Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 84

Thread: வெண்பா எழுதுவது எப்படி?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1

    வெண்பா எழுதுவது எப்படி?

    வெண்பா எழுத வேண்டும் என்று என் மனதின் ஓரத்தில் ஆசை உள்ளது..
    அதன் சூட்சுமமும் ஓரளவிற்கு அறிந்துள்ளேன்..

    வெண்பா எழுத தெரிந்தவர்கள் யாராகிலும் விளக்கமாக
    சொல்லிகொடுங்களேன்...

    திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை என்று அறிந்திருக்கிறேன்..

    உங்கள் விளக்கங்களும் வெண்பாக்களும் தாருங்கள்..

    இணையத்திலிருந்து கீதா என்பவர் எழுதின சில வெண்பாக்கள்
    நன்றி கீதா...
    http://geeths.info/archives/category/venba-muyarchi/

    சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
    ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
    தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
    தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.


    விளக்கம்:
    தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும்.
    அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.

    வெண்பாவின் சூட்சுமம்... நான் அறிந்தவரையில்...

    சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
    ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
    தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
    தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.


    முதல் இரண்டு அடியில்
    ஒரே உச்சரிப்பை உடைய வார்த்தைகள் மூன்று இடத்திலும்
    அடுத்த இரண்டு அடியின் தொடக்கத்தில்
    ஒரே உச்சரிப்பை உடைய இரண்டு வார்த்தைகள் வருகின்றன..

    எல்லா வெண்பாக்களையும் நான் ஆராய்ந்த வரையில் இம்முறையிலேயே அமைந்துள்ளன..

    ஆனால் இலக்கணப்படி எப்படி எனறு தெரியவில்லை.

    வெண்பாவின் வகைகள்..

    குறள் வெண்பா
    சிந்தியல் வெண்பா
    நேரிசை வெண்பா
    இன்னிசை வெண்பா
    பஃறொடை வெண்பா
    சவலை வெண்பா

    வெண்பா முயற்சியில் சூட்சுமம் தெரியாமலே பல வருடங்களுக்கு முன்பாய் எழுதிய ஒன்று...


    விழிநீர் இரவெல்லாம் தலையணை நனைக்க
    வலியோடு உறங்குகிறேன் நிலவே - சில இரவுகள் மட்டும்
    உமிழ்நீர் தலையணை நனைக்க உறங்குகிறேன், உன்
    இதழ்கள் அன்றெல்லாம் என்னைக் கண்டு புன்னகைத்திருந்திருக்கும்...


    நிச்சயம் ஏகப்பட்ட குறைகள் இதிலே இருக்கும்...

    கவிதைகளில் வெண்பா எழுதுவது மிகவும் ரசனையான ஒன்று...

    வெண்பா எழுத தெரிந்தவர்கள் யாராகிலும் இன்னும் விளக்கமாக
    சொல்லிகொடுங்கள் நண்பர்களே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நல்ல பகுதி ஷீ வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்தேன்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Dec 2003
    Location
    சென்னை,தமிழ்நாட&
    Posts
    170
    Post Thanks / Like
    iCash Credits
    8,890
    Downloads
    0
    Uploads
    0
    மா முன் நிரை
    விளம் முன் நேர்
    காய் முன் நேர்

    வர வேண்டும்.
    -------------------------------------
    இது பூக்கட்டுவது போல. வார்தைகளிக்(சீர்) கட்டுவது.
    சங்கிலி பொல பிணைத்து கொண்டு செல்ல வேண்டும்.
    -------------------------------------------
    சேர்கின்ற நேன் நேர் நேர் =தே மாங் காய்
    மாசுகளை நேர் நிரை நேர் =கூ விளங் காய்.

    நிலை சீர்= காய் சீர்.(தே மாங் காய்)
    வரும் சீர் முதல் அசை =நேர்.

    எனவே காய் முன் நேர்
    ------------------------------------
    மாசுகளை நேர் நிரை நேர் =கூ விளங் காய்
    தன்னுடனே நேர் நிரை நேர்=கூ விளங் காய்.
    நிலை சீர்= காய் சீர்.(கூ மாங் காய்)
    வரும் சீர் முதல் அசை =நேர்
    எனவே காய் முன் நேர்

    ---------------------------------
    இன்னும் விளக்கமாக கொடுக்க ஆசை. நேரம் கிடைக்கும்போது பதிக்கிறேன்.
    Last edited by sriram; 12-04-2007 at 12:58 PM.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு நண்பரே,
    இப்போது உங்களுக்குத் தோன்றியதைப்போல எனக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெண்பா பற்றி அறிந்து கொள்ளத் தோன்றியது. அப்போது திரட்டிய சில விசயங்களை திஸ்கி மன்றத்தில் பதிவு செய்தேன். அவற்றை இப்போது உங்கள் பார்வைக்காக ஒருங்குறியில் தருகிறேன். பெரிய பதிவு என்பதால் தனித்தனி பதிவுகளாக இடுகிறேன். உங்களுக்கு பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வெண்பா ஓர் அறிமுகம் - பூர்வபீடிகை

    புலவர்க்கு வெண்பா புலி என்று ஒருத்தர் கதை அடிச்சாலும் அடிச்சார். வெண்பா என்றால் ஏதோ, யாராலும் திருத்தமான வடிவத்தில் எழுத முடியாத ஒன்றைப் போலவும், இந்தக் காலத்து - அதான், கணினி, இணையம் இன்ன பிற - தேவைகளுக்கு ஈடு கொடுக்க இந்த வடிவத்தால் முடியவே முடியாது என்று அடம் பிடித்தும், அப்படி எழுதினால் யாருக்கும் புரியாது என்றும், அதெல்லாம் வெறும் மாட்டு வாகட சாஸ்திரம் எழுதத்தான் லாயக்கு என்றும் ஒரு பெரிய கும்பலே ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறது.

    வெண்பாவைக் கண்டுபிடித்தவன் காட்டுமிராண்டி, எழுதுபவன் அயோக்கியன், படிப்பவன் முட்டாள் என்று வெண்தாடி வைத்த, வைக்காத பெருங்கவிக்கோக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒரு முழு தலைமுறைக்கே வெண்பாவைப் பற்றி எதுவும் தெரியாமல் போய்விட்டது.

    வெண்பா மிக அழகான, சுருக்கமான வடிவம். நறுக்கென்று சொல்வதற்குத் தோதானது. கட்டுப்பாடு மிகக் குறைவு. நாலு லைன்தான் எழுத வேண்டும் என்று கட்டுப்பாடே கிடையாது. இரண்டடியில் எழுதலாம். (ஒண்ணே முக்காலடி என்பதெல்லாம் சும்மா. ஜோக்கு. இரண்டடி என்பதுதான் technically correct. திருக்குறள் ஒண்ணேமுக்காலடி என்றால், பிறகு நாலடியாரை மூணேமுக்கால் அடியார் என்று அழைக்க வேண்டியிருக்கும்.)

    மூன்றடியில் எழுதலாம். நான்கடியா, ஆறா. ஐந்தில்தான் நிறுத்துவேன் என்கிறீர்களா? ம்! தாராளமாக. ஆறு முதல் பன்னிரண்டு அடியில்தான் எனக்கு வரும் என்கிறீர்களா? பேஷ். நன்றாகச் செய்யலாம். இல்லை, அதெல்லாம் போதாது என்றால், பதின்மூன்றில் ஆரம்பித்து, ஆயிரமும் அதற்கு மேலும் அடிகள் கொண்டதாகச் செய்யலாம். ஒரு விஷயம் தெரியுமா? பாரதியின் குயில் பாட்டு முழுக்க முழுக்க வெண்டளைதான். கலிவெண்பா என்றே சொல்லிவிடலாம்.

    வெண்பாவில், 'திடீரென்று இன்னிக்கு முடிவெடுத்து நாங்க ரெண்டுபேரும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் போயிட்டு வரப்போறோம்' என்ற செய்தியிலிருந்து எதை வேண்டுமானலும் சொல்ல முடியும். அந்தப் பாட்டைத்தான் பாருங்களேன்:

    இன்று திடீரென்(று) எடுத்த முடிவதனால்
    ஒன்றாகச் செல்கின்றோம் உள்வெளிக்குள் - கன்றாக
    அண்ணா மலைரமணர் ஆசிரமம் போய்வந்து
    வெண்பா வடிக்கலாம் வா.


    நான் எழுதினதுதான். நண்பனோடு (கல்லா மாவில் வந்தே அதே நண்பனோடு) ரமாணஸ்ரமம் போய்விட்டு வருகிறேன் என்ற சிம்பிள் செய்தி.

    பட்டணம் முழுக்க விரவியிருக்கும் பட்டன் பால் கறக்கும் இயந்திரத்தைப் பற்றி ஒன்று:

    கனைக்காது, கண்டபடி மேய்ந்தெங்கும் கன்றை
    நினைந்தெதையும் சேறு நிறைத்து - வனைக்காது
    தொட்டாலே போதுமுங்கள் தூக்குக் குவளையெல்லாம்
    பட்டன் கறந்திடும் பால்.


    நகரத்தில் குப்பை பொறுக்கியும், ஷு பாலிஷ் போட்டும் திரியும் சின்னப் பையன்களைப் பற்றி (சின்னப் பெண் குழந்தைகள் இப்படித் திரிந்தால் கொதித்தெழுவார்கள். ஆம்பளப் பசங்க என்றால் கண்ணெடுத்துப் பார்க்கவும் ஆளிருக்காது.)

    குப்பை பொறுக்கும்கை கோணி சுமக்கும்கை
    கப்பு கழுவும்கை கைவலிக்க - உப்பிட்ட
    வேர்க்கடலை சுண்டல் மிளகுவடை விற்கின்ற
    கார்துடைக்கும் பிஞ்சுகளின் கை.


    இன்னொரு குட்டிப் பையனைப் பற்றி:
    சட்டைத் துணியால் தரைபெருக்கிக் கால்தொட்டும்
    எட்டிப்போ என்பதுவே ஏச்சு.


    வெண்பாவால் பளிச்சென்று சொல்ல முடியாத ஒன்று கிடையவே கிடையாது. முத்தொள்ளாயிரம் (அதற்கு முன்னும்?) தொடங்கி, வெண்பாவின் வீச்சைப் பார்க்கலாம். நளவெண்பாவில் நளினமாக நடப்பதைப் பார்க்கலாம். காளமேகத்தின் வாயில் புகுந்து விளையாடியிருப்பதைக் காணலாம்.

