அப்பாயணம்
நீ எனக்கு வாங்கித் தந்த
இனிப்புகளை விட
புத்தகங்களே அதிகம்
"உன் குழந்தையை அடிக்கும்போது
ஒரு புகைப்படம் எடுக்கச்சொல்லிப் பார்"
ரஸ்ஸல் படித்து நீ எழுதியது பழைய டைரியில்
அப்படி ஒரு படமே இல்லை உன் வாழ்க்கை டைரியில்
"இளந்தோள்.... முதிய தலை "
பத்துவயதில் நீ தந்த பாராட்டுப்பத்திரம்
இன்றும் பொக்கிஷமாய் என் நெஞ்சில் அது பத்திரம்
தோளுக்கு மேல் வளரும் முன்னே
உன் தோள்மேல் ஏறி திருவிழா பார்த்தபோதே
தோழனாய் ஏற்றுக் கொண்டாய்
"மனிதன் செய்யும் தவறுகள் எல்லாமே
மன்னிக்கப்படக் கூடியவை.
அதை
மறைக்கச் செய்யும் முறைகளும் வழிகளும் அல்ல"
சொல்லித் தந்த குரு நீ....
எரவாணப் புத்தகங்கள்
ஏ படங்கள்
திருட்டு தம்
இருட்டுப் பிசையல்.....
மன்னித்தாய்
மனதால் நீயும் தாய்
மறைக்க வேண்டிய சூழல் வராமல்
மானம் காத்தாய்
நீ சொல்லிக் கற்றதைவிட
உன்னைப் பார்த்துக் கற்றது அதிகம்
இன்றும் கற்கிறாய்
ஆறு மாதம் கழித்துப் பார்க்கும்
ஆசை மகனிடம் நீ கேட்டது
"தொல்காப்பியப் பூங்கா"
என்னைப் பெற்றது பெருமை என்பாய்
இல்லை அப்பா
உனக்குப் பிறந்தது
நான் வாங்கி வந்த வரம்
முடிக்க முடியவில்லை........
Bookmarks