பாதச் சுவடுகள்
என் உற்ற நண்பருக்கு அர்ப்பணம்!
என் மடல்:
நடந்து வந்த பாதை
திரும்பிப் பார்க்கிறேன்
அழகாய் இரு ஜோடி
அடுத்து நடந்தபடி
பதித்த சுவடுகள் - வாழ்க்கைப்
பாதைப் பதிவுகள்
துள்ளித் தவழ்ந்தபோது
பள்ளி கற்ற போது
பரிசுகள் பெற்ற போது
பதவிகள் உயர்ந்தபோது
உறவுகள் மலர்ந்தபோது
உயிர்க் குருத்து பிறந்தபோது
அணுவும் எனை விலகாது
அடியொற்றி எனை ஒட்டி
பாதுகாத்து வந்ததுபோல்
பாதை நெடுக சுவடு கண்டேன்!
என்னே என்மேல் கரிசனம்
வேண்டாமல் நீ தந்த தரிசனம்
கருணைக்கு மறு பெயர் நீதான்- உன்
பெருமைக்கு ஈடிங்கு யார்தான்
இன்னும் கொஞ்சம் உற்றுப்பார்க்க
என்ன இது கொடுமை!
தென்றல் வீசும் பூங்காவில்
ஒன்றாக உலாவிவிட்டு
புயல் அடித்த பொழுதில் எல்லாம்
அயலாய் என்னை விட்டதென்ன?
நெஞ்சம் பிளந்து உதிரம் உறிந்தாளே-அந்த
வஞ்சினக் காலம் ஒரு காலடி
நோயெனும் தீயில் தீய்ந்து எமன்
வாயில் வரை போன காலம் ஒரு காலடி
வேலை இன்றி வறுமையெனும்
பாலையில் நான் வறண்டகாலம் ஒரு காலடி
குற்றம் செய்யாமலே தப்பாய் புரிந்த நண்பர்
அற்றுப் போன வேதனைக்காலம் ஒரு காலடி
அறுவடை காலம் உடன் வந்த தோழன்
அடைமழைக் காலம் போனது எங்கே
நிச்சயம் உன் துணை வேண்டி உருக
நைச்சியமாய் நீ மறுத்ததற்கு சாட்சி இங்கே
இஷ்டப்பட்டால் கூட வருவாய்
கஷ்ட காலம் தனியாய் விடுவாய்
பேரன்பு உனக்கு என்று சொன்னவன் யார்?
பேர் உனக்கு கடவுள் என்று தந்தவன் யார்?
பதில் மடல்
துன்பச் சகதியில் உன் பிஞ்சுப் பாதம் சிக்காமல்
தூக்கி நான் சென்ற காலம் ஒரு காலடி!
Bookmarks