    இன்றும், சரியானபடி உபயோகிக்க ஆள் கிடைத்தால் தகத்தகாயமாகச் சுடர அது காத்திருக்கிறது. இன்றைய இளைய தலைமுறை அது ஏதோ டைனாசர் என்று நினைத்துக் கொள்கிறது. கவிதைக்கு வரைவிலக்கணம் கிடையாது என்று சொன்னால், ஒரு புத்தகப் புழு, 'ஆமாமாம். மரபுக் கவிதையா எழுதுகிறோம்? அதுதான் செத்துப் போய்விட்டதே, புதுக்கவிதைக்கு வரைவிலக்கணம் கிடையாதுதான்' என்று சொல்கிறது. ஏதோ வீரியமிழந்த ஒன்று என இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, இவர்கள் மனத்தில் ஒரு ஒவ்வாமையை விதைத்து, இவர்களை அதன் சுக அனுபவத்திலிருந்து எட்டி நிற்க வைத்திருக்கும் என் தலைமுறையே இந்தக் குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

    நகரம் நானூறு என்று நானும் மத்தளராயரும் ஆரம்பித்தோம். நானூறு வெண்பாக்களில் நகரக் காட்சிகளைப் பிடிப்பது என்று திட்டம். முடங்கி
    நிற்கிறது. தொடர்வோம். முடிப்போம்.

    அது ஒரு பக்கம் இருக்கட்டும். வெண்பாவை எளிய முறையில் அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு யோசனை. நிறைய பேர் சொல்லிவிட்டார்கள்.

    டாக்டர் வாஞ்சிநாதன், யாப்பறிஞன் என்று ஒரு வெண்பா வழிகாட்டியே Python உபயோகித்து எழுதினார். வெண்பாவில் எங்கெங்கே தப்பு, எதெது ரைட்டு என்று கம்ப்யூட்டர் சொல்லிவிடும். ஆனாலும் நமக்கென்று ஒரு வழி இருக்கிறதில்லையா? (ஆமாமாம். ஊருக்கெல்லாம் ஒரு வழி. ஒன்றரைக் கண்ணனுக்கு....;-)) அடிப்படையில் ஆரம்பித்து, பகுதி பகுதியாக இந்த தேசிங்குராஜன் குதிரையை வசக்குவோம், வறீங்களா? நேர்- நிரை-நிரை உன்-தலை-யெலாம் நரை என்று ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒன்று. குறைஞ்சபட்சம் பத்து கையாவது 'ஓ' போட்டால்தான் அடுத்த அடி
    எடுத்து வைப்பேன் என்று என் குதிரை சொல்கிறது. ஆரம்பிக்கலாம் என்றால் சொல்லுங்கள். லெடஸ் ப்ளே என்று சித்தப்பா கணக்கா கிளம்பி விடுகிறேன். (ராம் தூங்கறாரா, முழிச்சிட்டுருக்கிறாரா பாரு... அட பாருய்யான்னா...அதான், ஆறு தூங்குதா முழிச்சிட்டு இருக்கான்னு பாக்க உபயோகப்படுத்தின அதே கொ. கட்டையைக் கொண்டுதான்....)

    அன்புடன்,
    ஹரி கிருஷ்ணன்.

    ஒரு பின்னறிவிப்பு: ரொம்ப மொழிச் சுத்தம் பார்க்கிறவர்கள் தயவுசெய்து இந்தக் கட்டுரைத் தொடரை (அதாவது அப்படி ஒன்று ஆரம்பித்தால்) படிக்க வேண்டாம். இது டேக்கிடீசி பாலிசி (ஜீவன் சுரக்சாவைத் தந்தவர்களிடமிருந்து இன்னொரு பாலிசி??)ஆசாமிகளுக்கும், இந்தக் காலப்பசங்களுக்கும். எம் பாசை எப்படி வேணுமானாலும் உருமாறும். கபர்தார். மற்றவர்களுக்கு. இது நம்ம ஏரியா. பாடப் புத்தகத்தில் படித்த யாப்பிலக்கணத்தை விட்டுவிடுவோம். நமக்கென்று ஒரு கோண வழி இருக்கில்லையா, அந்த வழியா போவோம்.

    (அன்பு நண்பர்களே....
    நான் பார்த்த ஒரு சில தளங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு வலைப்பூவின் சில பகுதிகளை மட்டும் இங்கே தருகிறேன். இதன் முடிவில் நீங்கள்தான் எனக்கு உதவப் போகிறீர்கள்...!)


  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வெண்பா ஓர் அறிமுகம் - 'ஆறாம்திணை' கட்டுரை

    பார்க் பெஞ்சில் புதுக்கவிஞர் புதுக்கூத்தன் உட்கார்ந்திருந்தார். மரபை உடைத்துக் கொண்டு மளமளவெனப் பெருகும் கவிதையைத் துண்டில்
    முடியலாமா இல்லையெனில் தூக்கி ஜோல்னாவில் போட்டுக் கொள்ளலாமா என்று தீர்மானிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த போது வினாயக மூர்த்தி வந்தார். பேசும்போதே வெண்பாவாகக் கொட்டும்.

    இவரும் புதுக்கவிதைப் புதுக்கூத்தனும் நண்பர்கள். நெடுநாள் நண்பர்கள் என்பதைக் கூட மரபுவழி நண்பர்கள் என்பார் வினாயக மூர்த்தி. புதுக்கூத்தனுக்கோ மரபு என்பதே கெட்ட வார்த்தை. மரபு, சிந்தனை ஓட்டத்தைத் தடுக்கிறது என்பது அவருடைய பிடிவாதமான வாதம். பக்கவாதம். (ஒரு பக்கமான வாதம் என்றேன்.)வி. மூர்த்தி மரபுதான் இயற்கையான வழி. அதை மீறுபவர்கள் இயற்கையை மீறுகிறார்கள் என்பார்.

    ரெண்டு லைன் முன்னே சொன்ன மாதிரி, சாதாரணமாகப் பேசுவதற்கே வெண்பாதான் இவருக்கு. ரொம்ப நாட்களாக புதுக்கூத்தனைத் தேடிக்கொண்டிருந்தார். இன்று அவரைப் பார்த்ததும் தலைகால் புரியவில்லை.

    "வசமா மாட்டிக்கிட்டியா? இன்னிக்கு என்னத் தாண்டிப் போயிருவியான்னு பாத்துர்ரேன்" என்று சந்தோஷமாகக் குரல் எழுப்பினார். புதுக்கவிஞர் யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, "என்னா, உள்ற கவிதை ஓடிக்கிட்டுருக்கா?" என்றவாறு ஒரு வெண்பாவை விட்டெறிந்தார்.

    யோசித்துக் கொண்டு யுகமுழுதும் நின்றாலும்
    வாசிக்க ஓர்வார்த்தை வந்திடுமோ - நீசிக்க
    வேண்டிக் கிடந்தேன் விழுந்தாய்நான் இன்றுனக்குத்
    தாண்ட முடியாத் தடை.


    பு. கூத்தனுக்குப் புர்ரென்று வந்தது. "ம்க்கும். குன்னக்குடி வைத்யநாதனாட்டம் பேசறதையெல்லாம் பாடிப்புட்டா கவிதையாக்கும். நல்லா நறுக்குன்னு சொல்ல முடியுமாடா ஒங்க மரபுல?"

    பார்த்தார் விமூ. இது அவருடைய தன்மானம் பற்றிய சமாச்சாரம். "நறுக்கிப்புடுவேன் நறுக்கி" என்றார்.

    நறுக்கென்று சொல்லணுமா? நாலுவரிப் பாட்டில்
    நறுக்காத வார்த்தை நடக்கும் - நறுக்கில்
    நறுக்காக நான்சொல்லும் பாட்டுன்வால் ஒட்ட
    நறுக்கும்பார் நல்லா நறுக்கு.


    நல்லா நறுக்குன்னு சொல்ல முடியுமா என்று கேட்ட பு. கூத்தனின் கேள்வியைக் கடைசியில் வைத்து வெண்பாவை முடித்தார். "அதென்ன நறுக்கில் நறுக்காக" என்றார் புதுசு. "நறுக்குன்னா, ஓலை நறுக்கு. அதுக்கு அடுத்த நறுக்கு நறுக்கா எழுதற நறுக்கு" என்றார் விமூ. புதுசு உற்சாகமானார்.

    "அதான கேட்டேன். ஓலை நறுக்கில எழுதற காலம் போயிடுச்சுனாலும் ஒங்களுக்கு இன்னும் அந்தப் புத்தி போகல பாரு. இப்ப ஏதுடா ஓலை?"

    "காகிதத் துணுக்கக் கூட நறுக்குன்னு சொல்லலாம். அவ்வளவு ஏன்? கம்ப்யூட்டர்ல file -ன்னு சொல்லுவாங்க பாரு, அதக்கூட நறுக்குன்னு சொல்லலாம். பல நறுக்குகள் ஒண்ணா சேந்திருக்கிற directory-யைக் கோப்புன்னு சொல்லலாம். இப்பல்லாம் fileஐத்தானே கோப்புன்னு சொல்றாங்கன்னு பாக்குறியா? எனக்கென்னவோ directoryக்குத்தான் அது பொருத்தமாயிருக்கும்னு படுது"

    "நீ வுட்றது ரீல் இல்ல. கேபிள் ட்ரம்." என்றார் புதுசு. "இன்னும் வெண்பாவக் கட்டிட்டு ஏண்டா அழறீங்க? காலம் எவ்வளவோ மாறியாச்சு. கம்ப்யூட்டர் உலக வலைப் பின்னல் காலம் இது. எனக்கு கிடச்சது ஜக்கார்டு என்று சி. மணி எழுதியிருக்கார். படிச்சிருக்கியா?ரெண்டாயிரம் வருஷமா ஒரு வடிவத்தை வச்சு ஜல்லியடிச்சிட்டிருக்கீங்க. இன்னிக்கு சூழல் எவ்வளவோ மாறியிருக்கு. அதைச் சொல்ல முடியுமாடா ஒங்க மரபுல?"

    காலங்கள் மாறிக் கணிப்பொறிகள் வந்தாலும்
    மூலந்தான் மாறிடுமோ முற்றிலுமே - காலத்தால்
    பேசுவது மாறியதா பெண்தேடல் மாறியதா
    ஏசுவது மாறியதா இன்று.


    எத்தனைக் காலம் மாறினாலும் மனுசப் பயலுக்குப் பேச வேணும். அந்த மரபு மாறாது. பெண் தேட வேணும். அந்த மரபும் மாறாது. அட கெடக்குதுன்னா நாலு வார்த்த ஏசாம இருக்க முடியுதா? அந்த மரபாச்சும் மாறிச்சான்னா அதுவும் .இல்ல. என்னிக்கு வரைக்கும் இதெல்லாம் மாறாதோ அன்னிக்கு வரைக்கும் மரபும் வடிவமும் மாற வேண்டியதில்ல.

