அன்பு மன்ற உறவுகளே...!!
இன்று நான் மன்றம் எனும் வீட்டில் குடிபுகுந்த 75 ஆவது நாள்.
எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்து ஈராயிரம் பதிவை இவ்வளவு சீக்கிரத்தில் தொட வைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.
ஆயிரத்தில் சில பத்துகளேனும் கவிப்படைப்புகளாய் இருக்கும் பட்சத்தில் ஈராயிரத்தில் மிகச்சில பதிவுகள் தான் பெரிய பதிவுகளாக என்னால் இட முடிந்தது. முக்கால்வாசிக்கு மேல் பின்னூட்டங்களாகவே இருக்கும்.
இந்த ஈராயிரம் பதிவில் நான் என்ன செய்தேன் என்று என்னுள்ளம் கேட்கிறது. ஆனால் உருப்படியாய் ஏதும் செய்ததாய் மனம் ஏற்கவில்லை என்றாலும் எங்கோ ஓரத்தில் உங்களின் மனங்களில் இந்த பூமகளும் பூவின் வாசத்துடன் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
அந்த மகிழ்ச்சியை என்றும் தரவேண்டுமென்று இறைவனை வேண்டி எனது ஈராயிரமாவது படைப்பை மன்றத்தின் அன்பு சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
என்னுடைய மற்ற பதிவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிவை தர முயன்று அப்படி முயற்சி செய்ததன் விளைவு தான் இப்போது உங்கள் பார்வைக்கு நான் படைத்திருப்பது. எனது ஒரு நாள் பொழுது எப்படி போனது என்று எந்த ஒரு கற்பனையும் கலக்காமல் சம்பவங்களை உள்ளது உள்ளபடி கொடுத்திருக்கிறேன்.
பூவின் புதுப் பொ(லிவு)ழுது..!!
22 அக்டோபர் 2007
என்னை யாரோ துரத்துகிறார்கள்...!! 20 அடுக்குள்ள ஃபிளாட்டின் மொட்டை மாடியில் நான். வேகமாய் ஓடி கடைசியில் விளிம்பில் நின்று திரும்பிப்பார்க்க கூட அவகாசம் இன்றி "சூப்பர்மேன்"... ச்சே..! "ஸ்பைடர்மேன்" போல் தொபுக்கடீரென்று கீழே விழுகிறேன். என்ன ஆச்சர்யம்...? என் கைகளுக்கு கிடைத்த எல்லா கயிற்றையும், கம்பிகளையும் பற்றி மெதுவாக கீழே வருகிறேன். இறுதியில் ஒரு ஆழமரத்தின் விழுது ஒன்று அழகாய் தெரிய, அதைப் பற்றி அப்படியே கீழே வந்து தரை தொட்டு இறங்குகிறேன்.."அம்மா..!" என்ற சத்தத்துடன்...!
"பூவு... தங்கம்..!" என்று அம்மா என் அருகில் வந்து சத்தம் போட இது வரை கண்டுகொண்டிருந்த கனவு கலைந்தது. கண்கள் விழித்துப் பார்க்கிறேன். அருகில் அம்மா. "கூப்பிட்டியா பூவு..? என் மொபைலுக்கு மிஸ் கால் வந்திச்சி.. நீ தான் கூப்பிட்டிருப்பேன்னு அப்பா சொன்னாரு.." என்றார் (இங்க தான் பூ நிக்கிறா... என் ரூமில் நான் எதையாவது பார்த்து பயந்தா... உடனே அவசர அழைப்பு அப்பாவுக்கோ அம்மாவுக்கோ ஒரு மிஸ் காலா போவும். "ரொம்ப தான் மொபைலை வைச்சி வால் தனம் பண்றே..!"ன்னு நீங்க நினைக்கிறது புரியுது..ஹீ ஹீ.. இது நான் உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலில் இருக்கையில் நடக்கும் வாடிக்கை..!) .
"இல்ல.. அம்மா... நானில்லை" என்று ஒற்றை வார்த்தையில் பதிலை உதிர்த்து விட்டு மறுபடி உறங்க தொடங்கினேன். மேலிலிருந்து விழுந்தது கனவில் தானே என்பதால் "அப்பாடா..! அடிபடவில்லை..!!" என்பதில் சின்ன திருப்தி...! அம்மா சென்ற பிறகு நான் திரும்ப உறங்குகையில் அதிகாலை 2 மணி..!!
