எத்தனையோ தீபாவளிகளுக்குப் பெறகு தூத்துக்குடியில மறுபடியும் தீபாவளி கொண்டாடினேன். என்னைய வளத்த அத்தையோடயும் மாமாவோடயும். பொறந்த ஊருக்குப் போறதுல அப்படியொரு மகிழ்ச்சி. ஆனா பாருங்க....நான் தூத்துக்குடிக்குப் இந்திய ரயில்வே துறை ரொம்பவும் விருப்பமில்லை போல இருக்கு. நின்னுக்கிட்டு போற பெட்டியில இருந்து தூங்கிக்கிட்டுப் போற குளுகுளு பெட்டி வரைக்கும் டிக்கெட் தர முடியாதுன்னு மறுத்துட்டாங்க. என் மேல இருக்குற தனிப்பட்ட ஆத்திரத்த லாலு பிரசாத் யாதவ் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம். என்ன ஆத்திரம்னு கேக்குறீங்களா? அத அங்க கேக்க வேண்டியதுதான...ஆனா அவரு அதெல்லாம் ஒன்னுமில்லை. என்னைய அவருக்குத் தெரியவே தெரியாதுன்னு சாதிப்பாரு. சரி. உலகத்துல பலர் அப்படித்தான். விடுங்க.
அடுத்து என்ன செய்ய? சொகுசுப் பேருந்துகள். கே.பி.என், ஷர்மா அது இதுன்னு ரெண்டு மூனு இருக்கே. ஆனா பாருங்க....அந்த வண்டியெல்லாம் மதுர வரைக்குந்தான். சரி. மதுரைக்குப் போயி தூத்துக்குடி வண்டி பிடிச்சாப் போச்சுன்னு நெனச்சேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லைன்னு கவியரசர் இவங்கள நெனச்சுத்தான் பாடியிருப்பாரு போல. டிக்கெட் இல்லைன்னு வெரட்டி விட்டுட்டாங்க. உண்மைதாங்க. இந்திரா நகர் கே.பி.என் டிராவல்ஸ் அலுவலகத்துல கொஞ்சம் அளவுக்கு மீறியே பேசுனாங்க. சரிதான் போங்கன்னு கெளம்பி வந்துட்டேன். அந்த ஆத்திரத்தைத் தனிக்க பக்கத்துல இருந்த அடையாறு ஆனந்த பவன்ல காக்கிலோ பாவக்கா சிப்சு வாங்கிக்கிட்டேன். அதத்தான நொறுக்க முடியும்.
மக்களுக்காக மக்களால் நடத்தப்படுறதுதான் அரசாங்கமாமே! அப்படிப்பட்ட கர்நாடக தமிழக அரசுப் பேருந்துகளைத்தான் அடுத்து நெனச்சேன். ஆனா அவங்களும் வண்டி பொறப்படுறதுக்குச் சரியா பத்தே பத்து நாளைக்கு முன்னாடிதான் டிக்கெட் தருவாங்களாம். அதுவும் பண்டிகைக்காலங்குறதால விடியக்காலைல அஞ்சரைக்கே வந்தாத்தான் ஏதாவது தேறும்னு சொல்லீட்டாங்க. என்ன செய்ய? நம்ம நண்பர் பிரதீப்பு மதுரக்காரரு. அவருக்கு ஒரு அலைபேசி (நன்றி குமரன்) போட்டுக் கேட்டேன். அவரும் அந்த பொழுதுல மதுரைக்குப் போறவராம். ஆனா ஐதராபாத்துல இருந்து. அவரோட தம்பி பெங்களூர்ல இருந்து மதுரைக்குப் போகனும். ரெண்டு பேரும் ஒன்னா டிக்கெட் எடுத்து போயிட்டு வந்துட்டா வசதியாயிருக்குமுன்னு முடிவு செஞ்சி டிக்கெட் எடுக்குற லேசான வேலையை மட்டும் அவரோட தம்பி ராஜ் தலையில கட்டினோம்.
டிக்கெட் எடுக்க வேண்டிய அன்னைக்கு நாலரை மணிக்கு என்னோட அலைபேசியில அலாரம் வெச்சி எழுந்திருச்சி, ராஜக் கூப்பிட்டு எழுப்பி டிக்கெட் எடுக்க விரட்டினேன். அஞ்சர மணிக்கு வரிசையில நின்னவன் விடுவிடுன்னு முன்னேறி பத்தர மணிக்கெல்லாம் ரெண்டு டிக்கட் எடுத்துட்டான். கடைசி வரிசைதான். அதெல்லாம் பாத்தா முடியுமா? திருநவேலி போற வண்டியில திருநவேலிக்கு டிக்கெட் எடுத்து மதுரையில எறங்கத் திட்டம். அதே மாதிரி பிரதீப்போட மாமா மதுரையில எங்க ரெண்டு பேருக்கும் திரும்பி வர டிக்கெட் எடுத்துட்டாரு. அப்பாடி.......ஒரு வழியா ஏற்பாடுகள் முடிஞ்சது.