    புதுக்கூத்தன் இதற்கெல்லாம் மசிகிற ஆளில்லை. "மரபுல சொல்ல முடியல்லன்னு தானே பெரியவங்கள்ளாம் வடிவத்த விட்டாங்க? இப்போ நம்ம ஞானக்கூத்தன் இருக்காரே அவர் சொல்றார். "எனக்கும் தமிழ்தான் மூச்சு. ஆனால் பிறர்மேல் அதை விடமாட்டேன்"-னு. இந்த மாதிரி சின்னதா சொல்ல மரபு லாயக்கில்லைன்றது என் அபிப்பிராயம்."

    "தமிழென்றன் மூச்செனினும் சற்றும் பிறன்மேல்
    உமிழாத நாகரீகம் உண்டு." என்றார் விமூ.

    "மூச்சு, விடறதா இல்ல உமிழறதா?' ஒரு point பிடித்துவிட்ட உற்சாகம் புதுசுக்கு.

    "அப்படியும் சொல்லலாம். சொல்லப்போனா உமிழ்தல் என்ற வார்த்தை அருவறுப்பை நினைவு படுத்துவதால் இதுவும் பொருத்தம்தான். நீங்க சொன்னா புது முயற்சி. நான் சொன்னா இலக்கணத்துக்கான எதுகைத் தவிப்பா?" இது வினாயக மூர்த்தி.

    "கடசி ரெண்டு வார்த்தைய வீணடிச்சிட்ட".

    "வார்த்தை இல்லடா மண்டு. சீர்."

    "ஏதோ ஒண்ணு. அப்ப நீ ஞானக்கூத்தன விடப் பெரியாளுன்ற?"

    "சத்தியமா இல்லை. மரபுலயும் சொல்ல முடியும்னு சொல்றன். அவ்வளவுதான்."

    கையிலிருந்த விண்நாயகன் பத்திரிக்கையைப் புரட்டினார் புதுசு. இடைப்பாடி ஜெ. மாணிக்ஸ் எழுதி அந்தப் பத்திரிக்கை பரிசளித்திருந்த ஒரு கவிதையைப் படித்தார்.

    உன்
    பாதக் கொலுசைக்
    கழற்றிவிடு
    இல்லாவிட்டால்
    நீ நடக்கும்போது
    தவறித் தவறி விழுகிறது
    என்
    மனசு..

    "இப்ப இத வெண்பால சொல்லணுன்ற. அவ்வளவுதானே"

    "அவ்ளோதான்"

    உன்நடையின் கிண்கிணுப்பில் உள்ளம் தவறுவதால்
    சொன்னேன் கொலுசணிந்து துள்ளி நடக்காதே
    இன்றே அதனை எடு.


    "அதுசரி. எப்போவும் நாலு லைன் சொல்லுவ. மூணோட நிறுத்திட்ட? அப்பறம் ஒரு கோடு போட்டு வருமே - அத்தயும் காணும்?"

    "வெண்பாவை ரெண்டு அடில ஆரம்பிச்சு எத்தனை அடி வேணும்னாலும் எழுதலாம். ஒவ்வொரு அடியளவுக்கும் ஒரு பேர் உண்டு. அதாக்கும் இப்ப நான் சொன்னது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. அப்பறம் கோடு போட்டு எழுதறத்துக்குப் பேரு தனிச்சொல். அது ஒண்ணாவது ரெண்டாவது அடிக்கு எதுகையா இருக்கும். ஒனக்கெல்லாம் தமிழெங்கே விளங்கப் போவுது? எதுகைனா rhyme இல்ல rhyme அது. அப்படித் தனிச்சொல் ரெண்டாவது அடில வரணும். வராமயும் இருக்கலாம்.. வந்தா நேரிசை வெண்பா. வராட்டி இன்னிசை வெண்பா."

    "அடப்போடா. அந்த எழவு வந்தாக்க கவிதையின் புனிதமே கெட்டுப்போயிடும்னு எவ்வளவு கவனமா கையாண்டுக்கிட்டிருக்கோம். ரைமாம் ரைமு"

    "தம்பி, ஒண்ணு சொல்றன் கேட்டுக்க. எதுகையும் மோனையும் இயல்பா வருவது. கடைத்தெருவுக்குப் போய்ப்பாரு. காய்கறி விக்கிறவன் கூட
    ஒரு தாள லயத்தோடத்தான் கத்துவான். தாளக் கணக்குப் பண்ணிப் பாத்தியானா அவன் கூவுற ரெண்டு லைனும் காலப் பிரமாணத்துல ஒண்ணாத்தான் இருக்கும். இல்லன்னா மொதல் வரிக்கு ரெண்டாம் வரி பாதியளவா இருக்கும். எவ்வேர் சில்ல்வேர் பாத்ரம் சாமய்ங்-னு விக்கிறவன் கூவும்போது கவனி. எவ்வேஎர்-னு அளபெடுப்பான்."
    "
    இத்தப் பார்ரா டைனாசர். அள்ளபெடையாமே. அது என்ன extinct பிராணி?" கேலியாக அளபெடையில் புதுவிதமான அளபெடுத்தார் புதுசு.

    "அளபெடை இன்னும் ஜீவிச்சுக்கிட்டுத்தான் இருக்கு. இத்தப் பாக்க ஜுராசிக் பார்க் போக வேணாம். 'ரொம்ப நீளம்' என்பதைக் கதை எழுதறவங்க எப்படி எழுதறாங்க? நீஈஈஈளம் அப்படின்னுதானே? அளபெடைன்றது அதுதான். அப்போல்லாம் நீஇளம் என்று எழுதினாங்க. இப்ப இப்புடி. எழுதற விதம்தான் மாறியிருக்கு. அளபெடை அப்படியேதான் இருக்கு. பாத்ரக்காரனுக்கு வா. எவர்சில்வர் ஒருபாதி கூவல். பாத்திரம் சாமான் மறுபாதி. எவர்சில்வர் நாலு மாத்திரை. பாத்திரம் சாமான் எட்டு மாத்திரை. முன்னத விடப் பின்னது நீளமாயிருக்கறதுனாலதான் கொஞ்சம் நீட்டி முழக்கி 'எவ்வேர் சில்ல்வேர்' - ஆறு மாத்திர - கொஞ்சம் தட்டிக் கொட்டி 'பாத்ரம் சாமய்ங்' - ஆறு மாத்திர."

    "மாத்திரைன்னா?"

    "ம்ம்ம் க்ரோஸின். மெட்டாஸின். You are my sin" அலுத்துக் கொண்ட வெண்பா விமூ தொடர்ந்தார். "அது ஓரெழுத்து ஒலிக்கிற கால அளவுடா. கண் சிமிட்ற நேரம். கை சொடுக்கற நேரம்."

    "அப்போ கடத் தெருவுல கூவறவங்கல்லாம் கர்நாடக சங்கீதக் கடல்னு சொல்ற"

    "அது இசை உணர்வுடா. இயல்பா ஒவ்வொரு மனுசனுக்கும் உள்ள இருப்பது. அவன் கணக்குப் போட்டு சொல்றதில்ல. சொல்லிப் பாத்தா நல்லா இருக்கான்னு மட்டும்தான் பாக்கறான். கணக்குப் போட்டுக் காட்டுறது சும்மா proofக்குதான். அது போகட்டும். நீ என்ன சொன்ன? கடத் தெருவுல கூவறவங்கல்லாம் கர்நாடக சங்கீதக் கடல். ஒன்ன அறியாம மூணு எடத்துல மோனை விழுந்திருக்கு. 'க'வுல ஆரம்பிக்கிற வார்த்தையா தேர்ந்தெடுத்தா பேசினே? எப்புடி வந்தது? அதைத்தான் சொல்றேன். மரபுன்றது இயற்கையானது. அதை வரவிடாம கவனமா பாத்துப் பாத்து ஒதுக்கறீங்க பாரு அதுதான் இயற்கைக்கு மாறானது."

    "அதாவது மரபுக் கவிதை எழுதறவனெல்லாம் காய்கறிச் சந்தையிலே கூவுறவன்னு ஒத்துக்கற."

    "இல்லை. கடைவீதியிலே கூவுறவனே தாளக் கணக்குப் பிசகாம சொல்றான்னா, கவிதை எழுதறவன் எவ்வளவு எச்சரிக்கையா இருக்கணும் பாத்துக்கோன்னு சொல்றேன்."

    விமூ தொடர்ந்தார். "புதுக் கவிதை தப்புன்னு சொல்ல வரலே. மரபுக் கவிதையில் கவிதையே இல்லேன்னு சொல்றீங்க பாரு, அதத்தான் தப்புன்னு சொல்றேன். நிறுத்திப் படிக்க வேண்டிய இடங்களை வரியை ஒடச்சுக் காட்றீங்க புதுக் கவிதைல. அதையே புரிஞ்சுக்காம எழுதிக் குவிக்கிற கவிஞர் பெருமக்கள் கவனத்துக்கு இதைச் சொல்றேன். ஒங்க பிதாமகர் ஞானக்கூத்தனையே எடுத்துப்போம். வகுப்புக்கு வரும் எலும்புக் கூடுன்னு ஒண்ணு எழுதியிருக்கார்.

    மாணவர்காள் மனிதர்களின் எலும்புக் கூட்டைப்
    பார்த்திருக்க மாட்டீர்கள்
    மன்னார்சாமி
    ஆணியிலே அதைப்பொருத்து பயப்படாமல் - ன்னு. ஒடிச்சு ஒடிச்சுப் போட்டிருப்பார்.

    இதையே:

    மாணவர்காள் மனிதர்களின் எலும்புக் கூட்டைப்
    பார்த்திருக்க மாட்டீர்கள் மன்னார் சாமி
    ஆணியிலே அதைப்பொருத்து பயப்ப டாமல்
    ஒருவர்பின் ஒருவராகப் பார்க்க வேண்டும்
    ஏணியைப்போல் இருந்திருப்பான் ஆற டிக்குக்
    குறைவில்லை இதுகபாலம் மார்புக் கூடு
    போணிசெய்த பெருங்கைகள் கைகால் மூட்டு
    பூரான்போல் முதுகெலும்பு சிரிக்கும் பற்கள்


    இப்படி எழுதினா எண்சீர் விருத்தம். கொஞ்சம் பயமுறுத்தறாப் போல சொன்னா எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஒவ்வொரு அடியி
    லும் கடைசி ரெண்டு சீர் தேமா தேமா இல்லாட்டி புளிமா தேமான்னு எண்சீர்விருத்த இலக்கணம் முழுக்கப் பயிலுகிறது. எல்லா அடிகளிலும்
    எதுகை தப்பாம இருக்கிறது. மரபுன்றது இவ்வளவுதாண்டா. பயப்படாத."