அதிகாலை 3 மணி:
மறுபடி.. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அலைபேசி அழைப்பு... என் அறையிலிருந்து நன்றாய் கேட்டது. அப்புறம்... வீட்டில் தொலைபேசியின் அலறல் மொத்தமாய் என்னை தூக்கத்திலிருந்து உலுப்பி எழுப்பியது. தொடர்ந்து அம்மா, அப்பாவின் பேச்சுக்குரல். என்னவென்று அம்மாவிடம் கேட்டேன். அது எதிர்பாராத ஒரு துக்க செய்தி. எமன் வந்து போன செய்தி ஊரிலிருந்து வந்திருந்தது. என் சின்னத்தாத்தா பரலோகம் பயணப்பட்டிருந்தார். அவர் மரணத்தால் எனக்கு வருத்தம் மேலிட்டாலும், அவர் வருந்தாமல், யாரையும் வருத்தாமல் சென்றதில் ஆறுதலடைந்தது என் மனம்.!
ஒன்றரை மாதம் முன்பு அவரை பார்த்து ஆசி வாங்கி, கடைசியாய் என் அலைபேசியில் அவரை படம் பிடித்தது என் நினைவில் வந்து போனது. மறுபடி உறங்கிவிட்டேன்.
காலை 6 மணி:
என் உறவினர்களான ஒரு அக்காவும், மாமாவும் வந்தனர். அம்மா என்னை எழுப்ப... மலங்க, மலங்க விழித்து நான் எழுவதற்குள் அந்த அக்கா வந்து "பூவு எந்திரிமா.." என்று சொல்லி தட்டி எழுப்ப... கடைசியில் எழுந்தே விட்டேன் (சமீப காலமாய் இப்படி அதிகாலையில் நான் எழுந்ததே கிடையாது...ஹீ ஹீ..) அதன் பின் வீட்டுக்கு வந்திருந்த அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.
காலை 6.30 மணி:
துக்க வீட்டிற்கு போக அப்பா, அம்மா தயாரானார்கள். அம்மா கொடுத்த ஆலோசனைகளை கவனமாக கேட்டேன். இருவரும் மதியம் திரும்பி வருவதாய் சொல்லி விட்டு உறவினருடன் கிளம்பி ஊருக்கு சென்று விட்டனர்.
"கேட் உள்ளே இரு பூட்டையும் போட்டுக்கோ"ன்னு அம்மா சொல்லியது என்நினைவு வர, அதன் படி செய்து தாழிட்டேன். பல் தேய்த்து முடித்து அடுப்படி வந்தேன்.
காலை 7 மணி:
பால் ஏற்கனவே வாங்கி வந்து வைத்திருந்தார் என் அம்மா. பால் காய்ச்ச பால் குக்கரை கழுவி, அதில் பாலை ஊற்றி, பின் டைனிங் ஹால் வந்தால் அம்மா சுட்டு வைத்துச்சென்ற இட்லி எனக்காக ரெடியாய் இருந்தது. கூடவே நேற்று வைத்த குழம்பு. "சரி.. அப்புறமா சாப்பிட்டுக்கலாம்..!" என்று நினைத்து அப்படியே அமர்ந்து விட்டேன்.
பத்து நிமிடத்தில் பால் குக்கர் தனது உச்ச ஸ்தாயில் பாடத்துவங்கியது. அதனை ஆறுதல் படுத்த அடுப்பை அணைத்து அமைதியாக்கினேன். பால் குடிக்க தோன்றுமளவுக்கு பசியில்லை. "சரி... போர் அடிக்குது என்ன செய்யலாம்..? பக்கத்து வீட்டிலும் ஒரு சத்தத்தையும் காணோம்.!". லேசா பூவுக்கு தன் தனிமையை நினைத்து மனதின் ஓரத்தில் ஒரு பயம் தோன்ற, "ஓடிப்போய் மன்றத்தினுள் ஒளிஞ்சிக்கலாமா?" என்று ஒரு யோசனை ஏற்பட்டது. இவ்வளவு காலையில் வேண்டாம் என்று முடிவு செய்தேன். "பாவம்... இப்பவே ஆரம்பிச்சி... மன்றத்தில் எல்லாரையும் படுத்த வேணாம்" என்று ஒரு நல்லெண்ணம் தான்..!
