Results 1 to 5 of 5

Thread: அடிப்படை பங்கு ஆய்வு (Fundamental Analysis)

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31

    அடிப்படை பங்கு ஆய்வு (Fundamental Analysis)

    Fundamental Analysis (FA) - 1

    முதலீடு செய்வதற்கு முன்பு பங்குகளைப் பற்றி ஆராயும் பொழுது, ஒரு நிறுவனத்தின் வருமானம், முதலீடு செய்யும் பங்குகளின் உண்மையான மதிப்பு, தற்போதையச் சந்தை விலை, அந்தப் பங்குக்கு நாம் கொடுக்கும் விலை சரியானது தானா எனப் பலவாறாக ஆராயும் முறையை Fundamental Analysis என்று சொல்வார்கள்.

    பங்குகளைப் பற்றிய ஆய்வை இரு வகையாகப் பிரிக்கிறார்கள்.

    • Fundamental Analysis
    • Technical Analysis


    இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
    நாம் ஒரு உடை வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வோம் ?ஒரு துணியை பலவாறாக ஆய்வு செய்வோம். துணி தரமானது தானா, டிசைன் நன்றாக இருக்கிறதா, நல்ல முறையில் தைக்கப்பட்டுள்ளதா, துணி தயாரிக்கும் நிறுவனம் எத்தகையது, வேறு நிறுவனம் இதே மாதிரி உடையை தயாரித்துள்ளதா, துணியின் தரத்துக்கு ஏற்றவாறு விலை உள்ளதா, இல்லை அதிகமாக உள்ளதா என ஆய்வு செய்து நல்ல உடையை தேர்ந்தெடுப்போம். இது தான் Fundamental Analysis.

    இதற்கு மாறாக, எந்த உடையை எல்லோரும் வாங்குகிறார்கள், எந்த டிசைனை எல்லோரும் தேர்வு செய்கிறார்கள், எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை எல்லோரும் வாங்குகிறார்கள் என்று மட்டுமே பார்த்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தத் துணியை வாங்குவதற்குப் பெயர் தான் Technical Analysis.

    நாம் முதலில் Fundamental Analysis பற்றிப் பார்ப்போம்.

    பங்குகளை பெரும்பாலும் ஒரு லாட்டரிச் சீட்டு என்று நினைத்தே எல்லோரும் வாங்குகிறார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் உயரும். இல்லையேல் நஷ்டம் தான் என்ற சிந்தனையே பெரும்பாலானச் சிறு முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது. பங்குகள் பலச் சூழ்நிலையில் உயருகிறது. நமக்கெல்லாம் அந்தச் சூட்சமம் தெரியவில்லை என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் பங்குகள் சூழ்நிலையை மட்டுமே கொண்டு உயர்வதோ, சரிவதோ இல்லை. நீண்டக்கால முதலீட்டில், பங்குகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியையோ/சரிவையோச் சார்ந்தே இருக்கும்.

    உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம். நம்முடைய வளர்ச்சி என்ன ? முதலில் நாம் குறைவாகச் சம்பாதித்திருப்போம். பின் வயது அதிகரிக்க, நம்முடைய சம்பாதியத்தியமும் அதிகரித்திருக்கும். நம்முடைய வரவுப் போல செலவுகளும் உண்டு. சிலருக்குச் செலவு அதிகம். சிலருக்குக் குறைவு. அதற்கு ஏற்றாற்போல நமது சேமிப்பும் இருக்கும். நம்முடையச் சேமிப்பு தான் நம்முடைய வளர்ச்சி. ஒவ்வொருவருடைய சேமிப்பு விகிதத்திலும் வேறுபாடு இருக்கும். இந்த விகிதத்தின்படி தான் ஒருவர் பணக்காரர் ஆவதும் மற்றவர் கோடிஸ்வரர் ஆவதும் நடக்கும். சிலருக்குச் செலவுகள் அதிகமாக, இருக்கும் நிலையிலேயே இருப்பார்கள்.