    "அப்ப நானும் வெண்பா எழுதலான்ற."

    "தாராளமா. நானிருக்கேன். இல்லாட்டி forumhum.com/tlit - ன்ற வலைமனைக்குப் போ. அங்கே yAppuilakkaNam - scratch padன்னு ஒரு சரவைப் பலகை இஇருக்கு. வெண்பாவைப் போல ஒலிக்கிறா மாதிரி எதுனாச்சும் ஜூட் காட்டினன்னா, ஆளுக்கு ஒரு ஃபீடிங் பாட்டிலக் கையில எடுத்துக்கிட்டு ஒன்னத் தொரத்தோ தொரத்துன்னு தொரத்தி ஒன்ன வெண்பா எழுத வச்சிட்டுத்தான் மறு காரியம் பாக்குறதுன்னு சில பெருசுங்க காத்துக்கிட்டு இருக்கும்.."

    "இன்னொண்ணு. வெண்பான்றது மரபு வடிவங்கள்ள height of excellence. நீ வெண்பாதான் எழுதணுன்றது இல்ல. விருத்தம், சிந்து இப்படி எவ்வளவோ இருக்கு. forumhubல பாத்தியானா marabupaa -
    miscellaneous categories, Asiriyappa அப்படின்னு பல இழைகள் இருக்கு. நெறய பேர் எழுதறாங்க. பாத்து, படிச்சு பழகிக்கிட்டேன்னா எல்லாம் சுலபம்தான். ஒண்ணு. மனுசன் பேசறது மூச்சுவிடறா மாதிரின்னா மரபுப்பா எழுதறது ப்ராணாயாமம் பண்ற மாதிரி. மூச்சை சீராவும், கால அளவோடும் விடற கலை."

    "பாக்கலாம்" எழுந்து கொண்டார் புதுக்கூத்தன். "எங்கடா என் செருப்பு?" அலறினார். பக்கத்தில் கழற்றி விட்டு விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
    இவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்த போது எவனோ லவட்டிக் கொண்டு போய்விட்டான்.

    "செருப்புக்கும் உண்டே திருட்டு" என்று வெண்பா ஈற்றடியைத் தூக்கிப்போட்டார் வினாயக மூர்த்தி.

    "அறுப்புக்கும் உண்டே லிமிட்டு" என்று பதிலடி தந்தார் புதுக் கவிதை.

    "ஒன்ன அறியாம நீயே ஓர் ஈற்றடி சொல்லிட்ட பாரு. அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி." என்று சிரித்தார் வெண்பா வினாயக மூர்த்தி.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வெண்பா ஓர் அறிமுகம் - பகுதி 1 -ஆசார வாசல்
    ---------------------------------------------
    எங்கள் ஊரில் சிவராமகிருஷ்ண சாஸ்திரிகள் என்று ஒருவர் இருந்தார். கணிதத்தில் எம். ஏ. முடித்து, ஹோமியோபதிமருத்துவராக வாழ்க்கை
    நடத்தி, கிருஷ்ண பக்தி ஒன்றே வாழ்வாக இருந்தவர். நங்கநல்லூரில் உத்தர குருவாயூரப்பன் கோவில் என்று ஒன்று ஏற்பட்டதே அவரால்தான்.அவருடைய பெயரால், உத்தர குருவாயூரப்பன் கோவிலில் ஒரு மண்டபம் இருக்கிறது.

    நான் படித்துக் கொண்டிருந்த காலம் அது. நங்கநல்லூர் அப்போது ரொம்பவும் சின்ன ஊர். இத்தனைக் கோவில்கள் அப்போது கிடையாது.
    குருவாயூரப்பன் கோவிலே குருத்தும் விடாத கனவாகத்தான் இருந்தது. ஏரிக்குள் ஒரு கிரவுண்ட் நிலத்தை வைத்துக் கொண்டு, கோவில் எழுப்பத் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு நாற்பது வெட்டிக்கவிஞனுகள் நங்கநல்லூரில் இருந்தோம். அந்தச் சமயத்தில், இலக்கிய வட்டம் என்று ஒன்று தொடங்கி, மாதாமாதம் கவியரங்குகள் நடத்தி, பெரிய பெரிய கவிஞர்கள் எல்லாம் வந்திருந்து தலைமை தாங்கி நடத்திக் கொடுத்து... எல்லாம் எங்களுக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தன. புலமைப்பித்தன், சுரதா, கொத்தமங்கலம் சுப்பு எல்லாம் தலைமை தாங்கியிருக்கிறார்கள்.

    கவிப்பேரரசர் எங்கள் கூட நின்று கவிதை படித்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில், யாப்பில் கொஞ்சம் வேலை காட்டுவேன் என்பதால் எனக்கு ஒரு பீடம் இருந்தது. 'புலவர்' என்றுதான் கூப்பிடுவார்கள். நெருக்கமான நண்பன் என்றால் 'டேய் புளூரே' என்பான். மிகக் கடினமான வகை என்று கருதப்படும் சித்திரகவியும் எழுதியிருந்தேன் அப்போது.

    ஒரு நாள் என்னைக் கூப்பிட்டனுப்பியிருந்தார் சாஸ்திரிகள். 'என்னடா, கவிதையெல்லாம் எழுதுவாயாமே?'

    'ஆமாம் மாமா.'

    'அதில்லடா. வெண்பாவெல்லாம் எழுதறன்னு சொன்னா. நிஜமா?'

    'எழுதுவேன். கொஞ்சம் கொஞ்சம்.'

    'எப்படி? பாதிப் பாதியா?' சிரித்தார். 'சரி. ஒண்ணு பண்ணு. நீ ஃப்ரீயா இருக்கும் போதெல்லாம்இங்க வா. எனக்குத் தமிழ்ல யாப்பு கத்துக் குடு. நான் பதிலுக்கு உனக்கு சம்ஸ்கிருதம் கத்துக் குடுக்கிறேன்.'

    ஏற்றுக் கொண்டேன். நான் அவரிடம் சம்ஸ்கிருதம் படித்து ஒண்ணும் கிழிக்கவில்லை. நன்றாகத்தான் சொல்லிக் கொடுத்தார். எனக்கு அப்போது இருந்த தமிழ் வெறி வேறெந்த மொழியையும் மதிக்காமல் இருந்தது. ஆங்கிலம் ஒன்றைத் தவிர. கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டேன். நல்ல சந்தர்ப்பம் போனது. முதல் நாள் யாப்பு வகுப்பு நடத்தினேன். அசை, சீர், தளை என்றெல்லாம் சொன்னேன். அவர் மஹா பண்டிதர். சின்னப்பையன் என்று நினைக்காமல் கவனமாகக் கேட்டுக் கொண்டார். அப்போது எழுபதைத் தாண்டியிருந்தது அவருக்கு. அச்சத்தோடுதான் அவரிடம்
    பேசினேன்.

    நேர், நிரை என்றால் என்ன என்பதைச் சொல்லி,
    நேர்நேர் தேமா, நிரைநேர் புளிமா என்று தொடர்ந்து,
    நேர்நேர்நேர்நேர் தேமாந்தண்பூ,
    நிரைநேர்நேர்நேர் புளிமாந்தண்பூ,
    நேர்நேர்நேர்நிரை தேமாந்தண்நிழல்,
    நிரைநிரைநிரைநிரை கருவிளநறுநிழல்

    என்றெல்லாம் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டார்.கடைசியாக ஒன்று கேட்டார்.

    'எல்லாம் சரி. அதென்ன நேர்நேர் தேமாங்கற? நான் தோமாங்கறேனே! தப்பா? நேர்நேர் தேமா, நிரைநேர் கமலா, நேர்நிரைநேர்நேர் பங்க
    ஜவல்லி, நிரைநிரைநேர்நேர் அபீதகுஜாம்பாள்.... என்ன தப்பு?' சிரிக்கிறார்.

    விக்கித்துப் போனது. எவ்வளவு தூரம் யோசிக்காமல் நெட்டுருப் போட்டிருக்கிறோம் என்பது உறைத்தது. சின்னசங்கரன் கதையில் ஆம்ரோதனாசாரியார் என்றொரு பாத்திரம். 'திருவாய் மொழிப் பிரபந்தம் முழுவதையும் பாராமல் குட்டியுருவாய்ச் சொல்லக் கூடியவர்' என்ற பெரிய தகுதி உண்டு அவருக்கு. தொல்காப்பியம் முத்திருளு கவுண்டனிடம் மாட்டிக்கொண்டு முழியாய் முழிப்பார். அந்த மாதிரி ஆயிப் போச்சே நம்ம நிலைமை என்றுவிழித்தேன்.

    'இல்லடா, தேமா, புளிமா அப்படிங்கறீயே, அதுக்கெல்லாம் என்ன significance? அப்படித்தான் சொல்லியாகணுமா, அதுக்கு ஏதானும் காரணம் இருக்கா, மாத்திச் சொன்னா கெட்டுப் போகுமா?'
    கேள்வியைக் கொஞ்சம் எளிமைப்படுத்தினார்.

    ஆமா, இல்ல? (எல்லே, சிரிக்காதீருயா... ஆமா. கமா.இல்ல.) இன்று அவரை மனத்தில் இருத்தி நமஸ்கரிக்கிறேன். அன்று அப்படிக் கேட்டிராவிட்டால், யோசித்திருக்கவே போவதில்லை. நன்றாக ஒப்பிக்கக் கூடிய மாணவனுக்கும் கிராமபோனுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டான் பாரதி. கிராமபோனாய்ப் போயிருக்க வேண்டியவனை அந்தக் கேள்விகள்தாம் திசை திருப்பின.

    அடிப்படைகளைக் கொஞ்சம் பார்க்கலாமா?

    அன்புடன்,
    ஹரி கிருஷ்ணன்.

    (கட்டுரைக்கு வந்த விமர்சனப் பதிவுகள் இதோ: இவையும் சுவாரஸ்யம் என்பதால் இத்துடன் இணைக்கிறேன்.)
    கண்டிப்பாய்த் தொடங்குங்கள் ஹரிகிருஷ்ணன். சந்தோஷமான விஷயம். தேவையானதும் கூட. பத்துபேர் ஓ போட்டால்தான் தொடங்குவேன் என்று பிடிவாதம் பிடித்தால் வெவ்வேறு பெயர்களில் புதிதாய் மின்னஞ்சல் திறந்து ஓ போடவேண்டியிருக்கும்.)