காலை 7.30 மணி:
தொலைக்காட்சி பார்க்கலாம் என்று பார்த்தால், கடந்த இரு மாதமாய் இருந்த மாதிரியே கேபிள் சேனல் வராமல் வெறுப்படித்தது. வேறு வழியில்லை என்று என் அறைக்கு வந்தேன். "கேட்" தட்டப்படும் சத்தம் கேட்டது. வெளியே சென்று பார்த்தால் குப்பை அள்ள வந்திருந்தார் எங்க ஏரியா தாத்தா. எங்கள் வீட்டு குப்பை கூடையை எடுத்து சென்று அவரது கோணிப்பையில் கொட்டினேன். அது சரியாக விழாமல் பாதி கீழே கோணியிலும், பாதி கீழுமாக விழுந்தது. ("என்ன... பூவுக்கு குப்பை கூட கொட்ட தெரியாதா..?" என்று நினைக்காதீர்கள்..!!). உடனே அந்த தாத்தா, "அம்மா... ரொம்ப சரியா கீழ விழாம கொட்டுவாங்க..!"ன்னு ஒரு போடு போட்டார் . நானும் அவர் சொன்னதற்கு தூக்க கலக்கத்தில் சிரித்து வைத்து, விளக்குமாரை எடுத்து, மீண்டும் முறத்தில் அள்ளி அவரது கோணியில் போட்டு, வாசலை கழுவி விட்டு, பின் வீட்டிற்குள் வந்தேன். என் கைகளை சோப்பு போட்டு கழுவினேன்.
காலை 8 மணி:
கொஞ்ச நேரம் சன்னல் வழியே பயிர்களின் தலையாட்டலை ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தேன். வெளியில் சென்று தொட்டிச் செடிகளை ஒரு முறை பார்த்து நலம் விசாரித்தேன். அவை ஏற்கனவே தேவையான மழை நீரால் வயிறு நிரம்பியிருந்ததால் பசி தீர்க்கும் அவசியம் இன்றி போய்விட்டது. "கேட்"டுக்கு வெளியில் மெல்ல சென்றேன். இருக்கும் பவள மல்லி செடியின் அழகையும், நான் ஆசையாய் நட்டிருக்கும் மருதாணியையும் அன்பாய் தடவிக் கொடுத்தேன்.
செண்பா மரத்தின் இலையை வெட்டுக்கிளி வெட்டி உண்டு காம்பு மட்டுமே எஞ்சியிருப்பதை பார்த்து வெட்டுக்கிளிக்கு சாபம் கொடுத்து திட்டித் தீர்த்துவிட்டு மறுபடி வீட்டுக்குள் நுழைந்தேன். கதவின் எதிர்புறம் வண்ண மீன்கள் இருக்கும் மீன் தொட்டி..! என் அருகாமை கண்டதும் அவை வேகமாய் துள்ளி மேலே வந்தன. புரிந்தது எனக்கு, "மீனுக்கு பசிக்குது.!"
மீன் உணவு டப்பாவை எடுத்து மீனின் கடுகு போன்ற உணவை மெதுவாய் போட்டேன். எல்லா மீன்களும் சாப்பிடுவதை பார்த்து சந்தோசப்பட்டது என் மனம்.
காலை 9.00 மணி:
தொலைபேசி அலறியது. எதிர்முனையில் மாமா. அம்மா அங்கு தான் வருகிறார்கள் என்று தகவல் சொன்னேன். என் அறைக்கு மெல்ல நடந்தேன். கணினி அமைதியாய் என் தொல்லையின்றி நித்திரையில் இருந்தது. அன்போடு எழுப்பினேன். சிபியூ ஆன் செய்ய, கண் சிமிட்டி மௌசுடன் எழுந்தது மானிடர். நேரா இணையத்தில் நுழைந்து முதல்
வேலையாய் தமிழ் மன்றம் தளம் வந்தேன். அப்படியே ஜி.டாகிலும்.
மன்றத்தின் பதிவுகளை பார்வையிட்டேன். சாட்டில் என் அன்பு அண்ணாக்களுடன் அன்புத் தொல்லை செய்தேன். அப்படியே நேரம் போனது.
