பனிப்புலத்தில் ஒரு காலைவேளை. புலர்ந்தும் புலராத காலையில் குளிருக்கு இதமாக போர்வைக்குள் சுருண்டிருந்தேன். அலார அரக்கன் பலமாக அடித்தும் கட்டிலைவிட்டு எழாத எனக்கு அலுவலகத்தில் எனக்கே எனக்காக காத்திருக்கும் மேலதிகாரியின் முகம் நினைவில் வந்தது. துள்ளி எழுந்து தயாராகி ரயிலைப்பிடிக்க பாதாள ரயில்நிலையத்துக்கு விரைந்தேன்.
மணி எட்டானாலும் இருட்டு அப்பி இருந்தது. பனிகாலத்தில் பொதுவாக அப்படித்தான் என்றாலும் இன்று அதிகமாகவே இருட்டாக இருந்தது. திடீரென வெளிச்சம் பளிச்சிட்டது. ஆகா மின்னல் அடிக்கிறதே என நினைத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தான் தண்ணீர் மேகங்கள் கருக்கட்டி இருந்தன. ஓட்டமும் நடையுமாக ரயில் நிலையத்தை நோக்கிப் போனேன்.. மின்னலும் என்னை விரட்டிக்கொண்டே இருந்தது.
பாதாள ரயில் நிலையத்துக்குள் நுழைந்தேன். புறப்படுவதற்குத் தயாராக இருந்த ரயில் ஒன்றில் ஏறிக்கொண்டேன். ரயிலுக்குள் பார்வையைப் பரவவிட்ட எனக்கு மீண்டும் மின்னலடித்தது போன்ற உணர்வு. பாதாளத்தில் செல்லும் ரயிலில் எப்படி மின்னலடிக்க முடியும். இது மழை மின்னல் போல இல்லையே? என் வாழ்வில் இதே போன்ற ஒரு மின்னலை முதல் ஒருதடவையும் உணர்ந்திருக்கின்றேனே? எப்போது...? சிந்தித்தேன்.ஆம். இன்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே மின்னல் என்னைத்தாக்கியது. கல்லூரிப்பருவத்தில் தாக்கியது. பாதாளரயில் முன்னோக்கிப்போக எனது நினைவு ரயில் என் வாழ்க்கைப்பாதையில் பின்னோக்கிப் போனது.
அம்மன் கோவில்த் திருவிழாக்காலம். ஊரெல்லாம் விழாக்கோலம். முழு நிலவு ஒளியைப்பாய்ச்ச மின்நிலவுகள் வெளிச்சம்பாய்ச்ச ஆத்தா வீதிஉலா வந்தா. வழக்கம் போல நம் நாட்டுமின்சாரம் வேலை நிறுத்தம் செய்ய நிலவு மட்டும் ஒளிதந்துகொண்டிருந்தது. சும்மா சொல்லக்கூடாது. நிலவில் கூட ஆத்தா ஜொளித்தா. அப்போது ஒரு மின்னல். பக்கத்தில் நின்ற நண்பனைக் கேட்டேன். தனக்கு அப்படி உணர்வில்லை என்று சொன்னான். அப்படியானால் எனக்கு மட்டுமா? ஆம்... எனக்கு மட்டுமே. அத்தாவுக்குப் பக்கத்தில் ஒரு மின்னல் பெண். அவளே எனக்கு மட்டும் பளிச்சிட்ட மின்னலுக்குக் காரணம்.
நிலவொளியில் அவள்கூட தேவைதயாகவே இருந்தாள். ஒரு தேவதை இன்னொரு தேவதையை வணங்குகின்றது என நினைத்துக்கொண்டேன். நிலவு போன்ற முகம். வில் போன்ற புருவங்கள். கவிதை சிந்தும் கண்கள். கூரான மூக்கு. ஆப்பிள் கன்னம். அப்போதடித்த குளிர் காற்றில் நெற்றியில் விழுந்த சுருள்முடியை அவள் லாவகமாக எடுத்துவிட்டபோது என் இதயத்தையும் சேர்த்து எடுத்துவிட்டாள். பிரம்மன் என் முன் வந்து அவளை விட அழகான ஒருத்தியைப் படைத்துத் தருகின்றேன்; அவளை விட்டு விடு என்று சொன்னால் மறுத்து விடுவேன். இவள் போன்ற ஒருத்தியையே அவன் படைப்படு முடியாத காரியமாக இருக்கும்போது அவளை விட அழகானவளை எப்படி.......?
அப்போதுதான் வானத்து நிலவும் என் பூமி நிலாவைக் கண்டிருக்கும் போல. அது இரு நிலவு தேவையில்லை என நினைத்து மறைந்துகொண்டது. இல்லை..இல்லை...அவள் அழகைப் பார்த்து வெட்கத்தில் மறைந்துகொண்டது. எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. தான் செய்த தவறை உணர்ந்து வானத்து நிலா வெளியே வந்தபோது என் மின்னல்நிலா மறைந்துபோனது. கண்களில் அவளைச் சுமந்துகொண்டு மறுநாள் கல்லூரிக்குப் போனேன்.
