இது மன்றத்தில் என் முதல் கவிதையல்ல, நான் என் வாழ்நாளில் எழுதும் முதல் கவிதை..! காதலித்தால் கவிதை வருமென்பார்கள். காதலையே வாழ்க்கையாக கொண்ட என்னை கவிதை மட்டும் காதலிக்கவே இல்லை. "கிட்டாததை வெட்டென மற" என்பதை மனதில் கொண்டு அதன் பிறகு கவிதையை எழுத நான் கனவிலும் நினைத்ததில்லை. காதல் கொடுக்கும் உணர்வுகள் தான் கவிதை என்றால் அதை நான் எழுத்தில் வடித்தால் ஆயிரம் அத்தியாயங்கள் அட்டகாசமாக முடிந்திருக்கும். ஆனால், வார்த்தை ஜாலம் எனக்கு வஞ்சனை செய்ததில், என்னை பார்த்தால் "பற்றிக்கொண்டு" வரும் கவிதைக்கு..!!
சமீபத்தில் தமிழ் மன்றக்களம் என்னுள் எதையோ உசுப்பி விட்டு "கவிதை" எழுத முடியும் என்று எழுத "விதை" போட்டு "கதை' கட்டிவிட்டது. மன்ற நண்பர்கள் நல்லவர்கள், மென்மையானவர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் என் முதல் க(வி)தையை உங்கள் முன் வைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை உள்ளபடி இடுங்கள்.
காதல் பாரம்..!!
பற்றித்தழுவும் பஞ்சு மெத்தை, பட்டு விரிப்பு தருமா - என்
நெற்றி தலை முடி கோதிவிடும் என்னவளின் பட்டு விரல்கள் தரும் சுகத்தை..?
நெய் மணக்கும் உணவு, நெஞ்சை தொடும் இசையும் தந்துவிடுமா - அவள்
கை பிசைந்து காதலோடு கொடுக்கும் ஒரு கவளச் சோற்றின் ருசி..?
உலகம் சுற்றி நான் கண்ட அழகனைத்தும் ஒன்றிணைந்தாலும் - என்னை
கலங்கடிக்கும் காதல் தேவதையின் அழகிற்கு ஈடாகுமா?
மண்ணில் நான் உதித்த காரணத்தை அறியாது தவித்திருந்தேன் - மங்கை அவள்
என்னில் கலந்த போது அதன் காரணம் அறிந்து ஆறுதல் கொண்டேன்.
நெஞ்சின் உறுதியை நேசத்திற்குரியவளுக்கு இரும்பிற்கு ஈடாய் வைத்த இறைவன்
பஞ்சினும் மென்மையாய் உருமாறி உள்ளன்பை காட்ட படைத்ததேனோ..?
முள்ளாய் மாறி முகம் கூட காட்ட மறுத்த என் வண்ண ரோசா - என் கரம் பற்றிய பின்
கள்ளாய் மாறி காதல் போதை ஏற்றும் கண்கட்டு வித்தை நிகழ்ந்தது எப்படி..?
நானே எனக்கு பாரமாகி போய் பரிதவித்திருக்கும் வேளையில் - அந்த கனிமுக கங்காரு
தானே விரும்பி ஏற்று, நான் தந்த உயிர் தாங்கி தன்னிகரற்ற தாயாய் ஆனாளே..!!
Bookmarks