காலை 10.00 மணி:
பசியால் போடும் வயிற்றின் சத்தம் என் காதிற்கு எட்டத்துவங்கியது. கணினியை தற்காலிகமாக கண் தூங்க வைத்து, மீண்டும் எழுந்து டைனிங் ஹால் போனேன். ஏற்கனவே ஹாட்பேக்கில் வைத்திருந்த இட்லியில் மூன்றை தட்டில் அடுக்கி... குழம்பை ஊற்றி...ஓடாத டீவியை(!) ஆன்செய்து அதை பார்த்த வண்ணமே சாப்பிட்டு முடிக்கிறேன் வேகமாய்.
தட்டை கழுவி, பாத்திரங்களை ஒழுங்குபடுத்தி, பால் குக்கரில் இருக்கும் பாலை மீண்டும் சூடாக்கி, வெந்நீர் வைத்து ஸ்பெர்ட் டப்பாவை எடுத்து பாலில் கலக்கி ஒன்றரை கிளாஸ் முழுக்க கலக்கிக் கொண்டு மீண்டும் கணினி முன் வந்தமர்ந்தேன்.
மீண்டும் சேட்(டை) ஆரம்பம். இப்போ.. ராஜா அண்ணாவை வம்புக்கு இழுத்து, அவர் எனது "பஞ்ச்" கவிதைக்கு பதிலிடவில்லை என்று சொல்லி, கொஞ்சம் அழுது, பின்பு கவிச்சமரிலும், பாட்டுக்கு பாட்டு மேடையிலும் பங்குபெற்று மன்றத்தில் உலவினேன். மலரை காணாமல் ஏனோ மன்றத்தில் உற்சாகம் குறைவாய் தோன்றியது. அவளைப் பற்றி நினைத்துக்கொண்டு மன்றத்தின் எனது பதிப்புகளுக்கு பின்னூட்டமிட்டுக் கொண்டிருந்தேன். சாட்டில் நட்புகளுடன் சேட்டை செய்து கொண்டு இருந்தேன்.
அடுத்து எனக்கு மனம் விரும்பும் பாடல் கேட்க ஆசை வந்தது. எனது ப்ளாக்கிற்கு சென்று எனக்கு மிகவும் பிடித்த "பேசுகிறேன்" பாடலை பார்த்து ரசிக்கத்துவங்கினேன். இப்படியே மன்றத்தில் வம்புக்கிழுத்து எல்லாரையும் ஒரு வழி ஆக்கினேன்.
மதியம் 12.30 மணி:
இதயம் அண்ணாவிடம் நான் சாட்டில் அன்புத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கையில் இதயத்திடமிருந்து ஒரு குரல். "மதிய சாப்பாட்டுக்கு என்ன செய்ய போறீங்க??" என்று..! . "நச்" என்று உச்சியில் ஒரு குட்டு வைத்தது போல நான் உணர, "அடுத்த வேளைக்கு சாப்பாடு இல்லையே" என்று மூளையின் ஒரு அபாய ஒலி கேட்க, அப்படியே கிச்சனுக்கு வந்தேன். ஆனால், வீட்டின் நிசப்தமும், வெறுமையும் ஒரு அமானுஷ்ய உணர்வை ஏற்படுத்த கணினிக்கு மீண்டும் வந்து "சத்தம் போடாதே" பாடலை சத்தமாய் வைத்துவிட்டு, கணினியின் மானிட்டரை அணைத்துவிட்டு அடுப்படிக்கு வந்தேன்.. !
இனிதான் பூவின் கைஜாலம் இருக்கு..!!
அடுப்படியை ஒரு நோட்டம் போட்டேன். "என்னென்ன காய்கறி இருக்கு...!! அப்பாடா.. !". எனக்கு தெரிந்ததை செய்ய தேவையான விசயங்கள் இருந்தன. மனம் நிம்மதியானது. பால் குடித்த பாத்திரத்தையும், மற்ற பாத்திரங்களையும் கழுவினேன். பின் சாதக் குக்கரில் இருந்த ஐஸ் பிரியாணியை (ஐஸ் பிரியாணி - முந்தின நாளின் சாதம் தண்ணீர் ஊற்றிய நிலை) எடுத்து வேறு பாத்திரத்துக்கு மாற்றி குக்கரை கழுவினேன்.
"சுத்தம் சோறு போடும்" என்று சொன்னதால் நான் ரொம்பவே சுத்தமாய் கழுவினேன். ஹீ ஹீ..!