    நிறுவனங்களும் அவ்வாறு தான். சில நிறுவனங்கள் வேகமாக வளரும். சில நிறுவனங்கள் குறைவாக வளரும். வேகமாக வளரும் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகமாக இருக்கும். இந்த வளர்ச்சி விகிதத்தின் படியே சின்ன நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும், பெரிய நிறுவனங்கள் உலக தரம் நோக்கி வளரும். பங்குகளும், நிச்சயம் அதை பிரதிபலிக்கும். அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்றவாறு சந்தையில் பங்குகள் சரிந்தாலும் /உயர்ந்தாலும், நீண்ட கால சூழ்நிலையில் பங்குகளின் விலை நிறுவனத்தின் வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கும்.

    இந்த வளர்ச்சியை கண்டு, பங்குகளை வாங்குவதற்கு பல அளவுகோள்கள் உண்டு. அந்த அளவு கோள்கைகளை இப்பொழுது பார்ப்போம்.

    பங்குகளை வாங்குவதற்குப் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான அளவுகோள் தான் P/E Ratio எனப்படும் Price Earnings Ratio. பங்குகளின் சந்தை விலை மற்றும் நிறுவனத்தின் லாபத்தைக் கொண்டு சந்தையில் பங்கு விலை சரியாக இருக்கிறதா, அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் ஒரு அளவுகோள்.

    ஒரு நிறுவனத்தின் லாபத்தைப் பங்குகளின் சந்தை விலை பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு பிரதிபலித்தால் அந்தப் பங்குச் சரியான விலையில் இருப்பதாகப் பொருள். அவ்வாறு இல்லாமல், சந்தை விலை குறைவாக இருந்தால், அந்தப் பங்கு வாங்குவதற்கு தகுதியானப் பங்கு (Under Valued Share). சந்தை விலை அதிகமாக இருந்தால் விற்றுவிட வேண்டியப் பங்கு (Overvalued Share).

    ஆனால் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா நேரங்களிலும் சரியாகப் பிரதிபலிக்காது. இந்த P/E முறையில் சில Limitations இருக்கிறது. அதை இறுதியாகப் பார்போம்.

    P/E = Market Price / EPS

    Market Price = பங்குகளின் சந்தை விலை
    EPS = ஒரு பங்குடைய லாபம்

    EPS என்பது ஒரு பங்கு அந்த நிறுவனத்திற்கு ஈட்டும் லாபம் - Earnings per share.

    EPS = Net Profit / No. of outstanding shares

    அதாவது நிகர லாபத்தை, அந்த நிறுவனத்தின் மொத்தப் பங்குகளையும் கொண்டு வகுத்தால் வருவது தான் EPS

    ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் 35,000 என்றும் மொத்தப் பங்குகள் 10,000 என்று எடுத்துக் கொண்டால்

    EPS = 35,000 / 10,000 = 3.5

    இங்கு ஒரு பங்கு 3.5 ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இது வேறுபடும். அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு EPSம் இருக்கும்.

    சரி...இப்பொழுது P/E க்கு வருவோம்.

    P/E = Market Price / EPS

    பங்குகளின் சந்தை விலை 35 ரூபாய்
    ஒரு பங்குடைய லாபம் (EPS) = 3.5

    P/E = 35/3.5 = 10

    இந்த நிறுவனத்தின் P/E = 10 என்பது எதைக் குறிக்கிறது ?

    P/E என்பது நாம் முதலீடு செய்யும் பணம் எவ்வளவு ஆண்டுகளுக்குள் சம்பாதிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் ஒரு அளவுகோள்.

    மேலே உள்ள EPS மற்றும் P/E எடுத்துக் கொள்வோம்.

    நாம் 100 பங்குகளை இந்த நிறுவனத்தில் வாங்குகிறோம்.

    மொத்த முதலீடு 3500 ரூபாய் (100 x 35 = 3500)

    நம்முடைய 3500 ரூபாய் முதலீடு ஒரு ஆண்டுக்கு 350 ரூபாய் சம்பாதிக்கிறது (நாம் வாங்கும் பங்குகள் = 100, EPS = 3.5 எனவே 100 x 3.5 = 350).

    இந்தக் கணக்குப்படி நாம் முதலீடு செய்த 3500 ரூபாயை சம்பாதிக்க 10 ஆண்டுகள் ஆகிறது. அதாவது நாம் இந்த ஆண்டு 3500 ரூபாய் முதலீடு செய்தால், இது 7000 ரூபாயாக பெருக பத்து வருடங்கள் பிடிக்கும்.

