Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 46

Thread: கவிதா : மரபுக் கவிதை எழுதுவது எப்படி?.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0

    கவிதா : மரபுக் கவிதை எழுதுவது எப்படி?.

    ஆதவாவின் கொடிகண்டேன்
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8326

    அறுசீர்கழிநெடிலடியாசிரியப்பா விருத்தம் (ஆதவனே சொன்னது..)

    அங்கே பின்னூட்டங்களில் பூ நம் மன்றத்தில் முன்னர்
    கவீ எழுதிய இத்திரியை நினைவூட்டியிருந்தார்.

    யூனிகோடாக்கி இங்கே தருகிறேன்...


    கவிதா : மரபுக்கவிதை எழுதுவது எப்படி?


    மன்றத்தினருக்கு வணக்கம். மரபுக்கவிதை எழுதுவது எப்படி என்பதை வ.த. இராமசுப்ரமணியம் அவர்கள்
    எழுதிய நூலிலிருந்து இங்கே தரலாம் என்று உள்ளேன்.

    கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பர்.
    என்னைப்போல் மரபுக்கவிதை எழுத விரும்புபவர்களுக்கு உதவும் எண்ணத்திலேயே இதை
    ஆரம்பிக்கிறேன்.

    "யாப்பருங்கலக்காரிகை கற்றுக் கவிபாடுங்கால்
    பேரிகை கொட்டி பிழைப்பது மேலாம்." என்பர்.
    எனினும் அலை ஓய்வது எப்போது? நாம் முழுகுவது எப்போது?

    கவிதை எழுதுவதற்கு இலக்கிய அறிவும், இலக்கணத்தேர்ச்சியும் வேண்டும் என்பர். நல்ல தரமான
    கவிதைகளைப்படைக்க இத்தகைய இலக்கண இலக்கியங்களில் புலமை கொண்டிருக்கவேண்டும்
    என்பது கருத்தேயன்றி கவிதை எழுதுவதற்கான தடைகள் அல்ல.

    கவிதை எழுத மிக முக்கியமானது உணர்ச்சி. ஒரு கவிஞன் எதனை இலக்காகக் கொள்கின்றானோ
    அதுவே இலக்கிய அறிவாக அவனுக்கு அமைகிறது. வாழ்க்கையில் உண்டாகும் அனுபவமே அவனுக்கு
    இலக்கிய அறிவைப்புகட்டுகின்றது.

    கவிஞன் என்பவன் எதனையும் கூர்ந்து நோக்கும் இயல்புடையவன்.
    அவன் எதனை எந்த நோக்கத்தில் பார்க்கின்றானோ அதுவே அவனுக்கு அதனைப்பற்றிய அறிவை
    ஈட்டித்தருகிறது.
    எனவே உணர்ச்சிகளை இதமாகக்கொட்ட வேண்டும். பிறர் மனத்தில் பதியுமாறு நயமிகு நற்றமிழில்
    கொடுக்கவேண்டும். அதற்கு மொழி அறிவு நிச்சயம் தேவை. இலக்கியங்களைச் சுவைத்து நமது
    இலக்கிய அறிவைப்பெருக்கிக்கொள்ளலாம். உணர்வுகளை முழுமையாக அனுபவித்து
    தன்னிச்சையாக எழுதப்படும் கவிதைகள் இலக்கணங்கள் பார்ப்பதில்லை.
    முற்காலத்தில் பாடல்கள் யாவும் இறையருளால் பாடப்பெற்றவை என்றும் திருஞான சம்பந்தர்,
    சுந்தரமூர்த்தி சுவாமிகள், அருணகிரி நாதர், இராமலிங்க அடிகளார், காளமேகப்புலவர் முதலானோர்
    அவ்வாறு பாடிய அருளாளர்கள் என்றும் கூறுவர்.
    கவிகள் ஆசுகவி, வித்தார கவி, மதுரகவி, சித்திரகவி என நான்கு வகை உள்ளன. எனினும்
    பெரும்பான்மையான கவிதைகள் தனித்து ஒரு கவிஞனின் சிந்தனையிலிருந்து பேனா முனையின் வழியாக
    வெளிவந்து மலர்கிறது.

    கவிதை எழுதுவதற்கு நிறையச் சொற்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றின் வீரியத்தையும்
    உணர்ந்திருக்க வேண்டும். அது மக்களுக்கு எளிதில் விளங்கக்கூடியவையாகவும் இருக்க வேண்டும்.
    இதன் அடிப்படையில் இனி இலக்கண மரபுகள் என்பவற்றின் அடித்தளத்தைச் சிறிது நோக்குவோம்.

    யாப்பிலக்கணத்தின் படி எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலியவற்றையும்
    பாக்கள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா - இவைகளின் இலக்கணங்களையும் பற்றி
    இனிவரும் தொடரில் எளிமையாக விளக்கக் காண்போம்.

    (தொடரும்...)


    .
    Last edited by இராசகுமாரன்; 18-03-2008 at 08:24 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாகம் - 2

    தெருவீதிகளில் வண்ணமிகு கோலங்களை அமைத்து மங்கையர் அழகு செய்கின்றார்கள். அப்போது அவை நன்கு அமைவதற்குக் கருவியாக உள்ளவை அவற்றுக்குரிய கோலப்புள்ளிகளே!

    வண்ணக்கோலங்கள் பளிச் எனத் தோன்றினாலும் அதற்குள்ளே விளங்கும் புள்ளிகள் வைக்கப்பெற்று வரையப்படும் கோலங்கள் மிகுந்த எழில்பெறும்.

    இது போல செம்மையான எழில் மேவும் கவிதைகளுக்கு இலக்கண மரபுகள் என்ற கோலப்புள்ளிகள் உதவி புரிகின்றன. எனவே இத்தகைய மரபுகளைத் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

    கவிதையின் உறுப்புகள் ஆறு. அவை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன. தற்போது யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கணமே கவிதைக்கு உரிய இலக்கணமாகப் பெரிதும் கொள்ளப்படுகிறது.

    எழுத்து
    செய்யுள் உறுப்புகளுள் முதலாவதாக விளங்கும் எழுத்து என்பதைக் காண்போம்.
    மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் :-
    பொதுவாக மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 21. அவற்றுள்
    உயிர் எழுத்துக்கள் = 12
    வல்லின எழுத்துக்கள் = க, ச, த, ப = 4
    மெல்லின எழுத்துக்கள் = ஞ, ம, ந = 3
    இடையின எழுத்துக்கள் = ய,வ = 2
    (குறிப்பு: "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல" எனும் நோக்கில் 'ச' சேர்க்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் 'ச' எழுத்து குறிப்பிடப்படவில்லை என்றே கூறப்படுகிறது. அவ்வாறே குறிப்பிடாத பிற எழுத்துக்களும் வர நேரிடலாம்.)

    எழுத்து வகைகள்:-
    எழுத்து உறுப்புகள் 13 வகைப்படும்.
    1. குறில் எழுத்து (குற்றெழுத்து)
    2. நெடில் எழுத்து ( நெட்டெழுத்து)
    3. உயிரெழுத்து
    4. மெய்யெழுத்து
    5. உயிர்மெய் எழுத்து
    6. வல்லின எழுத்து
    7. மெல்லின எழுத்து
    8. இடையின எழுத்து
    9. ஆய்த எழுத்து
    10. குற்றியலுகரம்
    11. குற்றியலிகரம்
    12. ஐகாரக்குறுக்கம்
    13. அளபெடை

    மாத்திரை:-

    ஓர் எழுத்தை இயல்பாக ஒலிப்பதற்கு ஆகும் நேரம் மாத்திரை என்று கூறப்படும். இந்த மாத்திரை அளவினை வைத்தே எழுத்தானது வகைப்படுத்தப்படுகிறது. எனவே மாத்திரை குறித்து அறிந்துகொள்ளுவது கவிதை எழுதுவதற்கு மிகவும் அவச்�யமானதாகும்.

    ஒரு மாத்திரை கால அளவு என்பது கைவிரல் நொடிக்கும் நேரம், அல்லது கண்ணிமைக்கும் நேரம் எனவும் ஆகும். குறில் எழுத்தை ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அளவுக்காலமும் நெடில் எழுத்தை ஒலிப்பதற்கு இரண்டு மாத்திரை அளவுக்காலமும் ஆகும்.

    தமிழில் உயிர் எழுத்துக்கள் 12 = அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.
    இவற்றுள்,
    அ,இ,உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
    குறில் எழுத்துக்களை உச்சரிப்பதற்கு ஆகும் கால அளவு 1 மாத்திரை.

    ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழும் நெடில் எழுத்துக்கள்.
    நெடில் எழுத்துக்களை உச்சரிப்பதற்கு ஆகும் கால அளவு 2 மாத்திரைகள்.
    மெய் எழுத்துக்கள் 18. அவை,
    க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகும்.
    மெய்யெழுத்துக்கள் 18ம் உச்சரிக்கும் வகைகளைக்கொண்டு
    1. வல்லின எழுத்துக்கள் - க், ச், ட், த், ப், ற் - 6
    2. மெல்லின எழுத்துக்கள் - ங், ஞ், ண், ந், ம்,ன் - 6
    3. இடையின எழுத்துக்கள் - ய், ர், ல், வ், ழ், ள் - 6
    என்று பிரிக்கிறோம்.
    இவை ஒவ்வொன்றும் அரை (1/2) மாத்திரை உடையது.

    18 மெய் எழுத்துக்கள் 12 உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து ஒலிப்பது உயிர் மெய் எழுத்துக்களாகும். இவற்றின் எண்ணிக்கை 216. இவற்றுள்,
    குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (5 * 18) = 90
    இவை ஒவ்வொன்றும் ஒரு மாத்திரை கொண்டு இயங்கும்.
    நெடில் உயிர்மெய் எழுத்துக்கள் (7 * 18) = 126
    இவை ஒவ்வொன்றும் இரு மாத்திரை கொண்டு இயங்கும்.
    குறிப்பு : 1. உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் க, கி, கு, கெ, கொ.... முதலானவை ஒரு மாத்திரை அளவே.
    இவற்றை மெய்யெழுத்துக்குரிய 1/2 மாத்திரையோடு உயிர் எழுத்துக்குரிய 1 மாத்திரையும் சேர்ந்து 1 1/2 மாத்திரை என்று கொள்ளக்கூடாது.
    குறிப்பு : 2. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் கா, கீ,கூ, கே, கோ.... முதலானவை இரு மாத்திரை அளவே.
    இவற்றை மெய்யெழுத்துக்குரிய 1/2 மாத்திரையோடு உயிர் எழுத்துக்குரிய 2 மாத்திரையும் சேர்ந்து 2 1/2 மாத்திரை என்று கொள்ளக்கூடாது.

