1985-87வருடங்களில் மும்பையில் இருக்கும் எங்கள் நிலையத்தின் குடியிருப்பு பகுதியான அணுசக்திநகரில் வசித்துக்கொண்டிருந்த போது என் வாழ்விலும் காதல் வந்து கண்ணாமூச்சி ஆடிவிட்டுப்போய்விட்டது. ஒத்த வயதுடைய நன்பர்களாக நாங்கள் ஒரு 12 பேர் இருந்தோம். ஆண்களும் பெண்களும் சரி விகிதமாய்.எங்களுக்கெல்லாம் லீடர் ரமணி என்ற தோழி. இந்திய கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்த லால்சந்த் ராஜ்புத்-ன் தங்கை.சரியான தைரியம் உள்ள பெண். எங்கள் குழுவிலேயே அப்பிரானியான பெண் தீபா குல்கர்னி.மராட்டியப்பெண்.அடக்கமானவள்.அதுதான் எனக்கு அவளிடம் மிகவும் பிடித்தது.
நாங்கள் அனைவரும் அடிக்கடி ஏதாவது ஒரு இடத்துக்கு சுற்றுலா போவோம்.அந்த நாள் முழுவதும் ஆட்டம் பாட்டு என்று ஒரே சந்தோஷம்தான்.இந்த மாதிரியான நேரங்களில்தான் கொஞ்சம் நெருங்கினோம். நான் என்னையறியாமல் அவளை நேசிக்கத்தொடங்கியிருந்தேன். ஆனால் நட்போடு பழகிவந்ததால் என் காதலை அவளிடம் சொல்லத் தயங்கினேன். அதேசமயம் அவளும் இதெ என்னத்தில்தான் இருந்தாள் என்பது எனக்கு பின்னாளில் தெரிந்தது. எங்கள் குழுவில் ஜெஸ்பால் என்ற பஞ்சாபிப் பெண் இருந்தாள். அவளும் ஒரு மஹாராஷ்ட்ரியனை காதல் மணம் புரிந்தவள்தான். எங்கள் குழுவின் சீனியர். அவளிடம் தீபா ஒருமுறை'நான் ஒரு மதராஸியைத்தான் திருமணம் செய்து கொள்வேன்'என்று சொல்லியிருக்கிறாள்.இதையும் ஜெஸ்பால் என்னிடம் அன்றே சொல்லவில்லை.
இந்த சமயத்தில் நாங்கள் லோனாவாலா என்ற இடத்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது,விளையாட்டின் ஒரு பகுதியாக வட்டமாக அமர்ந்துகொண்டு நிறைய சீட்டுகள் அடங்கிய ஒரு டப்பாவை கை மாற்றி சுற்றிவரச்செய்து,இசை நிற்கும்போது யார் கையில் டப்பா இருக்கிறதோ அவர் அந்த டப்பாவில் இருக்கும் சீட்டை எடுத்து அதில் எழுதி இருப்பது போல் செய்து காண்பிக்கவேண்டும். இந்த விளையாட்டில் என் முறை வந்த போது எனக்கு கிடைத்த சீட்டில், 'இங்கிருக்கும் பெண்களில் யாராவது ஒருவரை காதலுக்கு ப்ரபோஸ் செய்யவேண்டும்' என்று இருந்தது. நான் தீபாவை தேர்ந்தெடுத்தேன்.
மண்டியிட்டு அமர்ந்து 'என் காதலை ஏற்றுக்கொள்வாயா அன்பே' என்று சொன்னதும்,அவள் 'எங்கப்பாவை வந்து பார்' என்றாள். ஏன் என்று கேட்டதற்கு 'என்னைக் கல்யாணம் செய்து கொள்ளத்தான், கல்யாணம் செய்துகொண்டு பிறகு காதலிக்கலாம்' என்றவுடன் ஏற்பட்ட சிரிப்பிலும் கலாட்டாவிலும் அது ஒரு நகைச்சுவையாக கரைந்து விட்டது. அவள் அப்படி சொன்னாலும்,அவளிடம் என் காதலைச் சொல்ல எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை. இந்த ஜெஸ்பாலாவது அவள் சொன்னதை என்னிடம் அப்போதே சொல்லியிருந்தால் கொஞ்சம் தைரியம் வந்திருக்கும். அவளும் சொல்லவில்லை.
