ரதமேறப் போகையில்
கால் தடுக்கிறேன்...
விரல்நீட்டி வரவேற்கிறானென்
வருங்கால மணவாளன்..
விட்டுப் போகமாட்டேன்
விரல் கோர்த்து உறுதிசெய்த
வேள்விகளை கேலிசெய்தான்
கடந்தகாலக் காதலன்..
திரும்பிப் பார்க்கிறேன்..
விழுந்தெழுந்த போதெல்லாம்
விரல் கொடுத்து நடைபழக்கிய
அப்பா..
சத்தியவலைகளை கிழித்தெறிந்தேன்...
காதைத் துளைத்த வாத்தியங்கள்.
விண்ணில்
சிதறிச் சிரித்தன வண்ணவெடிகள்..
ஒரு நட்சத்திர விரிப்பில்
காதலன்..
குழந்தையாய் குதூகலித்து
தோள் குலுக்கினான் மணவாளன்..
திரும்பிப் பார்க்கிறேன்..
வேடிக்கைக்கு பிடித்துவரும்
மின்மினிப் பூச்சிகள்
கால்களின் கீறலை
எனக்கு காட்டிக் கொடுத்துவிடுமொவேன
பதறிய அப்பா..
சிந்தனைகளை சிதைத்தேன்..
வானைப் பிளந்த வெடியோசை.
மணவாளன் மடிதொட்டேன்..
காதலன் மனம்தொட்டேன்..
அப்பாவின் விழிதொட்டேன்..
மானசீகமாய் கோரினேன்..
மன்னிப்பெய்து விடுங்கள்..
ஒரு சுழலிலிருந்து
என்னை தூக்கி வீசினேன்..
நதியின் போக்கில்
இணைந்து கொண்டேன்!..
Bookmarks