    .....(தொடரும்)

    .
    Last edited by இராசகுமாரன்; 18-03-2008 at 08:24 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாகம் - 3

    கவிகள் ஆசுகவி, வித்தார கவி, மதுர கவி, சித்திர கவி என நான்கு வகை உள்ளன.
    ஆசு கவி - உடனடியாக விரைவாக இயற்றப்படும் கவிதை வகையினரை இவ்வாறு பிரிக்கலாம்.
    வித்தார கவி - விரிவாக விளக்கமாக இயற்றப்படும் கவிதை
    மதுர கவி - இனிமையான குரலில் பாடக்கூடிய கவிதை
    சித்திர கவி - ஓவியங்கொண்டு புனையப்படும் கவிதை


    இனி எழுத்தின் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

    ஐகாரக் குறுக்கம்
    ஐ என்பது நெடில் எழுத்து. இவற்றுள் பை, நை, ஐவர், தை மாதம் போன்றவற்றிலுள்ள பை, நை, ஐ, தை ஆனது 2 மாத்திரை கொண்டு விளங்கும்.
    ஆயினும் சில இடங்களில் இவ்வெழுத்துத் தன் இயல்பான இரண்டு மாத்திரையை வ்�டக் குறைந்து ஒலிக்கும். இது ஐகாரக்குறுக்கம் ஆகும்.
    தைத்து, பைத்து, கைத்து ஆகிய சொற்களில் தை, பை, கை ஆகிய எழுத்துக்கள் தன் இயல்பான இரண்டு மாத்திரையை விடக் குறைவாக ஒலிப்பதைக் காணலாம்.
    (வாசித்து பயிற்சி பெறுக!)

    ஆய்தம்
    ஆய்த எழுத்தும் செய்யுளுக்கு உறுப்பாக வருவதாகும். இது குறில் எழுத்தை அடுத்தும், உயிரெழுத்தோடு கூடிய வல்லின மெய் எழுத்துக்கு முன்னும் வரும்.
    எ.டு : அ�து, இ�து, எ�கு, வெ�கா.

    குற்றியல் உகரம்
    உகர எழுத்தில் முடியும் சொல்லுக்குப்யின் முதல் எழுத்தாக உயிரெழுத்து வருமானால் அது புணரும் போது தனக்குரிய ஒரு மாத்திரையைவிடக் குறைந்து ஒலிக்கும். இதன் அளவு அரை மாத்திரையாகும்.

    இதனை "உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும்" எனச்சூத்திரம் காட்டும்.

    பட்டு என்று தனியாக எழுதும்போது "டு" என்ற எழுத்து ஒரு மாத்திரை பெறுகிறது. இதன் பக்கத்தில் மளிகை என்கிற என்கிற சொல் வரும் போது பட்டு மளிகை என வரும். இதில் மாத்திரை ஏதும் குறையவ்�ல்லை.
    எ.டு:
    பட்டு + மளிகை = பட்டு மளிகை
    பட்டு + வாணிபம் = பட்டு வாணிபம்
    பட்டு + துணி = பட்டுத்துணி

    ஆனால் பட்டு என்னும் சொல்லை அடுத்து ஆடை என்னும் சொல் வரும்போது பட்டாடை என ஆகிறது.
    பட்டு + ஆடை = பட்டாடை

    இதில் நிலை மொழியின்(பட்டு) கடைசி எழுத்தான (ட்+உ = டு) உ என்பதையடுத்து வருமொழியின் முதலில் ஆ என்கிற உயிர் எழுத்து வரும்போது நிலை மொழியின் ஈற்றில் உள்ள 'உ' கரம் கெட்டு விடுகிறது. இதனால் பட்ட்+ஆடை என வந்து பட்டாடை ஆகிறது.
    எ.டு
    கரும்பு + ஆலை = கரும்பாலை
    மாடு + அல்ல = மாடல்ல
    கேட்டு + உவந்தான் = கேட்டுவந்தான் (கேட்டு மகிழ்ந்தான்)

    குறிப்பு : 1. உகர எழுத்துக்கள் என்பவை 'உ' உயிரெழுத்துடன் இணையும் மெய்யெழுத்துக்களைக் குறிக்கும். அதாவது கு, சு, டு, து, பு, று - இவை யாவும் குற்றியலுகர எழுத்துக்கள் எனப்படும்.
    2. நிலை மொழி - முதலில் நின்று கொண்டிருக்கும் வார்த்தையை நிலை மொழி என்பர்.
    3. வரும் மொழி - நிலை மொழியுடன் இணையும் அடுத்த வார்த்தையை வரும் மொழி என்பர். குற்றியலுகரத்துடன் இணையும் வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாகவே இருக்கும்.
    4. இதில் டு என்பதில் உள்ள உகரம் கெட்டு வருமொழ்�யில் உள்ள உயிர் எழுத்தான
    உகரம் சேர்ந்து (ட்+உ) டு என ஆகிறது. காண்பவர்களுக்கு வருமொழியில் உள்ள
    உகரம் கெட்டது போல் தோன்றும். ஆனால் விதிப்படி நிலை மொழியில் உள்ள
    உகரமே கெட்டது என்பதாம். எனவே பொருள் மாறுபடாமல் கேட்டு மகிழ்ந்தான்
    என்றே கொள்ள வேண்டும். இதுபோன்ற குற்றியலுகரம் வரும் மொழியிலும் 'உ'கரம்
    வந்தால் மட்டுமே நிகழும்.

    குற்றியல் இகரம்

    குற்றியலுகரத்தின் சொற்களுக்கு முன்னால் 'ய' கர எழுத்து வரும்போது அந்த உகரம் இகரமாகத் திரிகிறது. இது தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து 1/2 மாத்திரையாக ஒலி பெறுகிறது.
    நாடு என்னும் சொல்லின் முன்னே யாது என்னும் சொல் இணையும் போது நாடியாது என வரும். இதில் 'டு' என்னும் எழுத்துத்திரிந்து 'டி' என மாறி மாத்திரையிலும் குறைந்து ஒலிக்கும்.
    எ.டு:-
    நாடு + யாது = நாடியாது
    குழலினிது + யாழினிது = குழலினிதியாழினிது
    காட்டு + யானை = காட்டியானை
    உகரம் இன்றியும் குற்றியலிகரம் வருவதுண்டு.
    எ.டு:-
    கேள் + மியா = கேண்மியா
    கேண்மியா என்பதில் 'மி' குற்றியலிகரமாகக் குறைந்த ஒலி பெற்றது.
    எனவே குற்றியலிகரமானது வரும் மொழியின் முதல் எழுத்தாலும் திரியப்பெறாலாம் எனத் தெரிகிறதல்லவா?

    அளபெடை
    உயிர் எழுத்துக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து நீட்டி ஒலிக்கும் தன்மையானால் அது "உயிர் அளபெடை" ஆகும். மெய்யெழுத்து கூடுதலாகச் சேர்ந்து ஒலிக்கப்பெறின் "ஒற்று அளபெடை" எனப்படும். (மெய் எழுத்தை ஒற்று என்பர்).

    அளவு மிகுந்து ஒலிக்கும் எழுத்துக்களுக்கு அளபெடை என்று பெயர்.
    "...துப்பாய தூஉம் மழை". இதில் தூஉம் என்னும் சொல்லில் தூ என்கிற நெடில் இரண்ட் மாத்திரை உடையது. இதனை அடுத்து 'உ' என்கிற உயிர் அதன் முன்னர் உள்ள 'தூ' என்கிற எழுத்தோடு கூடுதலாக ஒரு மாத்திரை கொள்ளுமாறு உள்ளது. "தூஉ" என்பது மூன்று மாத்திரை அளவு ஒலி பெறுகிறது. இந்த 'உ' உயிர் அளபெடை ஆயிற்று.

    எ.டு:-
    "ஏரின் உழாஅர் உழவர்" - இதில் 'அ' உயிர் அளபெடை ஆகும்.
    "தெய்வம் தொழாஅள்" - இதில் 'அ' உயிர் அளபெடை ஆகும்.
    " நமச்சிவாய வாஅழ்க" - இதில் 'அ' உயிர் அளபெடை ஆகும்.
    "யானை வெரூஉம் புலிதாக் குறின்" - இதில் 'அ' உயிர் அளபெடை ஆகும்.

    (... தொடரும்)

    .
    Last edited by இராசகுமாரன்; 18-03-2008 at 08:25 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாகம் - 4

    யாப்பு - யாத்தல் (கட்டுதல்), தொழிற் பெயர். இங்கு யாக்கப்படும் (கட்டப்படும்)
    செய்யுளுக்கு ஆகி வருதலால் தொழிலாகு பெயர்.
    யாப்பு, செய்யுள், பாட்டு, பா, கவி - ஒரு பொருட் சொற்கள்.
    எலும்பு, நரம்பு, இரத்தம், கொழுப்பு, தசை முதலியவற்றால் நமது உடம்பு கட்டப்பட்டிருத்தல் போல எழுத்து,
    அசை, சீர், தளை, அடி, தொடை முதலிய உறுப்புக்களால் கட்டப்பட்டதே செய்யுளாகும்.

    செய்யுளின் முதல் உறுப்பான எழுத்தின் தொடர்ச்சியைப்பார்ப்போம்.
    ஒற்று அளபெடை
    ஒற்றெழுத்து மிகுந்து வருவது ஒற்றளபெடை ஆகும்.
    எ.டு:-
    அம்ம்பு, தின்ன்னு, எங்ங்கே.

