மனிதத்தின்
மகத்துவம் சொல்பவை மதங்கள்!
தாவரத்தையும் உயிராய் மதிக்கும் மதங்கள்
தீவிரவாதத்தை போதிக்குமா?
மதம் ஏற்று அதன்
வழி நடப்பது மனிதம்!
மதம் பிடித்து வழி தவறினால்
அது மனிதத்தின் மரணம்!
விதைகளைப்பார்!
எங்கு விழுந்தாலும் முளைக்கும்
இந்துவின் நிலமென்றும்,
இசுலாமியர்களின் நிலமென்றும்,
கிறித்தவர்களின் நிலமென்றும்
எவரின் நிலமென்றும் பார்க்காமல்
விழுந்த இடத்தில் வளரும்!
இனம் சொல்லும் கனிகளில்லை
இன்னார்க்கென்று இலைகள் இல்லை
மதம் பூசிய மலர்களில்லை
எல்லோர்க்கும் எல்லாமும் தரும் தரு!
அது உன்னதத்தின் உரு!
நீயும் விதையாய் விழு!
விருட்சமாய் எழு!
அன்பு கொடுத்து அன்பு வாங்கு!
நேசித்து நேசிக்கப்படு!
எதிரிகள் என்று எவரும் இலர்
மதத்தின் துணையால் மனிதம் வளர்!
Bookmarks