அந்த இறுதி ஆட்டத்தில் ஆஸி அணியின் ஆட்டக்காரரான ஆடம் கில்கிறிஸ்ட் 104 பந்துகளில் 149 ஓட்டங்களை எடுத்து தமது அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
ஆனால், தற்போது ஆடம் கில்கிறிஸ் தனது கையுறையினுள் ஸ்குவாஷ் விளையாடிற்காக பயன்படுத்தப்படும் ஒரு பந்தை வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் அந்தப் பந்தை வைத்திருந்தது அவருக்கு கூடுதல் சக்தியை கொடுக்காவிட்டாலும், மட்டையின் மீது கூடுதல் பிடிமானத்தை கொடுத்தது என்கிற புகார் எழும்பியுள்ளது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியோ அல்லது அந்த அணியுடன் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்ற அணியின் நிர்வாகமோ இதுவரை எந்தப் புகாரையும் கூறவில்லை. ஆயினும், இந்தச் செயல் கிரிக்கெட் விளையாட்டின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் குறைக்கும் ஒரு செயலாகும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலர் மதிவாணன் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமது அணியின் தோல்வியை ஒப்புக் கொண்டாலும், இவ்வாறான செயல்கள் ஆட்ட விதிகளின்படி தவறில்லை என்றாலும், கிரிக்கெட் விளையாட்டு கண்ணியமான முறையில் ஆடப்பட வேண்டும் எனத் தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து பேசுவது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சங்கத்தினர் விவாதித்து வருவதாகவும் கூறினார்.
Bookmarks