    இதுவே P/E 1 என்றோ, 2 என்றோ இருந்தால் நாம் முதலீடு செய்தப் பணத்தை ஒரு ஆண்டுக்குள்ளோ, இரண்டு ஆண்டுகளிலோ சம்பாதித்துக் கொள்ள முடியும்.

    இதன் படி நீங்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வீர்கள் ?

    P/E 1 என இருக்கும் பங்குகளிலா இல்லை 40 என்று இருக்கும் பங்குகளிலா (40 என்றால் உங்களுடையமுதலீட்டை சம்பாதிக்க 40 ஆண்டுகள் தேவைப்படும் என்பது பொருள்) ?

    1 என்று இருக்கும் பங்குகளில் தானே ? பொறுங்கள், இன்னும் இதைப் பற்றி கவனிக்கவேண்டியுள்ளது.

    அதாவது நாம் இங்கே கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சித் திறன். மேலே உள்ள கணக்கில் நம் வசதிக்காக நாம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை 10ஆண்டுகளுக்கும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டோம் (P /E = 3.5 for the entire 10 year period). ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சி அவ்வாறு இருப்பதில்லை.

    நம்முடைய சம்பாதியத்தையே எடுத்துக்கொள்வோம். ஆரம்ப காலத்தில் நம்முடைய சம்பளம் வேகமாக வளரும். பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்களின் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும். பின் ஒரு தேக்கம் வரும். அதிக வளர்ச்சியிருக்காது. பின் அதுவும் தேய்ந்து ஒரே அளவிலான சம்பளத்துடன் காலத்தை ஓட்டுவோம்.

    புதியதாக ஒரு வங்கித் துவக்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்வோம் - ICICI உதாரணமாகக் கொள்வோம். ஒரு சின்ன நிறுவனமாக சில முக்கிய நகரங்களில் கிளையைத் துவக்கியது. அப்பொழுது அதன் வளர்ச்சி விகிதம் 10% என்றுக் கணக்கிடுவோம். அதன் பிறகு பல சின்ன நகரங்களில் தனது கிளையைத் துவக்குகிறது, வளர்ச்சி விகிதம் 20%. பிறகு கிராமங்கள் - வளர்ச்சி 30%. இந்த நிலையை அடைந்தவுடன் அந்த நிறுவனத்திற்கு ஒரு தேக்க நிலை வந்துவிடுகிறதல்லவா ? (Offcourse ஒரு நிறுவனம் அவ்வப்பொழுது அறிமுகப்படுத்தும் கவர்ச்சிகரமான திட்டங்கள் போன்றவை மூலம் மேலும் வளர்ச்சி அடையும். அதையெல்லாம் கொஞ்சம் மறந்து விடுவோம்).

    ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் P/E ம் அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்க நிலையை அடையும் பொழுது P/E குறைந்து விடும். ICICI வங்கியின் வளர்ச்சி 20 - 30% ம் இருக்கும் பொழுது அதன் P/E அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது P/E குறைந்து விடும்.

    ஒரு நிறுவனத்தின் P/E அதிகமாக இருக்கிறது என்று ஒதுக்கி விடவும் முடியாது, குறைவாக இருக்கிறது என்று அந்தப் பங்குகளை வாங்கி விடவும் முடியாது.


    References : Buffettology, Peter Lynch - One up on the wall Street

    படைப்பாளி: தமிழ் சசி, நியூ ஜெர்சி, அமெரிக்கா
    நன்றி: தமிழ்ஸ்டாக்.ப்ளாக்ஸ்பாட்.காம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31
    Fundamental Analysis (FA) - 2

    கடந்தப் பதிவில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பொழுது அந்தப் பங்குகளின் P/E அதிகமாக இருக்கும் என்று பார்த்தோம். அதனால் P/E அதிகமாக இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யாமல் இருக்கவும் முடியாது, குறைவாக P/E இருப்பதால் மட்டுமே அந்தப் பங்குகளில் முதலீடு செய்து விடவும் முடியாது என்பதையும் கவனித்தோம்.