    முதல் எழுத்து, சார்பு எழுத்து:-
    எழுத்துக்களில் 'அ'கரம் முதல் 'ஔ'காரம் வரையிலான 12 உயிர் எழுத்துக்களும்
    'க்' முதல் 'ன்' வரையிலான மெய்யெழுத்துக்கள் 18-ம் முதல் எழுத்துக்களாகும்.
    குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பு எழுத்துக்களாகும்.
    அதாவது இந்த எழுத்துக்கள் சார்ந்தே வரும். தனித்து இயங்கா.
    இவற்றுள் குற்றியலுகரம் வெண்பா பாடல்களில் வரும்போது
    நன்கு ஆராய்ந்து சொல்லும் நிலையில் உள்ளதால் அதனைப்பற்றி பிறகு விரிவாகக்
    காண்போம்.

    குறிப்பு: ஐகாரக்குறுக்கம் போன்றே, ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்
    ஆகியனவும் உள்ளன.

    2. அசை
    எழுத்திலிருந்து அமைவது அசை. சில பாடல்களில் இடைவெளியை நிரப்புவதற்காக அசைச்சொற்கள்
    வரும். அது வேறு!
    எ.டு: மாதோ, ஆல்.
    "வண்டுகள் இனிது பாட
    மருதம் வீற் றிருக்கும் மாதோ!"
    இதில், மாதோ என்பது அசைச்சொல்.
    அதே போல்
    "இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
    தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
    எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
    மம்மர் அறுக்கும் மருந்து"
    இப்பாடலில் ஆல் என்ற சொல் அசைச்சொல்லாக வந்துள்ளது. அதாவது இத்தகைய சொல்லிற்கு பொருள்
    இருக்காது. இவை செய்யுளின் ஓசை நயத்தைக்காக்க வேண்டி வரும்.
    ஆனால் நாம் பார்க்கப்போகும் 'அசை' என்பது செய்யுளிலில் கணக்கிடப்படும் அலகு (அளவீடு) ஆகும்.
    அதாவது வார்த்தைகளை மாத்திரைகளுக்குத் தக்கப் பிரிப்பதை அசை என்போம்.
    மரபுக்கவிதையில் அசை பிரிக்கத்தெரிந்தால் தான் அது எந்த வகைப்பா என்பதை அறியமுடியும்.
    எனவே இந்த அசைப் பிரித்தலை கவனமாகவும், எளிமையாகவும் எப்படி என்று பார்ப்போம்.

    அசை இரண்டு வகைப்படும்.
    1. நேர் அசை, 2. நிரை அசை.

    1. நேரசை:-
    ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து தனித்தோ, அல்லது ஒற்றுடன்(புள்ளிவைத்த எழுத்துடன்)
    சேர்ந்தோ வருவது வருவது நேரசை.
    எ.டு:-
    'அ' அல்லது 'ஆ' தனித்துவருதல்.
    அல், ஆல், கண், நாள் என்று ஒற்றுடன் சேர்ந்து வருதல்.
    கண்கள் - இந்த வார்த்தையை (சீர்) அசைப் பிரிக்கவேண்டுமாயின்
    கண் | கள் எனப்பிரிக்கலாம்.
    நேர்- நேர் = இதில் இரண்டு நேர் அசைகள் வந்துள்ளன.

    2. நிரையசை:-
    இரண்டு குறில் எழுத்துக்கள் சேர்ந்து வருதல், இரண்டு குறில் எழுத்துக்களோடு ஒற்றெழுத்து சேர்ந்து
    வருதல், ஒரு குறிலையடுத்து ஒரு நெடிலும் அடுத்து ஒற்றும் சேர்ந்து வருதல் நிரையசையாகும்.
    ** இரு நெடிலோ, அல்லது நெடிலுடன் குறிலோ வர இயலாது.
    நிரையசை''

    எ.டு:-
    படி - இரண்டு குறில்கள் சேர வருவது.
    பணம் - இரண்டு குறிலை அடுத்து ஒரு ஒற்று வருவது.
    சிவா - குறிலுடன் நெடில் சேர்ந்து வருவது.
    சிறார் - குறிலுடன் நெடிலெழுத்து சேர்ந்து ஒற்றுடன் வருவது.

    இவற்றையெல்லாம் எப்படி நினைவில் வைத்துக்கொள்வது?
    ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.
    ஒரு வீட்டில் கணவன்( நெடில்), மனைவி(குறில்), கணவனின் தங்கை(குறில்), குழந்தை(ஒற்று) இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
    ஒரு இரு சக்கர வாகனத்தில் செல்லவேண்டுமாயின் எப்படி பயணிக்க வாய்ப்பு உள்ளது?
    குழந்தை (ஒற்று) தனித்து இயங்க முடியாது.
    நேர் அசை=> 1. கணவன் (நெடில்) மட்டும் செல்லலாம்.
    2. மனைவி (குறில்) மட்டும் செல்லலாம்.
    3. கணவனுடன் (நெடில்) குழந்தை (ஒற்று) செல்லலாம்.
    4. மனைவியுடன்(குறில்) குழந்தை(ஒற்று) செல்லலாம்.
    நிரை அசை => 1. மனைவியும்(குறில்), கணவனின் தங்கையும்(குறில்) செல்லலாம்.
    2. மனைவியும்(குறில்), கணவனும்(நெடில்) செல்லலாம்.
    3. மனைவியும்(குறில்), கணவனும்(நெடில்), குழந்தையும் (ஒற்று) செல்லலாம்.
    4. மனைவியும்(குறில்), கணவனின் தங்கையும்(குறில்), குழந்தையும்(ஒற்று) செல்லலாம்.
    ** கணவனுடன், மனைவியோ(குறில்) அல்லது கணவனின் தங்கையோ(குறில்) செல்ல முடியாது.
    அதாவது குறிலுக்குத்தான் முதல் உரிமை. (அட, டிராபிக் ரூல் நால்லாருக்கே!)

    இதையே யாப்பருங்கலக்காரிகை,
    "நெடில் குறில் தனியாய் நின்றும் ஒற்றடுத்தும்
    நடைபெறும் நேரசை நால்வகையானே!"
    என்று நேரசைக்கும்
    "குறிலிணை குறில் நெடில் தனித்தும் ஒற்றடுத்தும்
    நெறிமையின் நான்காய் வகும் நிரை யசையே"
    என்று நிரையசைக்கும் இலக்கணமாக எடுத்தியம்புகிறது.

    மற்றொரு எளிமையான உதாரணத்தைப் பார்ப்போம்.
    "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல். "
    - திருக்குறள் : 282
    இதில் முதல் அடி(வரி)யில் 4 சீர்களும்(வார்த்தை), இரண்டாம் அடியில் 3 சீர்களும் வந்துள்ளன.
    இதை எப்படி அசைப்பிரிக்கலாம்? பார்ப்போமா?
    உள்| ளத்| தால் உள்| ளலும் தீ| தே பிறன்| பொரு| ளைக்
    நேர்| நேர்| நேர் நேர்| நிரை நேர்| நேர் நிரை| நிரை| நேர்
    கள்| ளத் | தால் கள்| வேம் எனல்.
    நேர்| நேர் | நேர் நேர்| நேர் நிரை.

    சரி, இன்றைக்கு அசை பிரிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டீர்கள் தானே! திருக்குறளை எடுத்து அதிலுள்ள வெண்பா
    பாடல்களை அசை பிரித்துப்பாருங்கள். அடுத்த பாடத்தில் 'சீர்' பற்றி படிப்போம்..


    .
    Last edited by இராசகுமாரன்; 18-03-2008 at 08:25 AM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    பலருக்கும் பயனுள்ளதாய் அமையும் இத்திரி கவிதா அவர்களே!

    (இத்தொடர் முழுதுமே கவிதாவால் எழுதப்பட்டது ஷீ -நிசி
    -இளசு)
    Last edited by இளசு; 12-04-2007 at 05:27 AM.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாகம் - 5


    3. சீர்

    சீர் மேவும் வாழ்க்கை செம்மையுடன் விளங்கும், அதே போன்று சீர்கள் கொண்டு விளங்கும் கவிதையும் செம்மையுடன் விளங்கும்.

    எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து அசை உருவாவதைப்போல் அசைகள் ஒன்று சேர்ந்து சீர் உருவாகும்.

    உரை நடையில் பதம் அல்லது சொல், வார்த்தை என்பதைத்தான் கவிதையில் சீர் என்று கூறுகிறோம். இனி அவ்வாறே பின்வருவனவற்றில் அழைப்போம்.

    சீர்கள் நான்கு வகைப்படும். அவை,
    3.1. ஓரசைச்சீர் - ஓர் அசை உடையது
    3.2. ஈரசைச்சீர் - இரண்டு அசைகள் உடையது
    3.3. மூவசைச்சீர் - மூன்று அசைகள் உடையது
    3.4. நான்கசைச்சீர் - நான்கு அசைகள் உடையது
    எனப்படும்.

    அசைகளால் வடிவமைக்கப்படும் இத்தகைய சீர்கள் நேரசையாகவோ, நிரையசையாகவோ
    அல்லது இரண்டும் விரவியோ வரும்.
    அசைகளைப்பற்றி நாம் தெளிவாக இருப்பதால் சீர்கள் பற்றி இனி படிப்பது மிகவும் எளிது.

    3.1. ஓரசைச்சீர்
    ஓரசைச்சீரில் நேரசை, நிரையசை மட்டும் வரும்.

    3.1.1. நேரசை
    எ.டு:-
    பு - நேரசை
    தா - நேரசை
    கண் - நேரசை
    கால் - நேரச
    3.1.2. நிரையசை
    எ.டு:-
    கவி - நிரையசை
    கவின் - நிரையசை
    கலா - நிரையசை
    கலாம் - நிரையசை
    (சென்ற பாகத்தில் இதைப்பற்றி விரிவாகப்பார்த்தோம். புதியவர்கள் மேலே காண்க!)