    இன்றே தொடங்கும் இலக்கணம் பின்பயனாய்
    நன்றே எழுதுவேன்வெண் பா

    சும்மா ஒரு முயற்சி ஹரிகிருஷ்ணன். முயற்சியிலேயே மரியாதைக்குறைவாய் தொடங்கும் என்று கட்டளையிடுகிறானே என நினைக்காதீர்கள். தொடங்கிடுக என்று எழுதினால் மரியாதை இடிக்காது ஆனால் தளை இடிக்கிறது.

    உங்கள் கட்டுரைக்காய் காத்திருக்கும்
    பிரசன்னா
    ------------------------------------------------------
    ஏதோ ஒரு பேட்டியில் யாரோ ஒருவர் சொல்லக்கேட்டேன். தமிழில் பிரிக்கமுடியாத ஒரே ஒரு வார்த்தை அதிபட்சம் ஐந்து முதல் ஏழு எ
    ழுத்துக்களால் ஆனது என்று. தேமாந்தண்நிழல் அல்லது கருவிளநறுநிழலால் ஆன பிரிக்கமுடியாத வார்த்தை கொண்ட ஒரு கவிதை ஏதாவது சொல்லமுடியுமா? இது உங்கள் கட்டுரைக்கு ஏதாவது தடை ஏற்படுத்துமானால் விட்டுவிடவும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

    Quote:
    'எல்லாம் சரி. அதென்ன நேர்நேர் தேமாங்கற? நான் தோமாங்கறேனே! தப்பா? நேர்நேர் தேமா, நிரைநேர் கமலா, நேர்நிரைநேர்நேர் பங்க
    ஜவல்லி, நிரைநிரைநேர்நேர் அபீதகுஜாம்பாள்.... என்ன தப்பு?' சிரிக்கிறார்.

    கிட்டத்தட்ட இதே ரீதியில் நானும் ஒருகேள்வி கேட்டேன், நான் பத்தாவது படிக்கும்போது. அதிகப்பிரசங்கி என்று என் தலையில் கொட்டினார்

    என் வகுப்பு ஆசிரியர். அதிகப்பிரசங்கியை அலகிட்டுக்கொண்டும் அழுதுகொண்டும் அமர்ந்தேன் நான்.

    பிரசன்னா
    --------------------------------------------------------------
    திரு ஹரி கிருஷ்ணன்..
    ஒரு குறள்.

    வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
    தீமை யிலாத சொலல்.


    இதில் இரண்டாம் சீர் கருவிளங்காய் ஆனால் மூன்றாம் சீர் நிரையசையில் தொடங்கி இருக்கிறது. எப்படி? இதுவும் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அலகிட்ட குறள். பதினைந்து வருடங்கள் முடிந்தும் பதில் கிடைக்கவில்லை. யாரோ ஒரு ஆசிரியர் அது குற்றியலிகரம் என்றதாய் நினைவு. அதற்கு நான் அவரிடம் குற்றியலிகரம் என்றால் மட்டும் ஏன் விதிவிலக்கு? வேறேனும் குறள்கள் அல்லது வெண்பாக்களில் இது போன்ற பயன்பாடு இருக்கிறதா? என்று கேட்ட கேள்விகளால் முதல் கேள்விக்கு பதில் சொன்னதே தவறு என்ற முறையில் முறைத்துவிட்டு போய்விட்டார். அதனால் உங்களிடம் விடுகிறேன் இக்குறளை. குற்றியலிகரம் என்றால் மட்டும் ஏன் ஸ்பெஷல் அந்தஸ்து? விளக்கவும். இப்போது இல்லையெனினும் பின்னெப்போதாவதாவது.

    அன்புடன்
    பிரசன்னா

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வெண்பா ஓர் அறிமுகம் - பகுதி 2

    நாதம், ஸ்வரம், நேர்நேர் நிரைநேர்...

    தொலைக்காட்சியில் ஒரு பேட்டி. இசை விமரிசகர் சுப்புடுவை எழுத்தாளர் இந்துமதி கேள்வி கேட்கிறார். 'நீங்க அவரோட பாட்டு நன்னால்ல, இவரோட பாட்டு நன்னால்ல என்றெல்லாம் சொல்வது அவ்வளவு சரியாப் படல. எதுலதான் இசை இல்ல?மரத்துலேந்து உதிர்ந்து காத்துல விழற இலையில் கூட இசை இருக்கு' என்றார்.

    ஒரு கணம் தயங்கினார். 'நான் ஒரு ரைட்ருங்கறத்துனால இதெல்லாம் எனக்குத் தெரியறதோ என்னமோ' என்று சேர்த்துக் கொண்டார்.

    சுப்புடுவின் பதில் என்ன என்று பார்ப்பதில்லை இப்போதைய நோக்கம். அதை விட்டுவிடலாம். அவர்கள் சொன்னதுமாதிரி, உதிர்ந்து விழும் இலையில் இசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதை உணர்வதற்கு 'ரைட்டர்'ஆக இருக்க வேண்டியதில்லை. என்னைப் போல ராங்கர் (wronger) ஆக இருந்தால் கூடப் போதும். 'மரத்திலிருந்து விழும் இலையில் இசையா? யோவ்! எங்கப்பன் எட்டாயிரம் செலவழிச்சு எந்தக் காலத்துலயோ என் காதுல தொண்டி குத்திட்டான்' என்று சிலர் சொல்லலாம். 'ஆமாம். இருக்கு. எனக்குக் கேட்டிருக்கு' என்றும் சிலர் சொல்லலாம். கொஞ்சம் யோசித்தால் ஒன்று விளங்கும். இசை, அந்த இலையில் இல்லை. அதன் அசைவில் இருக்கிறது. காற்றின் உடம்பில் ஆடியாடி, உருண்டு புரண்டு, பக்கவாட்டில் மிதந்து, மேலேறி, கீழிறங்கி இலை பூமியை அடைவதற்குள் ஒரு சின்ன கச்சேரி நடந்து முடிந்துவிடுகிறது. அதாவது, அதன் அசைவில் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு இருக்கிறது. கொஞ்சம் இறுக்கம் தளர்ந்த ஒழுங்கு. கால கதிக்கு ஓரளவு கட்டுப்பட்ட இயக்கம். அங்கே இருக்கிறது சாவி. காலகதிக்குக் கட்டுப்பட்ட ஓர் இயக்கம். அந்த இயக்கத்தைத் தீர்மானிப்பது காற்றின் அப்போதைய வேகம்.

    There is sweet music here that softer falls
    Than petals from blown roses on the grass,
    Or night dews on still waters between walls
    Of shadowy granite, in a gleaming pass;
    Music that gentlier on the spirit lies,
    Than tir'd eyelids on tir'd eyes
    என்றான் டென்னிசன். (Lotos Eaters)

    களைத்த கண்களின் மேல்
    படியும்
    கனத்த இமைகளைப் போல்
    கவியும் இசை.....
    பனிபடர்ந்த புல்வெளியின் மீது உதிர்ந்த ரோஜா இதழ்கள் வீழ்வதிலும், கண்ணிமை கனத்துப் போய், களைத்திருக்கும் கண்களை மெதுவாக, மிக மெதுவாக மூடுவதிலும் இசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கொஞ்சம் யோசித்தால், அங்கெல்லாம் கூட இசை என்பது அந்தந்தப் பொருள்களில் இல்லை; அவற்றின் அசைவில் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

    இந்த மென்மையான இயக்கம், இசையின் பல்வேறுபட்ட வடிவங்களில் ஒன்றே ஒன்றுதான். ஆழமான கிணற்றில் பித்தளைக்குடம் விழும்போதும், அமைதியான ஏரிக்குள் தவளை குதிக்கும் போதும், தொடர்ந்து, இரைக்க இரைக்கக் கரை நோக்கி ஓடி வந்த அலைகள், அன்பாக ஒரு முறை வருடியோ, ஆக்ரோஷமாக ஒரு முறை அறைந்து விட்டோ, புறப்பட்ட இடம் நோக்கித் திரும்ப ஓடுகின்ற போதும், கருமேகத்தில் சூல் கொண்டு, கடலுக்குள் நிலை கொண்டு, 'கடல் வண்ணன்! பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே!' என்றதைப் போல் பிறந்த கடலகத்தைக் கலக்கி, அலைகளை ஆகாயம் நோக்கி எழுப்பி, கரையை நோக்கித் தன் கர்ப்பத்தைப் பிளந்து "ஓ" என்ற குரலோடு காற்று தரைமேல் வெடிப்பதும் இசைதான்.

    மனிதனின் பல்வேறுபட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது இசை. அந்த இசை வடிவத்தில் மொழி குழையும் போது கவிதை எட்டிப்பார்க்கிறது.
    உற்சாகமாகப் பாடுவதற்கும், வெறி கொண்டு ஆடுவதற்கும், மனத்தில் இருக்கும் ரணங்களை எடுத்துச் சொல்வதற்கும், கண்ணீரைப் பங்கு போட்டுக் கொள்ளவும் இசையோடு மொழி சேர்ந்து வருகிறது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாவம். ஒவ்வொரு உணர்வு. ஒவ்வொரு வேகம். ஒவ்வொரு காலப் பிரமாணம்.

    இந்த இசைக்கென்று ஒரு மொழி உண்டு. அளவுகோல் உண்டு. ஷட்ஜமம், பஞ்சமம், மத்யமம் (இராம. கி. என் தமிழிசை அறிவீனத்தை மன்னிக்க வேண்டும்) என்றெல்லாம் அளவுகோல்கள். இன்னும் பல நுட்பமான வழிகளால் இசை அளந்தறியப்படுகிறது.
    இசை ஸ்வரங்களால் இயங்குகிறது. மொழி, சொற்களால் இயங்குகிறது. சொல் என்பது அடிப்படையில் ஒலிதானே? ஒலியால் உலகத்தைச் சுட்டும் ஒரு குறியீடுதானே மொழி என்பது? இந்த இரண்டும் ஒரு புள்ளியில் குவிய வேண்டும் என்றால், அதற்கு, பொதுவான ஓர் அளவுகோல் தேவைப்படுகிறதல்லவா? இசையின் கனம் என்ன என்றறிந்து, அதற்குள் மொழியைக் குழைக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு சொல்லின் கனபரிமாணத்தையும், ஒலி அளவையும் அளந்து பார்க்க வேண்டியிருக்கிறதல்லவா? (அப்படி ஏதும் அளந்து பார்க்க வேண்டியதில்லாமல், உணர்வு நிலையிலிருந்தே இதைச் செய்ய முடியும். அது வேறு நிலை. அதற்குள் நாம் இப்போது போகவில்லை. ஆனால், அப்படிச் செய்ய முடியும் என்பதையும் மறுக்கவில்லை.)