இந்த நேரத்தில்தான் என் தந்தைக்கு புற்று நோய் முற்றி கோவையில் மருத்துவமனையில் இறந்துவிட்டார். அதற்காக ஊருக்குப் போயிருந்தேன்.தந்தையின் காரியங்களெல்லாம் முடிந்து திரும்ப மும்பைக்கு வர தயாராகிக்கொண்டிருந்த போது என் தாய் மாமன் தயங்கி தயங்கி சொன்னதைக் கேட்டு கொஞ்சம் திகைத்துதான் போனேன். என் தந்தையின் கடைசி விருப்பமாய் நான் அவர் மகளைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவர் சொன்னதும் வேறு ஒன்றும் சொல்லத் தோனாமல் சரியென்றேன். நல்லவேளை நம் காதலை தீபாவிடம் சொல்லி அவள் மனதிலும் ஆசைகளை வளர விடாமல் இருந்தது நல்லதாகி விட்டது என்று சமாதானப்பட்டாலும்,மனசில் ஒரு ஓரத்தில் அந்த வலி இருக்கத்தான் செய்தது.
சாவு நிகழ்ந்த வீட்டில் ஒரு நல்ல காரியத்தை உடனே செய்தால் நல்லது என்று பெரியவர்கள் அபிப்ராயப்பட்டதால் திருமணத்தேதியும் மூன்று மாதத்திற்கு பிறகு குறித்துவிட்டார்கள். திரும்ப மும்பை வந்ததும் தோழர்களும் தோழியர்களும் துக்கத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். நாளடைவில் அந்த வேதனை குறையத் தொடங்கியதும் நன்பர்களிடம் என் திருமண செய்தியை தெரிவித்தேன். மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொள்ள ஆளாளுக்கு கலாய்க்கத்தொடங்கி விட்டார்கள். அந்த சமயம் தீபா வங்கித்தேர்வு எழுத போயிருந்ததால்,அடுத்த நாள் அவளிடம் மட்டும் இந்த செய்தியை சொன்னேன். அவள் உடலில் மெல்லிய அதிர்வுகளை என்னால் உணர முடிந்தது. முகம் அதிர்ச்சியை அளவோடு வெளிப்படுத்தியது. கலங்கிய கண்களில் நிறைந்து விட்ட கண்ணீரை கஷ்டப்பட்டு தேக்கி வைத்துக்கொண்டாள். அவள் குனமே அப்படித்தான்.தர்மசங்கடமாக உணர்ந்தேன்.
அடுத்த நாள் ஜெஸ்பால் வந்து என்னை கன்னா பின்னவென்று திட்டினாள். சம்மதம் சொல்வதற்கு முன் ஒருமுறை தீபாவிடம் பேசியிருக் கூடாதா என்று. என்ன செய்வது அப்பாவின் கடைசி விருப்பத்திற்கு என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை என்றேன். போடா என்று சலித்துக்கொண்டே போய்விட்டாள்.
திருமணம் முடிந்து மும்பையில் வரவேற்பு வைத்தபோது என் எல்லா நன்பர்களும் என்னை ஒரு வேலையும் செய்ய விடாமல் அவர்களே கலக்கிவிட்டார்கள். ஆறு பெண்களும் ஒரே மாதிரியான சேலையை வாங்கி அதை குஜராத்திய முறையில் காட்டிக்கொண்டு அரங்கத்தையே உண்டு இல்லையெனப் பண்ணிவிட்டார்கள். ஏமாற்றத்தை கொஞ்சம் கூட காட்டிக்கொள்ளாமல் தீபாவும் அடிக்கடி என் வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டிருந்தாள். இதையெல்லாம் என் மனைவியிடம் திருமணத்துக்கு முன்பே சொல்லிவிட்டேன். என்னைப்புரிந்துகொண்டு அவளும் தீபாவை தன் நல்ல தோழியாய் ஏற்றுக்கொண்டாள்.
1993ல் அந்த வேலையை விட்டுவிட்டு வளைகுடா வந்துவிட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்பர்களைப் பார்க்க அணுசக்திநகர் போயிருந்தபோது எதேச்சையாக தீபாவை சாலையில் சந்தித்தேன். கையில் இரண்டு வயது பெண் குழந்தையுடன். குழந்தையின் பேர் என்ன என்று கேட்டதற்கு உடனே சொல்லாமல் சிறிது கழிந்து சொன்னாள் "ஷிவானி"
Bookmarks