அரிசி வைத்திருக்கும் பக்கெட்டை கண்டுபிடிக்க அதிக சிரமப்படவில்லை. அது முதல் முயற்சியிலேயே கண்டுபிடித்துவிட்டேன். சின்ன வயதில் அம்மா குக்கரில் சாதம் வைக்க சொன்ன கணக்கு எனக்கு ஞாபகம் வந்தது.
"1 டம்ளர் அரிசி போட்டா ரெண்டு டம்ளர் தண்ணி ஊத்தணும்.. பழைய அரிசின்னா கொஞ்ச நேரம் ஊற வச்சிட்டு, கொஞ்சம் தண்ணி சேர்த்து வைக்கணும்" என்று அசரீரியாய் மனதுக்குள்அம்மாவின் குரலில் கேட்டது..!!
"சரி... பழைய அரிசிதானா இதுன்னு எப்படி கண்டுபிடிப்பது..??" குத்து மதிப்பாய் அது பழையதாய் தான் இருக்கும்னு ஒரு கணக்கு போட்டு, 2 டம்ளர் அரிசியை எடுத்து இரு முறை கழுவி, தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிட்டு காய்கறிகள் பக்கம் வந்தேன். எனது திட்டம். . தக்காளி சாதம் செய்வது. (அது மட்டும் தான் உருப்படியாய் செய்ய தெரியும்.. ஹி ஹி..)
தக்காளி "தளதள" என்று சிரித்தது..! அதில் மூன்று எடுத்து, அப்புறம் சின்ன வெங்காயங்கள் கொஞ்சம் எடுத்துக்கொண்டு அரிவாள்மனையுடன் ஹாலுக்கு வந்தேன். கணினியின் சத்தத்தை கூட்டி, தக்காளியை கழுவி "ஐ'ம் சாரி" என்று மொழி பாடலினை கேட்டுக் கொண்டே "ஐ'ம் சாரி" என்று தக்காளிகளிடம் சொல்லிவிட்டு அறுக்கத்துவங்கினேன். தக்காளி அடம்பிடித்து அழாமல் வெட்ட ஒப்புக்கொண்டது.
அடுத்தது வெங்காயம்...! "பேசுகிறேன்.. பேசுகிறேன்.." பாட்டை கேட்டுக் கொண்டே பேசாமல், அழுதவண்ணம் வெங்காயத்தை உரிக்கத்துவங்கினேன். வீட்டின் வெறுமை எனக்கு வீட்டினை மிகவும் பெரியதாக காட்டியது. ஆனால் பாட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டே வேலை செய்ததால் தனிமை தெரியவே இல்லை.
மதியம் 1.50 மணி:
"அடடா..! இதற்கே இத்தனை நேரமா...?" வயிறு பொறுமை இழந்து ஆட்டம் போட்டது. மூளையோ அதனிடம் "பொறு பொறு...சீக்கிரமா சமையல் ஆயிடும்" என்று ஆறுதல் சொல்லியது. ஒரு செம்பு தண்ணீர் எடுத்து குடித்து விட்டு தெம்பாய் மீண்டும் வெங்காயத்தோடு சேர்ந்து அழத்துவங்கினேன்...! என்னோடு சேர்ந்து பாட்டும் அழுதது... "ஓ மனமே,....!! ஓ மனமே...!!" காற்றின் மொழியில் இப்போது வந்து நின்றது.
மதியம் 2 மணி:
வெங்காயம் உரித்தாகிவிட்டது. . சரி.. இனி அரிசியை குக்கரில் வைக்கலாம் என்று எண்ணி, ஊற வைத்த தண்ணீரை வடித்து, 2 டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அப்புறம் கூட 1/2 டம்ளர் சேர்த்து ஊற்றி குக்கரில் விசில் அடிக்கும் "வெயிட்" போடாமல் அடுப்பில் வைத்தேன்.
உரித்த வெங்காயத்தை கழுவி.. பின் துண்டுகளாக வெட்டத்துவங்கினேன். அப்புறம், குக்கரிலிருந்து நீராவி வெளிப்பட துவங்கியிருந்தது. இப்போது "வெயிட்" போட்டேன் (குக்கருக்கெல்லாம் வெயிட் போட முடியுதே..!). பின் ஃப்ரிஜ்ஜைத் திறந்து கறிவேப்பிலையும், பச்சை மிளகாயும் எடுத்தேன். துண்டுகளாக்கினேன்.