    'தனன னான தனன னான தானா' என்று குண்டு குண்டு கண்களை உருட்டிக் கொண்டு கமலஹாசனுக்குச் சவால் விடும் ஸ்ரீதேவியைப் பார்த்திருக்கிறீர்கள். ஒரு கணம் தயங்குவார் கமல். கொஞ்சம் சங்கடமாக, தொண்டைக்குள் 'தனன னான தனன னான தானா' என்று முணுமுணுத்துக் கொள்வார்.

    அதன் பிறகு, 'யுரேகா!' என்ற தொனியில் 'நதியிலாடும் படகு போல கண்கள்' என்று கூவுவார். 'சப்பாஷ்' என்று பூரித்துப் போவார் ஸ்ரீதேவி.

    'தனன னான தனன னான தானா' ஒன்றும் அத்தனைக் கடினமான சந்தமில்லை, சங்கடப்படவதற்கு. 'பொடியப் போட்டு பெருத்துப் போன மூக்கு' என்றோ, 'பொகையி லையால் உதுந்து போன பல்லு' என்றோ கூட இந்தச் சந்தத்தை இட்டு நிரப்பலாம்.

    இந்த இசையின் நீளத்தை, அது மேலே கீழே துள்ளும் உயரத்தை, வளைந்து நெளிந்து செல்லும் போக்கை, கால அளவைக் கணக்கிட்டுப் பார்க்க மொழிக்கு உண்டான கருவிதான் யாப்பு. அதில் ஓர் அங்கம்தான் நேர் என்பதும் நிரை என்பதும் Basic tools.

    'தனன னான தனன னான தானா' என்பதை மொழியில் எப்படி அளப்போம்? 'தனன னான தனன னான தானா'வை மொழியின் கருவியைக் கொண்டு அலகிட்டுப் பாருங்கள். 'நதியி லாடும் படகு போல கண்கள்' என்ற தொடரை மொழியின் கருவியைக் கொண்டு அலகிட்டுப் பாருங்கள்.

    Measure them both, with the same tool. ஒரே ஒரு விடைதான் கிடைக்கும். நிரைநேர் நேர்நேர் நிரைநேர் நேர்நேர் நேர்நேர்.

    'அண்ணாச்சி, நீங்க சொல்ற தேமா, புளிமா, நிரை சீர் அப்படிங்கற மாதிரியான வார்த்தைங்க ஒரு அட்சரம் கூட தெரியாத என்ன மாதிரி எல்கேஜி பசங்களும் இருக்கோம். அதுலேந்து ஆரம்பிங்கண்ணா...' என்று பிரகாஷ் எழுதியிருக்கிறார் (மடல்களில் தேடாதீர்கள். தனிமடலில் சொன்னது.)

    இப்போது, நேர், நிரைக்குத் தயாராகலாமா?

    அன்புடன்
    ஹரி கிருஷ்ணன்

    (பதிவுக்கு வந்த சில சுவாரஸ்யமான விமர்சன பதில்கள்)
    வெண்பா வாத்தியாருக்கு,

    நீங்கள் சொன்ன, தனன னான தனன னான தான வையும் நிரைநேர் நேர்நேர் கணக்கையும் ஒரு அரைமணி நேரம் முட்டி பார்த்தேன். லேசாக புரிகிறமாதிரி இருக்கிறது. அதாவது சட்னு சொல்ல முடிஞ்சா, அது நிரை, கொஞ்சம் போல இழுத்தாலோ இல்ல வளைச்சாலோ அது நிரை. இங்கிலிஸ்ல, சிலபிள் அப்படின்னுவாங்களே, அது மாதிரியா இது? ஆனாலும், இதுல ஒரு சிக்கல் இருக்கு. இது மாதிரி ஒரு விஷயம் எனக்கு சட்னு புரிஞ்சா, பெரும்பாலும் தப்பாத்தான் இருக்கும். இப்ப, நான் என்ன பண்றேன், நீங்க அடுத்த பகுதி எழுதற வரைக்கும் வெயிட் பண்றேன்.
    --------------------------------------------------------------
    'தனன னான தனன னான தானா' என்று குண்டு குண்டு கண்களை உருட்டிக் கொண்டு கமலஹாசனுக்குச் சவால் விடும் ஸ்ரீதேவியைப் பார்த்திருக்கிறீர்கள். ஒரு கணம் தயங்குவார் கமல். கொஞ்சம் சங்கடமாக,தொண்டைக்குள் 'தனன னான தனன னான தானா' என்று முணுமுணுத்துக் கொள்வ்ஆர். அதன் பிறகு, 'யுரேகா!'என்ற தொனியில் 'நதியி லாடும் படகு போல கண்கள்' என்று கூவுவார். 'சப்பாஷ்' என்று பூரித்துப்போவார் ஸ்ரீதேவி.

    அந்த வரி ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள் என்பதாய் எனக்கு நினைவு. இதற்கும் நீங்கள் சொல்ல வந்தவிஷயத்திற்கும் சம்பந்தமில்லையெனினும் சொன்னேன்.

    முக்கண்ணன் பிள்ளை முருகன் துணையடும்
    முக்காலக் கன்னி மொழியின் துணையடும்
    வெண்பா வுனைவென் றிடுவேனே யல்லாது
    கண்ணை இமைக்கா யிமை.


    இது நான் இன்று செய்த மைசூர்பா. வாயில் வழுக்கிக்கொண்டு ஓடியதா அல்லது தொண்டை அடைத்துக்கொண்டதா எனப் பார்த்துச் சொல்லவும்.(முக்காலக் கன்னி தமிழின் என்று எழுதலாம் என்று நினைத்தேன். முக்காலம் என்று வருவதால் மோனையாய் மொழி வரட்டும் என்று எழுதிவிட்டேன். எது சரி?)

    தளை தட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தவறுகளைக் கணிக்க முடிகிறது. அது என்ன சீர் தட்டுதல்?இப்போதுதான் ஆரம்ப பாடத்தில் இருக்கிறோம் என்றாலும் என்னால் பொறுமையாய் இருக்க முடியவில்லை.

    அப்புறம் சார்.. இந்தக் கடைசி பெஞ்ச் ஆளுங்க என்னை வெளிய வந்தா அடிக்கிறேங்கிறாங்க? என்ன செய்ய? அவங்களைப்பத்தியும் ஒரு
    வெண்பா பாடட்டுமா?
    Last edited by பாரதி; 12-04-2007 at 07:10 PM.

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வெண்பா ஓர் அறிமுகம் - பகுதி 3 மாத்திரை நோக்கி ஒரு யாத்திரை
    =============================================================

    கையோடு கைசேர்க்கும் காலங்களே
    கல்யாண சங்கீதம் பாடுங்களே(ன்)

    இந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறீர்கள். வாணி ஜெயராம் பாடினதா?மறந்துவிட்டது. எந்தப் படம், எப்போது வந்தது, யார் பாடினது எல்லாம் மறந்துவிட்டது. துள்ளும் இசையோடு, இளமையான எண்ணத்தோடு இந்த வரிகள் மட்டும் நினைவில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

    எழுதியிருக்கும் போது சுவையில்லாமல், bland ஆக இருக்கின்ற இந்த வரிகள், பாடும் போது எவ்வளவு உணர்ச்சிக்கலவையாக வந்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். எப்படிப் பாடுவார்?கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்க்கலாமா?

    கையோடு கைசேர்க்கும் கா...லங்களே
    கல்யாண சங்கீதம் பாடுங்களே(ன்)
    கா இடைவெளி லங்களே என்று ஒரு சொல்லை இரண்டு துணுக்குகளாகப் பிரிக்கிறார். கவனித்திருப்பீர்கள். ஏன் அப்படிப் பிரிக்க வேண்டும்?

    காலங்களே என்று ஏன் சேர்த்துப் பாடக்கூடாது? 'அப்படிப் பாடினாத்தான் சரியா வரது' என்று சங்கீதக்காரர்கள் சொல்வார்கள். அவர்களால் இசையை மொழியின் பதத்துக்கு மாற்றித் தரமுடியவில்லை. அதற்கான கருவிகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் பெரும்பாலும் காரணம். அவர்களிடத்தில் கருவிகள் இல்லாமல் இல்லை. அந்தக் கருவிகளை இசைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்வார்கள். எதை இசைக்கிறார்களோ அதற்குப் பயன்படுத்த மாட்டார்கள்; தயங்குவார்கள். ஓரிடத்தில் பயின்றதை இன்னோரிடத்தில் பயன்படுத்திப் பார்க்கும் ஆர்வமும், முனைப்பும் இல்லாமல் போவதும் ஒரு காரணம்தான்.
    கொஞ்சம் கணக்குப் போட்டுப் பார்த்தால் காரணம் புரியும். கா....லங்களேவுக்கு மட்டுமில்லாமல் கையோடு என்று நீட்டுவதற்கும் காரணம் புரியும்.

    இசை என்பது என்ன? ஏன் அது இனிமையாக இருக்கிறது?ஒழுங்கற்றதாக இருப்பதை ஓசை என்கிறோம். ஒழுங்கோடு வருவதை இசை என்கிறோம். இது கொஞ்சம் பண்டிதத்தனமாக இருக்கிறது. இப்படிச் சொல்லலாமா? 'ஒரு தாளக்கட்டுக்குள்ளே பொருந்தி நடந்தால், கேட்பதற்குச் சுகமாக இருக்கிறது.' சொல்லலாம் போலத்தான் இருக்கிறது. ஆனால், சரியாகப் புரியவில்லை. சரி. தாளக்கட்டு என்றால் என்ன? 'ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் ஒலிக்கும் ஒலி வடிவம்' என்று சொல்லலாம், இல்லையா?