    3.2. ஈரசைச்சீர்
    ஈரசைச்சீர் என்பது இரண்டு அசைகளைக்கொண்டு வரும். அவை
    நான்கு வகைப்படும். அவை
    3.2.1) நேர் நேர் - தேமா
    3.2.2) நிரை நேர் - புளிமா
    3.2.3) நேர் நிரை - கூவிளம்
    3.2.4) நிரை நிரை - கருவிளம்

    இதை நினைவில் வைத்துக்கொள்ள மற்றொரு சுலபமான வழிமுறையைச் சொல்லித்தரவா?
    ஈரசைச்சீரில் நேரசையில் முடிந்தால் அது மாச்சீர், நிரையசையில் முடிந்தால் அது விளச்சீர்.
    தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் - இவற்றை அலகு பிரித்தாலே அவை எந்த அசைகள் எனத்
    தெரிந்துவிடும்.

    தேமா - இதை அலகு பிரியுங்களேன் => தே | மா = நேர் நேர்.
    புளிமா - இதற்கு => புளி | மா = நிரை நேர்
    கூவிளம் - இதற்கு => கூ| விளம் = நேர் நிரை
    கருவிளம் - இதற்கு => கரு | விளம் = நிரை நிரை
    மாச்சீர்கள்:-
    தேமா => தே | மா = நேர் நேர்
    நேரசையுடன் நேரசை இணைந்தால் தே மா
    புளிமா => புளி | மா - நிரை நேர்
    நிரையசையுடன் நேரசை இணைந்தால் புளி மா

    விளச்சீர்கள்:-
    கூவிளம் => கூ| விளம் - நேர் நிரை
    நேருடன் நிரை இணைந்தால் கூ விளம்
    கருவிளம் => கரு | விளம் - நிரை நிரை
    நிரையுடன் நிரை இணைந்தால் கரு விளம்.
    இப்போது நன்றாக மனதில் பதிந்து விட்டது தானே! இனி அடுத்த சீர் பார்ப்போம்.

    3.3. மூவசைச்சீர்
    ஈரசைச்சீர் நன்றாக தெரிந்தால் மூவசைச்சீரும், நான்கசைச்சீரும்
    கண்டுபிடிப்பது மிக எளிது. ஈரசைச்சீரில் மேலும் ஒரு 'நேர்' அசை இணைந்தால்
    காய்ச்சீர் என்றும் 'நிரை' அசை இணைந்தால் கனிச்சீர் என்றும் அழைப்போம்.
    அதைப்பார்க்கலாமா?
    3.3.1. நேர் நேர் நேர் - தேமாங்காய்
    3.3.2. நிரை நேர் நேர் - புளிமாங்காய்
    3.3.3. நேர் நிரை நேர் - கூவிளங்காய்
    3.3.4. நிரை நிரை நேர் - கருவிளங்காய்
    3.3.5. நேர் நேர் நிரை - தேமாங்கனி
    3.3.2. நிரை நேர் நிரை - புளிமாங்கனி
    3.3.3. நேர் நிரை நிரை- கூவிளங்கனி
    3.3.4. நிரை நிரை நிரை - கருவிளங்கனி
    எவ்வளவு எளிமையாக உள்ளது!
    இதேபோல் நான்கசைச்சீர்களைக்காண்போம்.

    3.4. நான்கசைச்சீர்
    மேற்கூறிய எட்டு வகையான மூவசைச்சீருடன் நேர் அசை இணைந்து 8ம்,
    நிரை அசை இணைந்து 8ம் மொத்தம் 16 சீர்கள் நான்கசைச்சீர்களாகும்.
    இதைச் சிறிது கவனமாகப் பார்க்கவேண்டும்.
    மூவசைச்சீருடன்,
    நேர் அசை இணைந்தால் 'பூ' சீராகவும்
    நிரை அசை இணைந்தால் 'நிழல்' சீராகவும் அழைக்கப்படும்.
    ஆனால்,
    ஈற்று நேர்ச் சீருடன் இணைந்தால் 'தண்' என்றும்
    ஈற்று நிரைச் சீருடன் இணைந்தால் 'நறு' என்றும் இணைந்து அழைக்கப்படும்.
    அவை,
    3.4.1. நேர் நேர் நேர் நேர் - தேமாந்தண்பூ
    3.4.2. நிரை நேர் நேர் நேர் - புளிமாந்தண்பூ
    3.4.3. நேர் நிரை நேர் நேர் - கூவிளந்தண்பூ
    3.4.4. நிரை நிரை நேர் நேர் - கருவிளந்தண்பூ
    3.4.5. நேர் நேர் நிரை நேர் - தேமா நறும்பூ
    3.4.6. நிரை நேர் நிரை நேர் - புளிமா நறும்பூ
    3.4.7. நேர் நிரை நிரை நேர் - கூவிள நறும்பூ
    3.4.8. நிரை நிரை நிரை நேர் - கருவிள நறும்பூ

    3.4.9. நேர் நேர் நேர் நிரை - தேமாந்தண் நிழல்
    3.4.10. நிரை நேர் நேர் நிரை - புளிமாந்தண் நிழல்
    3.4.11. நேர் நிரை நேர் நிரை - கூவிளந்தண் நிழல்
    3.4.12. நிரை நிரை நேர் நிரை - கருவிளந்தண் நிழல்
    3.4.13. நேர் நேர் நிரை நிரை - தேமா நறு நிழல்
    3.4.14. நிரை நேர் நிரை நிரை - புளிமா நறு நிழல்
    3.4.15. நேர் நிரை நிரை நிரை - கூவிள நறு நிழல்
    3.4.16. நிரை நிரை நிரை நிரை - கருவிள நறு நிழல்

    காய்ச்சீரைப் பின்னொட்டி வரும் நான்கு நேரசை தண்பூ எனவும்,
    கனிச்சீரைப் பின்னொட்டி வரும் நான்கு நேரசை நறும்பூ எனவும் பெறும்.
    அதே போல்
    காய்ச்சீரைப் பின்னொட்டி வரும் நான்கு நிரையசை தண்ணிழல் எனவும்,
    கனிச்சீரைப் பின்னொட்டி வரும் நான்கு நிரையசை நறு நிழல் எனவும் பெறும்.
    கவிதைகளில் நான்கசைச்சீர்கள் வருவது தற்போது வழக்கத்தில் இல்லை.
    எனவே நான்கசைச்சீர்களைக்கண்டு மலைத்து விட வேண்டாம்.
    ஆரம்பத்தில் ஈரசைச்சீர்களைக்கொண்டு எழுத முற்படலாம். பழக்கத்தில் இவை
    சரளமாக வந்துவிடும்.

    மீண்டும் ஒரு மீள்பார்வைக் காண்போமா?
    ஓரசைச்சீர் - நேர், நிரை
    ஈரசைச்சீர் - மாச்சீர், விளச்சீர்
    மூவசைச்சீர் - காய்ச்சீர், கனிச்சீர்
    நான்கசைச்சீர் - பூச்சீர், நிழல் சீர் ( காய்ச்சீருடன் இணைந்தால் 'தண்', கனிச்சீருடன் இணைந்தால் 'நறும்' என இணைத்துக்கூறல் வேண்டும். )

    அடுத்த பாடத்தில் சீர்களைக்கொண்டு அமைக்கப்பெறும் தளைகளைப்பற்றி பார்ப்போம்.
    அதற்கு முன் ஒரு சிறு கேள்வி : வரும் மொழி, நிலை மொழி என்றால் என்ன?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    நன்றி அண்ணா...

    தற்போது எனக்கு மிகவும் தேவைப்படும் பதிவு. நேற்றுதான் வலைப்பூக்களில் தேடலாமாவென யோசித்தேன்..

    அனைத்து பாகங்களையும் விரைந்து தர தாழ்மையாய் வேண்டுகிறேன்.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாகம் - 6

    (இத்தொடர் முழுதும் எழுதியவர் - கவிதா)

    4. தளை

    எழுத்துக்கள் சேர்வதால் அசை உண்டாகிறது. அசைகள் சேர்வதால் சீர்கள் அமைகின்றன.
    இவற்றுள் சீர்களுக்குள்ளே இடையில் ஏற்படும் ஒலி உச்சரிப்பே தளை என இலக்கணத்தில் பேசப்படுகிறது.
    அதாவது, சொற்களின் இடையில் காணப்பெறும் ஒலிக்கூற்று இது. இத்தகைய ஒலி ஒழுங்கினை யாப்பிசை எனவும்
    கூறலாம். சந்த இனிமை என்று கூறுவதும் உண்டு.
    கவிதையின் அமைப்பிற்குச் சந்தம் விளங்கும் தன்மையே மெருகை உண்டாக்குகின்றது.

    கவிதைகளுக்குள் சீர்கள் அடிப்படை. சீர்களைக்கொண்டு அமையப்பெறும் கவிதைகளை வடிவம்பெறச் செய்வது தளை என்பதே. ஒவ்வொரு
    பா வகையும் அவை பெறுகின்ற தளைகளின் அமைப்பைச் சார்ந்தே தனித்துவம் பெறுகின்றன.

    பாவினத்திற்கு உரிய தளைகள் கொண்டு சீர்கள் அமைதல் வேண்டும் என்பதாம். ஒரு பாவினத்திற்கு
    உரியதல்லாத தளை ஆங்கு அமையப்பெற்றால் அறிஞர் பெருமக்கள் அவற்றைத் தளை தட்டுகிறது என்று கூறி ஏற்றுக்
    கொள்வதில்லை.

    ஒவ்வொரு பா இனத்திற்கும் தனித்தனியே தளைகள் உண்டு. இத்தன்மையில்,
    1. ஆசிரியப்பா அமைதல் வேண்டும்.
    2. வெண்பா அமைதல் வேண்டும்.
    3. கலிப்பா அமைய வேண்டும்.
    4. வஞ்சிப்பா அமைய வேண்டும்.

    எனவே, ஒரு சீரினை அடுத்துவரும் பிறிதொரு சீரினைக்கொண்டு தளையைக் கணக்கிட வேண்டும்.
    இன்ன தளையுடையது இன்ன பா என்று இலக்கண நூலார் வகுத்தவாறு கொள்ளவேண்டும். இப்போது
    அத்தகைய தளைகளைப் பற்றிச் சிறிது காண்போம். அதற்கு முன்னர் ஒரு முக்கிய உண்மையை மனதில் இருத்திக்
    கொள்ள வேண்டும்.

