அணுவான என்னை தன் அண்டத்தில் வைத்து
ஊணுடல் தந்தவள் சக்தி!
கருப்பிண்டம் உயிர்க்கொண்டு கர்ப்பவாசல் மோத
உருவான உடலை தன்னிருந்து உரித்துவைப்பாள் சக்தி!
தளிர்க்கரம் பற்றி எனை தன் மடியில் சேர்த்தே
மலர் முலை தந்தவள் சக்தி!
குருத்தெலும்பெல்லாம் சதை குவிந்து பற்றிட உதிரத்தை
உரமாய் இட்டு வளர்த்தவள் சக்தி!
தடையின்றி தடம் பற்ற மெல்ல என் இடை பற்றி
நடை பயில வைப்பாள் சக்தி!
அறிவுக்கு ஓளியேற்றி ஆன்மாவை பக்குவப்படுத்தும்
செறிவான கல்வியை என் சிந்தையில் இருத்துவள் சக்தி!
என்னில் ஓர் உணர்(வு) ஏங்கும் வேளையிலே
தன்னில் ஓர் பாதி தாரமாய் தருவள் சக்தி!
பகலெல்லாம் இரவென்று படுத்தும் இன்னல்களிலும்
சுகமான உறவுக்கு வித்திடுவாள் சக்தி!
விடியாதபொழுதுக்கு வரம் தேடி நான் வேண்டும்படி
மடி திறந்து எனை மயங்க வைப்பாள் சக்தி!
மென்னிருட்டின் பின்னணியில் உள்ளிருக்கும் என் உயிர்துளியை
தன்னுள் வாங்கி அமர்த்துவள் சக்தி!
வந்ததெல்லாம் சென்றடையும் காலகதியில் - மனித
சந்ததி வளர்க்கும் எங்கள் தனித்துவசக்தி.
Bookmarks