    பின் எதைக் கொண்டு தான் முதலீடு செய்வது ? இந்த அளவுகோளின் உண்மையான அர்த்தம் தான் என்ன ?

    P/E எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை கவனித்தால் இது தெளிவாகும். கடந்த மாதங்களின் வருவாயைக் கொண்டு தான் P/E கணக்கிடப்படுகிறது. இதனை Trailing P/E என்று சொல்வார்கள். பங்குகளின் வருங்கால லாபத்தைக் கணித்து P/E ஐ கணக்கிட்டால் அதனை leading or projected P/E என்று சொல்வார்கள்.

    பங்கு விலை எதைக் குறிக்கிறது ? பங்கு விலை எதிர்காலத்தைக் குறிக்கிறது. ஒரு பங்கின் உண்மையான மதிப்பை விட அது எதிர்காலத்தில் எவ்வளவு வளர்ச்சியடையும் என்பது, பங்குகளின் விலையை தீர்மானிப்பதில் முக்கியமான காரணியாகும்.

    P/E = Market Price / Earnings

    இதை வேறு விதமாகக் கணக்கிட்டால்...

    Market Price = P/E * Earnings

    ஒரு பங்குடையக் கடந்த கால லாபம், எதிர்காலத்திலும் தொடரும் என்ற எண்ணத்திலேயே பங்குகளின் சந்தை விலை மாறுகிறது. சந்தையின் போக்கு எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். ஆனால் எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் மாறக் கூடும். தற்போதைய லாபம் குறைந்து நஷ்டம் கூட ஏற்படக்கூடும்.

    உதாரணத்திற்கு இன்போசிஸ் பங்குகளையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த (ஜனவரி 2005 நிலவரம்) காலண்டில் இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுத்தது. அதன் பங்குகள் 1700 ரூபாயில் இருந்து 2200ஐ எட்டியது. எதிர்கால லாபமும் அவ்வாறே இருக்கும் என்ற எண்ணமே இதற்கு காரணம். சந்தையில் ஒரு பாசிட்டிவ் செண்ட்டிமெண்ட் கிடைத்தால், அது விஸ்ரூபம் எடுத்துச் சந்தைக்கே ஒரு பாசிட்டிவ் சூழலை ஏற்படுத்தும்.

    அதன் பிறகு நடந்தது என்ன ? டாலரின் வீழ்ச்சியால் இன்போசிஸ் பங்குகளின் லாபம் குறையக்கூடும் என்ற எண்ணத்தில் அதன் பங்குகள் சரிவுற்று 2000 ரூபாய்க்கு வந்தது. மொத்தச் சந்தையும் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது மென்பொருள் பங்குகள் மந்தமாகவே இருந்தன. அப்போதைய வளர்ச்சிச் சூழலுக்கு ஏற்றச் சந்தை விலையை மென்பொருள் பங்குகள் தேடிக் கொண்டிருந்தன.

    ஆகச் சந்தை உயருவது எதிர்கால வளர்ச்சியை நோக்கித் தான்.

    இங்கு பலமாக உபயோகிப்படும் வார்த்தையைக் கவனித்தீர்களா - "நிறுவனத்தின் வளர்ச்சி".

    P/E அதைத் தான் குறிக்கிறது - Earnings Multiple.

    ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 10% என்று எடுத்துக் கொள்வோம். அதன் P/E = 5 என்றால் அதன் சந்தை விலைக் குறைவாக இருப்பதாகப் பொருள். இந்தப் பங்குகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளலாம்.

    மாறாக P/E = 15 என்றால் இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதாகப் பொருள். இந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கு நிறைய யோசிக்க வேண்டும்.

    P/E அதிகமாக இருக்கும் பங்குகளைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து எந்தளவுக்குச் சரியானது ? ஒரு பங்குடைய P/E அதிகமாக இருந்தால் அதற்கேற்றவாறு அதன் வளர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் இதே வளர்ச்சி விகிதத்தை அந்த நிறுவனம் எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்றும் பார்க்க வேண்டும். வேகமாக வளரும் நிறுவனங்கள் வளர்ச்சியில் தேக்கமடையும் வாய்ப்புகளும் சரிவடையும் சூழ்நிலைகளும் ஏற்படக்கூடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    எதிர்கால வளர்ச்சி நிலையுடன் P/E விகிதத்தையும் கொண்டு கணக்கிடும் ஒரு முறையும் இருக்கிறது. அது தான் PEG Ratio.

