"உண்மையாவா சொல்ற சந்தியா? நெஜமாவா?" நமக்கு ஒரு குழந்தை இருந்து அது நமக்கே தெரியாமல் இருந்து...பிறகு தெரிய வந்தால்? இவ்வளவு ஆச்சரியமாகத்தான் யாரும் கேட்பார்கள். சரவணனின் கேள்விக்கு ஆமாம் என்ற ஒரு சொல் விடைதான் சந்தியாவிடம் இருந்து கிடைத்தது.
"சரி. சந்தியா. நீ சொல்றத நம்புறேன். ஆனா இப்ப என்னால எதையும் யோசிக்க முடியல. நாளைக்குக் காலைல இதப் பத்திப் பேசிக்கலாம். Good Night" சரவணனால் பேச முடியவில்லை. எதையாவது யோசிக்க முடிந்தால்தானே அதைப் பேச முடியும். அப்படி யோசிக்காமல் எதையாவது சொல்லிவிடக்கூடாதே என்றுதான் காலையில் பேசுவதாகச் சொன்னான்.
திடீரென பெரிய மனிதனாக மாறிவிட்டது போல இருந்தது. கண்ணாடித் தொட்டிக்குள் இருக்கும் மீன் போல உணர்ந்தான். என்னவோ ஊர் உலகத்தில் எல்லாரும் அவனையே பார்த்துக்கொண்டிப்பது போல. எதையோ சாதித்த பெருமை. ஆனாலும் என்னவோ சோகம் கலந்த ஆத்திரம். இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் மறந்து போனது. கிட்டத்தட்ட ஐந்து மணிக்கு சந்தியாவிற்கு ஒரு செய்தி அனுப்பினான். "GM Sandhy. Dont go to office. I'm coming 2 ur house 2 c u and sundar. wanna talk 2 u"
சொன்னது போலச் சரியாக பத்து மணிக்கு சந்தியாவின் வீட்டில் இருந்தான். அந்த நேரத்திலும் அவனுக்கு அங்கு சிவகாமி காபி போட்டுக் கொடுத்தார். சுந்தர் சரவணனிடம் எளிதாகச் சேர்ந்து கொண்டான். அவர்கள் கொஞ்சிக் கொண்டதையெல்லாம் விலாவாரியாக விவரிப்பதை விட ஒரு பாடலைச் சொல்லி எளிதாக விளக்கி விடுகிறேன்.
கவியரசரின் ஒரு பாடல். கவியரசர் என்றால் கண்ணதாசந்தான். வேறு யாரையும் நினைக்க வேண்டாம். ரிஷிமூலம் என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடியது. "நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத" என்று தொடங்கும் பாடலில் இப்படி வரும்.
மனைவி: திங்கள் ஒளி திங்களைப் போல்
உங்கள் பிள்ளை உங்களைப் போல்
உங்களைத்தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை
கணவன்: நீ பெற்ற பிள்ளையின்
கோபமும் வேகமும்
உன்னைப் போலத் தோன்றுதே
அப்படித்தான் சுந்தரும் எளிதாக சரவணனுடன் சேர்ந்து கொண்டான் என்று நினைக்கிறேன். அந்தப் புதுமையான குடும்பத்திற்கும் கொஞ்சம் தனி நேரமும் இடமும் கிடைத்தது. அப்பொழுது சரவணனுன் சந்தியாவும் மனம் விட்டுப் பேசி சில முடிவுகள் எடுக்க முடிந்தது.
முதலில் சரவணன் இப்படிக் கேட்டான். "சந்தி, சுந்தர் எனக்கும் மகன். அப்ப அவன் எனக்கும் சொந்தம். அதுனால இவனோட அப்பா நாந்தானு மொதல்ல ரெக்கார்ட் பண்ணனும்."
"சரி. Thatz easy. செஞ்சிரலாம்."
"அப்புறம் நம்ம கல்யாணம் செஞ்சுக்கிட்டா என்ன?"
"என்னது கல்யாணமா? அப்படி வா வழிக்கு! ஒன்னோட கொழந்தைய பெத்துக்கிட்டேன்னு தெரிஞ்சதும்....கல்யாணம்னு என்னைய அடிமைப்படுத்தப் பாக்குறியா? நீ ஏன்டா இப்பிடி? இந்த ஒலகத்துல பெண்கள லேசா எப்படி அடிமைப் படுத்தலாம் தெரியுமா? கொழந்தைங்கள வெச்சு. குழந்தைங்க மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நாட்டுல நெறையாப் பொம்பளைங்க என்னைக்கோ புருஷங்களைத் தொரத்தீருப்பாங்க. நான் ஒன்னய கல்யாணம் செஞ்சுக்கனும். காலெமெல்லாம் ஒன்னையையும் ஒன்னோட கொழந்தையையும் பாத்துக்கிட்டு உன்னோட பேர எனக்கு இன்ஷியலா போடனும். அதான ஒனக்கு வேண்டியது?" சட்டென்று கேட்டாள் சந்தியா.
"Oh my god! ஒன்னோட சொற்பொழிவு முடிஞ்சதா? மண்டு. நீ எப்படி இருந்தாலும் S.Sandhyaதான். அத மொதல்ல தெரிஞ்சிக்க. இனிஷியலுக்காக சொல்லலை. சுந்தருக்காக மட்டுந்தான் சொல்றேன். புரிஞ்சிக்கோ. நம்ம கல்யாணம்னு செஞ்சுக்கிட்டாலும் ஒருத்தொருக்கொருத்தர் எடஞ்சலா இருக்கக் கூடாது. நம்ம நட்பு பழையபடிதான் தொடரும். எல்லா விஷயத்துலயும். உன்னோட சந்தோஷத்துக்கு நான் கண்டிப்பா குறுக்க நிக்க மாட்டேன். நீயும் சுந்தரும் வழக்கம் போல சென்னைலயே இருக்கலாம். சரியா? It is just an agreement recorded but not binding. Mutualy beneficial. Mutualy exclusive. Mutualy accepted"
சரவணன் சொல்லி முடித்ததும் அவசரப்பட்டுச் சொல்லிவிட்டோமோ என்று நினைத்தாள். ஆகையால் கொஞ்சம் யோசித்தாள். யோசனையெல்லாம் முடிந்த பிறகு அவன் சொல்வதுதான் சரியென்று தோன்றியது. அவள் அவளாகவும் அவன் அவனாகவும் இருந்து கொள்ள முடியும் என்றால் அவளுக்குச் சரி என்று தோன்றியது. ஒரு வேளை நாளை அவன் முருங்கை மரத்தில் ஏறினால்? சரி. வேப்பிலை அடித்துத் துரத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டாள். அவள் மனம் இந்த பொம்மைத் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டது. ஆனால் அவளுடைய தன்மானத்தை இழக்க விரும்பாமல் ஒரு பிரச்சனையை எழுப்பினாள்.
"சரவணா, எல்லாம் சரிதான். ஆனா artificial inseminationனு எல்லாருக்கும் சொல்லியிருக்கேன். இப்பப் போயி எப்படி மாத்திச் சொல்றது? அப்ப நான் சொன்னது பொய்னு தெரிஞ்சிடும். அப்புறம் எனக்குக் கண்டிப்பா கெட்ட பேர்தான் கிடைக்கும். you know how hypocrats think. இதுக்கு என்ன வழி?"
சரவணன் யோசித்தான். சந்தியாவும் தோற்கக் கூடாது. உண்மையும் வெளியே தெரிய வேண்டும். "Dont worry Sandhy. உனக்குக் குழந்தை பிறக்க நாந்தான் donorஆ இருந்தேன்னு சொல்லீர்ரேன். சுந்தர் பொறந்ததுக்குப் பிறகு யோசிச்சுப் பாக்கும் போது இந்த முடிவுக்கு வந்தோம்னு சொல்லீரலாம். அதெல்லாம் நான் பேசிக்கிறேன். இந்த விஷயத்த எல்லாம் யாரும் துருவித் துருவிக் கேக்க மாட்டாங்க. சரி. நான் இப்பவே ஒங்க அப்பா கிட்ட பேசுறேன். அப்படியே வீட்டுக்குப் போய் என்னோட அப்பா கிட்டயும் அம்மா கிட்டயும் சொல்லிச் சம்மதம் வாங்கீர்ரேன்."
சொன்னபடி சுந்தரராஜனிடமும் சிவகாமியுடனும் பேசினார். அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம். ஆனால் திருமணத்திற்கு உடனே ஒத்துக்கொண்டார்கள். நல்லவேளை என்று நினைத்திருப்பார்கள். அதே போல அவனுடைய வீட்டிலும் பேசிச் சம்மதமும் வாங்கி விட்டான். மாடு வாங்கப் போனால் கன்றோடு கூட்டிக் கொண்டு வருகிறானே என்று நினைத்தார்கள். ஆனால் குழந்தை சரவணனுடையதுதான் என்று உறுதியாக அவன் அடித்துச் சொன்னதும் அவர்களும் ஒருவழியாக ஒத்துக்கொண்டார்கள்.
கண்ணனுக்கும் தகவல் போனது. வாணியும் மிகவும் மகிழ்ந்தாள். ராஜம்மாள் இதையும் நாலைந்து விதமாகப் பேசினாலும் அவரால் என்ன செய்ய முடியும்? நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருந்தார். மிகவும் எளிமையான பதிவுத் திருமணமாக நடந்தது. தாலியெல்லாம் கட்டிக்கொள்ள மறுத்து விட்டாள் சந்தியா. சரவணனும் அதில் விருப்பமில்லாமல் இருந்தான். மோதிரம் மட்டும் மாற்றிக் கொண்டார்கள். அது கூட மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகத்தான். அவர்களின் முதலிரவும்(!) நல்லபடியாக நடந்தது.
தன்னுடைய வீட்டை விட்டு வர மறுத்து விட்டாள் சந்தியா. அவளுடைய பெற்றோர்களும் இருக்கிறார்களே. அவர்கள் டி.நகர் வீட்டில் கண்ணனோடு இருக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால் சந்தியா குறுக்கே விழுந்து தடுத்து விட்டாள்? சரவணன் அவனது பெற்றோர்களை விட்டு வருகிறானானா என்ன? பிறகு அவள் மட்டும் ஏன் என்று கேட்டு எல்லார் வாயையும் அடைத்து விட்டாள். சரவணன் விரைவிலேயே நெதர்லாண்டு திரும்ப வேண்டும் என்பதால் இங்கு கொஞ்ச நாளும் அவன் வீட்டில் கொஞ்ச நாளுமாகக் களி(ழி)த்தான்.
(அடுத்த பகுதியில் இந்தக் கதை முடியும்.)
தொடரும்.....
Bookmarks