உலக பங்குச் சந்தை சரிவும் அலன் க்ரீன்ஸ்பானும்!!
கடந்த இரு வாரங்களாக உலகெங்கிலும் பங்குச்சந்தைகள் ஒரேயடியாக சரிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. மும்பை Sensex மட்டுமே 2000 புள்ளிகள் இழப்பைச் சந்தித்திருக்கின்றது. பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் நஷ்டம். என்ன காரணம்?
அலன் க்ரீன்ஸ்பான் (Alan Greenspan) என்பவர் அமெரிக்காவின் Federal Reserve System -- இந்தியாவில் ரிஸர்வ் வங்கி போல் -- தலைவராக இருந்தார். 1987 முதல் 2006 ஜனவரி வரை. தமது 70-ம் வயதில் ஓய்வு பெற்றார்.
பதவியில் இருந்த வரை இவரிடம் 200-க்கு மேற்பட்ட டாக்டரேட்டுகள் கைகட்டி சேவகம் புரிந்தார்கள்.
உலகப் பொருளாதார விஷயங்கள் விரல் நுனியில். தீர்க்க தரிசி எனலாம்.
க்ரீன்ஸ்பான் அவ்வப்போது நிகழ்த்தும் உரைகளுக்கு மெத்த மதிப்பு. அவர் சொன்ன, சொல்ல விட்ட விஷயங்களை வைத்தே மார்க்கெட்டுகள் -- பங்குச் சந்தைகள் மட்டுமல்ல -- கரன்ஸி மார்க்கெட்டுகள், Commodity Markets, தங்கம் வெள்ளி மார்க்கெட்டுகள் -- மேலே செல்லும் அல்லது சரியும். மொத்தத்தில் சொல்லப்போனால், க்ரீன்ஸ்பான் தும்மல் போட்டால், ந்யூ யார்க் மார்க்கெட்டுகள் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும்.
இந்த மனிதர், ஓய்வு பெற்ற ஆசாமி, சும்மா இருக்கக் கூடாதோ! கடந்த செவ்வாயன்று (27.02,2007) "அமெரிக்கா தேக்க நிலையைச் (Recession) சந்திக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை", என்று சொன்னார்.
அவ்வளவுதான்... உலகெங்கிலும் சந்தைகளில் ஒரே களேபரம்.
க்ரீன்ஸ்பானுக்குப் பின் பதவியேற்ற Ben Bernanke ஒரு அறிக்கை வெளியிட்டார் -- நிலைமை அவ்வளவு மோசமில்லை என்று. பலரும் க்ரீன்ஸ்பான் கால்களில் விழாத குறை. தன் பங்குக்கு க்ரீன்ஸ்பானும் ஒரு அறிக்கை -- தான் முன்னர் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று.
இன்று மும்பை மார்க்கெட் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு!
போகிறபோக்கைப் பார்த்தால், அதல பாதாளம் இன்னும் தெரியவில்லை என்கிறார்கள்.
அலன் க்ரீன்ஸ்பான், இளம் வயதில் சங்கீதக் கலைஞராக வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டாராம். நன்றாகவே ஆட்டுவிக்கிறார்!
இவர் பிறந்த நாள் 06 மார்ச் 1936
===கரிகாலன்
Bookmarks