்கப்படுகிறது
'சும்மா'தான் இருக்கேன்..
அங்கிங்கெனாதபடி
எங்கும் 'சும்மா'வாய்
ஏளனம் செய்யப்படுகிறது வாழ்க்கை..
Bookmarks