காதல் செய்வீர் ஜெகத்தீரே! - என
வாய் மொழிந்தான் பாரதி - நாம்
வழக்கம் போல் மாறாய் பொருள் கொண்டோம்.
எதிர்பாலினம் கண்டு உணர்வது மட்டும் காதலல்ல
எதிரியின் பால் இரங்குவதும் காதல்
கனிந்த அன்பே காதலென்றான்.
ஆண் பெண் எனும் பேதம் கடந்து
அனைத்து உயிர்களிடத்தும் மலரும்
மானுடத்தின் மென்மைதான்
மா கவி சொன்ன மெய்க்காதல்.
சூழும் விதியெனும் சூறாவளி சுற்றியடிக்க
படபடக்கும் சுடரோடு
வாழும் ஆசைதான் மாந்தர்க்கு
உயிர் மீதுள்ள காதல்.
மண்ணும், மரமும், பயிரும், கொடியும்,
பழமும், விதையும்,மலரும்,செடியும்,
வானும்,சுடரும்,ஒளிரும் மீனும்,
கடலும்,நதியும்,தண்ணொளி மதியும்,
காற்றும்,மழையும்,புகையும் பனியும்,
இவையாவும் படைப்புக்கு நம் மேலுள்ள காதல்தான்.
தான், தன்,இனம்,மொழி,மதம்,நாடு,உயிர் என
கயமை கழன்று கொண்டால்
காணும் பொருளிலெலாம் காதல் பெருகும்.
முடிவாயினும் முதலாய்.
நம்மை நாம் காதலிக்க கற்று கொண்டால்
ஒவ்வொரு ஆன்மாவும் ஒளி பெறும்.
உலகமெலாம் அன்பு பூ பூக்கும்.
மனிதம் வளரும்! மானுடம் செழிக்கும்!
Bookmarks