    கொஞ்சம் வேறு மாதிரி சொல்லிப் பார்ப்போமா? பிரபுதேவா ஆடுகிறார். கொக்கு மாதிரி கையை வைத்துக்கொண்டு,

    ஜிங்கு சிக்கா சிக்கா - நான்
    ஜொள்ளு விடும் கொக்கா
    என்று தொப்பையாம்பிகையைக் கேட்கிறார். இதில், 'ஜிங்கு சிக்கா சிக்கா' ஒரு துண்டு. அடுத்த துண்டு, 'ஜொள்ளு விடும் கொக்கா'. இந்த
    இரண்டு துணுக்குகளும் கால அளவால் ஒரே நீளத்தை உடையவை.('நான்' என்று ஒரு துண்டு இருக்கிறது. அதனை ஒரு கோடு போட்டு எழுதியிருக்கிறேன். கவனித்திருப்பீர்கள். அதைப் பற்றி அப்புறம் பார்க்கலாம். சம அளவு கால நீளம் உடைய இரண்டு வரிகளுக்கு நடுவில், அதிகப்படியாக, ஆனால் இடைஞ்சல் இல்லாமல் வருகின்ற ஒரு துண்டு. இதைத்தான் தனிச்சொல் என்று சொல்கிறோம். அது பத்தாங் கிளாசில் படிக்க வேண்டும். இப்போதுதான் ஒண்ணாங்கிளாசில் இருக்கிறோம்.)

    கால அளவால் ஒரே நீளமா? அப்படியென்றால்? எப்படி ஒரே நீளம் என்று சொல்லமுடியும் என்று கேட்கத் தோன்றுகிறது, இல்லையா?குறில், நெடில் என்றால் நமக்குத் தெரியும். 'அ' குறில். 'ஆ' நெடில். 'க' குறில் 'கா' நெடில். குறில் ஒலியைக் குறிக்கும் எழுத்தைக் குற்றெழுத்து என்று சொல்கிறோம். மற்றதை நெட்டெழுத்து என்று சொல்கிறோம். இதில் குற்றெழுத்து ஒலிக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தை ஒரு மாத்திரை என்று சொல்கிறோம். நெட்டெழுத்து ஒலிக்க இரண்டு மாத்திரை காலம் தேவைப்படுகிறது. (நான் ரொம்ப மேற்போக்காகச் சொல்கிறேன். Fine tuning எப்போது தேவையோ அப்போது முழு விவரங்களைப் பார்ப்போம்.)

    குறிலும் இல்லாமல், நெடிலும் இல்லாமல் ஒர் இனம் இருக்கிறது. 'பொட்டுவைத்த முகமோ' என்று தலைக்கு மேல் பொட்டு வைத்திருக்கும் எழுத்துகள். மெய் எழுத்து என்றும், ஒற்றெழுத்து என்றும் சொல்கிறோம், இல்லையா? அவை அரை மாத்திரை காலம் ஒலிப்பவை. ஆனால், சொற்களில் அவற்றை உச்சரிக்கும் போது தேவைப்படும் காலம் அதற்கும் கீழானதே. டெசிமல் கணக்கில் பாதிக்குக் கீழே இருந்தால் என்ன பண்ணுவோம்? விட்டு விடுவோம் இல்லையா? அது போலத்தான் இங்கேயும். அவற்றைக்
    கணக்கில் சேர்த்துக் கொள்வதில்லை.

    இப்போது கணக்குப் போடலாம். (ஜிங்கு சிக்கா சிக்காவை எல்லாம் கணக்குப் போட்டுப் பாக்க வேணும் என்றால் சிரிப்பாகத்தான் இருக்கும். பொருளே இல்லாத, ஆனால், இசைக்குள் கச்சிதமாக அடங்கியிருக்கும் இந்த வரி கூட, கணக்குக்குக் கட்டுப்பட்டதுதான்.)
    நம்முடைய மாத்திரைக் கணக்குப் படி, இந்த வரியைக் கலைத்துப் போட்டுக் கூட்டுகிறேன்.

    ஜி - ஒரு மாத்திரை; ங் - கணக்கில்லை; கு - ஒரு மாத்திரை; சி - ஒரு மாத்திரை; க் - கணக்கில்லை; கா - இரண்டு மாத்திரை; சி - ஒரு மாத்திரை; க் - கணக்கில்லை; கா - இரண்டு மாத்திரை. ஆக மொத்தம், இந்த ஒரு வரி ஒலிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எட்டு மாத்திரைப்போது. இது முதல் சுழற்சி. புரியாட்டி தமிழ்ல சொல்றேன். முதல் சைக்கிள்.

    அடுத்த சுழல் என்ன? ஜொள்ளு விடும் கொக்கா. கணக்குப் போடுங்கள். ஏழு மாத்திரை. இடம் கொஞ்ச்சம் குறைகிறது, இல்லையா? பாடும் போது கவனியுங்கள். ஜொள்ள்ளு விடும் என்று கொஞ்சம் அழுத்திப் பாடுவார். ஒரு துளிப்போற இடம் விடுவார். கொக்கா என்று கேட்பார். குறைகிற இந்த ஒரு மாத்திரை காலத்துக்கு அட்ஜஸ்மென்ட். இசையில் இந்த சரிக்கட்டுதல் வேறு வேறு மாதிரிசெய்யப்படும்.

    'தேடிப் பாத்தேன் காந்தியத்தான் காணும்' என்று ஆடுவார் கமல். 'தேடிப் பாத்தேன்' முதல் சுழற்சி. 'காந்தியத்தான் காணும்' அடுத்த சுழற்சி. முதல் சுழற்சிக்கு ஏழு மாத்திரை. அடுத்ததற்கு ஒன்பது மாத்திரை. சாதாரணமாக, இந்த இடத்தில் 'தே..டிப் பாத்தேன்' என்று நீட்டிச் சரிகட்டுவார்கள். கமல் எப்போதும் போலவே 'தேடிப் பாத்தேன்' என்றே பாடுவார். எப்படி என்பதே புரியாது. அதே போலப் பாட முயற்சித்தால், பயிற்சிஇல்லாதர்களும், விஷயம் தெரியாதவர்களும் 'என்னவோ பண்றான், என்னன்னு புரியல' என்று விழித்துக் கொண்டிருப்பார்கள். கவனிப்பவர்களுக்குத் தெரியும். கமல், முதல் சுழற்சியை ஆரம்பிப்பதற்கு முன்னால் அரை வினாடி சும்மா இருக்கிறார் என்பது கூர்ந்து கவனித்தால்தான் தெரியும். லலிதா ராயர் இதை 'சமத்துக்கு ஒரு இடம் தள்ளி எடுப்பது' என்பார். ஒரு இடம்
    தள்ளி எடுப்பது, இரண்டு இடம் தள்ளி எடுப்பது என்பதெல்லாம் இசையில் முடியும். ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு blank விட வேண்டும் என்பதை எழுத்தில் காட்ட முடியாது. எழுத்தில் வரும்போது இந்தச் சரிக்கட்டலை வேறு மாதிரி பண்ண வேண்டியிருக்கிறது.
    அப்படி முதல் துணுக்கை அட்ஜஸ்ட் பண்ணியாகி விட்டது. இரண்டாவது துணுக்கில் பார்த்தால் 'காந்தியத்தான்' சொல்லும்போது சற்றே அவசரப்படுவதைக் கவனிக்கலாம். மீதி ஒரு மாத்திரை காலத்தை சரிக்கட்டுகிறார்.

    'கையோடு கைசேர்க்கும் காலங்களே'வுக்கு வரலாமா?
    மூன்று துண்டுகள் இருக்கின்றன இந்த வரியில். பாடுகின்ற விதத்தில் இல்லாமல், எழுதுகின்ற விதத்தில் பார்க்கலாம். கையோடு. நான்கு மாத்திரை. கைசேர்க்கும். நான்கு மாத்திரை. காலங்களே. ஆறு மாத்திரை. மூன்றாவது துண்டில் இரண்டு மாத்திரை காலம் அதிகமாக இருக்கிறது. கைசேர்க்கும்கா என்று சேர்த்துச் சொல்லுவோம். எவ்வளவு காலம்? ஆறு மாத்திரை. இப்போது லங்களே யில் மிச்சம் இருப்பது நான்கு மாத்திரை. குறைகின்ற இரண்டு மாத்திரை காலம்தான் அந்த பாஸ். அப்படியானால் முதல் துண்டில் நான்கு மாத்திரைதானே இருக்கிறது? கவனித்தால் ஒன்று தெரியும். 'கையோஒஒடு' என்று நீட்டுவார். ஒவ்வொரு துண்டும் ஆறு மாத்திரை காலம் உடையதாக ஆகிவிடும் மாயம் நிகழ்கிறது. இப்படி நீட்டுவதைத்தான் கவிதையில் 'அளபெடுத்தல்' என்கிறோம். இன்னிசை அளபெடை, இசை நிரை அளபெடை என்றெல்லாம் அவற்றுக்கு உட்பிரிவுகள் உண்டு.
    கா பாஸ் லங்களே? வகையுளி என்ற கணக்கில் வரும். பெயர்களை மட்டும் இப்போதைக்குத் தெரிந்து கொள்வோம். அவற்றை விரிவாகப் பின்னால் பார்க்கலாம்.

    முதல் வரியில் கா லங்களே என்று உடைக்க வேண்டி வந்தது. அடுத்த வரியில் பாடுங்களே என்று ஆறு மாத்திரை காலம் ஒலிக்கும் சொல்லை
    உடைக்காமல் பாடுவது எப்படி? கணக்குப் போட்டுப் பாருங்கள்.
    ரொம்ப புரியாவிட்டால் கவலைப் பட வேண்டாம். பாடல் ஒலிக்கும் போது, இந்தக் குறிப்பைக் கையில் வைத்துக்கொண்டு கவனிக்கலாம். ஒரு ஐந்தாறு பாடல்களை இப்படிக் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டால், எல்லாமே வெள்ளிடை மலை. உள்ளங்கை நெல்லிக்கனி. தெற்றென விளங்கா நிற்கும்.

    மரபுக் கவிதையில் வார்த்தைகளை உடைத்துப் போடுவது ஏன் என்பதற்குக் காரணம் இப்போது கொஞ்சம் புரிந்திருக்கும். ஆனால், கவிதைக்கு என்று சொற்களின் கால அளவை நிர்ணயிப்பதற்கென்று வேறு ஒரு வழியைக் கையாளுகிறோம். அசை என்று அதைத்தான் சொல்கிறோம்.

    மாத்திரை என்றால் ஒரு மாதிரி புரிகிறதா? அடுத்த யாத்திரை அசை. அசை என்றால் நம்ம பிரகாஷ் மிகச்சரியாகச் சொன்னது மாதிரி சிலபிள்
    தான். ஆங்கிலத்தில் அசை பிரிப்பதை விட, தமிழில் அசை பிரிப்பது மிக எளிது. ஆங்கிலத்தில் prosody எனப்படும் கவிதை இலக்கணத்தில்
    இதைச் செய்வது கொஞ்சம் சிக்கலானது. Twinkle twinkle little star என்று நாமெல்லாம் நர்சரியில் படித்த முதல் பாடலின் சந்தத்துக்கு octosyllabic iambic penta meter என்று பெயர். எட்டு அசைகளைக் கொண்டது.