    PEG = P/E / (projected growth in earnings)

    ஒவ்வொரு நிறுவனமும் தன் காலாண்டு அறிக்கையில் எதிர்காலத்தில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பது குறித்த ஒரு Projection கொடுக்கும். இதைக் கொண்டும் நாம் பங்குகளின் சந்தை விலை அதிகமாக இருக்கிறதா, குறைவாக உள்ளதா என்று ஆராய முடியும்.

    ஒரு நிறுவனத்தின் P/E = 30, வளர்ச்சி விகிதம் = 15% என்றால்

    PEG = 30/15 = 2

    PEG Ratio குறைவாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை அதன் வளர்ச்சிக்கேற்றவாறு வாங்கக் கூடிய விலையில் இருப்பதாகப் பொருள். PEG விகிதம் அதிகமாக இருக்கும் பங்குகளை விட்டு கொஞ்சம் விலகி விடலாம்.

    P/E, பங்குகளை வாங்குவதற்கான ஒரு முக்கிய அளவுகோள். ஆனால் சில சூழ்நிலைகளில் அதற்கு அர்த்தமிருக்கும். சில நேரங்களில் இருக்காது. பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கும் பொழுது பங்குகளின் விலையும், P/E ம் அதிகமாக இருக்கும். சந்தை சரியும் பொழுது பங்குகளின் P/E ம் குறைவாக இருக்கும். இந்த இரண்டு நிலையிலும் P/E க்கு பெரிய அர்த்தமிருக்காது.

    இதைப் போலவே ஒரு நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி விகிதம் மற்றும் எதிர்கால வளர்ச்சி விகிதம் பற்றிய எதிர்பார்ப்பை விட, சில நேரங்களில் சில செய்திகள் பங்குகளின் விலையை கடுமையாக உயர்த்தும், அல்லது சரிய வைக்கும். இந்தச் சூழ்நிலையிலும் P/E க்கு அர்த்தமிருக்காது.

    பங்குகளின் P/E ஐ அந்தத் துறையைச் சேர்ந்தப் பிற பங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தத் துறையில் உள்ள பிற பங்குகளின் P/E ஐ கொண்டு பங்குகள் சரியான விலையில் இருக்கிறதா, ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.

    பங்குகளுக்கு மட்டும் தானா P/E ? மொத்தச் சந்தைக்கும் P/E உண்டு. அதற்கு சந்தை P/E (Market P/E) என்று சொல்வார்கள். இதனைக் கொண்டு சந்தை உச்சத்தில் இருக்கிறதா, இன்னும் ஏற்றம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளலாம்.

    References : Buffettology, Peter Lynch - One up on the wall Street

    படைப்பாளி: தமிழ் சசி, நியூ ஜெர்சி, அமெரிக்கா
    நன்றி: தமிழ்ஸ்டாக்.ப்ளாக்ஸ்பாட்.காம்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    நிர்வாகியின் பதிப்பு அருமை..

    பங்கு முதலீட்டாளர்களுக்கும் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.

    கரிகாலன் அண்ணாவிடம் ஏதும் கருத்து இருக்கிறதா..

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    அருமையான உபயோகமான பதிப்பு அழகு தமிழில். நன்றி ராஜகுமார்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Feb 2007
    Posts
    447
    Post Thanks / Like
    iCash Credits
    29,838
    Downloads
    149
    Uploads
    5

    பங்குகளின் விலையில் மாற்றம்: காரணம் என்ன?

    ஸ்பைஸ் டெலிகாம்
    பங்கு வெளியீட்டில் இறங்க திட்டம்
    இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

    புதுடெல்லி

    ஸ்பைஸ் டெலிகாம் நிறுவனம், பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொபைல் தொலைபேசி சேவையை அளித்து வருகிறது. இந்நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு பங்குகளை வெளியீட்டு மூலதனச் சந்தையில் இறங்க திட்டமிட்டுள்ளது.

