ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியை இருந்தாள்..அவள் பெயர் கமலா. மிகுந்த சிடுமூஞ்சி.முதல் வகுப்பு ஆசிரியை. சிறுவயதினர் என்றும் பாராமல் குழந்தைகளைத் துவைத்து எடுப்பாள்.அவளுக்கு 30 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. அது கூட கமலா சிடுசிடுக்க ஒரு காரணமாக இருக்கலாம். அவளைப் பெண் பார்க்க அன்று வருவதாக ஏற்பாடாகியிருந்தது. என்றாலும் தேர்வு நாளானபடியால் விடுப்பு எடுக்க அவளால் இயலவில்லை.தேர்வை முடித்துவிட்டு ஒரு மணி நேரம் முன்னதாகக் கிளம்பிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தாள். இந்நிலையில் தலைமை ஆசிரியர் கமலாவைக் கூப்பிடுவதாக ஏவலர் வந்து சொல்ல, அவர் அறைக்குச் சென்றாள்.
"என்னம்மா.. பெற்றோர்கிட்டேருந்து ரொம்ப புகார் வருதே.. பிள்ளைங்க கிட்ட ரொம்ப கடுமையா நடந்துக்கறியாமே..?"
"அப்படியெல்லாம் இல்ல சார்.. சில வால் பசங்களை கொஞ்சம் அடக்கிதான் வைக்க வேண்டியிருக்கு.."
"நல்ல பசங்கன்னு அடுத்த டீச்சர்ஸ் சொல்ற பசங்க பெற்றோர் கூட புகார் சொல்றாங்களேம்மா..?"
தலை கிழம் அறுக்க ஆரம்பித்தால் விடாது.இன்றைக்கு வீட்டுக்கு போவது தாமதமாவதை உணர்ந்த கமலா..
"சரி சார்..இனிமே புகார் வராம நடந்துக்கறேன்..!"
சொல்லிவிட்டு ஓட்டமாய் வகுப்புக்கு வந்தாள்.பள்ளியும் முடிந்து விட்டது. விடைத்தாட்களை சீர்படூத்தி அலுவலகத்தில் ஒப்படைக்கும் பொறுப்பை சக ஆசிரியை ஒருத்தி ஏற்றுக்கொண்டிருந்தாள்.. கிளம்பவேண்டியதுதான் பாக்கி.. திடீரென ஒரு சிறு மாணவன்..சதீஷ்..
"மிஸ்.. என் கையிலே அடிபட்டிருச்சு.. ஷூ போட முடியாது.. ப்ளீஸ்.. கொஞ்சம் போட்டு விடறீங்களா..? கெஞ்சினான்.
சுற்றும் முற்றும் பார்த்தாள் கமலா. யாரும் இல்லை. வேறு வழியின்றி மண்டியிட்டு அவனுக்கு காலணி அணிவிக்கத் துவங்கினாள்.நேரம் பார்த்து மின்சாரம் வேறு தடைபட, அரையிருட்டு. மின்விசிறி செயல்பாட்டை நிறுத்திவிட, தெப்பலாக நனைந்துவிட்டாள் கமலா. சதீஷின் காலணிகள் வேறு காலில் நுழையாமல் பொறுமையைச் சோதித்தது. ஒருவழியாய் போட்டு முடித்து மணியைப் பார்த்தாள்..4.30.
"மை காட்..!"
கிளம்ப எத்தனித்தவளை சதீஷின் ஈனக்குரல் நிறுத்தியது..
"என்னடா..?"
"இல்லே மிஸ்.. ஷூவை கால் மாத்தி போட்டு விட்டிருக்கீங்க.."
குழந்தை சொன்னது உண்மைதான்.. அரை இருட்டில் இடது வலது தெரியாமல் போட்டு விட்டிருக்கிறாள். அப்படியே போ என்று சொல்லலாமா என்று நினைத்தவள், தலைமை ஆசிரியர் எச்சரித்தது நினைவுக்கு வர,ஒரு பெருமூச்சை வெளியிட்டு மறுபடி குனிந்து அமர்ந்தாள்.ஏவலர் யாருக்கோ தேநீர் வாங்கிப்போவதைப் பார்த்த கமலா,
"முனியன்.. கொஞ்சம் என் ஸ்கூட்டியை வெளிலே எடுத்து வச்சுடு.."
"சரிங்கம்மா.."
போட்டுவிடுவதை விட கடினமாக இருந்தது கழற்றுவது. பல்லைக் கடித்தபடி, ஒருவழியாக கழற்றி கால் மாற்றிப் போட்டுவிட்டாள்.மணி..4.45.
"மிஸ்.. இது என்னோட ஷூ இல்லே...!"
ஓங்கிய கையை சிரமப்பட்டு இறக்கினாள். குழந்தை அதற்கே அஞ்சி நடுங்கியது. பெரும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளை. எதுக்கு வம்பு. கல்யாணம் ஆகிவிட்டால் வேறு ஊருக்குப் போகும் வேளையில் அனாவசிய பிரச்சினைகள் எதற்கு என நினைத்தவளாய் அவன் காலில் இருந்து காலணிகளை அகற்றினாள். ஏதோ சொல்ல வந்தவனை ஒரு முறைப்பில் அடக்கியவளாய்க் கேட்டாள்..
"நீ போட்டுட்டு வந்த ஷூ எங்கே..?"
கழற்றிக் கிடந்த காலணிகளைக் காட்டியபடியே சதீஷ் சொன்னான்..
"இதுதான் மிஸ்.."
"உன்னுது இல்லேன்னு சொன்னே..."
" என்னுது இல்லே மிஸ்.. என் தம்பியோடது.. அம்மாதான் இன்னைக்கு மட்டும் போட்டுக்கிட்டு போகச் சொன்னாங்க.."
"ஏண்டா நேரம் காலம் தெரியாமக் கொல்றே..?நான் அவசரமா போயாகணும்டா..சரி.. சரி.. வா..!"
உலகத்தின் பொறுமையனைத்தையும் மனதில் தேக்கி மறுபடியும் கழற்றிய காலணியைப் போட்டு விட்டாள். மணி 5.15. கிளம்பும் போதுதான் கவனித்தாள் ஸ்கூட்டி சாவியைக் காணோம் என்பதை.. இந்தப் பாவி படுத்திய பாட்டில் எங்கே வைத்தாள் என்பதே மறந்துவிட்டோமே..கடவுளே.. என்று எண்ணியவளாய் சதீஷையே கேட்டாள்..
" ஏண்டா.. என் ஸ்கூட்டி சாவியைப் பாத்தியா..?"
" பாத்தேன் மிஸ்.."
"எங்கே..?"
"நீங்க ஷூ போட்டுவிடும் போது அதுக்குள்ள விழுந்துடிச்சு.. இப்போ உள்ளதான் இருக்கு..!"
_________________[தொடரும்...]
Bookmarks