    ட்வின் க்கிள் ட்வின்
    க்கிள் லீடீல் ஸ்டாஆ என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த சந்தம் தமிழிலும் இருக்கிறது. அறுசீர் விருத்தம் என்று பெயர். அதில் ஒரு
    வகையில் இந்த சந்தம் பயிலும். அறுசீரில் முதல் மூன்று சீர்கள் (அதாவது பாதி அடி), ஆங்கிலத்தில் ஆக்டோசிலபிக் ஐயாம்பிக் பென்டாமீட்டரின் முழு அடி நீளத்துக்குச் சமம். பெயரில் எட்டு அசைகள் என்றாலும் சில அடிகளில் ஏழு அசைகள் வரும். அங்கே கவிதை இலக்கணம் வேறு மாதிரியானது. இங்கே வேறு மாதிரியானது. தமிழில் அசை பிரிப்பது மிகச் சுலபம். அதை மட்டும் இப்போதைக்குச் சொல்கிறேன்.

    இன்னொன்று வெண்பாவுக்கும் மேற்படி சமாச்சாரங்களுக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. அப்படியானால் இவை ஏன் என்று கேட்பீர்கள். நேரடித் தொடர்பு இல்லை என்றுதான் சொன்னேன். சுற்றி வளைத்த தொடர்பு உண்டு. நாம் இப்போது வெண்பா எழுதுவது எப்படி என்று பார்க்கவில்லை. வெண்பா என்றால் என்ன என்பதைத்தான் பார்க்கிறோம். அதன் அடிப்படையான விஷயங்கள் இவை. வெண்பாவுக்கு மட்டுமல்ல; ஆசிரியப்பா, விருத்தம், சந்த விருத்தம், வண்ண விருத்தம், கட்டளைப் பா என்று எல்லா வகைக்கும் இவைதான் அடிப்படை. Building blocks.

    அன்புடன்
    ஹரி கிருஷ்ணன்

    பின் குறிப்பு:
    நண்பர்களே... இதுவரை கொடுத்த பகுதிகள் அனைத்தும்
    http://venbaa.blogspot.com/ என்கிற வலைப்பூவிலிருந்து எடுத்து கோர்க்கப்பட்டது. மிக அருமையான விசயங்களை எளிதில் புரிந்து கொள்ளும் அளவிற்கு சிறப்பாக தந்திருக்கும் ஆசிரியர் ஹரிகிருஷ்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி.

    இப்போது விசயத்துக்கு வருகிறேன். இவ்வளவு அருமையான வலைப்பூ கடைசியாக ஏப்ரல் 6, 2003.ல் வந்திருக்கிறது. அதற்குப்பின் இல்லை. இதை மன்ற நண்பர்கள் யாராவது தொடர இயலுமா..?

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஒரு நண்பரின் கேள்விக்கான ஆசிரியரின் பதில்

    தமிழில் பிரிக்கமுடியாத ஒரே ஒரு வார்த்தை அதிகபட்சம் ஐந்து முதல் எழு எழுத்துக்களால் ஆனது என்று. தேமாந்தண்நிழல் அல்லது கருவிள
    நறுநிழலால் ஆன பிரிக்கமுடியாத வார்த்தை கொண்ட ஒரு கவிதை ஏதாவது சொல்லமுடியுமா?

    - பிரசன்னா.

    வார்த்தை வேறு. சீர் வேறு. அதை அப்புறம் பார்க்கலாம். நாற்சீர்களால் அமைந்த பாடல்கள் அவ்வளவு அதிகமில்லை. இப்போது வெண்பாவை
    மட்டும் பார்க்கப் போகிறோம். இங்கே அதிகபட்சம் மூன்று சீர்கள்தாம் வரும். நாற்சீருக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால், நெய்க்கு அலைவா
    னேன்? நீரே இருக்கிறீர்!

    ஒன்று வேண்டுமானால் உடனடியாகச் செய்யலாம். நரசிம்மத்தைப் பற்றி எழுத ஆரம்பித்துப் பாதியில் நிற்கிறது ஒன்று. இதைப் பாருங்கள்.

    கருவிடு வெறிபடு பொறிவர திரிதரு
    கதமுறு முளமொரு கதிரென எரிதர
    கனகனு நெறுநெறு நெறுவென எயிறது
    கடிபட கரதல மெதிரெதி ரிடிதர நகைதானோர்
    கருகிடு பொறிபடு எரிவரு புகைவிடு
    கனமுறு முகிலிடு வெடியென யிடியுற
    கடகட கடவென கடலெழு மலையென
    கதிரது கருகிட கடலுட லருகிட வெறியேறி

    இதில் 'நகைதானோர்' மற்றும் 'வெறியேறி' ஆகிய இரண்டையும் தவிர மற்றவை எல்லாம் கருவிளம். பதினாறு சீர் விருத்தம். இதையே எண்சீராக்கினால், இப்படி அமையும்:

    கருவிடுவெறிபடு பொறிவரதிரிதரு கதமுறுமுளமொரு கதிரெனஎரிதர
    கனகனுநெறுநெறு நெறுவெனஎயிறது கடிபடகரதல மெதிரெதிரிடிதர நகைதானோர்
    கருகிடுபொறிபடு எரிவருபுகைவிடு கனமுறுமுகிலிடு வெடியெனயிடியுற
    கடகடகடவென கடலெழுமலையென கதிரதுகருகிட கடலுடலருகிட வெறியேறி

    கருவிளம் கருவிளம் என்று இருப்பதைக் காட்டிலும் இப்படிப் போடும்போது படித்தால் மூச்சு முட்டும். படித்துப் படித்துப் பழகினால் ஒழிய, வாய்விட்டுப் படிக்க முடியாமல் போகும். பதினாறு சீராகப் பிரித்துப் போடும் போதும் அப்படித்தான் ஆகும். ஆனால் சிறுசிறு துண்டுகளாக இருப்பதால் கொஞ்சம் எளிதாகும். கடைசிச் சீரை மூன்று சீராக வைத்து ஒரு ப்ரேக் கொடுப்பதால் சின்ன relief கிடைக்கும்.
    இவை வண்ண விருத்தங்கள் என்ற வகையில் போகும். இப்போது வேண்டாம். குழம்பும்.

    இன்றே தொடங்கும் இலக்கணம் பின்பயனாய்
    நன்றே எழுதுவேன்வெண் பா


    இலக்கண சுத்தமாக இருக்கிறது. முதல்நிலை தாண்டியாகிவிட்டது. 'எழுதுவேன்வெண்' சொல்லிப் பாருங்கள். நாக்கு தடுக்குகிறது இல்லையா? எங்கே நிற்கிறது? வேன்வெண், அங்கே. ஏன்? ஒரேமாதிரி ஒலி. ஒன்று நெடில், இன்னொன்று குறில். எழுதுவேன் என்பதை வேறு எப்படிச் சொல்லலாம்? யோசிக்க வேண்டும். ஒரு மாதிரிதரட்டுமா? 'நன்றேவெண் பாவடிப்பேன் நான்.' வெண்பா வடித்தல். 'நன்றாகும் வெண்பா நயந்து.' நன்று என்ற எதுகையை மாற்றிப் போட்டால்? 'வென்றிதரும் வெண்பா விரைந்து'. பண்டிதத்தனமாக இருந்தால் பரவாயில்லை. நாலு விதமாய் மாற்றிமாற்றிப் போட்டுப் பாருங்கள்.
    விருத்தத்தில் எழுதிக் கொண்டிருந்தான் பாரதி. 'வள்ளுவன்' என்று நினைத்தான். அவனை அறியாமல் குறள் வடிவத்தில் தானாக அமைந்தது.

    வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
    வான்புகழ் கொண்டதமிழ் நாடு.


    அலகிட்டுப் பாருங்கள். குறள் வெண்பா மிகச் சரியாக நிற்கும். பழகப் பழக, இந்தப் புலிமேல் சவாரி செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் இறங்கக் கூடிய புலிமுதுகு சவாரி. நமக்கெல்லாம் சவாரி மட்டும்தான் செய்ய முடியும். பாரதியிடம் அந்தப் புலிவால்குழைத்து, காலடியில் படுத்து, அவன் காலை நக்கிக் கொண்டிருந்தது. பாரதியின் வெண்பாக்களை எடுத்து அலகிட்டுப் பாருங்கள்.

    வையகத்துக் கில்லை மனமே நினக்குநலம்
    செய்யக் கருதியிது செப்புவேன் - பொய்யில்லை
    எல்லாம் புரக்கும் இறைநமையும் காக்குமெனும்
    சொல்லால் அழியும் துயர்.


    சொல்லுகின்ற கருத்தைப் பிறகு பார்க்கலாம். வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள். எங்காவது தடுக்குகிறதா? இடறுகிறதா? சொல் இரண்டாகப் பிளந்திருக்கிறதா? (வகையுளி என்று சொல்வார்கள். பிறகு பார்க்கலாம்.) இஷ்ஷ்க் என்று வழுக்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா.

    நல்ல ஆரம்பம். வாழ்த்துகள்.

    அன்புடன்,
    ஹரி கிருஷ்ணன்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பாரதி அவர்களே, மிகவும் நன்றி..
    எத்தனை எளிமையான வகையில், படிக்க சிறிதும் சலிப்பு ஏற்படாத வண்ணம் தொடுத்திருக்கிறார்கள்... பழைய தொகுப்பை ஒருங்குறியில் இணைத்து தந்ததற்கு மிக்க நன்றி...

    தொடர்ந்து தாருங்கள்..
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாரதி

    மிக பயனுள்ள பதிவுகளைத் திரட்டி (மீண்டும்) தந்தமைக்கு மிக்க நன்றி..

    முதல் மூன்று பதிவுகளை இன்று வாசித்தேன்..

    நடை கொஞ்சம் எளிதாய், இடைச்செருகல் நகைச்சுவையுடன்... நன்றாக உள்ளது..

    முழுதும் வாசிக்கத் தூண்டுவதே இத்தொகுப்பின் வெற்றி..

    வாசித்து, நான் வெண்பாவும் எழுதிவிட்டால் இதன் படைப்பாளிக்கு
    முழு வெற்றி.. (ஆனால் மன்றத்து நண்பர்களுக்கு அவஸ்தை!!!!!)

    படைத்தவருக்குப் பாராட்டுகள்...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •