இழப்புகள்......................
ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு
வாழ்வில் இழந்து போன
தருணங்களின் நினைவுகளை
ஒரு பசு மாட்டினைப் போன்று
அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
வளையம் வளையமாக
விரிந்து
மேலே மேலே போய்க்
கரைந்து
கூரையை
முட்டி முட்டித் திரும்பும்
புகையைப் போலத் திரும்புகிறது.
கடந்த காலக் காதலியின்
நினைவுகளைப் போல
கனவுச் சுவற்றில்
மோதி மோதி
எதிரொலிக்கிறது.
தூங்க முயற்சித்து முயற்சித்து
கடைசியில்
தூங்காமலே போய்விடுவதைப் போல
விரட்ட முயற்சித்து முயற்சித்து
விரட்ட முடியாமலே விட்டுவிட்டேன் -
இழந்து போன தருணங்கள்
தந்த தோல்விகளை.
வெற்று வேடிக்கையாய்
ஜன்னல் வழியே
வீதி நோக்கினேன் -
ஊரைக் கழுவிட்ட
திருப்தியில்
மேக வேலைக்காரி
விலகிப் போன மாலை.
கழிந்த நீரில்
கப்பல் ஒன்று விட்டு
கண்டு களித்து
நின்றது குழந்தை
சுதேசிக் கப்பல் விட்ட
சிதம்பரனாரைப் போல.
முட்டி மோதி கவிழ்ந்து
வெறும் காகிதமாக விரிந்து
சிறிது தூரம் போய்
கரையில் ஒதுங்கியது
கப்பல்.
காலமோ
கருக்கிட்டுக் கொண்டிருந்தது.
மலை வாயிலில்
மாலைச் சூர்யன்
இரத்தக் காயம்பட்டு
வீழ்ந்து மூழ்கிப் போனான்.
நீரில் நனைந்து
நைந்து போன
காகிதம் கொண்டு
புதிதாகக் கப்பல் செய்ய
ஆர்வத்துடன் ஓடினார் -
சின்னச் சிதம்பரனார்.
'கப்பல் செஞ்சு விளையாட
காத்துக் கருப்பு அலையும்
கருக்கல் நேரந்தான்
கிடைச்சதா, உனக்கு?'
பளார், பளாரென்று
நாலைந்து முதுகில் விழ
இரைந்து அழுதது குழந்தை.
அழுதது -
விழுந்த அடியின் வலியினாலா?
கப்பல் விட்டு விளையாட
கிடைத்த சந்தர்ப்பம்
பேணி வளர்க்கிறேனென்ற பேரில்
பிடுங்கப் பட்டதாலா?
எது எப்படியோ,
இந்தக் கவிதையை
உங்கள் குழந்தையும்
ஒரு நாள் எழுதக் கூடும்
ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு.....
Bookmarks