தெருவோரப் புழுதிகளின்
உறக்கத்தை
நீர்த் தெளித்தெழுப்பியதை....
புரண்டுபடுத்து
இழைந்ததில்
விளைந்த வாசத்தினை
நாசிவழி ஏற்றிக் கொண்டதை..
உலர்ந்துபோன
உதடுகள்
நாவின் ஒத்தடத்தில்
பிழைத்துக் கொண்டதை....
விரித்து விட்டிருந்த
கேசத்தில்
வாழ்ந்திருந்தத் திவலைகள்
வழுக்கிக் கொண்டிருந்ததை..
விரல் பிரசவித்த
புள்ளிகள்
தரைதொட்ட அமிலத்தில்
அழிந்து கொண்டிருந்ததை..
வீதி வந்த
பூசணிப்பூவிடம்
புன்னகை வீசிக் கொண்டிருந்ததை...
தொலைவிலிருந்து
ஓரிணை விழிகளேனும்
விழுங்கியிருக்குமா...
என்
வினாக்களை
அர்த்தமற்றதாக்கிக்
கொண்டிருந்தது
என்னைச்சுற்றிப்
போர்த்தியிருந்த
பனித்திரை!..
Bookmarks