குக்கர் 4 விசில் கொடுத்தது. அடுப்பை அணைத்து குக்கரை இறக்கினேன். அடுத்து குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்தேன். நெருப்பு மூட்டிய போது சின்ன யோசனை. "தக்காளி சாதம் செய்தால் போர்.. சாதம் வேஸ்ட் ஆகும்.. ஆகவே வெள்ளை சாதத்துக்கு குழம்பு போல் செய்யலாம்..!" என்று மூளையை குழப்பிவிட்டேன். அதுவும் "சரி..!" என்று ஒருவாறு தலையாட்டியது. ஓகே... இப்போது... எண்ணெய் தேடியது என் விழிகள். அடடா..! சமையல் எண்ணெய் தீர்ந்திருந்தது. பக்கத்தில் இன்னொரு பாட்டில். எடுத்து திறந்தால்..! "விளக்கெண்ணெய்"டி.. விளக்கெண்ணெய்...!" என்று எள்ளி நகையாடியது. ஆஹா...சரி.. சரி... அவசரத்துக்கு ஆபத்பாவன் நம்ம தேங்காய் எண்ணெய் தானென்று முடிவு செய்து அதைத் தேடினேன். ஆஹா..கிடைத்தது ஒரு ஜார் நிறைய.
அடுப்பில் வைத்த குழம்பு பாத்திரம் காய்ந்து சுட்டது, என் வயிறு போலவே...! சரி... அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொஞ்சம் தாகம் தணித்தேன். கடுகு போட்டு வெடிக்கச் செய்தேன். பின் வெங்காயம் போட்டு, வதக்கி பொன்னிறம் வந்தவுடன் தக்காளி துண்டுகளை போட்டேன். நன்கு வதக்கினேன். மஞ்ச தூளை கொஞ்சம் போட்டேன். கூடவே பச்சை மிளகாயையும், கறிவேப்பிலையையும் போட்டு வதக்கினேன். ஆமாம்... கூட கொஞ்சம் மிளகாய் தூள் போட்டால் நலமென்று ஐடியா பிறக்க.... மிளகாய் தூளை தேடினேன். ஆனால்.. கண்ணுக்கு சிக்கியது மிளகாய் தூளின் மணத்தில் சாம்பார் தூள்...! சரி.. சாம்பார் தூள் 2 ஸ்பூன் அள்ளி போட்டு கொஞ்சம் கல் உப்பை எடுத்து கொட்டி... தண்ணீர் ஊற்றி மூடி வைத்தேன்.
உள்ளே இருந்த அயிட்டங்கள் நன்கு வெந்து வாசம் அழகாய் மணந்தது. ஒரு சொட்டை அதிலிருந்து கரண்டியில் எடுத்து உள்ளங்கையில் வைத்து ருசித்துப் பார்த்தேன். "ஆஆஆஆஆ..........." காரம் உச்சியை தொட்டது. பிறகென்ன..? மீண்டும் தண்ணீர் சேர்த்தேன். உப்பே இல்லாதது போன்ற உணர்வு..! வேறு வழியில்லை.. மீண்டும் உப்பை இன்னும் கொஞ்சம் அள்ளி போட்டேன். இப்போது மறுபடி மூடி வைத்தேன். பத்து நிமிடம் கழித்து மறுபடி எடுத்து ருசித்தேன். அப்பாடா.. இப்போ கொஞ்சம் சரியாக தோன்றியது. மீண்டும் மூடி வைத்து சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்தேன்.
மதியம் 2.30 மணி:
சாப்பாடு ரெடி..! இனி...சாப்பிட வேண்டியது தான்..!! பாத்திரங்களை எடுத்து, சாப்பாடு போட்டு, குழம்பை ஊற்றி சாப்பிட துவங்கினேன். ஹாலில் வந்து அமர்ந்து வடிவேலு காமெடியை டிவிடியில் போட்டு சிரித்துக் கொண்டே சாப்பாட்டுத்தண்டனையை அனுபவித்தேன். காரத்தில் கண்ணீர் கரைபுரண்டு ஓட.... வாய் "ஆ... ஓ........." என்று உயிரெழுத்துக்களின் மொத்தத்தையும் உச்சரித்த வண்ணம் தண்ணீரை சொம்பு சொம்பாய் குடிக்க... அதுவும் முடியாமல் "இந்த விளையாட்டுக்கு நான் வரலை..!" என்று தயிரை ஃப்ரிஜினுள் இருந்து எடுத்து தயிரோடு சாப்பிட்டு என் குழப்பமான குழம்பை தொட்டுக்கொண்டே சாப்பிட்டு முடித்தேன்.