    ரூ.668 கோடி
    இப்பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வேண்டி இந்நிறுவனம் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான `செபி'க்கு விண்ணப்பித்துள்ளது. இப்பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.668 கோடி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்பைஸ் டெலிகாம் நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் எம்கார்ப் குளோபல் 51 சதவீத பங்குகளையும், டெலிகாம் மலேசியா ஹோல்டிங் மீதமுள்ள 49 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. இப்பங்கு வெளியீட்டிற்கு பிறகு இவ்விரு நிறுவனங்களின் பங்கு மூலதனம் முறையே 40.8 மற்றும் 39.2 சதவீதமாக குறையும்.

    ஸ்பைஸ் டெலிகாமின் இப்பங்கு வெளியீடு `புக்பில்டிங்' எனப்படும் ஏல அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது. ஒவ்வொன்றும் ரூ.10 முகமதிப்பு கொண்ட 13.70 கோடி பங்குகள் வெளியிடப்படவுள்ளன. இதில் 20 லட்சம் பங்குகள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன.



    சில்லரை முதலீட்டாளர்கள் நலன் கருதி
    பங்கு வெளியீட்டு நடைமுறைகளை சீரமைக்க நடவடிக்கை
    ஷாஜி விக்ரமன் - ஹேமா ராமகிருஷ்ணன்

    மும்பை / புதுடெல்லி

    சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் பயன் பெறும் வகையிலும், முறைகேடுகளைத் தடுக்கும் வகையிலும் பங்கு வெளியீடு குறித்த நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மறுபரிசீலனை
    பங்கு வெளியீடு குறித்த நடைமுறைகளை சீரமைக்கும்படி மத்திய அரசு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான `செபி'யை வலியுறுத்தியுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பழைய நடைமுறைகளில் தகுந்த மாறுதல்களை கொண்டு வரும்படியும் மத்திய அரசு `செபி' அமைப்பைக் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

    மத்திய அரசின் அறிவுரை குறித்து `செபி' இயக்குனர்கள் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பங்கு வெளியீடு தொடர்பான நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு நடவடிக்கைகள்குறித்த பரிசீலனை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட `செபி' அதிகாரி ஒருவர் கூறினார்.

    முறைகேடுகள்
    பங்கு வெளியீடு தொடர்பான நடைமுறைகள் `செபி'யால் மறுபரிசீலனை செய்யப்படும்போது, பல முக்கிய விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக மெர்ச்சண்ட் வங்கிகள், பங்குச் சந்தை புரோக்கர்கள் மற்றும் தரகு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது.

    2006-ஆம் ஆண்டில் `செபி' அமைப்பு, பல பங்கு வெளியீடுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்தது. இதன் மூலம் சிலர், சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை வாங்கிக் குவிப்பதற்காக, பினாமி டிமேட் கணக்குகளையும், வங்கிக் கணக்குகளையும் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. பின்னர் ஒதுக்கப்பட்ட பங்குகளை இவர்கள் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டு அதிக அளவில் லாபமீட்டியுள்ளனர்.

    பரஸ்பர நிதி நிறுவனங்கள்
    பங்கு வெளியீடுகளின்போது இது போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு `செபி'யை வலியுறுத்தியுள்ளது. மேலும் பங்கு வெளியீடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வேண்டி வரும் விண்ணப்பங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்படுவதை `செபி' ஊக்குவிக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் யோசனை கூறியுள்ளது.

    மேலும் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு அதிக அளவில் பங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் பரஸ்பர நிதி நிறுவனங்களே சில்லரை முதலீட்டாளர்களுக்கு மிகவும் நம்பகமான முதலீட்டு அமைப்புகளாக உள்ளன என்றும் மத்திய நிதி அமைச்சகம் கருதுவதாக `செபி' அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பங்கு வெளியீடுகள் குறித்த நடைமுறைகளில் மத்திய அரசு சீர்திருத்தங்களையே விரும்புகிறது என்றும், தற்போதைய நடைமுறை முழுவதுமாக மாற்றப்பட மாட்டாது என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.