திருநவேலி வண்டியோ மதியம் மூனரை மணிக்கு. மதுரைக்கு ரெண்டு ரெண்டரைக்குப் போகும். ஆபீசுக்கு பாதி நாள் மட்டம் போட்டுட்டு வியாழக் கெழமை...அதாவது அக்டோபர் 19ம் தேதி பொறப்பட்டோம். கடைசி வரிசை. சீட்டு சரியில்லை. ஒரு பக்கமா நெளிஞ்சிருக்கு. வண்டி ஓடாம நிக்கும் போதே சீட்டு ஆடாம நிக்க மாட்டேங்குது. சரி. ஊருக்குப் போகனும். அதுக்கு இதெல்லாம் நடக்கனும். நடக்கட்டும்.
இன்னும் நாலு பேரு டிக்கெட் எடுத்திருக்காங்க. ஆனா அதுல மூனு பேரு வந்தாச்சு. நாலாவது ஆளு வந்துக்கிட்டே இருந்தாரு. வண்டி கொஞ்ச நேரம் பொறுத்துப் பாத்தது. "டிரைவருங்குற பேர்ல நாயக் கூட்டீட்டு வந்திருக்கேன். அதுனால என்னால ஒன்னும் செய்ய முடியாதுன்னு" சொல்லீட்டாரு நடத்துனரு. சரீன்னு அந்த சீட்ட இன்னொருத்தருக்குக் குடுத்து காசி வாங்கீட்டாங்க. விடுவாரா நடத்துனரு. பேச வேண்டிய பேரத்தப் பேசி அவரு கணக்குக்கு ஒரு நூறு ரூவாய வாங்கிக்கிட்டாரு. வாங்கீட்டு "ஒரு கட்டுக்கு ஆச்சு"ன்னாரு. அதுல கருத்து வேற சொன்னாரு. "சார். நாங்க குடிக்கிறது பசிக்கோ போதைக்கோ இல்ல. வாசனைக்குத்தான். அந்த வாடைக்குத்தான் குடிக்கிறது. பசிக்கோ போதைக்கோ குடிக்கிறோம்னு தப்பா நெனக்கக் கூடாது"ன்னு தன்னிலை வெளக்கம் குடுத்து அவரு நல்லவருன்னு சொல்லீட்டாரு. சரீன்னு நம்ம ஒத்துக்கலைன்னா இன்னும் பெரிய விளக்கமெல்லாம் குடுப்பாருன்னு அவரு சொன்னத அப்படியே ஏத்துக்கிட்டோம்.
பெங்களூர்ல எங்க பாத்தாலும் கூட்டம். மூனரைக்குப் பொறப்பட்ட வண்டி சரியா ரெண்டே மணி நேரங் கழிச்சு அஞ்சரைக்கு பெங்களூர விட்டு வெளிய வந்திருச்சு. அப்புறம் சர்ருன்னு ஓடுச்சு...ரொம்பப் பேரு நின்னுக்கிட்டும் கீழ உக்காந்து கிட்டும் வந்தாங்க. கொஞ்சப் பொம்பளைங்க டிரைவருக்குப் பின்னாடி இருக்குற கேபின் சீட்டுல உக்காந்து கிட்டும் வந்தாங்க. எப்படியோவது பண்டிகைக்கு ஊருக்குப் போனாச் சரிதான்னு. அவங்கவங்க பகுத்து அவங்கவங்களுக்கு.
வழியில பேர் தெரியாத ஊர்ல பேர் தெரியாத ஓட்டல்ல சாப்பிட நிப்பாட்டினாங்க. பரோட்டா ரொட்டி தவிர ஒன்னும் சரியாயில்ல அங்க. ஒரு பரோட்டாவும் முட்டைக் குருமாவும் வாங்கிச் சாப்பிட்டோம். சில்லி காக்காவா சிக்கனான்னு தெரியலை. எதுவாயிருந்தா என்ன...தின்னாச்சு. அவ்வளவுதான். எனக்கு அப்பப் பாத்து டீ குடிக்க அடங்காத ஆசை. அத்தன சின்ன பிளாஸ்டிக் கப்ப நான் அப்பத்தான் பாக்குறேன். அதுல நெறைய நெறைய நொறையா வர்ர மாதிரி கொதிக்கிற டீய ஊத்திக் குடுத்தாரு டீக்கடைக்காரரு. என்னவோன்னு குடிச்சு வெச்சேன். அவ்வளவு நல்லாயிருக்கல.
இருட்டுற வரைக்கும் Lord of the rings புத்தகம் படிச்சிக்கிட்டிருந்தேன். அப்புறம் லைட்ட அணைச்சிட்டு சண்டைக்கோழி படம் வீடியோவுல ஓடிச்சு. மக்கள் ரசிச்சு ரசிச்சு பாத்தாங்க. நானும் அப்பப்ப பாத்துக்கிட்டேன். ரெண்டரை மணிக்கு அலாரம் வெச்சுட்டுத் தூங்கினேன். மதுரையில நான் மூனு மணிக்கு எறங்கி அரை மணி நேரத்துல பஸ் ஏறுனாக் கூட ஆறரைக்கெல்லாம் தூத்துக்குடி போயிரலாம்ல. போனேனா?
தொடரும்....
Bookmarks