கொலுசு போட்ட குழந்தை என் முன்னால் ஓடியது!
இதைக் கேட்டு என்னவளைப் பார்த்து நான் கேட்டேன்
'நீ சிரித்தாயா?' - என்று!
இதைக் கேட்டு, மகிழ்ச்சியில்
உண்மையிலேயே சிரித்தாள் என்னவள்!
சிரிப்பொலியைக் கேட்டு, நான் கேட்டேன்
'நாய் குரைத்ததா?' - என்று!
அப்போது காட்டினாயே ஒரு பொய் கோபம்!
அது போதுமடி எனக்கு!
இந்த ஜென்மத்துக்கு எனக்கு வராது அன்பு தாகம்!
----------- *x*------------
சாப்பிட்டுவிட்டு 'தங்கமான ருசி' என்றேன்!
அப்போது என் தலையில் முத்தமிட்டாள்!
'நான் சொன்னது தண்ணீரை' என்றேன்!
இப்போது அதே தலையில்
செல்லமாய் குட்டினாளே ஒரு குட்டு!
'இது தான் சூப்பர்' என்றேன், அவள் கன்னத்தைத் தொட்டு!
----------- *x*------------
"ஏங்க, என் கவிதைய கேளுங்களேன்" என்றாய்!
ஏதோ படித்தாய்! உண்மையிலே நான் கவனித்தது உன் கவிதையை அல்ல!
கவிதை சொல்லும் போது கபடியாடிய உன் உதடுகளை!
தொட்டில் ஆடிய உன் காது கம்மல்களை!
எம்பி எம்பிக் குதித்த உன் புருவங்களை!
கரகாட்டம் ஆடிய உன் கைகளை!
கடைசியாய் உன் தொண்டைக் குயில் கூவாமல் நிறுத்தியபோது,
உன் கண்கள் என்னை 'களவாணிப்பயல்! கவனிக்கவேயில்லை" என நினைத்த போது
"எப்படிங்க இருக்கு?" என்றாய் எதிர்பார்ப்போடு!
நான் பயங்கரமாகச் சிரித்துவிட்டு,
"உன் காமெடிக் கதைவசனம் சூப்பர். கவிதையைச் சொல் இப்போது" என்றேன்!
"போடா!" என்று பொய் கோபம் காட்டி திரும்பி நின்று,
"கவிதையே கவிதை வாசிக்கிறதே என்று சமாதானம் செய்யாதே!" என்றாய்!
அருகில் வந்து நான் சொன்னேன், "அடி அதிகப்பிரசிங்கியே!
உன்னை என்றைக்கடி நான் கவிதை என்று புகழ்ந்திருக்கிறேன்?" என்றேன்!
ஆச்சரியம் தாங்காமல் விழித்தாய்.
"உன் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு இதிகாசமடி!
உன் ஒவ்வொரு அசைவும் ஒரு காப்பியமடி!
அப்படி இருக்கையில் உன்னை எப்படிடி ஒரே ஒரு
கவிதையோடு ஒப்பிட முடியும்?" என்றேன்.
"எப்படிடா இதெல்லாம்?" என்றாய் கன்னத்தைக் காட்டி!
நேரம் காலம் தெரியாமல் என்னை வாட்டி!
----------- *x*------------
பக்கத்து வீட்டுப் பையன், படி இறங்கிப் போகும் போது
"ஆண்டி! நல்லாயிருக்கிங்களா?" என்று கேட்டுப் போனான்.
இதை நான் கவனித்ததால்,
"என்னங்க என்னை போய் ஆண்டிங்கிறான்? " என்றாய்.
"உன்னை ஆண்டின்னா சொன்னான் அந்தப் பயல்?
(யோசித்து விட்டு)சரி விடு.
பாட்டின்னு உண்மையெ சொல்லாமே, ஆண்டின்னு சொன்னானே
அதுக்கு ஆனந்தப் படு" என்றேன்!
உன் கையில் இருந்த பேனாவை, என்னைக் குறிபார்த்து
வேண்டுமென்றே விலக்கி வீசினாய்.
தாவிப்பிடிக்கலாம் என நினைத்து தாவினேன்.
ஆனால் பேனாவை பிடிக்க முடியவில்லை!
அசட்டுத் தனமாய் உன்னை அண்ணாந்து பார்த்தேன்!
"தாத்தாவெல்லாம் தாவி பிடிக்க முடியாது" என்றாய்,
சிரிப்புப் பந்தல் போட்ட சின்ன இதழ்களின் வழியே!
----------- *x*------------
"ஏங்க! Zooக்குப் போவலாமா?" என்றாய்!
"அனிமல்ஸ் பாக்க எதுக்கு அங்கே போகணும்?
இங்கேயே பார்க்கலாம்" என்றேன்.
"எப்படி?" நீ கேட்க
"இப்படி" என கண்ணாடியை உன் முகம் முன்னாடி காண்பித்தேன்!
கோபித்துக் கொண்டு பூஜை அறைக்கு ஓடினாய்!
சமாதானப் படுத்த சாமிதான் துணை என நினைத்து
"கோயிலுக்குப் போகலாமா?" என்றேன்!
"என் சாமி இங்கேயே இருக்கிறான்" என்றாய்!
"ஓ.. தூணிலும் துரும்பிலும் இருக்கிறானென்றால் எங்கே காட்டு?" என்றேன்!
கண்ணாடியை என் முகம் முன்னாடி காண்பித்தாய்!
எனக்குப் புரிந்தது இந்த உறவின் புனிதம்!
ஆனந்த வாழ்க்கைக்கு அன்பு தான் அடிப்படைக் கணிதம்!
Bookmarks