'தை' கவிதை இதழில் இடம் பெற்றுள்ள சில கவிதைகளை உங்கள் வாசித்தலுக்காக இங்கே கொடுக்கின்றேன். (நன்றி 'தை')
பெறுதல்
ஆயிரம் பேர்
கூடியிருக்கும் அவையில்
எனக்குப் பொருளுதவி செய்யாதே..
விரும்பினால்
என் குடிசைக்கு வந்து
யாருமறியாமல் தந்து போ
நீ
தரவிரும்பியவற்றை..
கனம் குறைந்திருந்தாலும்
மனம் நிறையும் எனக்கு..
உன்னுடைய அன்பளிப்புகளை
ஆலய முற்றங்களில்
கூனிக் குறுகிப் பெற்றுக்கொள்ள
வலிக்கிறது..
நான் ஏழையென்பதைப்
பிரகடனப்படுத்துவதற்காகப்
பொதுக்கூட்டங்கள்
போடாதே..
பசியை விட
பட்டினியை விட
சாவைவிட கொடுமையானது
எல்லோரையும் விட
நான் தாழ்ந்திருப்பதாய்
நீ
அறிவிப்புக் கூட்டம் நடத்துவது..
எனக்குத் தருவதாய்
சொல்லிக் கொள்கிறாய்
ஆனால்
தருவதை விட
அதிக மதிப்புள்ள
கர்வத்தைப் பெற்றுக் கொள்கிறாய்..
போகும்போது அதற்காக
சின்னதாய்
ஒரு நன்றியாவது
சொல்லிவிட்டுப்போ..
-------------------------------------------- சேவியர்
Bookmarks