அங்கே அதே மின்னல்பெண். எனது வகுப்பறையில். ஆசிரியர் உதவியுடன் அவள் பெயர் நிஷா என்று தெரிந்தது. நிலவுக்கு நிஷா என்ற பெயர். பொருத்தமாக இல்லை? அன்று முதல் அவளை பார்ப்பதே என்வேலையாகிப் போய்விட்டது. அதனால் மற்றவர்களை என்னாம் பார்க்க முயாமல் போனது. அதை நான் உணர்ந்தது காலம் கடந்தபின்னரே!
அவளை நான் பார்த்ததும் அவள் என்னுள் புகுந்ததையும் என் நண்பனுக்குக் கூட சொல்லவில்லை. அவளை எனக்குள் சுமந்துகொண்டு காதலில் மிதந்தேன். அவள் என்னைக் காதலிக்கின்றாளா என அரிய ஆவல் கொண்டேன். அவளை அறிய முன்னர் நண்பனிடம் கேட்ட்கலாம் என நினைத்தேன். அவனிடம் சொல்ல நான் வாயெடுக்க அவன் முந்திக்கொண்டான்.
வாழ்த்துகள் சொன்னான் எனக்கு. காரணம் புரியவில்லை. அவனே சொன்னான். 'நிஷா உன்னைக் காதலிக்கிறாள்' என்று. ஆகாயத்தில் மிதப்பதுபோன்ற உணர்வு எனக்கு. ஆகாயம் என்ன ஆகாயம். வேறொரு உலகத்தில் நானும் அவளும் பறப்பதுபோன்ற உணர்வு. அந்த உணர்வுடன் இருந்திருக்கலாம். அப்போது பார்த்தா என் ஆறாவது அறிவு வேலை செய்யவேண்டும். 'உனக்கு எப்படித் தெரியும்?' என்று அவனைக் கேட்டேன். பார்வையைத் தாழ்த்திக்கொண்டு'நான் அவளைக் காதலித்தேன். காதலைத் தெரியப்படுத்தும்போது அவள் உன்னைக் காதலிப்பதாகச் சொன்னாள்' என்றான்.
ஆகாயத்தில் பறந்த நான் சட்டென்று கீழே வீழ்ந்த மாதிரி உணர்வு. வேறொரு உலகத்தில் இருந்தவன் மீண்டும் நரக பூமிக்கே வந்த்துவிட்டேன். தலையைத் தாழ்த்திய நண்பனின் கண்களில் கண்ணீர் அரும்புவதைப் புரிந்துகொண்டேன். காதலை மறந்தேன். நட்பை நினைத்தேன். நிஷாவிடம் போனேன்.
அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. நிலத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னேன். 'நீ....நீங்க என்னைக் காதலிப்பதாக நண்பன் சொன்னான். மன்னித்து விடுங்கள். நான் உங்களைக் காதலிக்கவில்லை' சொல்லி முடித்ததும் திரும்பி நடக்க முயன்ற என்னை தேன்மதுரக் குரல் நிறுத்தியது. சித்திரம் முதன்முதலாக என்னிடம் பேசுகின்றது. 'நான் கூட உங்களைக் காதலிக்கவில்லை' இதற்கு அவள் பேசாமலே விட்டிருக்கலாம். 'உங்கள் நண்பனின் காதலை மறுப்பதற்காகப் பொய்சொன்னேன். . உங்கள் நண்பனிடம் அவ்வாறு சொன்னதற்காக மன்னித்து விடுங்கள்' சொல்லி விட்டு அவள் சென்று விட்டாள்.அதன் பின்னர் அவளை நான் காணவில்லை.
அன்று அவளைப் பார்த்தபோது வெட்டிய அதே மின்னலே இப்போதும். ஆழமாக ரயிலைத் துலாவினேன். ஆம்....அவளேதான். அதே மின்னல் பெண்! அதே அழகு! அதே நிலவு முகம்! ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். என்ன எனது புரியவில்லை. அவளும் என்னை அடையாளம் கண்டுகொண்டாள். என்னை தன்னருகே அழைப்பது போன்ற உணர்வு. அவளை நெருங்கினேன். எனது பெயரைச் சொல்லி பக்கத்திலிருந்தவனுக்கு என்னை அறிமுகப்படுத்தினாள். அவனைத் தனது கணவன் என்று எனக்கு அறிமுகப்படுத்தினாள்.
ஹல்லோ என்றவாறு கையை நீடினேன். கையைப்பிடித்துக் குலுக்கியவன் தனது பெயரைச் சொன்னான். ஏதோ ஒன்று சடுதியாக நின்றதுபோல இருந்தது. என் இதயமோ என நினைத்தேன். ரயில் என்று தெரிந்த பின்னரே நான் உயிருடன் இருப்பது தெரிந்தது. அவன் பெயரும் எனது பெயரும் ஒரே பெயர். நிஷாவின் முகத்தை ஏறிட்டுப்பார்த்தேன். என் காதலியாக கவிதை சிந்திய கண்களில் இப்போ நிரந்தரமாகிவிட்ட கண்ணீர் மேகங்கள் கருக்கட்டியிருந்தன. அவளும் என்னைக் காதலித்தாள் என்ற செய்தியை மௌனமொழியில் சொல்லின.
Bookmarks