    பங்குச் சந்தை பட்டியலில்
    பர்ஸ்ட்சோர்ஸ் சொல்ஷன்ஸ்
    இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

    மும்பை

    பணிகளை வெளியாள்கள் மூலம் நிறைவேற்றித் தரும் பீ.பி.ஓ. துறையைச் சேர்ந்த பர்ஸ்ட்சோர்ஸ் சொல்ஷன்ஸ் நிறுவனம், அண்மையில் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் இறங்கியது.

    இந்நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இந்நிறுவனம், பங்கு ஒன்று ரூ.64 என்ற விலையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.

    இதன் பங்குகள் வியாழனன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது பங்கு ஒன்று ரூ.85.50 என்ற அளவில் விலை போனது. இது, வெளியீட்டு தொகையை விட 33.5 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


    ஏஜீஸ் நிறுவனம்
    அமெரிக்க பீ.பி.ஓ. நிறுவனத்தை ரூ.100 கோடிக்கு வாங்கியது
    இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

    மும்பை

    எஸ்ஸார் குழுமத்துக்கு சொந்தமான, பணிகளை வெளி ஆள்கள் மூலம் நிறைவேற்றி தரும் (பீ.பி.ஓ) சேவையில் ஈடுபட்டு வரும் ஏஜீஸ் பீ.பி.ஓ. நிறுவனம், இத்துறையில் வலுவாக காலூன்ற திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, இந்நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் வான்ட்எட்ஜ் நிறுவனத்தை கிரிஸ் கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளது.

    நான்காவது நிறுவனம்
    இந்த கையகப்படுத்துதல் வாயிலாக எஸ்ஸார் நிறுவனத்தின் பீ.பி.ஓ. வர்த்தகப் பிரிவிற்கு 2.50 கோடி டாலருக்கு மேல் அதிக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஓர் ஆண்டில் இந்நிறுவனத்திற்கு இது நான்காவது கையகப்படுத்துதல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம், இந்தியாவில் இதற்கு முன்பு கஸ்டமர் ஃபர்ஸ்ட் மற்றும் ஓரியன் ஆகிய நிறுவனங்களையும், அமெரிக்காவில் டெக்னியான் என்ற நிறுவனத்தையும் கையகப்படுத்தி இருந்தது.

    1,400 பேர்
    குளோபல் வான்ட்எட்ஜ் நிறுவனத்தில் 75 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ள கிரிஸ்கேப்பிட்டல், 2001-ஆம் ஆண்டில் பீ.பி.ஓ. மையத்தை தொடங்கியது. இந்நிறுவனத்தின், கூர்கான் (இந்தியா) மற்றும் சான்ஜோஸ், கோஸ்டாரிகா மையங்களில் மொத்தம் 1,400 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

    வங்கி, தொலை தொடர்பு மற்றும் மோட்டார் வாகனம் ஆகிய துறைகளில் பீ.பி.ஓ. சேவை வழங்கும் இந்நிறுவனத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன.



    பங்குகளின் விலையில் மாற்றம்: காரணம் என்ன?
    + கணேஷ் ஹவுசிங் கார்ப்பரேஷன்: இந்நிறுவனம், குஜராத் மாநில அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி, இந்நிறுவனம் அகமதாபாத்திற்கு அருகில் `ஸ்மார்ட் சிட்டி' என்ற ஒருங்கிணைந்த நகரியம் ஒன்றை ரூ.2,000 கோடி திட்டச் செலவில் மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில், பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலை காரணமாக இதன் பங்கின் விலை வியாழக்கிழமையன்று 2 சதவீதம் குறைந்து ரூ.358.25-க்கு விலை போனது.

    + சத்யம் கம்ப்ட்டர்: இந்நிறுவனத்தின் பீ.பி.ஓ. பிரிவான நிபுணா சர்வீசஸ், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இது குறித்த செய்தி வெளியானதையடுத்து, சத்யம் கம்ப்ட்டர் நிறுவனத்தின் பங்கின் விலை 1.20 சதவீதம் உயர்ந்து ரூ.467.70-க்கு கைமாறியது.

