நடுவர் மாலனின் தேர்வில் பரிசுக்குரிய இயல் கவிதைகள் இதோ... இதோ...
====================================================
-பகுதி 4-
பேருந்தில்
வேர்வை, அலுப்பு
சில்லறை பாக்கி
கல்லூரிப் பெண்
அழும் குழந்தை
இவையாவும் கடந்து
ரசிக்காமல் இருக்க
முடியவில்லை பெரும்சப்தத்துடன்
இணையாகக் கடந்து போகும் ரயிலை
எத்தனை வயதானாலும், (பயணிக்கும் அவசரத்தில் இல்லாத நாட்களில்)
நம்மைக் குழந்தைகளாக்கிவிடும் மாயம் திறந்த வெளியில் விரையும் இரயில்
வண்டிகளுக்கு உண்டு. அந்த அதிசயத்தை மட்டும் சொல்ல வரவில்லை
கவிதை. அலுப்பும் எரிச்சலும் ஊட்டும் வாழ்க்கைக்கு நடுவில் நம்மை
ரசனைகளுக்கு இட்டுச் செல்லும் தருணங்களை ஒரு புகைப்படம் போலக்
கவிஞர் பதிவு செய்கிறார். நல்ல snap shot. ஆனால் அந்தத் தொழில் நுட்பம்
மட்டுமல்ல, இயந்திரமயமாகிவிட்டது வாழ்க்கை என அலுத்துக் கொள்ளும்
கவிதைகளுக்கு இடையே மனிதர்கள் அலுத்துப் போகிறார்கள், இயந்திரம்
உயிர்ப்பிக்கிறது என வாழ்வின் மறுதலையை (converse) பேசமுற்படும் அந்த
மாறுபட்ட பார்வை யோசிக்க வைத்தது. அதை அவர் உரத்துப் பேசாமல்,
மேசையைத் தட்டி வாதிடாமல், டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருக்கும்
நண்பனிடம் பேசுவது போலப் பேசும் தொனி எனக்குப் பிடித்திருந்தது.
பாத்திரம் பெரிதா, அல்லது அந்தப் பாத்திரத்தைப் படைத்தவன் பெரியவனா?
கற்பனை பெரிதா, அல்லது அந்தக் கற்பனைக்குக் காரணமானவன்
பெரியவனா? ராமன் பெரியவனா? ராமனைப் படைத்த கம்பன் பெரியவனா?
யோசிக்க யோசிக்க இலக்கியத்தின் பல பரிமாணங்களையும், விடைகாண
முடியாத நித்தியத்துவம் பெற்ற கேள்விகளையும் எழுப்பியது ஒர் கவிதை.
கல்வியை நினைத்த இடத்திற்கு எடுத்துச் செல்லும் மாயக் கம்பளத்தோடு
ஒப்பிட்டு (அந்த ஒப்பீட்டையும் நுட்பமாகச் செய்து) எழுதப்பட்ட ஒரு
கவிதையும் வாசிக்கக் கிடைத்தது. அந்தக் கவிதையை ஒரு கதை போல
நெய்திருந்தார் கவிஞர். கல்வியின் அவசியத்தைப் பற்றி தமிழ்க் கவிதைகள்
காலம் காலமாகப் பேசுகின்றன. உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாமல் கற்றல் நன்றே என்ற சங்காலக் கவிதையில்
துவங்கி கல்வி பற்றி ஒரு சில நூறு கவிதைகள் தமிழில்
எழுதப்பட்டிருக்கலாம். வெள்ளத்தால் போகாது, வெந்தணலில் வேகாது
என்பதில் துவங்கி கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது வரை
கல்வியின் பயனையும் பட்டியல் இட்டிருக்கிறார்கள். மலை வாழை அல்லவோ
கல்வி நீ வாயார உண்பாய் புதல்வி என பாரதிதாசனின் கல்வியை எளிய
வாழைப்பழமாக செய்த கற்பனையிலிருந்து இன்று நாம் வெகு தூரம்
வந்துவிட்டோம் என்பதை நினைவுபடுத்துகிறது மந்திரக் கம்பள உவமை.
ஆனால் கவிதையின் சிறப்பு அந்த அம்மா பாத்திரம். ஞானக்கூத்தனின் அம்மா
சொன்ன பொய்களில் வரும் அம்மாவின் ஜாடை கொண்ட கெட்டிக்கார
ஆனால் அன்பான அம்மா. கற்பனையும் பாத்திரமும் சமகாலத்தைப் பதிவு
செய்கின்றன. படைப்பிலக்கியத்தின் பலன்களில் அதுவும் ஒன்று.
சமகாலப் பிரசினைகளைக் கூர்மையான பார்வையோடும், ஆழமான
கவலையோடும் பார்க்கும் சில கவிதைகள், அதிலும் சுற்றுச் சூழல் கெட்டு
வருவதை, கடல்களில் எண்ணைப் படலங்களைப் பரப்பிச் செல்லும் கப்பல்கள்,
ஓசோன் படலத்தில் விழும் ஓட்டை இவை குறித்து அக்கறையோடு
எழுதப்பட்ட கவிதைகளை அதன் பின் உள்ள உலகு தழுவிய பார்வை,
எதிர்காலம் குறித்த, கேள்விகள் கொண்ட நோக்கு இவற்றிற்காகப்
பாராட்டுகிறேன். எய்ட்ஸுடன் ஒரு பேட்டி, யுத்தம் பற்றிய கவிதைகளையும்
சமகாலப் பதிவாக பார்க்கிறேன்.
(மாலனின் நடுவர் உரை தொடரும்)
Link - http://groups.google.com/group/anbud...50dc047b23dadd
I got aruthal parisu ..worth 250 rupees of tamil books
அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - இயல் கவிதைப் பிரிவு - நடுவர் மாலன்
===========================================================
முதல் ஆறுதல் பரிசுக்குரிய கவிதை
பேருந்தில்
வேர்வை, அலுப்பு
சில்லறை பாக்கி
கல்லூரிப் பெண்
அழும் குழந்தை
இவையாவும் கடந்து
ரசிக்காமல் இருக்க
முடியவில்லை பெரும் சப்தத்துடன்
இணையாகக் கடந்து போகும் ரயிலை.
- கார்த்திக் பிரபு
சென்னை
(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)
*
அன்பின் கார்த்திக் பிரபு,
உங்களின் இந்த அற்புதப் பார்வையை என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை!
உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
அன்புடனின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டதற்கு
அன்புடனின் நன்றி.
மேலும் பல நல்ல கவிதைகள் படைத்து
தமிழ்க் கவிதையுலகைச் சிறக்கச்செய்ய வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி
Bookmarks