குனிஞ்சி, நிமிர்ந்து
இடுப்பு நோவ -நான்
வனஞ்சி வார்த்த,
அடுப்பும், பானைங்களும்,
நேத்தடிச்ச பேய் புயலில்
காத்தடிச்சு உடைஞ்சி போச்சே!
சேதாரத்துல சிக்காம,
செவத்தோரத்துல இருந்த,
மிச்சமீதி பானைங்கள,
பச்ச தண்ணி பருகாம,
சந்தைக்கு தூக்கிட்டு ஓடினேன்!
வந்த வெலைக்கு தள்ளிடலாம்னு!
சந்தையில வியாபாரமில்ல..
எங்கையில ஒரூவாயுமில்ல....
இன்னிக்கோ, நாளக்கோன்னு,
மவராசனை வயித்துல சொமந்துகிட்டு -என்
மவராசி வந்திருக்கா தாய்வூடு!
மவராசிய பார்க்க -எம்
மருமவனும் வந்திருக்கான்!
வரச்சொல்லோ,
சந்தையில நாட்டுகோழியும்,
கந்தசாமி கடையில
ரெண்டு கிலோ அரிசியும்,
வாங்கிட்டு வாங்கன்னு,
பொஞ்சாதி சொன்னது,
நெஞ்சுக்குள்ள நின்னது!
கண்ணுல பொசுக்குன்னு
தண்ணி எட்டி பார்க்குது!
பத்துரூவா கடன்வாங்க கூட
பக்கத்தூருதான் போவனும்!
என் குல சாமி!
எனக்கொரு வழி காமி!
கொக் கொக் கொக்
கொக்கரக்கோ...
கொக் கொக் கொக்
கொக்கரக்கோ...
நடுரோட்டுல ஓடிட்டிருந்துச்சி
நாட்டு கோழி ஒன்னு!
கத்தி ஓடுற கோழியத்தவிர,
சுத்தி பார்த்தா யாருமில்ல!
மனசில பாரம் இறங்கிபோச்சி
பயம் மனசோரம் ஏறிப்போச்சி
வழிஞ்ச வேர்வைய,
கிழிஞ்ச துண்டால தொடச்சிவுட்டு,
கந்தசாமி கடைக்கு நடந்தேன்!
அரிசி மட்டும் கடன்
சொல்லிக்கலாம்னு.....
Bookmarks