    + இந்தியா சிமெண்ட்ஸ்: இந்நிறுவனம், அதன் துணை நிறுவனமான விசாகா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ்-ஐ அதனுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இது குறித்த செய்தி வெளியானதையடுத்து இதன் பங்கின் விலை 1.50 சதவீதம் உயர்ந்து ரூ.199.40-க்கு சென்றது.

    + ஜிந்தால் ஷா: இந்நிறுவனம், அமெரிக்காவின் மிகப் பெரிய மாநகராட்சி ஒன்றிடமிருந்து ரூ.1,560 கோடி மதிப்பிற்கான ஆர்டர் ஒன்றை பெற்றுள்ளது. இதனையடுத்து இதன் பங்கின் விலை 2.8 சதவீதம் அதிகரித்து ரூ.493.50-க்கு விலை போனது.

    + எஸ்.கே.எப். இந்தியா: இந்நிறுவனம், பல்வேறு துறைகளுக்குத் தேவையான பேரிங்குகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சென்ற டிசம்பர் மாதத்துடன் முடிந்த நான்காவது காலாண்டில் மிகச் சிறப்பான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளதையடுத்து இதன் பங்கின் விலை 3.50 சதவீதம் உயர்ந்து ரூ.321-க்கு சென்றது.

    + பனோரமிக் யுனிவர்சல்: சாஃப்ட்வேர் துறையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு, ரூ.16 கோடி முதலீட்டில் வாட்ஷா ஹோட்டலை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இதன் பங்கின் விலை வியாழக்கிழமையன்று 3.45 சதவீதம் உயர்ந்து ரூ.170.85-க்கு கைமாறியது.


    பங்கு வியாபாரம்
    பீ.எஸ்.இ. குறியீட்டு எண் 167 புள்ளிகள் வீழ்ச்சி
    இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

    மும்பை

    நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமை அன்றும் மிகவும் மோசமாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியபோது பங்கு வியாபாரம் ஓரளவிற்கு சூடுபிடித்து காணப்பட்டது. ஆனால் நேரம் ஆக ஆக, லாப நோக்கம் கருதி பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்டதால் பங்கு வியாபாரம் மந்தம் அடைந்தது.

    வியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தின்போது வங்கி, மருந்து, சிமெண்டு, வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. அதேசமயம், ஊடகம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.

    மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், பெரும்பாலான நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்திருந்தது. அதேசமயம், இதர ஒரு சில நிறுவனங்களின் பங்குகளுக்கு தேவைப்பாடு காணப்பட்டது.

    பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலை காரணமாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது 167.18 புள்ளிகள் குறைந்து 14,021.31 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 56.20 புள்ளிகள் சரிவடைந்து 4,040 புள்ளிகளில் நிலை கொண்டது.


    மாருதி உத்யோக்
    மத்திய அரசின் பங்குகள் விற்பனை
    இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

    புதுடெல்லி

    மாருதி உத்யோக் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்திருந்த பெரும் பகுதி பங்குகளை படிப்படியாக விற்பனை செய்து வந்தது. கடைசியாக எஞ்சியுள்ள 10.27 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதற்காக மத்திய அரசு, பொதுத் துறை நிதி நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகளை கோரியுள்ளது.

    இந்த விலைப்புள்ளிகளுக்கான கடைசி தேதி 2007-ஆம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு விற்பனை தொடர்பான நடவடிக்கைகள் நடப்பு நிதி ஆண்டிற்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மத்திய அரசு மாருதி உத்யோக் நிறுவனத்தில் தற்போது வைத்துள்ள 10.27 சதவீத பங்குகளின் எண்ணிக்கை 2,96,79,709 ஆகும். தற்போதைய நிலவரப்படி, பங்குச் சந்தையில், மாருதி உத்யோக் நிறுவனத்தின் பங்கு ஒன்று, ரூ.905 என்ற அளவில் விலை போகிறது. இந்த பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.2,700 கோடி நிதி கிடைக்கும்.

    சென்ற ஆண்டு, மத்திய அரசு, மாருதி உத்யோக் நிறுவனத்தின் எட்டு சதவீத பங்குகளை செய்தது. இதன் மூலம் கிடைத்த ரூ.1,567 கோடி மத்திய அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •