அன்பு நண்பர்களே,
இந்தப்பதிவை அதிகமான உறவுகள் விரும்பப்போவதில்லை என்றாலும் பதிக்கிறேன். மன்றத்தில் இணைய வரும் புதிய உறவுகளுக்கு இந்தப்பதிவின் கருத்துக்கள் பொருந்தாது.
ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சு செய்து பழகியவர்கள் தமிழைக்கண்டதும் ஆர்வம் கொண்டு, தட்டச்சு செய்வது சாதாரணமான ஒன்று. அவ்விதம் செய்யும் போது எழுத்துப்பிழைகளும், கருத்துப்பிழைகளும் வருவதும் சாதாரணமான ஒன்றுதான். அதே போல் ஆங்கில வார்த்தைகள் அல்லது எழுத்துக்களை சில இடங்களில் உபயோகிக்கவும் செய்கிறோம். தமிங்கிலம் என்ற புதிய வார்த்தைக்கே உரித்தான வகையிலும், தட்டச்சு செய்கிறோம்.
ஆரம்பத்தில் தமிழில் தட்டச்சு செய்வதில் சற்று சிரமம் இருந்தாலும், காலப்போக்கில் தட்டச்சு சுலபமாகிவிடும் என்பதுதான் உண்மை. எனக்கும் அடிப்படையிலேயே ஆங்கில தட்டசோ, தமிழ் தட்டச்சோ தெரியாது. மன்றத்தில் இணைந்த பின்னர் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை விட தமிழில் தட்டச்சுவதுதான் எளிது என்கிற நிலைமைதான் இப்போது இருக்கிறது.
இயன்றவரையில் தமிழில் பதிவுகள் இடுவது, பிற மொழிச்சொற்களை தவிர்ப்பது, புதிய தமிழ் சொற்களை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவது ஆகியவை நன்று. மன்றத்தில் உறவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதும், கவிதைகள், கதைகள் உட்பட எல்லாப்பகுதிகளிலும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் அளவில்லா இன்பத்தைத் தருகிறது.
கவிதை, உரைநடை, கட்டுரை, பேச்சு, வழக்கு - என பல வகைகளிலும் வரும் தமிழ்ப்பதிவுகள் ஓவ்வொரு வகையில் இன்பத்தைத் தரும். வட்டார மொழிக்கும், வழக்குத்தமிழுக்கும், கணினித்தமிழுக்கும் இலக்கணம் அவ்வளவாக பொருந்தாது என்றே நான் தனிப்பட்ட முறையில் எண்ணுகிறேன். ஆனால் அங்கும் எழுத்துப்பிழைகள் நம்மை மிகவும் சங்கடப்படுத்தக்கூடியவை.
புதிய பதிவுகளை பதிப்பதிலும், கருத்துக்களை பதிவு செய்வதிலும், நண்பர்களை உரிமையுடனும், நகைச்சுவை உணர்வுடனும் கிண்டல் செய்வதிலும் நமக்கு இருக்கும் ஆர்வம், அதை பிழையின்றி எவ்விதம் செய்வது என்பதில் சற்றும் இல்லை என்பதை நாம் வருத்தத்துடன் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
சாப்பாட்டில் ஒரே ஒரு கல் இருந்தாலும், வாய்க்குள் வைத்து மெல்லும் போது நாம் படும் இன்னலை சொல்லத்தேவையில்லை. அப்படி இருக்க இப்போது தினமும் படிக்கும் பல பதிவுகளில், கற்களுக்கு நடுவே, ஆங்காங்கே சோற்றுப்பருக்கைக்கள் கண்களுக்கு தென்படுகின்றன என்ற சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். சில பிழைகள் நம் கண்களுக்குத் தெரியாமல் போகும் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். எனினும் உதாரணமாக - ஒற்றுப்பிழைகள் குறித்து இலக்கணம் தெரியாது என்றாலும், குறைந்த பட்சம் எழுத்துப்பிழைகளை தவிர்க்கலாமே?
சில மன்ற உறவுகளின் பதிவுகளில் வேண்டுமென்றே தமிங்கிலம் நடமாடுவதையும் காண முடிகிறது. முன்பெல்லாம் பிழைகளை சுட்டிக்காட்டும் விதமாக வர்ணத்தில் மேற்பார்வையாளர்கள் திருத்திக்காட்டுவார்கள். படிப்பவர்களுக்கு பதிவாளர்கள் செய்த பிழைகள் தெளிவாக தெரியும். நமது பதிவில் அப்படி எதுவும் வந்து விடக்கூடாது என்கிற பதற்றம் அனைவருக்கும் ஓரளவுக்கு இருக்கும். உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும் போது இது சாத்தியமானதாக இருந்தது. இப்போது இருக்கும் நிலைமையில் மேற்பார்வையாளர்களால் அவ்விதம் செய்வது மிகமிகக் கடினம்.
எனவே தயவு செய்து அனைவரும் இயன்ற வரையில் பிழையின்றி தமிழில் தட்டச்சு செய்வது என்பதை ஒரு உறுதியாக ஏற்று, நடைமுறைப்படுத்துவது அவசியமானதாகும்.
மன்றத்தின் பெயரைக் காப்பாற்றுவதற்காவது நாம் அனைவரும் பிழையில்லாத் தமிழை தட்டச்சு செய்ய வேண்டும்; குறைந்த பட்சம் முயற்சியாவது செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோளை அன்புடன் உங்கள் முன் வைக்கிறேன்.
Bookmarks