    முக்கியக் குறிப்பு:-
    பொதுவாக "முன்" என்னும் சொல்லை ஒரு சொல்லுக்கு முன்னால் வந்த சொல்லென்றே கருதுவார்கள்.
    புற நானூற்றில் ஒரு பாடல்,
    "ஒருநாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
    பலநாள் பயின்று பலருடன் செல்லினும்"
    இதில்,
    இருநாள் செல்லலம் என்ற தொடருக்கு முன்னதாக ஒருநாள் செல்லலம் என்ற தொடர் உள்ளது என்று கூறுதல்
    வழக்குமுறை. ஆனால் இலக்கணத்தில் நிலைமொழி என முதற்சொல்லையும் வருமொழி என அடுத்து வரும் சொல்லையும்,
    ன்றோர்கள் குறித்துள்ளார்கள். எனவே இக்கருத்தின்படி ஒரு நாள் செல்லலம் என்பதன் முன்னால் இரு நாள் செல்லலம்
    என்பது வந்ததாகக் கொள்ளுதல் வேண்டும்.
    நாம் எழுத்துக்களை முன்னோக்கி எழுதுகின்றோம். எனவே 'வணக்கம்' என்னும் சொல்லை எழுதும்போது 'வ' என்ற எழுத்தும்,
    அதற்கு முன்னே 'ண' என்னும் எழுத்து வருமாறும், அதற்கு முன்னே 'க்' என்னும் எழுத்து வருமாறும், அதற்கு முன்னே 'க' என்னும்
    எழுத்து வருமாறும், அதற்கு முன்னே 'ம்' என்னும் எழுத்து வருமாறும் எழுதுகிறோம். இவையாவும் பின்னோக்கி எழுதப்படுவதில்லை.
    எனவே யாப்பிலக்கணத்தில் முன் என்று கூறப்படுதல் என்பது, ஓரெழுத்தை அடுத்து வரும் எழுத்து என்று கொள்ள வேண்டும்.

    தளைகளை இரண்டாகப் பிரிக்கலாம்.
    4.1. ஒன்றிய தளைகள்
    4.2. ஒன்றாத தளைகள்
    அதாவது நேர் முன் நேரும், நிரை முன் நிரையும் ஒன்றி வந்தால் அவை ஒன்றிய தளைகள் என்றும்
    வெவ்வேறாக மாறி வந்தால் ஒன்றாத தளைகள் என்றும் வகைப்படும்.
    4.1. ஒன்றிய தளைகள்
    4.1.1. நேரொன்று ஆசிரியத் தளை
    4.1.2. நிரையொன்று ஆசிரியத் தளை
    4.1.3. வெண்சீர் வெண் தளை
    4.1.4. ஒன்றிய வஞ்சித்தளை
    ஆகியவையும்
    4.2. ஒன்றாத தளைகள்
    4.2.1. இயற்சீர் வெண் தளை
    4.2.2. கலித்தளை
    4.2.3. ஒன்றாத வஞ்சித்தளை
    ஆகியவையும் மொத்தம் ஏழு வகையான தளைகள் உள்ளன.

    இவைகளைப்பற்றி விரிவாகக் காண்போம்.

    4.1.1. நேரொன்று ஆசிரியத் தளை:-
    ஈரசைச் சீர்களில் நேர் முன் நேர் வருவது, அதாவது நிலைமொழியின் கடைசி அசை நேராகவும்
    வரும்மொழியின் முதல் அசை நேராகவும் இருப்பது நேரொன்று ஆசிரியத் தளை எனப்படும்.

    எ.டு:-
    பல்சான் றீரே பல்சான் றீரே
    நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
    தேமா தேமா தேமா தேமா
    நேர் முன் நேர் வந்ததால் ஒன்றிய ஆசிரியத் தளை ஆயிற்று.

    4.1.2. நிரையொன்று ஆசிரியத் தளை:-
    இதுவும் ஈரசைச்சீரில் நிரை முன் நிரை வருவதால் நிரையொன்று ஆசிரியத்தளை எனப்பட்டது.
    எ.டு:-
    கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
    நிரை நேர் நேர் நிரை நிரை நிரை நிரை நேர்
    புளி மா கூவிளம் கருவிளம் புளி மா
    நிரை முன் நிரை வந்ததால் ஒன்றிய சிரியத் தளை யிற்று.

    4.1.3. வெண்சீர் வெண்டளை:-
    காய்ச்சீர் முன்னால் நேரசை வருவது வெண்சீர் வெண்டளையாகும்.
    எ.டு:-
    மல்லிகையே வெண்சங்கா வண்தே
    நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
    தேமாங்காய் தேமாங்காய் தேமா

    4.1.4. ஒன்றிய வஞ்சித்தளை:-
    நேரசையில் வரும் காய்ச்சீரை வெண் சீர்நிரையசையில் வரும் கனிச்சீரை
    வஞ்சிச் சீர் அல்லது வஞ்சி உரிச்சீர் என்று உரைக்கப்படும்.
    'காய்ச்சீர்' என்றாலும் 'கனிச்சீர்' என்றாலும் அவை மூவசைச் சீர்களே. இவற்றுள் கனிச்சீர் முன்னே நிரையசை
    வருவது ஒன்றிய வஞ்சித்தளையாகும்.
    எ.டு:-
    கூறாமொழி கொடுங்கூற்றென
    வாராதொழி மடநெஞ்சமே - இதில்
    கூ றா மொழி கொடுங் கூற் றென
    நேர்| நேர்| நிரை நிரை| நேர்| நேர்
    தேமாங்கனி புளிமாங்கனி

    வா ரா தொழி மட நெஞ் சமே
    நேர்| நேர்| நிரை நிரை| நேர்| நேர்
    தேமாங்கனி புளிமாங்கனி

    இனி ஒன்றாத தளைகளைப்பற்றி பார்ப்போம்.

    4.2.1. இயற்சீர் வெண்டளை:-
    இது ஈரசைச் சீர்கள் ஒன்றையொன்று அடுத்து வரும்போது ஒன்றாத அசைகளால் வரும் ஒலி நயமே
    'இயற்சீர் வெண்டளை' எனப்படுகிறது.
    எ.டு:-
    ஈயென இரத்தல் இழிந்தன்(று) அதன்எதிர்
    கூவிளம் புளிமா புளிமா கருவிளம்
    நேர்| நிரை நிரை| நேர் நிரை| நேர் நிரை| நிரை
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
    தேமா தேமா கருவிளம் புளிமாங்காய்
    நேர்| நேர் நேர்| நேர் நிரை| நிரை நிரை| நேர்| நேர்
    நேரசையின் முன்னால் நிரையசை வந்ததால் இது 'இயற்சீர் வெண்தளை' கும்.
    இதே போல் நிரையசை முன்னால் நேரசையும் வரும்.
    எ.டு:-
    வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
    கூவிளம் கருவிளம் தேமா தேமா
    நேர்| நிரை நிரை| நிரை நேர்| நேர் நேர்| நேர்
    தினையனைத்(து) யினும் இனி(து)அவர்
    கருவிளம் கூவிளம் கருவிளம்
    நிரை| நிரை நேர்| நிரை நிரை| நிரை
    துணையள(வு) அறிந்து நல்கினர் விடினே
    கருவிளம் புளிமா கூவிளம் புளிமா
    நிரை| நிரை நிரை| நேர் நேர்| நிரை நிரை| நேர்

    மேற்குறித்த பாடலில் கோடிட்ட இடத்தில் நிரை முன் நேர் வந்து 'இயற்சீர் வெண்தளை' னதைக்காணலாம்.

    4.2.2. கலித்தளை:-
    காய்ச்சீர் வெண்பா உரிச்சீர் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததே! காய்ச்சீரின் முன்னால் நிரையசை
    வருமானால் அது கலித்தளை வருதலாம்.
    எ.டு:-
    அரனதிகன் உலகளந்த அரியதிகன்
    கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
    நிரை| நிரை| நேர் நிரை| நிரை| நேர் நிரை| நிரை| நேர்
    என்றுரைக்கும் அறிவிலார்க்குப்
    கூவிளங்காய் கருவிளங்காய்
    நேர்| நிரை| நேர் நிரை| நிரை| நேர்
    பரகதிசென்(று) அடைவரிய பரிசேபோல்
    கருவிளங்காய் கருவிளங்காய் புளிமாங்காய்
    நிரை| நிரை| நேர் நிரை| நிரை| நேர் நிரை| நேர்| நேர்
    புகலரிய பிண்பிற்றாமல்
    கருவிளங்காய் தேமாந்தண்பூ
    நிரை| நிரை| நேர் நேர்| நேர்| நேர்| நேர்

    குறிப்பு :-
    காய்ச்சீர் முன்னால் நேரசை எனவும்
    கனிச்சீர் முன்னால் நிரையசை எனவும்
    அழைக்கப்படும். இவை, மூவசைச்சீர் கொண்டு வரும்.

    4.2.3. ஒன்றாத வஞ்சித் தளை:-

    கனிச்சீர் வஞ்சிப்பா உரிச்சீர் என்பதும் நாம் முன்பே கண்டதே!
    கனிச்சீர் முன் நேரசை வருவது ஒன்றாத வஞ்சித்தளையாகும்.

    எ.டு:-
    பாடுங்கிளி வாராமுனம் நாடுங்கனி சேர்காதலர்
    தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி தேமாங்கனி
    நேர்| நேர்| நிரை நேர்| நேர்| நிரை நேர்| நேர்| நிரை நேர்| நேர்| நிரை

    இதுவரை 7 தளைகளைப்பற்றிப் படித்தோம்.
    ஒரு மீள்பார்வைப் பார்ப்போமா?