மதியம் 3 மணி:
வெளியே வானம் கருத்து மழை வரத்துவங்கியிருந்தது. பயிர்களை சன்னலின் வழியாக ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் சில பழைய நினைவுகள் வர... ஏதோ சிந்தனையில் தூறல் போடும் தூர வானத்தின் அழகை பார்த்த வண்ணம் வெகு நேரம் நின்றிருந்தேன். பின்பு நினைவு வந்தவளாய் கணினி வந்தமர்ந்தேன். மன்றத்தில் புதிய பதிவுத்திரிகளைப் பார்த்துக் கொண்டிருந்த வேளை மின்சாரம் போனது. அலரும் யூபிஎஸ்ஸின் கூப்பாட்டை நிறுத்த கணினியை அணைக்க உத்தேசித்தேன்.
கணினி உறங்கச் செல்லவும் மீண்டும் மின்சாரம் வரவும் சரியாய் இருந்தது. ஆனால், மின்சாரம் இருந்தும் எனது கணினிக்கான யூபிஎஸ் வேலை செய்யாமல் "கூ..! கூ...! " என்று கூவிக் கொண்டேயிருந்தது. மன்றம் வரமுடியாமல் செய்த மின்சாரத்தையும், எனது யூபிஎஸ்சையும் கடிந்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தேன்.
மதியம் 3.30 மணி:
தொலைகாட்சி போட்டு வீடியோவில் ஏற்கனவே இருக்கும் வடிவேலு காமெடி பார்த்துக் கொண்டிருந்தேன். மஜாவில் வடிவேலு விக்ரமோடு உரையாடிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு போர் அடிக்கவே தொலைக்காட்சியை அணைத்தேன். படிக்கலாம் என்று நினைத்து என் அறைக்கு வந்தேன்.
மாலை 4 மணி
கணினி புத்தகத்தில் மனம் செல்லவில்லை. மீண்டும் கணினி அருகில் சென்று யூபிஎஸ் ஆன் செய்து பார்த்தேன். மீண்டும் "கூ..!" என்று கூவல். ச்சே.. என்று நொந்துகொண்டு...தொலைகாட்சியை இயக்கி இருக்கும் படத்தில் ஒன்றை போட்டு பார்த்துக்கொண்டிருந்தேன்.
தோழி ஒருத்தியின் நினைவு வர, அவளை அழைத்து பேசினேன். இரு தினங்களில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் அவளுடனான பாச பரிமாற்றங்கள்.. இருவரின் ரகசிய பரிமாற்றங்கள்...எல்லாம் முடிந்து அவளுக்கு வாழ்த்து சொல்லவும் அம்மாவும் அப்பாவும் வந்து கதவின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாய் இருந்தது. அம்மாவும், அப்பாவும் வந்தவுடன் பேசி... அவர்களுக்கு நான் குழம்பு வைத்த அழகைச் சொன்னேன். அம்மா குளித்து வந்து உடனே எனது குழம்பை ரசித்துச் சாப்பிட்டார். ஆனால் காரமே சாப்பிடக்கூடாத நிலையில் அவரால் அதை சாப்பிடமுடியவில்லை. அம்மா என்னிடம் "என்ன போட்டு செய்தாய்..?" என்று கேட்க நான் சிரிப்புடனே "மிளகாய் பொடி கிடைக்கலை. அதான்மா சாம்பார் தூளை போட்டேன். அது காரமாக இருக்காதுன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி இரு ஸ்பூன் போட்டேன்..!" என்றேன். அதற்கு அம்மாவோ "ஐயய்யோ..! ஒரு சட்டி குழம்புக்கே நான் அதை அரை ஸ்பூன் தான் போடுவேன். நீ மிளகாயும் போட்டு, இவ்வளவு சாம்பார் தூளையும் போட்டால் பின் காரம் இல்லாமலா இருக்கும்..?" என்று சொன்னார்கள்.
