ஆஸி. ஓபன் டென்னிஸ்
2வது சுற்றுக்கு சானியா முன்னேற்றம்
மெல்போர்ன், ஜன.17: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா தகுதி பெற்றார்.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
சானியா வெற்றி: மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனை சானியா மிர்சா தனது முதல் சுற்றில் ஓல்கா சாவ்செக்கை (உக்ரைன்) எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் சானியா வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். கடந்த சில மாதங்களாக சிறப்பாக விளையாடி வரும் சானியா, உலக தரவரிசையில் முன்னேறியுள்ளார். கடந்த சீசனின் முடிவில் 66வது இடத்தில் இருந்த அவர், தற்போது 53வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபனில் அவர் கடந்த 2005ம் ஆண்டு 3வது சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ஷரபோவா போராடி வெற்றி: ஆஸி. ஓபனில் முதல்நிலை பெற்றுள்ள முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷ்யா), முதல் செட்டில் 6-3, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி பிரான்சின் கேமிலி பின்னை வீழ்த்தினார். கிம் கிளிஸ்டர்ஸ் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் பார்டினாவை வென்றார். 2 முறை ஆஸி. ஓபன் பட்டத்தை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மாரா சான்டேஞ்சலோவை வீழ்த்தினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டியில் அர்ஜென்டினா வீரர் டேவிட் நல்பாந்தியன், செர்பியாவின் ஜான்கோ டிப்சார்விச் மோதினர். முதல் 2 செட்டை 7-6(5), 6-4 என்ற கணக்கில் டிப்சார்விச் வென்றார். அடுத்த 2 செட்டை 7-6(2), 6-0 என்ற கணக்கில் நல்பாந்தியன் வென்றார்.
இரு வீரர்களும் தலா 2 செட்டை வென்றதையடுத்து 5வது மற்றும் இறுதி செட் பரபரப்பானது. இதில், நல்பாந்தியன் 2-1 என்று முன்னிலை பெற்ற நிலையில் காயம் காரணமாக டிப்சார்விச் போட்டியிலிருந்து விலகினார்.
கடும் வெப்பம்: ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை வெப்பம் தகிக்கிறது. மெல்போர்னில் கடுமையான அனல் காற்றும் வீசுவதால், ஆஸி. ஓபனில் பங்கேற்றுள்ள டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெப்பத்தை தாங்க முடியாத பல வீரர், வீராங்கனைகள் போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நன்றி-தினகரன்
Bookmarks