    ஒன்றிய தளைகள்
    1. நேர் ஒன்றிய ஆசிரியத் தளை - ஈரசைச்சீர்
    => மா முன் நேர் அசை வரும்.
    2. நிரை ஒன்றிய ஆசிரியத் தளை - ஈரசைச்சீர்
    => விளம் முன் நிரை அசை வரும்.
    3. வெண்சீர் வெண்டளை - மூவசைச்சீர்
    => காய் முன் நேரசை வரும்.
    4. ஒன்றிய வஞ்சித் தளை - மூவசைச்சீர்
    => கனி முன் நிரை அசை வரும்.
    ஒன்றாத தளைகள்
    1. இயற்சீர் வெண்டளை - ஈரசைச்சீர்
    => மா முன் நிரை அசையும்
    => விளம் முன் நேர் அசையும் வரும்.
    2. கலித்தளை - மூவசைச்சீர்
    => காய்முன் நிரையசை வரும்.
    3. ஒன்றாத வஞ்சித்தளை - மூவசைச்சீர்
    => கனிமுன் நேர் அசை வரும்.
    (தொடரும்...)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாகம் 7

    5. அடி

    அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் - பழ மொழி
    அடிமேல் அடி வைத்தால் பாடல் வரும் - பா மொழி


    கவிதையில் அடி என்பது சீர்களின் அமைப்பையொட்டி வருவது. அடி வகைகளின்
    எண்ணிக்கையைப் பற்றிச் சிக்கல் எதுவும் இல்லை. கவிஞர்கள் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு
    அமைத்துக் கொள்ளலாம்.

    சீர்களைக் கொண்டு அமைக்கப்படுவது அடி.
    யாப்பிலக்கணப்படி அடி யை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை,
    குறளடி
    சிந்தடி
    அளவடி
    நெடிலடி
    கழிநெடிலடி


    1. குறளடி:-

    இரண்டு சீர்கள் கொண்டு வருவது குறளடி.இது ஈரசைச்சீர்களாகவும் இருக்கலாம்.மூவசைச் சீர்களாகவும் இருக்கலாம்.
    நான்கசைச் சீர்கள் பாடல்கள் வழக்கத்தில் இல்லை.இதனை இரண்டு ஈரசைச்சீர்களாகக் கொள்கிறோம். எனவே
    நான்கசைச்சீர்கள் பற்றிக் கவலைக்கொள்ளவேண்டாம்.
    குறளடிக்கு உதாரணம் பார்க்கலாம்.

    எ.டு-1:-
    காதற் கொழுநனைத்
    தீதில் தொழுது
    வானுலகு அடைந்தனள்
    மானுட மங்கையே
    .

    எ.டு-2:-
    கைசிறந்தன கடிவளை
    மெய்சிறந்தன மலர்க்கொடி


    ஓரடியில் இரண்டு சீர்கள் கொண்டு வருவது குறளடி என்பது இப்போது விளங்கியிருக்கும்.இரண்டு அடிகளில் வந்த போதும்
    திருக்குறளை குறளடி என்று கூறுவதில்லை. ஏனெனில் திருக்குறளின் முதலடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில்
    மூன்று சீர்களும் வருவதால் அதைக் குறளடி என்று கூற இயலாது. ஆனால் வெண்பாவிற்குரிய இலக்கணத்துடன் இரண்டு
    அடிகளில் வருவதால் குறள் வெண்பா என்றுதான் கூறவேண்டும்.
    வெண்பா பற்றி இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்.

    குறளடி பற்றி ஐயமின்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே இதை விளக்கினேன். ஏதேனும் சந்தேகம் இருப்பின்
    கேளுங்கள்.

    2.சிந்தடி:-
    இது ஓரடியில் மூன்று சீர்கள் கொண்டு வருவது.
    எ.டு:-
    தேனினும் இனிய வாழ்வை
    வானிலும் பெறுதல் வேண்டி
    நானிலம் தன்னில் வேள்வித்
    தூநெறி தழைக்கச் செய்தான்


    மேற்கண்ட பாடலில் ஒவ்வொரு அடியும் 3 சீர்கள் கொண்டு வந்ததால் சிந்தடி என்று அழைக்கப்படுகிறது.

    கவிதையில் வெண்பாவின் ஈற்றடியும், ஆசிரியப்பாவின் ஈற்றயலடி எனப்படும் கடைசி அடிக்கு முன்னால் உள்ள அடியும்
    மற்றும் வஞ்சி விருத்தங்களும் மூன்று சீர்கள் கொண்டு சிந்தடியாக வரும்.

    3. அளவடி:-
    இது ஓரடியில் நான்கு சீர்கள் கொண்டு வரும்.இத்தகைய பாடல்கள் தாம் பெருவாரியாக
    அமைந்துள்ளன.
    எ.டு:-
    ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
    வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
    ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
    களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
    !

    இச்சங்கப் பாடல் நான்கு சீர்கள் கொண்டு அளவடியாக வருகிறது.இதில்,
    முதற்சீர் - ஈன்றுபுறந்
    2வது சீர் - தருதல்
    3வது சீர் - என்தலைக்
    4வது சீர் - கடனே
    ஆகும்.
    எனவே முதலடியில் 4 சீர்கள் வந்து அளவடி ஆயிற்று. அவ்வாறே 2-வது, 3-வது, 4-வது, 6-வது அடிகளிலும் நான்கு
    சீர்கள் கொண்டு அளவடி வந்துள்ளது. ஆனால் ஈற்றயலடி, அதாவது கடைசி அடிக்கு முந்தைய அடி (5-வது அடி) மூன்று
    சீர்கள் பெற்று சிந்தடியாக வந்துள்ளது. ஆசிரியப்பாவில் இவ்வாறு வரும்.இதே போல் குறளடியும் கலந்து வரும். அவை
    பற்றி ஆசிரியப்பாவில் விளக்கமாகப் பார்ப்போம்.

    4. நெடிலடி:-
    ஐந்து சீர்கள் கொண்டு வருவது நெடிலடி ஆகும்.

    சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
    ********* வெற்பனைச் செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித்
    ********* தோனை விளங்குவள்ளிக்
    காந்தனைக் கந்தக் கடம்பனைக்
    ********* கார்மயில் வாகனனைச்
    சார்துணைப் போதும் மறவா
    ********* தவர்க்கொரு தாழ்வில்லையே.

    - கந்தரலங்காரம் : 72

    இதில்,
    முதற் சீர் - சேந்தனைக்
    2-ம் சீர் - கந்தனைச்
    3-வது சீர் - செங்கோட்டு
    4-வது சீர் - வெற்பனைச்
    5-வது சீர் - செஞ்சுடல்வேல்
    என இப்பாடல் ஐந்து சீர்கள் கொண்ட நெடிலடியாகும்.இந்த 5 சீர்களும் ஒரே அடியில் வந்ததாகவே கொள்ளவேண்டும்.
    அதாவது முதல் வரியில் மூன்று சீர்களும் இரண்டாவது வரியில் இரண்டு சீர்களும் பிரித்து எழுதப்பட்டுள்ளது.இதை
    இரண்டு அடிகளாகக் கொள்ளக்கூடாது. எனவே தான் மடக்கி (அதாவது 2வது வரி சற்று உள்தள்ளி (இங்கே மடித்து எழுத முடியாததால் நட்சத்திரக் குறியிட்டுக் காட்டியுள்ளேன்)) எழுதப்பட்டுள்ளது.
    இவ்வாறே 2,3,4 அடிகளும் வந்துள்ளன.

    5. கழிநெடிலடி:-
    ஓரடியில் ஆறு, ஏழு, எட்டு என்று ஐந்திற்கு மேல் சீர்கள் கொண்டு வருவது கழி நெடிலடி எனப்படும்.இதற்கு மிகவும்
    நீண்ட அடி என்பது பொருள்.
    எ.டு:-
    ஆழிசூழ் உலகம் எல்லாம்
    ******** பரதனே ஆள நீபோய்த்
    தாழிரும் சடைகள் தாங்கித்
    ******** தாங்கரும் தவம்மேற் கொண்டு
    பூழிரும் கானம் நண்ணிப்
    ********* புண்ணியத் துறைகள் ஆடி
    ஏழிரண்டு ஆண்டின் வாஎன்று
    ********* இயம்பினன் அரசன் என்றாள்
    .
    முதல்சீர் - ஆழிசூழ்
    2வது சீர் - உலகம்
    3வது சீர் - எல்லாம்
    4வது சீர் - பரதனே
    5வது சீர் - ஆள
    6வது சீர் - நீபோய்த்
    என ஆறுசீர்கள் முதலடியில் வந்து கழி நெடிலடி ஆயிற்று.இதுபோன்றே 2,3,4வது அடிகளிலும் கழி நெடிலடிகள்
    வந்தமையைக் காண்க.

    இவ்வாறு 6 சீர்கள் முதல் பதினாறு சீர்கள் கொண்டு ஒரு பாடலின் அடி அமைவது கழி நெடிலடி என்று அழைக்கப்படும்.


    மீள்பார்வை:-
    இதுவரை கூறிவந்த தலைப்புகளில் எழுத்து என்பது அசை என்ற உறுப்பை உண்டாக்கும் என்று கண்டோம்.
    மற்றும் அசைகள் சேர்ந்து சீர் என்னும் உறுப்பைத் தருகிறது. இத்தகைய சீரின் அசை ஒன்று என இருப்பின்
    ஓரசைச்சீர் என்றும் , இரண்டு என இருப்பின் ஈரசைச்சீர் எனவும் அவ்வாறே மூவசைச்சீர், நான்கசைச்சீர் எனவும்
    வரும் என்று பார்த்தோம்.
    இத்தகைய சீர்கள் ஒன்றின் முன்னே ஒன்று வரும்போது தோன்றும் ஒலி நய இனிமையே தளை எனக்
    கண்டோம். இத்தகைய தளை இரு சீர்களின் சேர்க்கையால் உண்டாகின்றது.
    மற்றும் சீர்கள் இரண்டு வருதல் குறளடி என்பதாம். அதாவது பாடலில் வரும் ஓரடியானது குறுமையாக உள்ளது
    என்பது பொருள். மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி. நான்கு சீர்கள் கொண்டது அளவடி என்பது அதனதன் பெயர்களை
    நோக்கும்போது அதன் இயல்பு விளங்கும்.
    இந்த அளவைவிட ஓரடியில் ஐந்து சீர்கள் வருமானால் நெடிலடி எனவும், ஆறு முதல் பதினாறு வரையிலான சீர்கள் ஒரு
    அடியில் வருமானால் கழி நெடிலடி எனவும் பார்த்தோம்.
    இது வரை பாடலின் ஒரு அடியில் வரும் உறுப்புகளைப் பற்றிப் பார்த்தோம்.

    அடுத்த பாகத்தில் ஒவ்வொரு அடியினையும் தொடர்புப் படுத்தித் தொடுக்கும் தொடை பற்றி பார்ப்போம்.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    " தெரியாமல் இருப்பது அறியாமை அல்ல.
    தெரிந்து கொள்ளாமலே இருப்பது தான் அறியாமை."



    பாகம் - 8

    5. தொடை

    ஓரெழுத்து ஒருமொழி
    சில பாடல்களில் அலகிற்காக அசைகள் ஓரெழுத்தில் வரும்.
    ஆனால் அவற்றிற்கு பொருள் இருக்காது. அத்தகைய அசைகளை
    ஒரு மொழியாக நாம் ஏற்றுக்கொள்வதில்லை.

    எ.டு-1 :-
    தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய
    தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் - ஊக்கமிகு
    கல்லோர்க் களிக்கும் நதிச்சடையோய் எற்கருளில்
    எல்லோர்க்கும் ஐயுறவா மே
    - திருவருட்பா, சிவநேசவெண்பா

    இப்பாடலின் கண் நான்காம் அடியில் ஈற்றசையாக வரும் "மே" என்னும் சீரில்
    ஓரெழுத்தே வந்தபோதும் இது ஒரு மொழியாகாது.

    எ.டு-2 :-
    ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயும்அரைக்
    காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் - மா(சு)உந்த
    வீண்டும் சிரங்குனிக்கும் வித்தகனே நின் தலத்தைக்
    கண்டும் சிரம்குவியாக் கை.
    - திருவருட்பா, சிவநேசவெண்பா

    இப்பாடலில் நான்காம் அடியில் வரும் மூன்றாம் சீர் "கை" என்பது ஓரெழுத்து
    ஒரு மொழியாக வந்த அசை. ஏனெனில் இங்கே "கை" என்ற சீருக்கு பொருள்
    உண்டு; இது உடலில் உள்ள ஒரு உறுப்பைக் குறிக்கும் பெயர்ச்சொல் ஆகும்.

    கேள்வி:-
    எங்கே, இவற்றில் ஓரெழுத்து ஒருமொழி எவை என்றும்
    ஒருமொழி அல்லாதவை எவை என்றும்
    கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்: கா, ஆ, ஈ, ஏ, பூ


    தொடை என்பது பாடலின் ஓரடியில் வரும் சீர்களின் அமைப்புக்களோடு
    நில்லாது, தொடர்ந்து வருகின்ற இரண்டாவது மற்றும் அடுத்து வரும் அடிகளிலும்
    உள்ள அமைப்புக்களை எடுத்து இயம்புவதாகும்.
    இத்தகைய தொடைகளை எட்டு வகைகளாக யாப்பிலக்கணம் அமைத்துள்ளது. அவை,
    5.1. மோனைத் தொடை
    5.2. எதுகைத் தொடை
    5.3. இயைபுத் தொடை
    5.4. முரண் தொடை
    5.5. அளபெடைத் தொடை
    5.6. இரட்டைத் தொடை
    5.7. அந்தாதித் தொடை
    5.8. செந்தொடை
    என்பன.

    5.1. மோனைத் தொடை:-
    கவிதைகளில் ஒவ்வொரு சீரிலும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனைத்தொடை
    ஆகும். இதில் ஓரெழுத்தேயன்றி அதற்கு இன எழுத்துக்கள் வருதலும் மோனைத் தொடையில் அமையும்.

    உயிர் எழுத்துக்களில்,
    அ, ஆ, ஐ, ஔ - ஓரினம்
    இ, ஈ, எ, ஏ - ஓரினம்
    உ, ஊ, ஒ, ஓ - ஓரினம்
    மெய் எழுத்துக்களில்,
    ச், த் - ஓரினம்
    ந், ஞ் - ஓரினம்
    ம், வ் - ஓரினம்
    ஒலி நயத்தை வைத்தே இவ்வாறு இனம் பிரிக்கப்பட்டுள்ளது என்பது உச்சரிக்கும் போதே புரிகிறதல்லவா?
    குறிப்பு:-
    உயிர் மெய் எழுத்துக்களில் உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் ஒரே இனமாக வந்தால் மட்டுமே மோனைத் தொடையாகும்.
    கணக்கிடப்படும்.
    எ.டு:
    நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
    நமச்சி வாயவே நான்அறி விச்சையும்
    நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே
    நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே
    .
    - அப்பர் தேவாரம்
    மேற்கண்ட பாடலில் முதலடியில்,
    முதற்சீரின்('நமச்சி') முதலெழுத்து 'ந' , மூன்றாம் சீரின் ('ஞானமும்') முதலெழுத்து 'ஞா' ஒரே இனமாக வந்து மோனைத்தொடை ஆயிற்று.
    ஆனால் இரண்டாவது அடியில்,
    2-ம் சீரின் ('வாயவே') முதலெழுத்து 'வா', நான்காம் சீரின் ('விச்சையும்') முதலெழுத்து 'வி' இவற்றின் அடிப்படை மெய் எழுத்து 'வ்' ஆக
    இருந்த போதும் முறையே ஆ, இ இவற்றுடன் இணைந்ததால் இவை மோனைத்தொடையாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் ஆ, இ
    தத்தமக்குள் இன எழுத்துக்கள் அல்ல.
    அதேபோல் நான்காம் அடியில்
    2-ம் சீரின் ('வாயவே') முதலெழுத்து 'வா', நான்காம் சீரின் ('காட்டுமே') முதலெழுத்து 'கா' இவற்றின் அடிப்படை உயிர் எழுத்து 'ஆ' ஆக
    இருந்த போதும் முறையே வ், க் இவற்றுடன் இணைந்ததால் இவை மோனைத்தொடையாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் வ், க்
    தத்தமக்குள் இன எழுத்துக்கள் அல்ல.

    மோனைத் தொடையின் வகைகள்:-
    அ) இணை மோனை
    ஆ) பொழிப்பு மோனை
    இ) ஒரூஉ மோனை
    ஈ) கூழை மோனை
    உ) மேற்கதுவாய் மோனை
    ஊ) கீழ்க்கதுவாய் மோனை
    எ) முற்று மோனை
    ஏ) அடி மோனை
    மோனையின் வகையானது இடம்பெறும் சீரின் தன்மையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.
    அ) இணை மோனை:- [1 மற்றும் 2]
    ஒரு அடியில் முதல் சீரிலும், அதற்கடுத்த இரண்டாவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
    பாடலைத் தொடுப்பது இணை மோனை எனப்படும்.
    எ.டு:-
    அன்னையின் அன்பில் எல்லோரும் திளைக்க

    ஆ) பொழிப்பு மோனை:- [1 மற்றும் 3]
    ஒரு அடியில் முதல் சீரிலும், மூன்றாவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
    பாடலைத் தொடுப்பது பொழிப்பு மோனை எனப்படும்.
    எ.டு:-
    அகமெனும் இனிய அகத்தினில் மேவும்

    இ) ஒரூஉ மோனை:- [1 மற்றும் 4]
    ஒரு அடியில் முதல் சீரிலும், நான்காவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
    பாடலைத் தொடுப்பது ஒரூஉ மோனை எனப்படும்.
    எ.டு:-
    அசைவிலா நன்னெறி விளங்கும் அறிவால்

    ஈ) கூழை மோனை:- [1,2 மற்றும் 3]
    ஒரு அடியில் முதல் சீரிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
    பாடலைத் தொடுப்பது கூழை மோனை எனப்படும்.
    எ.டு:-
    அவனியும் அருட்கண் அமைந்து மலர

    உ) மேற்கதுவாய் மோனை:- [1,3 மற்றும் 4]
    ஒரு அடியில் முதல் சீரிலும், மூன்றாவது மற்றும் நான்காவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
    பாடலைத் தொடுப்பது மேற்கதுவாய் மோனை எனப்படும்.
    எ.டு:-
    அரும்பும் இனிமையும் அதன்வழி அணிகொளும்

    ஊ) கீழ்க்கதுவாய் மோனை:- [1,2 மற்றும் 4]
    ஒரு அடியில் முதல் சீரிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
    பாடலைத் தொடுப்பது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்.
    எ.டு:-
    அருந்தமிழ் அழகும் பொழிந்தது அதன்தலை

    எ) முற்று மோனை:- [1,2,3 மற்றும் 4]
    ஒரு அடியில் முதல் சீரிலும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது சீரிலும் மோனைத்தொடை வருமாறு
    பாடலைத் தொடுப்பது முற்று மோனை எனப்படும்.
    எ.டு:-
    அறநெறி அங்கே அரசென ஆகி

    ஏ) அடி மோனை:-
    ஒரு பாடலின் எல்லா அடியிலும் முதலெழுத்து ஒன்றி வருவது போல் தொடுப்பது அடி மோனைத்தொடை எனப்படும்.
    எ.டு:-
    மேற்கூறிய 'நமச்சிவாய'ப் பாடலில் அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வந்ததால் அப்பாடலை அடி மோனையாகக்
    கொள்ளலாம்.
    நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
    நமச்சி வாயவே நான்அறி விச்சையும்
    நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே
    நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
    - அப்பர் தேவாரம்
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பாகம் 8 தொடர்ச்சி..

