1. கல்வி
நீண்ட நாட்களுக்கு பிறகு ஞானி வீட்டுக்கு வந்திருந்தான். பேசிக் கொண்டிருந்தோம்.
என்ன ஞானி இளைத்துவிட்டாயே என்றேன்.
சம்பிரதாயமாக பேசாதே என்று கடிந்தான்.
சட்டென்று வாயை மூடிக் கொண்டேன். திட்டு வாங்காமல் என்ன பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது என் மகன் கணித புத்தகத்துடன் வந்தான்.
அப்பா இந்த கணக்கு வரமாட்டேங்குது என்றான்.
எனக்கும் கணித பாடத்திற்கும் காத தூரம்.
ஞானி மாமாவிடம் கேள். அவர் கணக்கில் புலி என்று சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்தேன்.
என்ன எனக்கு கணக்கு வராது என்ற நினைப்போ என்றான்.
நமட்டுச் சிரிப்பை வாயில் முழுங்கினேன்.
மகனிடமிருந்து நோட்டு புத்தகம் வாங்கி மடமடவென்று கணக்கு எழுதி விளக்கினான்.
தாங்க்யூ அங்கிள் என்று சொல்லி என் மகன் விலகியதும் ஆச்சர்யம் அடக்க முடியாமல் எப்படி ஞானி என்றேன்.
இப்போது தான் இதே பாடத்தை அடுத்த தெருவில் இருக்கும் ஒரு மாணவனுக்கு சொல்லிக் கொடுத்தேன் என்றான்.
அட ட்யூஷன் எல்லாம் எடுக்கிறாயா என்றேன் ஆச்சர்யத்துடன்.
ஆம். மாலை நேரங்களில் சிலர் வீட்டுக் சென்று பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். காலை நேரங்களில் மாணவர்கள் வீட்டுக் வருகிறார்கள் என்றான் மனைவி கொண்டு வந்த காபியை அருந்தியவாறே.
நல்ல வருமானம் என்று சொல் என்றேன் சிரிப்புடன்.
மறுபடியும் மனிதன் மாதிரி பேசுகிறாயே என்றான் காட்டமாக.
எனக்கு டிமோஷன் ஆனது போல இருந்தது. ஏன் என்றேன் குழப்பமாக.
நமக்கு தெரிந்த விஷயங்களை நாலு பேருக்கு சொல்லித் தரவேண்டும். கல்வியை வியாபாரமாக்க நான் ஒன்றும் மனிதன் இல்லை. காப்பி கோப்பையை வைத்துவிட்டு விலகினான்.
ஞானி அங்கிள் பெஸ்ட். அப்பா வேஸ்ட்டு என்று என் மகன் என் மனைவியிடன் சொல்வது காதில் கேட்டது. தெரு ஓரத்தில் ஞானி அவன் சைக்கிளில் அடித்த மணி கிண் என்று என் மனதில் அடித்தது.
வெட்கி தலைகுனிந்தேன்.
Bookmarks