நான் அசடு வழிந்தபடியே... "ஹி ஹி.. அம்மா... சாம்பார் தூள் காரமா இருக்காதுன்னு நினைச்சேன்.!." என்று சொல்லி சமாளித்தேன்.
மாலை 6 மணி:
அப்பாவிடம் யூபிஎஸ்சின் பிரச்சினையை சொல்லி, சிணுங்கி பார்க்கச் சொன்னேன். அவரும் பார்த்தார். அவர் அதன் பக்கம் வந்ததும் சரியாக இயங்கியது. என்ன ஆச்சர்யம்...???? "அப்பாடா..!" என என் மனம் ஆறுதல் அடைந்தது. அப்பா அது இயங்காததற்கான டெக்னிகல் விளக்கம் அளித்தார்.
மீண்டும் மன்றம் வந்தேன். கலாய்ப்பு தொடர்ந்தது. கவிச்சமர், பாட்டுக்குபாட்டு, ஓவியன் அண்ணாவின் பூனை குட்டி திரி இப்படி பங்களிப்பு நீண்டது. மணித்துளிகள் பனித்துளிகளாய் பறந்தன.
இரவு 8 மணி:
அப்பா சாப்பிட அமர்ந்தார். அவர் எனது குழம்பை சாப்பிட்டு பார்த்து "ஆஹா.. ஒஹோ" என்று பாராட்டி.... "காரம் தூக்கல், உப்பு கொஞ்சம் போட்டதும் சூப்பரா இருக்கு..!" என்று அப்பா சிரித்தபடியே சொன்னார்.
எனக்கு சிரிப்பு வந்தது, அதே சமயம் பாசமிகுதியால் தான் அப்படி சொல்கிறார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். இப்போது அப்பாவிடம் "நீங்க நான் எப்படி செய்தாலும் நல்லாயிருக்குன்னு தான் சொல்லுவீங்க... ஆனால் எல்லாரும் அப்படியிருக்க மாட்டாங்களே அப்பா?" என்று ஒரு பிட்டை போட்டுவிட்டு இடத்தை காலி செய்தேன்.
அம்மா... காலையில் ஹாட்பேக்கில் சாப்பிடாமல் நான் மீதி வைத்திருந்த இட்லியை பொடித்து பொடிமாய் செய்து தந்தார். இரவு திருப்தியாக சாப்பிட்டு விட்டு, "அம்மா, நீங்க இல்லாம ஏனோ காலையிலிருந்து வயிறு நிறைய சாப்பிடவே முடியலைமா... வழக்கமாய் 4 இட்லி சாப்பிடறது 3 தான் சாப்பிட்டேன்" என்று பாசத்தில் ஒரு செண்டிமெண்ட் டயலாக் என்னையும் அறியாமல் பேசினேன். அம்மாவிடம் அமர்ந்து கொஞ்ச நேரம் ஊரில் நிகழ்ந்த விடயங்களைப் பற்றி கேட்டுவிட்டு, அங்கு நிகழ்ந்த நகைச்சுவைகளை கேட்டு சிரித்து, பின் மீண்டும் எனது மன்ற வீட்டுக்குள் நுழைந்தேன்.
இரவு 10.30 மணி:
அண்ணாக்களோடும் தோழிகளோடும் அன்பு மழையில் சாட்டில் இருந்தேன். அப்புறம்.... மெயில் பார்க்கவே மறந்து போனதை அப்போது தான் உணர்ந்தவளாய் ஒரு வாரத்து மெயில்களை பார்த்து முடிக்க முடியாமல் ஜிமெயிலிலும் யாகூவிலும் திணறி சில மெயில்களை மட்டும் பார்த்து உறங்கச் சென்றேன்.
நள்ளிரவு 12.00 மணி:
ஒரு நாளின் எல்லா ஆர்ப்பாட்டங்களும் முடிந்து, அமைதியாய் படுத்து அடுத்த நாள் மலர்வதற்காக உறங்கத்தொடங்கியது பூ..!
இவ்வளவு நேரமாய் இத்தனை ஆர்ப்பாட்டத்தையும் பொறுமையாய் படித்து பூவினை அர்ச்சனை செய்ய மன்றத்தில் காத்திருப்போருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..!!
Bookmarks