    (இத்திரி முழுதும் எழுதியவர் - கவிதா)

    5.2. எதுகைத் தொடை
    ஒரு பாடலின் முதலடியில் இரண்டாம் எழுத்தும் இரண்டாம் அடியில் இரண்டாம்
    எழுத்தும் ஒரே எழுத்தாக அமைவது எதுகை எனப்படும். அது அடி எதுகை எனப்படும்.
    எ.டு:-
    ஊழிற் பெருவலி யாவுள் மற்றொன்று
    சூழினும் தான்முந் துறும்

    - திருக்குறள்
    முதலடியில் 'ஊ' என்னும் நெடிலையும் இரண்டாம் அடியில் 'சூ' என்னும் நெடிலையும்
    அடுத்து 'ழி' என்னும் எழுத்து ஒன்றி வந்துள்ளதால் இது அடி எதுகைத் தொடை ஆகும்.
    குறிப்பு:-
    முதலெழுத்து அதாவது மோனையானது ஒரே அளவுடைய மாத்திரையாக இருந்து
    இரண்டாவது எழுத்தானது ஒன்றி வந்தால் மட்டுமே அது எதுகைத்தொடையாக அமையும்.
    எ.டு:-
    யாண்டு பலவாக நரையில் ஆகுதல்
    யாங்கா கியர்என வினைவுதிர் ஆயின்
    மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
    யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
    அல்லவை செய்யான் காக்கும் அதந்தலை
    ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
    சான் றோர் பலர்யான் வாழும் ஊரே.

    - புற நானூறு.

    கேள்வி:-
    இப்பாடலில் எதுகைத்தொடை வரும் இடங்களையும்
    வராத இடங்களையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

    மோனைத்தொடையைப் போலவே எதுகைத் தொடையிலும் வரும் இடத்தைப் பொறுத்து
    1. இணை எதுகை
    2. பொழிப்பு எதுகை
    3. ஒரூஉ எதுகை
    4. கூழை எதுகை
    5. மேற்கதுவாய் எதுகை
    6. கீழ்க்கதுவாய் எதுகை
    7. முற்று எதுகை
    என வரும்.

    1. இணை எதுகை :-
    முதல் இரு சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது இணை எதுகை
    எ.டு:-
    முன்னும் பின்னும் வளம்பெற மொழிதல்

    2. பொழிப்பு எதுகை:-
    முதல் சீர் மற்றும் மூன்றாம் சீரில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
    பொழிப்பு எதுகை.
    எ.டு:-
    என்னரும் பண்பாய் நன்றெனக் கண்டேன்.

    3. ஒரூஉ எதுகை:-
    முதல் சீர் மற்றும் நான்காம் சீரில் இரண்டாம் எழுத்து
    ஒன்றி வருவது ஒரூஉ எதுகை.
    எ.டு:-
    மன்னிய செல்வம் மலர்தல் என்றும்

    4. கூழை எதுகை:-
    முதல், இரண்டாம், மூன்றாம் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி
    வருவது கூழை எதுகை.
    எ.டு:-
    துன்னிய நன்மை என்றும் நிலைபெறும்

    5. மேற்கதுவாய் எதுகை:-
    நான்குசீர் உள்ள அடியில் இரண்டாம் சீர் தவிர ஏனைய சீர்கள் எதுகைத்தொடை
    பெற்றுவரின் அது மேற்கதுவாய் எதுகைத்தொடை எனப்படும்
    எ.டு:-
    தன்மை காணும் மிசை

    6. கீழ்க்கதுவாய் எதுகை:-
    நான்குசீர் உள்ள அடியில் மூன்றாம் சீர் தவிர ஏனைய சீர்கள் எதுகைத்தொடை
    பெற்றுவரின் அது கீழ்க்கதுவாய் எதுகைத்தொடை எனப்படும்
    எ.டு:-
    மின்னும் நன்னெறி எனமேவிச் சென்னியில்

    7. முற்று எதுகை:-
    முதல் அடியின் அனைத்து சீர்களிலும் எதுகை வருவது முற்று எதுகையாகும்.
    எ.டு:-
    நன்னுக என்றும் நன்மையும் முன்னுமே

    5.3. இயைபுத் தொடை:-
    ஒரு சொல் அல்லது அசை மீண்டும் மீண்டும் வருவது இயைபுத் தொடையாகும்.
    எ.டு-1:-
    உண்டி கொல்லோ! உடுப்பன கொல்லோ!
    பெண்டிர் கொல்லோ! பேணுநர் கொல்லோ
    !
    இங்கே 'கொல்லோ' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்ததால் இது இயைபுத்தொடையாயிற்று.
    எ.டு-2:-
    ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்றே
    ஈசருடன் ஞானமொழி பேசும்முகம் ஒன்றே
    கூறும் அடி யார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே
    குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
    மாறுபடு சூரரைவதைத் தமுகம் ஒன்றே
    வள்ளியைம ணம்புணர வந்தமுகம் ஒன்றே
    ஆறுமுகம் ஆனபொருள் நீயருளல் வேண்டும்
    ஆதியரு ணாசலம் அமர்ந்தபெரு மானே
    .

    இதில் 'ஒன்றே' என்னும் சொல் முதல் ஆறு அடிகளில் வந்ததால் இயைபுத் தொடையாயிற்று.
    குறிப்பு:-
    இயைபுத் தொடை இறுதிச் சீரிலிருந்து தொடங்குவதால் இதன்கண் தோன்றும் இணை, பொழிப்பு,
    ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று ஆகிய இயைபுகளையும் அவ்வாறே கொள்ளவேண்டும்.

    1. இணை இயைபு (1,2 <---- )
    கடைசிச் சீர்களில் முதலிரண்டு சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது இணை இயைபு
    ஆகும்.
    எ.டு:-
    என்னை யாளும் எழில்நீ இறைநீ

    2. பொழிப்பு இயைபு (1,3 <----)
    கடைசியிலிருந்து முதல் மற்றும் மூன்றாம் சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது இணை இயைபு
    ஆகும்.
    எ.டு:-

    மன்னும் பொருள்நீ மதிக்கும் மறைநீ

    3. ஒரூஉ இயைபு (1,4 <----)
    கடைசியிலிருந்து முதல் மற்றும் நான்காம் சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது ஒரூஉ இயைபு
    ஆகும்.
    எ.டு:-

    முன்நீ முடிவில் நிகழும் பின்நீ

    4. கூழை இயைபு (1,2,3 <----)
    கடைசியிலிருந்து முதல்,இரண்டு மற்றும் மூன்றாம் சீர் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது கூழை இயைபு
    ஆகும்.
    எ.டு:-

    தரணியின் தாய்நீ தந்தைநீ தயைநீ

    5. மேற்கதுவாய் இயைபு (1,3,4 <----)
    கடைசியிலிருந்து இரண்டாம் சீர் தவிர ஏனைய சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால் அது
    மேற்கதுவாய் இயைபு ஆகும்.
    எ.டு:-

    அரண்நீ அருள்நீ அன்பின் யாவும்நீ

    6. கீழ்க்கதுவாய் இயைபு (1,2,4 <----)
    கடைசியிலிருந்து மூன்றாம் சீர் தவிர ஏனைய சீர்கள் இயைபுத்தொடை பெற்றிருந்தால்
    அது கீழ்க்கதுவாய் இயைபு ஆகும்.
    எ.டு:-

    அழகன்நீ ஆதரிக்கும் தெய்வம்நீ திருவம்நீ

    7. முற்று இயைபு (1,2,3,4 <----)
    அனைத்து சீர்களும் இயைபுத்தொடை அமையப்பெறுவது முற்று இயைபு ஆகும்.
    எ.டு:-

    குழகன்நீ குலம்நீ குணம்நீ சீலமும்நீ

    (..தொடரும்)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    5.4. முரண் தொடை

    செய்யுளில் முரண் தொடை என்பது தனிச் சிறப்புடையது. கவிதைச் சுவையை நன்கு தரவல்லது.

    ஒரு சொல்லுக்கும் வேறொரு சொல்லுக்கும் எதிர் மறையாகப் பொருள் நல்குமாறு அமைத்துத் தொடுப்பது முரண்தொடை.
    எ.டு:-
    நம் மன்றத்தில் "முரண் காட்சிப்பாக்கள்" சிறந்த எடுத்துக்காட்டு.

    இணை முரண் தொடை:-
    எ.டு:-
    சிறுகால் பேருரு கொண்டெதிர் நின்று

    இதில் முதல் இரு சீர்களில் 'சிறு' - 'பெரிய உரு' என்று வந்ததால் இணை முரண் தொடை ஆயிற்று.

    பொழிப்பு முரண் தொடை:-
    எ.டு:-
    ஓரடி யாலே இரு நிலம் அளந்து
    இதில் முதல், மூன்றாம் சீரில் 'ஒரு - இரு' என்று வந்து பொழிப்பு முரண் தொடை ஆயிற்று.

    ஒரூஉ முரண் தொடை:-
    எ.டு:-
    பெருமை விளங்கப் பிறவெலாம் சிறிதாய்
    பெருமை - சிறிது என்று முதல், நான்காம் சீரில் வந்ததால் ஒரூஉ முரண் தொடை ஆனது.

    கூழை முரண் தொடை:-
    எ.டு:-
    பைந்தார் செங்கண் கார் மேனி வண்ணன்
    பை- பசுமை
    செங் - சிவப்பு
    கார் - கறுமை
    என்று மூன்று சீர்களிலும் முரண் தொடை வந்ததால் கூழைத்தொடை ஆயிற்று.

    மேற்கதுவாய் முரண் தொடை:-
    எ.டு:-
    உவந்தனன் உலகோர் மலைத்தனர் அஞ்சி
    - உவந்து, மலைப்பு, அச்சம் என்று 1, 3, 4 சீர்களில் வந்ததால் மேற்கதுவாய் முரண் தொடை ஆயிற்று.

    கீழ்க்கதுவாய் முரண் தொடை:-
    எ.டு:-
    வலம்பெறும் இடத்தனாய் மன்னன் கீழுற
    - இதில் வலது, இடது, கீழ் என்று மூன்றாம் சீர் தவிர ஏனையச்சீர்கள் முரணாக வந்ததால் கீழ்க்கதுவாய் ஆயிற்று.

    முற்று முரண் தொடை:-
    எ.டு:-
    வடபால் தென்பால் மேற்பால் கீழ்பால்
    - இதில் 4 சீர்களிலும் முரண் முறையே வட, தென், மேல், கீழ் என்று வந்ததால் முற்று முரண் தொடை அமைந்ததாயிற்று.
    (..தொடரும்)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •